Search

Eelamaravar

Eelamaravar

Month

December 2016

அரசியல் தீர்வும், பாலா அண்ணை விட்டுச் சென்ற படிப்பினையும் !

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து சென்று கடந்த 14.12.2016 உடன் பத்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தன் வாழ்நாளில் எல்லோருக்குமே முன்னுதாரணமாக திகழ்ந்தவர் பாலா அண்ணை. பொதுவாக அரசியலில் ஈடுபடுபவர்கள் பேசுவது ஒன்றாகவும், செய்வது இன்னொன்றாகவும் இருக்கும். இதில் விதிவிலக்காக இருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே.

அப்படியான விதிவிலக்கான மனிதர்களில் பாலா அண்ணையும் ஒருவர். சொல்லிலும் சரி, செயலிலும் சரி ஒரு புரட்சிக்காரனாகவே பாலா அண்ணை வாழ்ந்தார். மக்களை ஆழமாக நேசித்த ஒரு புரட்சிக்காரனாகவே அவர் மடிந்தார். இறுதிக் காலங்களில் அவரது எண்ணமும், கரிசனையும் தனது மக்களைப் பற்றியே இருந்தது. மரணம் சம்பவிக்கும் இறுதி நாட்களில் கூட மக்களுக்குத் தன்னால் எதனையும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கமே அவரிடம் இருந்தது. அப்படிப்பட்ட பாலா அண்ணையிடம் இருந்து இன்றைய அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் கற்றுக் கொள்வதற்கு நிறையவே பாடங்கள் உள்ளன. அவையெல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் நாம் எழுதுவதென்பது சாத்தியமில்லை.

எனவே தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பான முனைப்புக்கள் வீச்சுப் பெற்றுள்ள இன்றைய சூழமைவில், அரசியல் தீர்வு விடயத்தில் பாலா அண்ணையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பாகவே இக்கட்டுரை விரிகின்றது.

ஒரு புரட்சிகரமான ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவே தம்மைத் தாமே ஆளும் உரிமையை, அதாவது தன்னாட்சியுரிமையை, தமிழர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அசையாத நம்பிக்கையுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோகராகவும், தத்துவாசிரியராகவும் 1978ஆம் ஆண்டு இணைந்து கொண்டவர் பாலா அண்ணை. இவ் இலட்சியத்தை அடைவதற்காகப் பிரித்தானியப் பல்கலைக் கழகம் ஒன்றில் தான் வகித்த விரிவுரையாளர் பதவியை தூக்கியெறிந்து விட்டு 1983ஆம் ஆண்டு இந்தியா சென்று, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவின் ஆயுதப் பயிற்சி கிடைப்பதற்கும், மாமனிதர் எம்.ஜி.ஆர் அவர்களின் நிதியுதவி கிட்டுவதற்கும் வழிசமைத்தவர் பாலா அண்ணை.

இந்திரா காந்தி அம்மையாரின் மறைவுக்குப் பின்னர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்ட பொழுது, அதனால் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்ட சவால்களை நுட்பமாக எதிர்கொண்டவர் பாலா அண்ணை. தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட சகல ஆயுதப் போராட்ட அமைப்புக்களுக்கும் ராஜீவ் காந்தியின் அரசாங்கம் அழுத்தம் கொடுத்த பொழுது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைப் பிரகடனமாக ஈழ சுதந்திர சாசனம் என்ற ஆவணத்தை பாலா அண்ணை உருவாக்கினார். இதற்கு ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் ஆகிய மூன்று ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் ஆதரவைப் பெற்றுத் தனி ஈழமே ஆயுதப் போராட்ட இயக்கங்களின் ஒருமித்த இலட்சியம் என்பதை இந்திய அரசுக்கு இடித்துரைத்தார். எனினும் இதனை இந்தியா நிராகரித்தது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்ற போர்வையில் பேச்சுவார்த்தை என்ற பொறிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளையும், ஏனைய ஆயுதப் போராட்ட இயக்கங்களையும் இந்தியா முடக்க முற்பட்டது.

அப்பொழுது மீண்டும் பாலா அண்ணையின் சாணக்கியம் வெளிப்பட்டது. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஏற்படுத்தப்படும் எந்த விதமான அரசியல் தீர்வும் ஈழத்தீவில் மலையகத் தமிழர்களின் குடியுரிமையை ஏற்கும் வகையில் அமைய வேண்டும், ஈழத்தமிழர்களின் தாயகமாக வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும், அதன் அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையை உள்ளடக்கிய ஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற நான்கு மூலக் கோட்பாடுகளை அன்று பாலா அண்ணை முன்னிறுத்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக உருப்பெற்ற இந்த நான்கு கோட்பாடுகளையும், ஏனைய ஆயுதப் போராட்ட இயக்கங்களையும், மிதவாத அமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணியையும் பாலா அண்ணை ஏற்றுக் கொள்ள வைத்தார். இந்த நான்கு கோட்பாடுகளுமே பின்னர் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு திம்புக் கோட்பாடுகளை உருவாக்கியதன் மூலம் நான்கு விடயங்களை அனைத்துப் போராளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாலா அண்ணை தெளிவுபடுத்தினார். முதலாவது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனவே ஈழத்தமிழர்களுக்கானது மட்டுமன்றி, அவர்களின் தொப்புள் கொடி உறவுகளான மலையகத் தமிழர்களுக்குமானது என்பது. இரண்டாவது, வடக்குக் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தமிழர் தாயகம், அல்லது தமிழர் மாநிலம் என்ற விடயத்தில் எந்த விதமான சமரசத்தையும் ஈழத்தமிழர்கள் செய்ய மாட்டார்கள் என்பது. மூன்றாவது, ஈழத்தீவின் பூர்வீக குடிகள் என்ற வகையிலும், வரலாற்றுக் காலம் தொட்டு ஈழத்தீவின் வடக்குக் கிழக்கு மாநிலத்தில் தமக்கான இராச்சியங்களையும், சிற்றரசுகளையும் கொண்டவர்கள் என்ற வகையில் தாம் ஒரு தேசிய இனம் என்பதை அங்கீகரிக்காத எந்தவொரு தீர்வையும் ஈழத்தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது. நான்காவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் தமிழர்கள் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையை ஏற்றுக் கொண்டாலே ஒழிய அத்தீர்வைத் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது.

தான் தத்துவார்த்த வடிவம் கொடுத்த இந்தத் திம்புக் கோட்பாடுகளில் இறுதிவரை பாலா அண்ணை உறுதியாகவே இருந்தார். 1987ஆம் ஆண்டு டில்லியில் தமிழீழத் தேசியத் தலைவருடன் இணைந்து ராஜீவ் காந்தியுடன் நடாத்திய சந்திப்பாக இருந்தாலும் சரி, கொழும்பில் 1989ஆம் ஆண்டில் இருந்து 1990 ஆண்டு வரை பிரேமதாசாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளாக இருந்தாலும் சரி, 1994ஆம், 1995ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சந்திரிகா அம்மையாருடன் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளாக இருந்தாலும் சரி, 2002ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நோர்வேயின் அனுசரணையுடன் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளாக இருந்தாலும் சரி, எல்லா சந்தர்ப்பங்களிலுமே தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய திம்புக் கோட்பாடுகளில் பாலா அண்ணை உறுதியாகவே இருந்தார் (திம்புப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் வந்த ஆண்டுகளில் மலையக மக்களின் குடியுரிமை உறுதி செய்யப்பட்டதால், அவ்விடயம் தமிழர் தரப்பின் அரசியல் நிலைப்பாடுகளில் ஒன்று என்ற நிலையை விட்டு நீங்கியது).

நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஓரங்கமாக 2002ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுக்களில் சமஸ்டித் தீர்வை ஆராய்ந்து பார்ப்பதற்கான இணக்கப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டது. அது அன்றைய காலகட்டத்தில் சில மேதாவிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது.

பாலா அண்ணை சமஸ்டிக்குள் சறுக்கி விட்டார் என்று ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டியங்கும் பிரபல ஆங்கில இணையம் ஒன்றின் ஆசிரியர் அன்று முணுமுணுத்தார். அன்றைய காலகட்டத்தில் அவரது குரல் நான்கு சுவர்களுக்கு வெளியில் வரவில்லை என்பது வேடிக்கையானது. மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீச்சை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் பாலா அண்ணை ஈடுபடுகின்றார் என்று ஈரோஸ் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான மதில்மேல் பூனைகள் சிலர் குற்றம் சுமத்தினார்கள். ஈராஸ் அமைப்பைக் கலைத்து விட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அதன் தலைவர் க.வே.பாலகுமாரன் உள்ளடங்கலான போராளிகள் இணைந்து கொண்ட பொழுது வெளியேறிய ஒரு சில மதில்மேல் பூனைகளே அன்று இவ்வாறு கொக்கரித்தார்கள்.

இன்னொரு புறத்தில் பூகோள அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாது பாலசிங்கம் நடந்து கொள்கின்றார் என்று இன்னுமொருவர் காட்டமாக விமர்சித்தார். 1980களில் புளொட் அமைப்பை அரசியல் ரீதியில் பாலா அண்ணை பலவீனப்படுத்தியதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கான பழிவாங்கலாக அன்றைய காலப்பகுதியில் அந்நபரின் விமர்சனம் இருந்தது.

இவையெல்லாவற்றையும் கடந்து இன்னும் சிலர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களைக் கடுமையாக விமர்சித்தார்கள். ‘தமிழீழத்தைக் கைவிட்டால் தன்னைச் சுடுமாறு கூறிய பிரபாகரன், இப்பொழுது தமிழீழத்தை பாலசிங்கம் கைவிடுவதற்கு அனுமதித்து விட்டார்’ என்று தமிழீழ தேசியத் தலைவரை நோக்கி வசைபாடினார்கள். இவை எல்லாவற்றின் உச்சகட்டமாக பாலா அண்ணை பயணிக்கும் பாதை தவறானது என்று வன்னியில் அன்று விசுவநாதன் உருத்திரகுமாரன் ஒப்பாரி வைத்தார்.

