கடந்த 27ஆம் திகதி தேசிய மாவீரர் தின நாள் தாயத்தில் புலம்பெயர் நாடுகள் எங்கிலும் எழுச்சிப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் வரலாற்று சரித்திரமாக பதிவாகியுள்ளது.
வருடா வருடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுகள் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக பிரம்மாண்டமான முறையிலும் பேரெழுச்சியுடனும் இந்த மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழினத்தின் மூத்த போராளியும் நான்கு மாவீரர்களின் தந்தையுமான பொன் தியாகம் அப்பா பல வருடங்களின் பின்னர் பொது வெளியில் முதன்மை சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.
தன்னுடைய நான்கு பிள்ளைகளை ஈழ மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் மண்ணுக்காக கொடுத்த இந்த மூத்த போராளி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு அருகாமையில் என்றும் மாவீரர்நாள் காலப்பகுதியில் அவரோடு சேர்ந்து விளக்கேற்றும் ஒருவராக இருந்துள்ளார்.
இந்நிலையில், பெருந்திரளான மக்கள் இந்த மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை இந்திய மத்திய மற்றும் மாநில அரசுக்கு சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
**
பொன்.தியாகம் அப்பா போராளிகள் எல்லோர்க்கும் தாயாக, தந்தையாக -ஒரு நினைவுப்பதிவு!
என்னைப் பாதித்த நாட்கள் பலவுண்டு. இன்றைய நாளும் அவற்றிலொன்று. அதுபற்றிய பதிவிது.
பொன்.தியாகம் அப்பா முழு நேரப்போராளி. எழுபதைத் தாண்டிவிட்ட வயதிலும் வன்னியெங்கும் சுழன்று திரிந்து பணியாற்றிய போராளி. புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக உள்ளார். அவரது மனைவி முன்னாள் ஆசிரியை. பிள்ளைகள் சிலர் புலம்பெயர்ந்துள்ளனர்.மகன்களில் இருவர் ஏற்கனவே புலிகள் இயக்கத்திலிருந்து வீரச்சாவு. (கணேஸ், தினேஸ் என்று நினைக்கிறேன்). முதலாமவர் எண்பதுகளின் நடுப்பகுதியில் வீரச்சாவு. அதைவிட மருமகன் போராளி. இன்னொரு மகள் (மேஜர் தேன்மொழி (டிலானி) வீரச்சாவு
போராளிகள் எல்லோரும் அத்தம்பதியரை அப்பா, அம்மா என்றுதான் அழைப்பர் தெரிந்தவர்கள் அயலவர்க்கு அவரீச்சர். எந்தநேரமும் சமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் வீடது. என்போன்ற பக்கத்து வீட்டுக்காரருக்கு அதுவொரு சாப்பாட்டுக்கடை போன்ற தோற்றத்தைத்தான் தரும்.
அப்போதுயாழ்செல்லும் படையணி என்று ஒரு படையணி இருந்தது. ( கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட லெப்.கேணல் மகேந்தி அவர்களும் அதில் தளபதியாகச் செயற்பட்டவர்) அதில் பெண்போராளிகளும் இருந்தார்கள். யாழ்ப்பாணத்துள் அவர்களால் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. லெப்.கேணல் தணிகைச்செல்வியைத் தளபதியாகக் கொண்டு பெண்கள் படையணி இருந்தது. யாழ்ப்பாணத்துள் செல்வதும் குறிப்பிட்டகாலம் தங்கியிருந்து தாக்குதல்கள் செய்வதும், மீண்டு வந்து வேறோர் அணியை அனுப்புவதுமென்று செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
பொன்.தியாகம் அப்பாவின் மகளும் அப்படையணியில்தான் இருந்தார். ஏற்கனவே தளபதி தணிகைச்செல்வி உட்பட அந்தப்படையணியில் இருக்கும் பலர் இந்தவீட்டின் நீண்டகால உறவுகள். அனைவரும் அவர்களின் பிள்ளைகள்.