இன்று பாலா அண்ணை உயிருடன் இல்லை. ஆனால் தமிழர்களின் அரசியல் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் சமஸ்டி பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதுவும் ஒன்றிணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டைக் காற்றில் பறக்க விட்டுத், தமிழர்களை ஒரு சிறுபான்மை இனமாகச் சிறுமைப்படுத்தி, பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழர்களின் தன்னாட்சியுரிமைக்கு சாவுமணி அடித்து விட்டு சமஸ்டி பற்றி இவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் முன்னிறுத்தும் சமஸ்டி முறையில் தமிழர்களின் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஆனால் சமஸ்டியில் சறுக்கியதாக மேதாவிகளால் அன்று விமர்சிக்கப்பட்ட பாலா அண்ணை சமஸ்டி பற்றி என்ன கூறினார்?

2002ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 3ஆம் நாளன்று த சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் பின்வருமாறு பாலா அண்ணை குறிப்பிட்டார்:

‘இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணப்படும் வரை எமது இராணுவக் கட்டமைப்பு பேணப்படும். அதற்குப் பின்னரான காலத்திலும் மாநில சுயாட்சி அல்லது சமஸ்டி அமைப்பின் கீழ் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கான பொறிமுறை பற்றியும் நாம் சிந்தித்தாக வேண்டும். எனவே எமது ஆயுதப் படையணிகள் தமிழ் மக்களின் உயிர்களையும், நலன்களையும் பாதுகாப்பதற்காக இருந்தே ஆக வேண்டும்.’

இவ்வாறு தமிழ் மக்களுக்கான நிரந்தரப் பாதுகாப்புப் பொறிமுறை பற்றிக் குறிப்பிட்ட பாலா அண்ணை, வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டில் எந்தவிதமான சமரசங்களும் இடம் கிடையாது என்பதை 2003 பங்குனி மாதம் 16ஆம் நாளன்று த சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய இன்னொரு செவ்வியில் அடித்து கூறினார்:

‘புவியியல் ரீதியான அலகு என்ற கோட்பாடு சமஸ்டி அரசியல் தீர்வுக்கு அடிப்படையானது. உலகளாவிய ரீதியில் காணப்படும் சமஸ்டி அமைப்புக்கள் அனைத்திற்கும் பொதுவான பண்பியல்பு இதுவாகும். எனவே ஒரு புவியியல் ரீதியான அலகு அமைவது அவசியமாகும். தமிழர்களைப் பொறுத்தவரை வடக்குக் கிழக்கு மாநிலங்களை உள்ளடக்கிய வரலாற்று ரீதியான நிலப்பரப்பு எமக்கு உள்ளது. இதனைத் தமிழ்த் தாயகம் என்று மட்டும் அழைக்காது முஸ்லிம் சமூகத்தை உள்ளடக்கிய தமிழ் பேசும் தாயகமாகவே நாம் அழைக்கின்றோம். எனவே தொடர்ந்தேட்சியான தமிழ் புவியியல் அலகு என்பது எந்தவிதமான சமஸ்டித் தீர்வுக்கும் அடிப்படையாக அமைய வேண்டும். இதனை சிங்களவர்கள் ஏற்க மறுத்தால் சமஸ்டித் தீர்வு என்பது சாத்தியமாகாது.’

அச் செவ்வியின் இன்னொரு பகுதியில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றிய கேள்வி எழுந்த பொழுது, பின்வருமாறு பாலா அண்ணை குறிப்பிட்டார்:

‘சமஸ்டி அடிப்படையிலான மாநில சுயாட்சி அமைப்பில் தமிழர்களுக்கென்று தனியான மாநில நீதித்துறையும், மாநில காவல்துறையும், மாநில நிர்வாகமும் இருக்கும். இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் உறவைப் பேணும் விதத்தில், மத்தியும், மாநிலங்களும் அதிகாரங்களைப் பகிரும் வகையில், தமிழர்களுக்கான தனித்துவமான நிர்வாகத்தையும், நீதித்துறையையும், காவல்துறையையும் கொண்ட சமஸ்டி அலகு வடக்குக் கிழக்கில் இயங்கும்.’

இவ்வாறு 2002ஆம், 2003ஆம் ஆண்டுகளில் தான் வழங்கிய ஊடகச் செவ்விகளில் குறிப்பிட்ட பாலா அண்ணை, தமிழீழ மக்களின் பிரிந்து செல்லும் உரிமை பற்றி 2005ஆம் ஆண்டு தமிழில் வெளியிடப்பட்ட போரும் சமாதானமும் என்ற நூலில் பின்வருவருமாறு குறிப்பிட்டிருந்தார்:

‘சுயநிர்ணய உரிமையின் உள்ளக வெளியக அம்சங்கள் ஒன்றோடு ஒன்று இணையப் பெற்று இருக்கின்றன. மக்களின் சம உரிமைகளும், சுயநிர்ணய உரிமையும் உள்ளீட்டாக நிறைவு செய்யப்படுவது அரசுகளின் கடப்பாடு என்பதை ஐ.நா. பிரகடனங்கள் வலியுறுத்தியுள்ளதை நாம் பார்த்தோம். ஒரு அரசின் கட்டமைப்புக்கு உள்ளேயே இந்த உரிமைகள் (சம உரிமையும் சுயநிர்ணய உரிமையும்) நிறைவு காணப்பட்டால் மட்டுமே ஒரு அரசானது பிரதேச ஒருமைப்பாட்டை வலியுறுத்த முடியும். ஆனால் ஒரு மக்கள் சமூகத்திற்கு அதன் உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு, அரசாட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு, அடக்குமுறைகளுக்கு ஆளாகப்பட்டால், அம் மக்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமைக்கு, அதாவது பிரிந்து சென்று அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டும் உரிமைக்கு உரித்துண்டு. உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு, அரச அடக்குமுறைக்கு ஆளாகும் மக்கள் வெளியக சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்பதை, 1970இன் ஐ.நா.பிரகடனத்தையும் கனடிய உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மேற்கோள் காட்டி நிறைய ஆய்வுப் பிரசுரங்கள் வெளியாகியுள்ளன.

சுயநிர்ணய உரிமையின் உள்ளக, வெளியகப் பரிமாணங்களின் உறவுநிலையை ஆதாரமாகக் கொண்டே விடுதலைப் புலிகளின் கொள்கை நிலைப்பாட்டை பரிசீலனை செய்ய வேண்டும்.’

அதாவது பாலா அண்ணையைப் பொறுத்தவரை, தனியரசுக்கு மாற்றீடாக முன்வைக்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும், வடக்குக் கிழக்கு இணைந்த ஒன்றுபட்ட தமிழர் தாயகத்தை ஏற்றுக் கொள்ளும் விதத்திலும், தமிழர்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்கும் வகையிலும், ஒரு தேசிய இனம் என்ற விதத்தில் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் அவர்களின் உரிமையை மறுதலிக்காத வண்ணமும் அமைய வேண்டும். அந்தத் தீர்வு சமஸ்டித் தீர்வாக இருந்தாலும் சரி, வேறு வடிவங்களைக் கொண்ட மாநில சுயாட்சி அமைப்பாக இருந்தாலும் சரி, தமிழர்களின் உயிர்களையும், நலன்களையும் பாதுகாப்பதற்கான இராணுவக் கட்டமைப்பை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அவ்வாறு அல்லாது எந்தத் தீர்வும் எக்காலத்திலும் தமிழர்களுக்குப் பயன்தரப் போவதில்லை.

இதுதான் இன்று சமஸ்டி பற்றிப் பேசுபவர்களுக்கும், அன்று பாலா அண்ணையை விமர்சித்தவர்களுக்கும் பாலா அண்ணை விட்டுச் சென்றிருக்கும் பாடமாகும்.

– கலாநிதி சேரமான்

சாரதாம்பாளுக்கு மாத்திரமல்ல, எல்லோருக்கும் மறுக்கப்பட்ட நீதி!

ஒரு இனத்தின், ஒரு சமூகத்தின் உயிர்ப்புக்கு பெண் அவசியமானவள். தமிழ் சமூகத்தில் பெண்ணை தெய்வாக போற்றுகிற, சினம் கொண்டவளாக பார்க்கிற, நீதி வேண்டுபவளாக பார்க்கிற நம்பிக்கைகளும் தொன்மங்களும் உண்டு. ஈழமெங்கும் கண்ணகி என்றும் அம்மன் என்றும் பெண் வழிபாடுகள் பக்தியோடும் வீரத்தோடும் நீதியோடும் வணக்கப் பண்பாடுகள் இடம்பெறுகின்றன. இலங்கை அரசு இன ஒடுக்கல் மேலாதிக்கச் சிந்தனையுடன் தமிழ் சமூகத்தை ஒடுக்கத் தொடங்கியபோது தமிழ் பெண் சமூகத்தை திட்டமிட்டு அழித்தது.

வடக்கு கிழக்கில் சிங்களப் படைகள் நிலை கொள்ளத் தொடங்கிய காலத்தின் பின்னர் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. துப்பாக்கிகளுடன் ஆண்குறிகளையும் இன அழிப்புச் செய்யும் கருவியாக இலங்கை அரச படைகள் உபயோகித்தன. உலகில் மிக மிக மோசமான வன்முறையாக கருதப்படும் பாலியல் வன்முறையை இலங்கை அரச படைகள் சுதந்திரமாகவும் அரச அங்கீகாரத்துடனும் மேற்கொண்டன என்பதற்கு சாரதாம்பாள் என்ற ஈழப் பெண்ணின் கொலையும் ஒரு உதாரணமாகும்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் இரண்டு பிள்ளைகளின் தாய். டிசம்பர் 28. 1999ஆம் ஆண்டு. இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்புணரப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள் சாரதாம்பாள். கொலை செய்யப்பட்ட அவளின் உடலை சருகுகளால் மூடி விட்டுச் சென்றனர் இலங்கை அரச கடற் படைகள். சாரதாம்பாளின் வீட்டிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் இருந்த கடற்படை முகாம் அமைந்திருந்தது. சாரதாம்பாளும் அவரது தந்தையும் சகோதரரும் கறுப்பு உடையில் வந்த இராணுவத்தினரால் கடத்தப்பட்டனர்.

வன்புணர்ந்து கொல்லப்பட்ட நிலையில் சாரதாம்பாளின் உடல் வீட்டில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதாம்பாள் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டதை ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சாரதாம்பாளின் கொலையை கண்டித்து ஊர் வெகுண்டது. தமிழர் தாயகத்தில் கடும் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டங்களை கண்ணுற்ற இலங்கை அரசு, சாரதாம்பாளின் உடலை மருத்துவ பரிசோதனை செய்தது. உடலை மருத்துவப் பரிசோதனை செய்த அதிகாரி, அவரது வாயில் உள்ளாடையை திணித்து, அவரை கொலையாளிகள் கொன்றதாகவும், இறப்பதற்கு முன்னராக அவர் பலவந்தமாக பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார். சாரதாம்பாளுக்கு நடந்த அநீதியை நடுநிலையுடன் உறுதிசெய்த அந்த மருத்துவ அறிக்கையும் சாரதாம்பாளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா, இக் கொலை தொடர்பில் விசாரணை நடப்பதாக காட்டுவிக்க விசாரணை குழு ஒன்றை அமைத்தார். அரச இராணுவத்தின் பாலியல் வன்முறைகளை குறித்து மிகவும் சிறிய அளவிலேயே விசாரிக்க முடிந்ததாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கவனிக்கும் ஐநா சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி கூறினார். அத்துடன் இராணுவத்தினரின் பாலியல் குற்றச் சாட்டுக்களை குறித்து விசாரிக்க, அரசு ஒத்துழைக்கவில்லை என்று சந்திரிக்கா அரசு மீது குற்றம் சுமத்தினார்.

இலங்கையில், தமிழ் பெண்களை வன்புணர்ந்து அழிப்பது அரச படைகளுக்கு பதவி உயர்வுகளையும் தோதான இடமாற்றங்களையுமே அளித்திருக்கிறது. இந்த வகையில் சாரதாம்பாளை வன்புணர்ந்து கொலை செய்த குற்றவாளிகள் தோதான இடமாற்றங்களைப் பெற்று வழக்கிலிருந்து தப்பிச் சென்றனர். இந்தப் படுகொலை வழக்குத் தொடர்பில் போதிய சாட்சியங்கள் இல்லை என்று சட்ட மா அதிபர் திணைக்களத்தால் கூறப்பட்டு 200மே அளவில் வழக்கு செயல் இழந்தது.

வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்ட அவளின் உடலோ, மருத்துவ அறிக்கையோ, ஊர்ச் சனங்களின் கண்ணீரோ, தாயகத்தின் எழுச்சியோ, மனித உரிமை ஆர்வலர்களின் எடுத்துரைப்புக்களோ, சர்வதேச அமைப்புக்களின் கண்டன அறிக்கைகளோ, சிங்கள அரசின் நீதிமன்றத்தின் முன்னால் கணக்கில் எடுக்கப்படவில்லை. சாரதாம்பாளுக்கு நீதி கிடைக்கவில்லை. ஒன்றே ஒன்றுதான் நடந்தது. சாரதாம்பாள் கொல்லப்பட்டு ஆறு வருடங்களின் பின்னர், அதுவும் ஒரு மார்கழி மாதம் இளையதம்பி தர்சினி என்ற இளம் பெண் அதே கடற்படைகளால் அதே புங்குடுதீவில் கிணறொன்றில் கொன்று வீசப்பட்டாள்.

1999ஆம் ஆண்டு சாரதாம்பாள் கொல்லப்பட்ட நிகழ்வு இலங்கை அரசின் ஈழ இனப் பெண்களுக்கு எதிரான கோர முகத்தை உலகத்திற்கு காட்டியதொரு முக்கிய நிகழ்வாக கருதப்பட்டது. இலங்கை இனப்பிரச்சினையில், இலங்கை அரசின் இன வன்செயல்கள் குறித்து, ஈழ இனப் பெண் ஒடுக்குமுறைகள் குறித்து சல சலப்பை உருவாக்கியது. அதைப்போலவே 2005, டிசம்பர் 16 ஆம் நாள் நடந்த தர்சினி இனப்படுகொலை நான்காம் ஈழப்போருக்கு கதவு திறந்தது. இவை எவற்றையும் கண்டஞ்சாத இலங்கை அரசு மேலும் மேலும் இனப்படுகொலைகளைப் புரிந்து ஈழத் தமிழ் மக்களை படுகொலை செய்தது. இசைப்பிரியாக்களை நசுக்கியது.

சாரதாம்பளுக்கு மறுக்கப்பட்ட நீதியே, இசைப்பிரியாக்களும் மறுக்கப்பட்டன. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அத்தனை பெண்களுக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் அத்தனை சனங்களுக்கும் மறுக்கப்பட்டன. இலங்கை அரசின் நீதியமைப்பில் அழிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதற்கு சாரதாம்பாள் கொலை தக்க எடுத்துக்காட்டு. இத்தகைய அனைத்துக் கொலைகளுக்கும் நீதியைப் பெற நம்பகமான சர்வதேச விசாரணைகள் நடாத்தப்பட்டு மறுக்கப்பட்ட நீதி, நிலைநாட்டப்படவேண்டும்.

தீபச்செல்வன்

தமிழ் மக்கள் அனைவரும் அடிமாடுகள்!

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கப்போகும் ரொனால்ட் ட்ரம்பிடம் மைதிரிபால சிறிசேன சிறீலங்கா மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்களை நீக்கவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின்போது எங்கடை அரசாங்கம், நல்லாட்சி அரசாங்கம், எமது கோரிக்கைகளை நிறைவேற்றுமென தமிழ் மக்களுக்குச் சொல்லி வாக்குப்போட வைத்த சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் இதற்கு ஏதாவது மாற்றுக் கருத்துத் தெரிவித்தார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மூத்த சட்டத்தரணி கரிகாலன்.

தொடர்ந்து இவர் கருத்துத் தெரிவிக்கையில், அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஒற்றையாட்சிக்கெதிராகவோ, வடக்குக் கிழக்கு இணைப்புக்கெதிரா, பௌத்த மதத்திற்கெதிராக இரா.சம்பந்தன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனத் தெரிவித்திருந்தார். இதற்கு இரா.சம்பந்தன் ஏதாவது மறுப்புத் தெரிவித்தாரா? எனக் கேள்வியெழுப்பியதுடன், ஆக மொத்தத்தில் சிங்களவர்கள் கோயில் மாடுகளாகவும், சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் குழுமாடுகளாகவும், தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் அடிமாடுகள் எனவும் தெரிவித்துள்ளார்.

*
முத்தி நெறி அறியாதவர் – மூக்கர் தமிழர் மனம் அறியாதவர் – கயவர்

சமஷ்டி முறைமை அவுட் என்றாகி விட்டது. இனி ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதுதான் முடிவு. ஒற் றையாட்சிக்குள் தீர்வு என்றால் எல்லா அதிகாரங்களும் கிடைத்து விடும் யாரேனும் நம்பினால் அதுதான் மிகப்பெரும் மடமைத்தனம்.

ஆக, தமிழர்களுக்கான தீர்வு என்பது எதுவும் இல்லை என்றாகிவிட்டது. அப்படியானால் இதுவரை நடந்த மண்மீட்புப் போர், எங்கள் பிள்ளைகளின் தியாகம், உறவுகளின் இழப்பு, சொத்தழிவு, இடப்பெயர்வு என அனைத்தும் வீணாகிவிட்டதா? என்ற கேள்வி எழும்.

இந்தக் கேள்விக்கு விடையில்லை. இவையெல்லாம் சேர்ந்துதான் எங்கள் மூத்த அரசியல் தலைவர், காளி அம்மன் மீது கொண்ட அளப்பெரும் கருணையால் தேசியக் கொடியும் சிங்கக் கொடி மீது அளவற்ற பற்றும் கொண்ட, சீமான் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தர் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது.

இது ஒன்று போதும் எங்கள் இனம் இதைச் சொல்லிச் சொல்லியே சீவியம் நடத்தும். என்ன செய்வது? போராட்டம் தோற்றது என்பதற்கப்பால் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை பொறுப்பேற்ற எங்கள் அரசியல் தலைமை இருக்கிறதே; அதுதான் எங்கள் ஊழ்வினையின் அடையாளம் என்று கூறிக்கொள்ளலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழ் மக்கள் கூறினாலும் இருவரைக் கொண்ட அமைப்பாகவே அது இப்போது உள்ளது. மற்றும்படி ஒருசிலர் அரசை முடக்குவோம் என வீராப்பு பேசுகின்றனர். இது அவர் களின் பாத்திரத்துக்கான வசனம். இதுகூட அந்த இருவரில் ஒருவரால் எழுதப்பட்டதாக இருக்கலாம்.
இவ்வாறு பேசப்படுகின்ற வீராப்பு வசனத்தை கேள்வியுற்றதும் முதலில் சிரிப்பவர்கள் அந்த இரு வருமாகவே இருக்க முடியும் .

என்ன செய்வது? இம்மை மறுமை தெரியாத நிலையில் எங்கள் அரசியல் தலைமைக்கு முறைப்பாடு கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நினைத்தால் இதயம் கருகிப்போகும்.

சரி, இவைதான் ஒருபுறம் என்று விட்டுவிடலாம் என்றால் இன்றுவரை; இந்த நிமிடம் வரை தமிழ் அர சியல் தலைமை எங்களுக்கு சமஷ்டித் தீர்வை எடுத்துத் தரும். வடக்கு – கிழக்கை இணைக்கும் என்று நம் புகின்ற அப்பாவிகளை நினைக்கும் போது கண்கள் கலங்கிக் கொள்கின்றன.