அந்நேரத்தில் சிங்களப்படை மன்னாரிலிருந்து பூநகரி வழியாக (கண்டிவீதி இனி சரிவராது என்ற நிலையில்) யாழ்ப்பாணத்தை அடைவதென்று திட்டம் போட்டு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டிருந்தது. ரணசிக்குறு என்ற பெயரின்பின் தொடரிலக்கத்தில் நடவடிக்கை செய்த அவர்களைப் பள்ளமடுவில் மறித்துவைத்துச் சண்டைசெய்தனர் புலிகள். பள்ளமடுவை சிங்களப்படையாமல் தாண்ட முடியவில்லை.இந்நிலையில் யாழ்செல்லும் படையணியை பள்ளமடு முறியடிப்புச் சமரிலும் ஈடுபடுத்துகின்றனர் புலிகள். தளபதி தணிகைச்செல்வியின் தலைமையிலேயே அணி களத்தில் நிற்கிறது.
இன்றைக்குச் சரியாக 18 ஆண்டுகளின் முன்னால் 26.06.1999 அன்று பள்ளமடுவில் இராணுவம் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டான். கடும் சண்டை முண்டது. மாவீரர் பணிமனைக்குக் கிடைத்த தகவலின்படி தளபதி லெப்.கேணல் தணிகைச்செல்வி வீரச்சாவு. தனக்குக் கிடைத்த தகவலை வீட்டுக்கு மனைவியிடம் அனுப்பிவைத்துவிட்டு அலுவலகத்தில் இருக்கிறார் பொன்.தியாகம் அப்பா. சிலமணித்துளிகளின் பின் மேஜர் தேன்மொழி வீரச்சாவென்று செய்தி வருகிறது.
ஆம்! பொன்.தியாகம் அப்பாவின் பிள்ளைதான்.பணிமனையிலிருந்து வீடுவருகிறார் தியாகம் அப்பா. வீட்டில் யாருமில்லை. தணிகைச்செல்வி அக்காவின்ர வீரச்சாவு கேட்டு அங்க போயிட்டா ரீச்சர் என்று அக்கம்பக்கத்தார் சொல்கின்றனர். தணிகைச்செல்வியின் வீட்டுக்குப் போகிறார். வாசலிலேயே மனைவியின் அலறல் கேட்கிறது. இன்னும் வித்துடல் வந்திருக்கவில்லை. தியாகம் அப்பாவைக் கண்டதும்,
எங்கட பிள்ளை எங்கள விட்டுப் போயிட்டாளே என்று கத்திக்கொண்டு வருகிறார். தியாகம் அப்பாவோடு கூட வந்தவர், ரீச்சருக்கு அதுக்கிடையில ஆரோ தேன்மொழியின்ர செய்தியைச் சொல்லிப்போட்டினம் என்று நினைத்துக்கொண்டார். ஆனால் தியாகத்தாருக்குத் தெயும் மனுசி தணிகைச்செல்வியைத்தான் சொல்லுது, இன்னும் பெத்தபிள்ளை செத்தது தெரியாது என்று.
எல்லாம் எங்கட பிள்ளையள் தான். ஒருக்கா வீட்ட வா போவம்என்று கூட்டிக்கொண்டுவந்து தேன்மொழியின் செய்தியைச் சொல்கிறார். இதற்குமேல் அத்தாயின் நிலையை விளக்க முடியாது. இருவரின் உடல்களையும் ஒன்றாக வைத்து வீரச்சாவு நிகழ்வு நடந்தது.
2009 க்கு முன்னர் அம்மா, அப்பா என்று அழைத்துக்கொண்டு நிறையப் போராளிகள் வீட்டு வந்துபோவார்கள். அந்த வீட்டு அடுப்பு எந்த நேரமும் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும்.
லெப்.கேணல் தணிகைச்செல்வி
யாழ் ஏழாலையை பிறப்பிடமாக கொண்டவர் . ஆரம்பகாலச் சுகந்திர பறவைகள் அமைப்புடன் சேர்ந்து இயங்கியவர். 1989 இல் மணலாற்றுக் காட்டில் மகாலிர்ப் படையணியின் நான்காவது பயிற்ச்சி முகாமில் ஆயுதப் பயிற்ச்சி எடுத்தவர்.