சரி, அவர்கள் ஆளும் இனம். நாங்கள் ஆளப்படும் இனம். வந்து பிறந்துவிட்டோம் வாழத் தெரியவில்லை என்று பேசாமல் இருந்தால்,

வடக்கில் சிங்கள மீள்குடியேற்றம். ஆனால் தமிழன், தானிருந்த தனது பூர்வீக மண்ணில் குடியிருக்க அனுமதி மறுப்பு.

புத்த விகாரைகள் வடக்கில் அமைப்பு. இந்து ஆலயங்கள் உடைப்பு என்பதாக நிலைமை இருப்பதால் நாளும் நம் இதயம் நொருங்குகிறது.

பேசாமல் இருந்தாலும் விடுகிறார்கள் இல்லை. தமிழன் வாழ்ந்த பூமியையும் புத்தர் பிறந்த இடமாக காட்டுவதிலேயே அவர்கள் கரிசினை கொள்கின்றனர்.

இந்நிலையில் ஒற்றையாட்சில் தீர்வு என்பதற்கு எங்கள் அரசியல் தலைமை உடன்படுகிறது என்றால், இதைவிட அநியாயம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

என் செய்வோம்? முத்தி நெறி அறியாத மூக்கரோடும் தமிழ் இனத்தின் பிரச்சினை தெரியாத கயவரோடும் வாழ்வதென்பது முடியாத காரியம் அவ்வளவு தான்.

*
வழிகாட்டல் குழுவிலிருந்து சம்பந்தன், சுமந்திரன் விலகவேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்!

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை, பௌத்தத்திற்கு முதலிடம் என தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் வழிகாட்டல் குழுவில் இருந்து இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உடனடியாக வெளியேற வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

21 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களாக அங்கம் வகிப்பதாகவம், இருவரும் சமஷ்டி அமைப்பு முறை வேண்டுமென்றோ, அல்லது வடகிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்றோ எந்தவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.

பௌத்த மதத்திற்கு தான் முதலிடம் என்பதனை எதிர்க்கவில்லை என மகிந்த அமரவீர தெளிவாக தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், வடகிழக்கு இணைக்கப்பட மாட்டாது என்று சொல்லி, இரா.சம்பந்தன் போன்ற தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது, கொடுத்து வைத்த விடயம் எனவே, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் காலத்தில் ஒன்றுமில்லாமல் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி. போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அரசியல் தீர்வுக்கு தயாராக இருப்பதாக சொல்கின்றார்கள்.

வழிகாட்டல் குழுவில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான தமிழ் மக்களின் தலைவரும், தமிழரசு கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தனும், சுமந்திரனும் இந்த வழிகாட்டல் குழுவில் இருந்தால், வழிகாட்டல் குழுவில் ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இருவரும் சட்டம் தெரிந்தவர்கள், ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என சொல்லக்கூடியவர்கள். ஏன் வழிகாட்டல் குழுவில் எந்த விடயங்களையும் கேட்காவிடின், வழிகாட்டல் குழுவில் இருவரும் என்ன செய்கின்றீர்கள் என மீண்டும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றும், அந்த பேச்சுவார்த்தையில் பேசப்படும் விடயங்கள் அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் சொல்லப்பட்டது.

ஆனால், அரசாங்கத்துடன் பேசி என்னென்ன விடயங்கள் அரசியல் சாசனத்தில் வர வேண்டுமென்ற விடயங்கள் வெளிவந்திருக்க வேண்டும்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏமாற்ற கொழும்பு முயன்றால், அரசை முடக்கும் போராட்டம் என்றால், இதுவரையில் அரசாங்கம் ஏமாற்றவில்லை என தெரிவிக்கின்றார். சுமந்திரன் வடகிழக்கு இணைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கின்றார்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைக்கப்படமாட்டாது என கூறுவது அனைத்தும் பொய்யானதா? இதுவரையில் நீங்கள் ஏமாற்றப்படவில்லையா? ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதம் கிடைக்கவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் சந்திக்க வேண்டுமாயின் ஏற்புடைய ஒரு நாளில் சந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

உண்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்ன விடயங்களைச் சொல்ல வருகின்றார்.

ஆளும் கட்சியில் உள்ள பெரும்பான்மையான அமைச்சர்கள் ஒற்றையாட்சியினை மாற்ற முடியாது.
வடகிழக்கு இணைப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது. என கூறுவதன் பின்னர், வழிகாட்டல் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக இருவர் இருக்க வேண்டியதன் தேவை என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறி, எமது குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் உடனடியாக அரசாங்கத்துடன் பேசிய பின்னர் வழிகாட்டல் குழுவில் இணைவதைப் பற்றி யோசிக்கலாம்.

வுழிகாட்டல் குழுவில் இருந்து அனைத்தும் மறுதலிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டல் குழுவில் இணைவதன் நோக்கம் என்ன? வழிகாட்டல் குழுவின் ஊடாக வடகிழக்கு இணைப்பினைச் சாதிக்க முடியுமாயின் ஏன் இதுவரை அந்த விடயம் பேசப்படவில்லை.

அத்துடன் 40 கூட்டங்கள் நடைபெற்றதாக கூறப்பட்ட போதிலும் ஏன் இந்த விடயங்கள் பேசப்படவில்லை. கடந்த மாதம் இடைக்கால அறிக்கை வெளியிடுவதாக கூறியிருந்த போதிலும், அந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இடைக்கால அறிக்கையின்றியே, விவாதம் நடைபெறப் போகின்றதா? பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதனூடாக விவாதம் நடைபெறப் போகின்றதா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
விவாதம் 6 உப குழுக்களின் அறிக்கை மீதானதா? அல்லது இடைக்கால அறிக்கை வெளியிடப்படப் போகின்றதா? வடகிழக்கு இணைப்பு, பௌத்தத்திற்கு முதலிடம், ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயங்களை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விவாதத்திற்கு போவதா? ஈ.பி.ஆர்.எல்.எப். பொறுத்தவரையில் அவ்வாறு போவதாக இருந்தால், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் வழிகாட்டல் குழுவில் இருந்து விலகி அரசுடன் திடமான பேச்சுவார்த்தையினை நடாத்த வேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை கோரவிடின், மறுதலித்த அரசாங்கத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டதாகவே இருக்கும்.

இவ்வாறு மறுதலிக்கப்பட்ட நிலையில் வழிகாட்டல் குழுவில் இருப்பது அரசாங்கத்தினைப் பாதுகாப்பதற்கா? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

மேலும் அரசைப் பாதுகாக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை. எனவே, வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறி அரசாங்கத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டு என அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**

அட! தம்பி சுமந்திரன் உள்ளூர்த் தீர்ப்பை நம்பலாமோ?

எண்பத்தைந்து வயது முதியவர் ஒருவர் வாசிகசாலை ஒன்றில் பத்திரிகை பார்த்துவிட்டு ஒரு வெள்ளைத் தாளில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். எழுதுகின்ற அதேநேரம் அவரின் முணுமுணுப்பும் மெல்லக் கேட்கிறது.

பத்திரிகை வாசித்துவிட்டு இப்பெரியவர் எதை எழுதுகிறார் என்று நினைத்து சரி, ஒருக்கால் பார்த்து விடலாம் என முடிவு செய்தேன். அந்த எழுத்து இப்படி இருந்தது.

தம்பி சுமந்திரனுக்கு வணக்கம். எனக்கு வயது எண்பத்தைந்து இனி நாங்கள் சருகுகள். இருந்தும் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். ஏற்புடையதாயின் ஏற்றுக்கொள்க.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை தொடர்பிலான விசாரணை முடிவில் குற்ற வாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள், நிரபராதிகள் ஆகக் கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இது தான் நடக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.

எண்பது வயதும் எனது அனுபவமும் அப்படி ஒரு முடிவுக்கு என்னைக் கொண்டு வந்தது. ஆனாலும் ஓர் ஐயம்! எங்கட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூர் விசாரணையில் திருப்தியடைவது போல தெரிவி த்ததால சிலவேளை ரவிராஜ் படுகொலைக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கிடைத்து விடுமோ என்று திசை மாறினேன்.

ஆனால் நடந்தது நான் முன்பு நினைத்து போலத் தான். அதுமட்டுமல்ல, திருகோணமலையில் நடந்த படுகொலை தொடர்பிலும் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் விடுதலை பெற்றனர்.
இவைமட்டுமல்ல, இதற்கு முன்பும் ஏகப்பட்ட விடயங்கள் எனக்குத் தெரியும். அவற்றையெல்ல்லாம் எழு துவதற்கு என் வயது இடந்தரவில்லை.

அதேநேரம் நல்லாட்சி என்றாலும் என் பாதுகாப்புப் பற்றி நான் கவனம் எடுக்காவிட்டால் வேறு யார் தான் கவனம் எடுப்பார்கள்? ஆகையால் அவற்றை விட்டு விடுகிறேன்.

இது ஒருபுறமிருக்க, தம்பி சுமந்திரன்! மேலும் அறிவது, நடந்து முடிந்த வன்னிப் பெருயுத்தம் தொடர்பில என்ன மகன் நடக்குது? சர்வதேச விசாரணை நடந்த முடிந்து விட்டது என்று தாங்கள் கூறியதாக பத் திரிகை மூலம் அறிந்தேன்.

நீங்கள் கூறியதை தம்பி மாவை வன்னிக்கூட்டம் ஒன்றில் வைத்து வழிமொழிந்தார்.
ஆனால் பலரும் சொல்கிறார்கள் சர்வதேச விசாரணை நடக்கவில்லை. சர்வதேச விசாரணைதான் தேவை என்று.

அட! காலன் அழைக்கின்ற நேரத்தில உமக்கேன் இந்த ஆய்வென்று தாங்கள் மனதுக்க நினைத்தாலும் பரவாயில்லை. என்ர இறுதிக் காலத்துக்குள் சர்வதேச விசாரணை நடந்து விட்டதா? அல்லது நடக்குமா? என்பதை அறிய வேண்டும் என்பதுதான் என் பெருவிருப்பம்.

சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றால் அந்த விசாரணை எங்கே? அதற்கு நடந்தது என்ன? அல்லது வன்னி பெருநில யுத்தத்தின் போது எங்களைப் பாதுகாக்காத பரம்பொருள் போல சர்வதேச விசாரணையும் அருவத் திருமேனியாய் விறகில் தீ போல்; பாலில் நெய் போல்; சங்கில ஒலி போல; உள் ளதோ? யாமறியேன்.

அது சரி, ரவிராஜ் படுகொலை விசாரணையின் தீர்ப்புக்குப் பின்னரும் உள்ளூர்த் தீர்ப்பு உத்தமம் என்று தாங்கள் கருதுகிறீர்களா? என்பதையும் அறிய ஆவல்.

ஏனென்றால் உள்நாட்டுத் தீர்ப்பில் நம்பிக்கை உண்டு என்பது போல எங்கோ ஓரிடத்தில் தாங்கள் கூறி யதாக ஞாபகம். பின்னர் அண்மையில் கரவெட்டியில் நடந்த நிகழ்வொன்றில், இலங்கையின் நீதித்துறை மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதென்று தாங்கள் உரையாற்றியதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.

அட தம்பி! எப்பதான் நாங்கள் உண்மையை உண்மையாக அறியப் போகிறோம். உண்மை ஒன்றுதான். இந்த ஓர் உண்மைக்குள் உண்மைதான் இருக்கும். உண்மை பற்றிக்கூறும் மற்றவை அனைத்தும் பொய்யாகும்.

ஏதோ எங்கட சனங்கள் பாவம் மகன்! நம்பி புள்ளடி போட்டவையள். ஏதோ பாத்து நடவுங்கள். என்ர நண்பன் சம்பந்தரை நலன் விசாரித்ததாகவும் கூறவும்.

வலம்புரி

தமிழர் தரப்பு தன்னை புதுப்பித்துக்கொள்ளுமா?

முள்ளிவாய்க்காளில் இருண்ட தமிழர் தேசம் இற்றைவரை முழுமையாய விடியவில்லை , யுத்தத்தின் போது அழ தொடங்கிய பலர் இக்கணம் வரை கண்ணீரோடுதான் காலத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள் . போரை தவிர்த்து நோக்கின் ஒப்பீட்டளவில் ஒட்டுமொத்த தமிழர் தேசம் எதிர்நோக்கிய பிரச்சனையின் தன்மை என்பது அதன் வேகத்தில் முள்ளிவாய்க்காலுக்கு பின் ஆர்முடுகளிலேயே இருந்து வருகிறது அதனை தடுப்பதற்கான வேகம் என்பது பூச்சியத்தில் இருந்து நகராமலேயே இருந்துகொண்டிருக்கிறது.

தமிழர் மீதான அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் அழிப்பு நடவடிக்கைகளும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களின் கொள்கை அல்ல அது ஸ்ரீலங்கா அரசின் கொள்கை. ஸ்ரீலங்கா அரசின் மாற்றப்படாத நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டுவிட்ட ஒன்று . எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரசின் தமிழின எதிர்ப்பு பொதுக்கொள்கையை நிறைவேற்றுவதில் அவர்கள் பின் நிற்பதில்லை ஏனெனில் அதனை அவர்கள் அவர்களது பார்வையில் பௌத்த அறமாகவே பார்த்து வருகிறார்கள் . அதற்கு அடிப்படையான மூலகாரணமும் முதற்காரணமுமாய் அமைவது பௌத்தமதமாகும். அறத்தை கருவாக கொண்டு உருவான பௌத்தம் இத்தீவில் மறத்தின் அடிப்படையில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு வருவது கூட பௌத்த அறமாகிவிட்டது.

இன்றைய அரசானது பௌத்தசிங்கள மேலாண்மை சிந்தனை மேல் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும் அது திடீர் என்று உருவாக்கப்பட்டதல்ல அது பல கட்டங்களை தாண்டியே இன்று பல லட்சம் மக்களை கொலை செய்யும் அளவு இந்த கூர்மையான நிலையை அடைந்திருக்கிறது. கூர்மையாக்கப்பட்டிருக்கும் இந்நிலைக்கு அடிப்படையான சிந்தனை ஒரு ஐதீக கதையில் இருந்தே உருவாக்கம் பெறுகிறது.

கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்துகொண்டிருந்த விசாகபௌர்ணமி தினத்தில் வியனும் தோழர்களும் இலங்கையில் காலடி எடுத்துவைத்தனர் , இவ்வாறு காலடி எடுத்துவைத்துக்கொண்டிருந்த வியனும் அவனது வழித்தோன்றல்களுமே பௌத்தத்தை பேணி காக்கப்போகின்றனர் என்று பரிநிர்வாணம் அடைந்துகொண்டிருந்த கௌதம புத்தர் கூறியதாக மகாவம்சம் கூறுகிறது.

அதன் படி அவன் ஆண்டு பௌத்த சிங்கள அரசமைப்பை நிறுவினான் என்றும் மஹாவம்சம் கூறுகிறது. இதனையே தம்ம தீப கோட்பாடு என்று அழைக்கின்றனர். புத்தரால் ”தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு ” என்பதே அதன் பொருள். அதாவது இந்த தீவு பௌத்தத்துக்குரியது , வியனும் அவனது சந்ததியுமே இந்த தீவுக்கு உரித்துடையவர்கள் என்ற பொய்யான நிறுவல்களை இந்த பொய்யான கதை உருவாக்கி விட்டது அத்தோடு ஒரே இனம் , ஒரே மதம் , ஒரே மொழி , ஓர் அரசு என்ற கருத்தியலையும் தோற்றுவித்தது. இதன் வழியே மகா சங்கமும் அரசும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒன்றை ஒன்று பாதுகாத்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறார்கள். இதன் வெளிப்பாடுதான் ஆளில்லா ஊரில் டீ கடை போடுவது போல் ஆங்காங்கே முளைக்கும் புத்தர் சிலைகளும் , அகல கால் வைத்து தமிழர் நிலத்தை விழுங்கும் குடியேற்ற திட்டங்களும்.

இந்த தம்ம தீப கோட்பாட்டின் நவீன புத்திரர்கள் தான் இன்றைய ஆட்சியாளர்கள் , அதற்கு மைத்திரி மட்டும் விதிவிலக்கானவர் அல்ல , அதனாலேயே பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி மொழி வழங்கப்பட்டு வருகிறது , அதே நேரம் பௌத்தம் தனது மேலாண்மையை இத்தீவு முழுவதும் நிலை நிறுத்த ஒற்றை ஆட்சி அவசியமானதாகிறது . அதன் காரணத்தினாலேயே ஓர் அரசு அது ஒற்றை ஆட்சி அரசு என்கிற தீர்மானத்தில் சிங்கள தேசம் விட்டுக்கொடுப்பின்றி நடந்து வருகிறது.

ஆனால் தமிழர் தரப்பு கற்பனையில் காதல் கோட்டை கட்டி இதயத்தால் இணைந்து மானசீகமாக காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நீண்ட கால அடிப்படையில் தமிழரின் உரிமை குரலை நசுக்குவதற்காக ஸ்ரீலங்காவும் சர்வதேசமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் இதில் மிக முக்கியமாக இரண்டு அடிப்படைகளில் தமது செயற்பாடுகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்

1. பயன்படுத்துதல்

2. துண்டாடுதல்

பின் முள்ளிவாய்க்கால் காலத்தில் ஆயுத ரீதியாக தோற்கடித்த தமிழரை அரசியல் ரீதியாகவும் தோற்கடித்து வலுவிழக்க செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது அதற்காகவே இந்த நடவடிக்கையை அவர்கள் செய்ய தொடங்கினார்கள் , அதாவது தமிழரை பயன்படுத்துவதன் ஊடாகவும் அவர்களை துண்டாடுவதன் ஊடாகவும் நீண்டகால அடிப்படையில் தமிழர் விடுதலைக்கான உரிமைக்குரலை நசுக்குவதும் காலப்போக்கில் அதனை நீர்த்து போக வைப்பதுமே அவர்களின் திட்டமாக இருந்து வருகிறது.

சரி எப்படி பயன் படுத்துகிறார்கள் என்று பார்ப்போம் .

தமிழ் தலைமைகளையும், இலக்கியவாதிகளையும் , புத்தி ஜீவிகளையும் களத்திலும் புலத்திலும் தேர்ந்தெடுத்து அவர்களை பயன்படுத்துவதன் ஊடாக இதனை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். கடந்த கடந்த சனாதிபதி தேர்தலின் போது எந்த வித பேரம் பேசலும் இல்லாமல் ஸ்ரீலங்கா தமிழர்களை பயன்படுத்தி சிங்கள பௌத்த மேலாண்மையை புதுப்பித்துக்கொண்டது , அரசியல் ரீதியாக தன்னை மீறி வெளி உலகில் எதிர்கொண்ட மிகப்பெரும் சவாலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது . சர்வதேசமும் தனது பூகோள புவிசார் நலன்களை அடைந்திருந்தது.

இன்றைய தமிழர் அரசியலில் அவர்கள் சார்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஸ்ரீலங்காவாலும் சர்வதேசத்தாலும் பயன்படுத்தப்பட்டுகொண்டே இருக்கிறார்கள்.

அதோடு இலக்கியவாதிகளையும் புத்திஜீவிகள் என்று சொல்லப்படுவோரையும் தேர்ந்தெடுத்து அவர்களை ஆயுத போராட்டத்துக்கு எதிராக எழுத வைத்து அதனை பரப்புரை செய்து ஆயுத போராட்ட நியாயப்பாடுகளை நீர்த்துப்போக செய்வதே அவர்களின் இலக்காக இருக்கிறது. அவர்கள் நடுநிலை வாதிகள் என்ற பெயரிலேயே இன்று களமிறக்கப்பட்டிருக்கிறார்கள் .