அரசியல் துறையில் வன்னி , யாழ் உட்பட பல இடங்களில் அரசியல் பணிசெய்து அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராகச் செயட்பட்டு அதன் பின் யாழ் செல்லும் படையணிப் பொறுப்பாளராகவும் , அரசியல்துறை தாக்குதல் அணியின் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். லெப்.கேணல் தணிகைச்செல்வியின் வீரச்சாவிற்கு பின்னர் லெப் கேணல் தாரணி யாழ்செல்லும் படையணி தளபதியாக நியமிக்க பட்டர்.
பொன்.தியாகம் அப்பாவின் வீட்டின் நடுவிறாந்தையில் நாலு மாவீர்களின் படங்கள் மாலைகளோடு இருக்கும். வெவ்வேறு காலகட்டங்களில் ஈழப்போராட்டத்தில் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்கள் இந்நால்வரும். நாலுபேருக்கும் அதிகாரபூர்வ அம்மாவாக ரீச்சர் இருக்கிறா. சுமந்து பெற்ற பிள்ளைகள் மூன்று.
இவர்களையே தன் தாய்தந்தையாகப் பதிவுசெய்துகொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்மாவீரின் படம் மற்றது.லெப்.கேணல் தணிகைச்செல்வியையும் அவருடன் இருந்த பெண் போராளிகளையும் மையமாக வைத்து போராளி ஒருவர் அருமையான படைப்பொன்றை எழுதியிருந்தார். அது புத்தகமாக வந்ததா தெரியவில்லை. வந்திருந்தால் இவர்களைப் பற்றிய நிறையத் தகவல்கள் கிடைக்கும்.
ஒரு மரபுப் படையணியிலிருந்து வேறுபட்டது இவர்களின் அனுபவங்களும் செயற்பாடுகளும். முழுக்க எதிரியால் கைப்பற்றப்பட்ட பகுதிக்குள் மறைத்துவைத்த ஆயுதத்துடன் சேலையோ சுடிதாரோ அணிந்துகொண்டு திரிவது தொடக்கம், வேவு பார்த்தல், திட்டமிடல், தாக்குதல் அனைத்தையுமே தனித்தே செய்யவேண்டிய நிலை. அப்படித்தான் செய்தார்கள். குருநகர் இடுகாலைக்கு அருகில் நடந்த காவலரண் தாக்குதல் குறிப்பிடத்தக்க ஒன்று.
18 வருடங்களின் முன் இதேநாளில் பள்ளமடுவில் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை முறியடித்த சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தணிகைச்செல்வி, மேஜர் தேன்மொழி உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் எமது அஞ்சலி.புலிகளின் முக்கிய போர்த்தளபதியாயிருந்து சமர்முனைகளில் எதிரிகளைக் கலக்கிப் பெருவெற்றிகளை ஈட்டி, பின்னொரு நாளில் இரணைமடுக்குளத்துள் மூழ்கி இறந்துபோன லெப்.கேணல். இராஜசிங்கனது நினைவுநாளும் இன்றுதான்.
ஆனையிறவைக் கைப்பற்றும் நீண்ட சமரில், மாமுனையில் தரையிறங்கி இத்தாவிலில் கண்டிவிதியை மறித்துநின்ற புலிப்படையை கேணல் பார்றாச்சின் தலைமையின் கீழ் வழிநடத்தி அச்சமரை வென்ற திறன் மட்டுமே போதும் இராஜசிங்கனைப் பற்றிச் சொல்ல. எவரையும்விட எதிரிக்கு அதிகம் தெரிந்திருக்கும். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாயிருந்தவர். இரணைமடுக்குளத்தில் குளிக்கும் போது விளையாட்டுத்தனமாக துருசிலிருந்த நீருள் பாய்ந்தபோது மரணமடைந்தார். சண்டைக்களங்களில் சாகாத வீரன், தண்ணிரில் மாண்டுபோனான்.
26 .06 .2017
தொகுப்பு வன்னியன்
லெப்.கேணல் தணிகைச்செல்வி தொகுப்பு- கண்ணன்
Recent Comments