ஈழ விடுதலைப்போராட்டத்தில் உச்ச பட்ச பற்றும் , தியாகமும் அதிகம் வெளித்தெரிந்தது ஆயுத போராட்ட காலத்தில் தான் அதனை தலைமை தங்கியவர்கள் விடுதலைப்புலிகள் , ஆகவே அவர்களை பிழையானவர்கள் என்று நிறுவ முற்படுவதன் ஊடாக ஒட்டு மொத்த ஈழ விடுதலை ஆயுத போராட்டமும் பிழையானது என்று வரலாற்றை பதிவு செய்து பரப்புரை செய்வதே இவர்களின் வேலை.

ஒரு ஆறு ஓடும் போது ஆங்காங்கே ஒரு சில குப்பைகளும் சேர்ந்து ஓடும் , அதற்காக ஆறு ஓடவில்லை குப்பை ஓடுகிறது என்று சொல்ல முடியாது. இந்த இலக்கியவாதிகள் ஆறு ஓடவில்லை குப்பை ஓடுகிறது என்னும் முட்டாள் தனமான உண்மைக்கு புறம்பான முடிவை தீர்மானமாக வைத்து கொண்டு எழுதி வருகின்றனர். ஆயுத போராட்டத்தில் இராணுவ ரீதியில் தீர்மானங்கள் எடுக்கிற போது ஆங்காங்கே சில தவறுகள் இடம்பெற வாய்ப்புக்கள் இருந்திருக்கும் அந்த ஒரு சில தவறை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த ஆயுதப்போராட்டமே பிழையானது என்று நிறுவுவது ஒரு இனத்தின் விடுதலை போராட்டத்தை குழி தோண்டி புதைக்கும் படு பாதக செயலாகும் . இது அவர்கள் உண்மையில் நடு நிலை வாதிகளா அல்லது அவர்கள் யார் என்பதை தோலுரித்து காட்டுகிறது.

மற்றையது துண்டாடுதல் அதாவது தமிழர்களிடையே பல்வேறு கட்சிகளையும் , குழுக்களையும், அமைப்புக்களையும் உருவாக்கி எப்போதும் தம்மால் இலகுவாக கையாளக்கூடிய சக்தியாக வைத்திருப்பதே அவர்களின் நோக்காகும் . தீவிர , மற்றும் மித வாத போக்கு கொண்ட எல்லா இடங்களில் இருந்தும் நபர்களை தெரிவு செய்து தமது நலன்களை அடையும் பொருட்டு தமிழர் நலனை பலியாக்க முற்படுகின்றனர். இதற்காக பல மில்லியன் டொலர்களில் பேரங்கள் பேசப்பட்டு கொண்டு இருக்கின்றன , சில திட்டங்கள் நடைமுறைக்கும் வந்து விட்டது. சர்வதேச சக்திகளை பொறுத்த வரையில் இத்தீவில் கொழும்பை கையாள்வதற்கு தமிழர்கள் அவர்களுக்கு எப்போதும் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். காலத்துக்கு காலம் அதனை பல்வேறு வடிவங்களில் அமுல் படுத்தி வருகிறார்கள் . இன்று ஏற்பட்டிருக்கும் சூழலை வெளிச்சக்திகள் நன்கு பயன் படுத்தி மிகவும் ஆழமாக தமது செயற்பாடுகளை வேரூன்ற செய்து வருகின்றனர்.

மேற்குறித்த விடயங்கள் மேலோட்டமாக பார்ப்பதற்கு தமிழர்க்கு நன்மை பயப்பது போல் தோன்றலாம் அல்லது மிகச்சாதாரணமானதாக தோன்றலாம் ஆனால் கால ஓட்டத்தில் ஈழத்தில் தமிழரின் இருப்பை வேரறுக்க செய்ய கூடிய செயல்கள் என்பதை தமிழர்கள் ஆழமாக புரிந்துகொள்ளவேண்டும்.

இனியாவது தமிழர் தரப்பு தன்னை புதுப்பித்துக்கொள்ளவேண்டும் . ஒரு பிரமிட்டை போல தேசிய அரசியலை கீழிருந்து மேல் நோக்கி பலமானதாக கட்டி எழுப்ப வேண்டும் . அப்போது தான் வேகமாக விழுங்கி வரும் ஸ்ரீலங்காவில் இருந்து தமிழர் தம்மை காத்துக்கொள்ள முடியும்.

இளையவன்னியன்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு!

பத்து வருடங்களுக்கு முன்னர், நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அழகிய சுறுசுறுப்பான ஒரு காலை நேரம்.

கொழும்பு நாரஹேன்பிட்டி மணிங் பிளேஸ் பகுதியில் இருந்த தனது வீட்டில் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், மெய்ப்பாதுகாவலர் சாந்த லக்ஸ்மன் லொக்குவெல என்பவருடன் காரில் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டுச் செல்கின்றார்.

வீட்டில் இருந்து சிறிது தொலைவு சென்றதும், வாகன நடமாட்டங்களும் பெருமளவிலான மக்கள் நடமாட்டமும் மிகுந்திருந்த ஒரு பிரதான வீதியில் நகர்ந்துகொண்டிருந்த அவருடைய காரின் மீது சரமாரியாகத் துப்பாக்கிக் குண்டுகள் சீறி வந்து துளைக்கின்றன.

சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்ட காரில் இருந்த ரவிராஜும் அவருடைய மெய்ப்பாதுகாவலரும் பட்டப்பகலில் நட்ட நடு வீதியில் கொல்லப்படுகின்றனர்.

வீதியில் சென்ற பலர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.

திடீரென தங்களையும் ஆபத்து சூழ்ந்துவிடும் என்ற உணர்வு ஏற்பட்டதும், அச்சத்தினால் பதட்டமடைந்து, பாதுகாப்பான இடங்களை நோக்கி ஒடிச்சென்றனர். ஒரு சிலரே விடுப்புப் பார்க்கும் துணிவில் மறைவாக இருந்து என்ன நடந்தது என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்திருந்தனர்.

நடுவீதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு வாகனம் ஒன்று இலக்காகியதையடுத்து வாகனப் போக்குவரத்து திடீரென ஸ்தம்பிதமடைந்தது. எனினும் ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து வாகனங்கள் வீதியில் கிடைத்த சிறிய இடைவெளிகளுக்குள்ளாக ஓடிச் சென்றன.

சுறுசுறுப்பு மிகுந்திருந்த அந்த அழகிய காலை நேரம் இரத்தத்தில் தோய்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி காட்டுத் தீயைப் போல பரவி, தமிழர் நெஞ்சங்களைப் படபடத்து அதிர்ச்சியடையச் செய்தது.

பத்து வருடங்களுக்குப் பின்னர், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவு 12.25 மணி.

இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறை, அமைதியும் மகிழ்ச்சியும் கூடிய கிறிஸ்மஸ் பண்டிகைப் பரிசாக ரவிராஜ் கொலை வழக்கின் எதிரிகள் ஐந்து பேரையும் குற்றமற்றவர்கள், நிரபராதிகள் என பிரகடனம் செய்து தீர்ப்பளிக்கின்றது.

இந்த நள்ளிரவுத் தீர்ப்பையடுத்து, கிறிஸ்மஸ் பண்டிகைக்காலத்து மகிழ்ச்சியில் திளைத்திருந்த பலரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்.

ரவிராஜின் கொலைச்சம்பவம் பற்றிய செய்தி எவ்வாறு அதிர்ச்சி தரத்தக்க வகையில் வந்து மோதியதோ அதேபோன்று அவரது கொலை வழக்கின் தீர்ப்பும் பலருடைய மனங்களில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

இராணுவ முகாம் ஒன்றிற்கு அருகில் வீதிச் சோதனைக்கான, பொலிசாரின் இரண்டு வீதித்தடை நிலையங்களுக்கிடையில் இடம்பெற்றிருந்த ரவிராஜ் கொலைச் சம்பவம் தொடர்பில், உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் ஓய்ந்து, ஒன்பது வருடங்களுக்குப் பின்பே, சந்தேகத்தின் பேரில் ஆட்கள் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஒரு வருடம் கழித்து, இந்தக் கொலை வழக்கு 2016 செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ரவிராஜ் கொலை வழக்கின் நீதிமன்ற விசாரணைகளுக்காக பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது என்று இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் ஆறு பேருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களைக் கொண்டதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 2016 ஜுலை மாதம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி ஏழு பேர் கொண்ட சிங்கள அறங்கூறும் விசேட அவையினர் முன்னிலையில் இந்த வழக்கை விசாரணை செய்வதற்கான அனுமதியை மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க வழங்கியிருந்தார்.

எதிரி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தொடர்ச்சியாக ஒரு மாத காலம் நடைபெற்ற விசாரணைகளின் முடிவில் 23 ஆம் திகதி நள்ளிரவு வரையில் ஆலோசனைகளை நடத்திய அறங்கூறும் அவையினர் நள்ளிரவுக்குப் பின்னர் 24 ஆம் திகதி அதிகாலை 12.25 மணியளவில் இந்த வழக்கில் எதிரிகள் ஐந்து பேரும் நிரபராதிகள் என்ற தமது ஏகமனதான முடிவை வெளியிட்டு, அவர்களை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தனர்.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக அறங்கூறும் அவையினர் முன்னிலையில் நடத்தப்பட்ட ஒரு வழக்கு விசாரணையில் இவ்வாறு நள்ளிரவில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முரண்பாடுகளும் கேள்விகளும்

பட்டப்பகலில் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த தலைநகரப் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்த ரவிராஜ் கொலை வழக்கில் எதிரிகள் அனைவருமே நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல சட்டத்துறை நீதித்துறை வட்டாரங்களிலும் அதேபோன்று அரசியல்துறை வட்டாரங்களிலும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

விசேடமாக தமிழ் அரசியல்வாதிகள் பலரை இந்தத் தீர்ப்பு சீற்றமடையச் செய்திருக்கின்றது, இந்தத் தீர்ப்புக்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிடத் தூண்டியிருக்கின்றது.

ரவிராஜ் கொலை வழக்கு விசாரணைகளில் காணப்படுகின்ற முரண்பாடுகளும், அவை தொடர்பில் எழுந்துள்ள கேள்விகளுமே இதற்குக் காரணமாகும்.

இந்த வழக்கில் ஆறு பேருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவர்களில் சம்பத் ன்றழைக்கப்படுகின்ற பிரசாத் சந்தன குமார, காமினி செனவிரத்ன, வஜிர என்றழைக்கப்படுகின்ற பிரதீப் சமிந்த என்ற மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களில் இருவர் அதிகாரிகள் தரத்தினர். அத்துடன் சாமி என்றழைக்கப்படுகின்ற பழனிச்சாமி சுரேஷ், சிவகாந்தன் விவேகானந்தன் ஆகிய இருவரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவைச் சேர்ந்தவர்களாவர். அத்துடன் பபியன் ரொய்ஸ்டன் டுசைன் என்பவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது குற்றம் சுமத்தப்பட்ட ஆறு எதிரிகளில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மிகுதி ஐந்து பேரில் இருவர் தலைமறைவாகிவிட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

ஐந்து எதிரிகளுக்கும் எதிராக சாதாரண குற்றச் சட்டம் மற்றம் விசேட சட்டமாகிய பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

விசேட சட்டமாகிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயும் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதனால், இந்த வழக்கில் சாதாரண குற்றவியல் சட்டம் வலுவிழந்து போகின்ற நிலையில், அறங்கூறும் அவையினராகிய ஜுரிகள் சபை முன்னிலையில் இந்த வழக்கை விசாரணை செய்ய முடியாது என்று சட்டத்தரணி சுமந்திரன் ஆட்சேபணை தெரிவித்து, வாதம் புரிந்திருந்தார்.

அவருடைய வாதம் புறந்தள்ளப்பட்டது. அறங்கூறும் அவையினர் முன்னிலையில் விசாரணை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இது ஒரு முரண்பாடு.

சுமந்திரனுடைய வாதத்தின்படி, இந்த வழக்கில் கையளிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்ட ஆறு எதிரிகளுடன் சட்டமா அதிபரினால் இன்னார் என்று அடையாளம் காணப்படாத வேறு சிலரும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எதிரிகளுடன் இணைந்து இந்தக் குற்றச் செயலைச் செய்திருந்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, சட்டமா அதிபருக்குத் இன்னார் என்று தெரியாதவர்கள் -அடையாளம் காணப்படாதவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் தனது வாதத்தின்போது நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். ஆனால் அவருடைய கோரிக்கை உரிய முறையில் கவனத்திற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

குற்றப்பத்திரம் ஒன்றில் பெயர் குறிப்பிட்ட எதிரிகளுடன் பெயர் குறிப்பிட முடியாத – இன்னார் என்று அடையாளம் காணப்படாதவர்களும் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என தெரிவித்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டிருக்கின்றது.

நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்பொழுது யார் என்ன குற்றம் செய்தார் என்பது துல்லியமாகத் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால் இந்த வழக்கில் குற்றம் செய்தவர்கள் யார் என்பது முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை.

பெயர் குறிப்பிடப்பட்டவர்களுடன் வேறு சிலரும் இந்தக் குற்றச்செயலில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் அல்லது குற்றச் செயலைத் திட்டமிட்டிருந்தார்கள் அல்லது குற்றச் செயலைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்கள் என்ற அனுமானத்திற்குரிய வகையில் தெரிவிக்கப்பட்டிருப்பது, இந்தக் குற்றப்பத்திரம் முழுமையானதா என்ற கேள்வி சாதாரண மக்களிடையே எழுந்திருக்கின்றது.

எனவே முழுமை பெறாத ஒரு குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் ஒரு வழக்கை விசாரணை செய்து தீர்ப்பளிப்பது, முழுமையானதொரு நீதித்துறை நடவடிக்கையாகுமா என்ற கேள்வியும் மக்கள் மனங்களில் எழுந்திருக்கின்றது.

இதற்கு சட்ட ரீதியான – சரியான விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

அதே நேரத்தில் இந்த வழக்கானது, நாட்டின் சட்டங்களை இயற்றுகின்ற ஓர் உயர்ந்த சபையாகிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவராகிய ரவிராஜுடன், அவருடைய மெய்ப்பாதுகாவலரான சிங்களவர் ஒருவரும் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியதாகும். அத்துடன் இந்த வழக்கில் நான்கு சிங்களவர்களும் இரண்டு தமிழர்களும் எதிரிகளாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் முழுமையாக சிங்கள இனம்சார்ந்த அறங்கூறும் அவையினரைக் கொண்ட சபை – ஜுரி சபையினால் விசாரணை செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனச்சாட்சியுமில்லை நீதியுமில்லை

போர்க்குற்ற வழக்குகளில் நீதி கிடைக்கமாட்டாது என்பது இலங்கையின் நீதித்துறையில் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அனுபவமாகும்.

அந்த வகையில் குமாரபுரம் கொலை வழக்கு, மயிலந்தனை கொலை வழக்கு என்ற வரிசையில் ரவிராஜ் கொலை வழக்கும் இணைந்து விட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நீதிபதிகளைத் தலைகுனியச் செய்திருக்கின்றது.

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமற்றது. படையினருக்கு எதிராக நீதி வழங்கமாட்டாது என்ற நிலைப்பாட்டை மீண்டும் ஒரு முறை உறுதியாக வெளிப்படுத்தியிருக்கின்றது.

இனரீதியான போர்க்குற்றம் சார்ந்த வழக்குகளில் ஜுரி விசாரணை முறைமை பயன்படுத்தப்படும்போது நீதி கிடைக்கமாட்டாது என்பதற்கு குமாரபுரம் கொலை வழக்கு, மயிலந்தனை கொலை வழக்கு என்பன ஏற்கனவே உதாரணங்களாகியிருக்கின்றன.

குமாரபுரம், மயிலந்தனை மற்றும் ரவிராஜ் கொலை ஆகிய மூன்று வழக்குகளிலும் ஜுரிமார்கள் முழுப்பேரும் சிங்களவர்களாகவே இருந்தனர். ரவிராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் யாவரும் சிங்களவர்கள். குமாரபுரம் கொலை வழக்கில் சிங்களவர்களும் சாட்சிகளாக இருந்தார்கள். அதேபோன்று தமிழர்களும் இருந்தார்கள்.

முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைச்சம்பவம் முழுமையான சிங்களப் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் தமிழராகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜுடன், அவருடைய மெய்ப்பாதுகாவலராகிய சிங்கள மகன் ஒருவரும் கொலை செய்யப்பட்டார்.

பொதுமக்கள் மத்தியில் இருந்து ஜுரிகள் என்ற முறையில் சென்ற சிங்களவர்களே இந்த வழக்கில் விசாரணை நடத்தினர்.

ஆயினும் கொலைச் சம்பவத்தில் சிங்களவர் ஒருவர் கொல்லப்பட்டிருந்த போதிலும், இனரீதியான பார்வை மட்டுமல்ல கடற்படையினரைக் குற்றம் சாட்டி எந்தவொரு சிங்களவரும் தீர்ப்பளிக்கமாட்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்களுடைய தீர்ப்புக்கான தீர்மானம் அமைந்திருந்திருக்கின்றது.

ஜுரிமார் மனச்சாட்சிப்படி நடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ரவிராஜ் கொலை வழக்கில் மனச்சாட்சியும் செயற்படவில்லை. உண்மையான நீதியும் செயற்படவில்லை.

இனரீதியான பார்வையும் கடற்படையினரைக் காப்பாற்றுகின்ற நோக்கும் ரவிராஜ் வழக்கின் நிலைமையை மாற்றியமைத்துவிட்டது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

அரச படையைச் சேர்ந்தவர்களை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தால், அவர் பாதுகாப்புடன் இருக்க வேண்டியுள்ளது. அத்தகைய தீர்ப்பின் பின்னர் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அரசாங்கத்தின் பாதுகாப்பு அவருக்கு உறுதியாகக் கிடைக்கும்.

அதேநேரம் சிங்கள ஜுரிகள் படை அதிகாரிகளைக் குற்றவாளி என தீர்ப்பளித்தால் அவர்கள் துரோகிகளாகத்தான் பார்க்கப்படுவார்கள்.

இத்தகைய ஆபத்தான நிலைமை இருப்பதை ரவிராஜ் வழக்கில் ஜுரிகளாகச் செயற்பட்டவர்கள் முன்கூட்டியே தெரிந்திருந்தார்களா என்பது தெரியவில்லை.

ஆயினும் வழக்கு விசாரணைகளின் போக்கிலேயே அவர்கள் தெரிந்திருப்பார்கள் என்று நம்பலாம்.

இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்ட கடற்படையினரை குற்றம் சாட்டினால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் முன்கூட்டியே நிச்சயம் சிந்தித்திருக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்திருந்தார்களா என்பது தெரியவில்லை. தெரியவரப் போவதுமில்லை.

விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிரான வழக்கு ஒன்றில் தமிழ் ஜுரி சபையினர், அவரைக் குற்றவாளி என முடிவு செய்து தீர்ப்பளித்தால், அவர்களை தமிழ் மக்கள் நிச்சயமாக சந்தேகப்படுவார்கள். அவர்களைத் துரோகிகள் என கட்டாயம் குறிப்பிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அத்தகைய ஒரு நிலைமைதான் ரவிராஜ் கொலை வழக்கில் ஏற்பட்டிருக்கின்றது.

ஒரு தமிழ் மகன் அதுவும் நாடாளுமன்ற உறுப்பினராகிய ரவிராஜ் கொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் 3 நீதிபதிகளைக் கொண்ட ட்ரையல் அட் பார் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை என்பது சட்டத்துறை சார்ந்தவர்களின் ஆதங்கமாகும்.

பொதுவாக தேசிய முக்கியத்துவம் மிக்க வழக்குகளையே ட்ரையல் அட் பார் முறையில் விசாரிப்பார்கள். எனவே, ரவிராஜ் கொலை வழக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய முக்கியத்துவம் மிக்கவரா அல்லது அந்தக் கொலை வழக்கில் எதிரிகளாகக் கூண்டில் நிறுத்தப்பட்ட கடற்படை அதிகாரிகள் தேசிய முக்கியத்துவம் பெற்றவர்களா என்பதை அரசாங்கத் தரப்பு நிச்சயமாக சீர்தூக்கிப் பார்த்திருக்கும். பார்த்திருக்க வேண்டும்.

அத்தகைய ஒரு சீர்தூக்கல் சிந்தனையின் முடிவின் அடிப்படையிலேயே இந்த வழக்கின் விசாரணை முறைமை தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது, என்ன காரணத்திற்காக ஜுரிகள் முன்னால் இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்ற முடிவெடுக்கப்பட்டது என்பது வெளியிடப்படவில்லை. இனிமேலும் வெளியிடப்படுமா என்பதும் சந்தேகமே.

இந்த வழக்கு 3 நீதிபதிகளைக் கொண்ட ட்ரையல் அட் பார் முறையில் விசாரிக்கப்பட்டு எதிரிகள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், படையினரைத் தண்டிப்பதற்காகத்தான் 3 நீதிபதிகளை அரச தரப்பினர் வழக்கை விசாரணை செய்ய நியமித்தார்களா என்ற சந்தேகமும் கேள்வியும் சிங்கள மக்கள் மத்தியில் நிச்சயமாக எழுந்திருக்கும்.

அத்தகையதோர், அரசியல் மற்றும் நீதித்துறை சார்ந்த ஒரு சூழல்தான் இப்போது நாட்டில் நிலவுகின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் இருந்து அத்தகைய கேள்வி எழுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்று அரச தரப்பினர் அஞ்சியுமிருக்கலாம்.

அத்தகைய அச்சம்தான் இந்த வழக்கை ஜுரிகள் முன்னிலையில் விசாரணை நடத்துவதற்குத் தூண்டியிருக்கலாம் என்று எண்ணுவதற்கும் இடமுண்டு.

பாரத ரத்ன பிரேமச்சந்திரன் கொலை வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா எதிரியாகக் குறிப்பிடப்பட்டு ட்ரையல் அட் பார் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் கொல்லப்பட்டவரும், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரும் இருவருமே நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்.

தேர்தல் பரப்புரையின் போது இருவரும் மோதிக்கொண்டார்கள். ஒரு தேர்தல் கால ரவுடிச்சண்டையின் விளைவாகவே இங்கு கொலை விழுந்தது.

ஆயினும் அதற்குத் தேசிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ட்ரையல் அட் பார் முறையில் 3 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியாகக் காணப்பட்டிருந்தார்.

ஆனால் ரவிராஜ் கொலை வழக்கிற்கு அந்த முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்திற்காக உரத்து குரல் கொடுத்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரே இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனை காரணமாகக் கொண்டுதான் ட்ரையல் அட் பார் முறையிலான விசாரணை நடத்தப்படவில்லையோ என்ற சந்தேகம் எழுகின்றது.

பாதாள குழுச் சண்டையின் கொலைக்குக் கூட ட்ரையல் அட் பார் விசாரணை நடத்தப்பட்ட முன் உதாரணம் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கானது, ட்ரையல் அட் பார் முறையில் 3 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டிருந்தால், இலங்கை நீதித்துறையின் மீது இப்போது எழுந்துள்ளதைப் போன்ற கடும் விமர்சனங்கள் எழுந்திருக்க மாட்டாது. ஏனெனில் நீதிபதிகள் துறைதோய்ந்தவர்கள். சட்டரீதியாக ஆராய்ந்து தீர்ப்பளித்திருப்பார்கள்.

அவர்கள் அளிககின்ற தீர்ப்புக்குரிய காரணங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும். ஆனால் அந்த நிலைமை இங்கு ஏற்படவில்லை

காரணம் கேட்க முடியாது மாற்றமும் செய்ய முடியாது

சட்டமும் சட்ட நுணுக்கங்களும் ஒரு வீதம் கூட தெரியாத ஜுரிகள் சபையினர் அளி;த்த தீர்ப்பின் காரணமாக இந்த வழக்கில் நீதிபதிகளுக்குத் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. நீதித்துறைக்கு அவமானம் ஏற்படுத்திய தீர்ப்பாக இந்தத் தீர்ப்பு கருதப்படுகின்றது.

இந்த வழக்கில் நீதிபதி தவறிழைக்கவில்லை என்பது சட்டத்துறை சார்ந்தவர்களின் வாதமாகும்.

ஏனெனில் ஜுரிகள் சபையொன்றின் முன்னால் நடைபெறுகின்ற வழக்கில் ஜுரி சபையினர் எடுக்கின்ற முடிவின்படி தீர்ப்பை அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நீதிபதியைச் சார்ந்திருக்கின்றது.

அதேவேளை, ஜுரி சபையினர் எடுக்கின்ற முடிவுக்கு, அவர்களிடம் நீதிபதி காரணம் கேட்க முடியாது. அதேபோன்று ஜுரி சபையினர் எடுக்கின்ற முடிவில் மாற்றம் செய்யவும் அவரால் முடியாது.

அத்தகைய அதிகாரம் நீதிபதிக்கு சட்ட ரீதியாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜுரிகளின் முடிவிற்கு அமைய தீர்ப்பை மட்டுமே அவரால் வழங்க முடியும்.

இந்த நிலையில், தமிழ் அரசியல்வாதியும் சட்டவாக்கத்திற்கான உயர்ந்த சபையாகிய நாடாளுமன்றத்தின் உறுப்பினருமாகிய ஒருவருடைய கொலை வழக்கில் நீதித்துறை தோல்வி கண்டிருககின்றது.

இதனால் பலரும் நீதித்துறையை சாடியிருக்கின்றனர். நீதித்துறையின் மீது குற்றம் சுமத்தியிருக்கின்றனர். இந்தத் தீர்ப்பையடுத்து அரசியல்வாதிகள் பலரும் நீதித்துறையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

அதேபோன்று சில அரசியல்வாதிகள் சரியான முறையிலேயே நீதி வழங்கப்பட்டதாக சப்பைகட்டு கட்டியிருப்பதையும் காண முடிகின்றது.

இங்கு நீதிபதி குற்றம் இழைத்ததாகக் கூற முடியாது. ஜுரிகளின் முடிவையே பலரும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர். ஜுரிகளின் முடிவினால் நீதித்துறையில் ஏற்பட்டுள்ள சரிவு நிலைமையை சீர் செய்வதற்கு நீதிபதிகளினால் முடியாமல் போயிருப்பது துரதிஸ்டமாகும்.

போர்க்குற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு இலங்கையின் நீதித்துறை சுதந்திரமானதல்ல. சுயாதீனத்தைக் கொண்டதல்ல என்று குற்றம் சுமத்தி, சர்வதேச நீதிபதிகளும் சர்வதேச விசாரணையாளர்களும் தேவை என்ற கோரிக்கை ஏற்கனவே சர்வதேச அரங்கில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ள ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பானது, எதிர்வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்து அவரை, கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று, ரவிராஜையும், அவருடன் இருந்த அவரது மெய்ப்பாதுகாவலரையும் கொலை செய்த பின்னர் கொலையாளியை மீண்டும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு ஏற்றிக் கொண்டுவந்துவிட்ட குற்றச் செயலுக்கான உடந்தையாளி அரச சாட்சியாக மாற்றப்பட்டார்.

சட்டமா அதிபரினால் குற்றநடவடி கோவையின் 256 ஆம் பிரிவின் கீழ் நிபந்தனையின் கீழ் இவருக்கு மன்னிப்பளித்து, அவரை, அரச சாட்சியாக – அப்ரூவராக மாற்றியிருந்தனர். நடைபெற்ற சம்பவம் பற்றிய உண்மையைக் கூறினால், நீ செய்த குற்றத்தை மன்னிப்போம் என்பது இந்த விடயத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனையாகும்.

இத்தகைய சாட்சியின் சாட்சியத்தை அடிநாதமாகக் கொண்ட ரவிராஜ் கொலை வழக்கில் ஜுரி முறைமையின் கீழ் விசாரணை நடத்தியது பொருத்தமான செயலல்ல என்பது சட்டவல்லுநர்களின் கருத்தாகும்.

மொத்தத்தில் இந்த வழக்கு ஜுரிமார்களின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமையானது, முறையற்ற ஒரு செயலாக நிரூபணமாகியிருக்கின்றது.

ரவிராஜ் கொலை வழக்கு நடைபெற்ற விதம், சாட்சியப் பதிவுகள் போன்ற அனைத்தும் செய்தித்தாள்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று ஜுரிகள் சபையினர் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பு, கடற்படையினரைப் பாதுகாப்பதற்காகவே வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பாக அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கத்தக்க வகையில் வந்திருக்கின்றது.

அது மட்டுமல்லாமல் இந்தத் தீர்ப்பு நீதித்துறை வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

அத்துடன் போர்க்குற்றச் சம்பவங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்த்து, சர்வதேச விசாரணைகளைப் புறந்தள்ளியுள்ள அரசியல் வட்டாரங்களின் நிலைப்பாட்டைத் தடுமாறச் செய்திருக்கின்றது.

செல்வரட்னம் சிறிதரன்

சர்வதேச அரசியலும் சமூகத் தளங்களும் !

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த காலங்களில் Black Berry என்ற கைதொலைபேசி மிகவும் பிரபல்யமாக இருந்தது.

தகவல் தொழில்நுட்பமும் வலையமைப்பும் குறித்த விடயத்தில் எவ்வாறான ஒரு மாற்றத்தை இந்த உலகம் கண்டு வருகிறது. இதனை மக்கள் தமக்கு ஏற்றாற்போல் பயன்படுத்துகின்றார்களா? அல்லது அது ஒரு பகுதியில் வளர்ந்து கொண்ட போகும் போக்கில் தனிப்பட்ட வசதிகளுக்கும் பெருமைக்குமாக பயன்படுத்தவதுடன் நின்றுவிடுகிறதா? வலையமைப்பு குறித்த அரசியல் பார்வை என்ன? சர்வதேச அரசியலில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு என்ன என்பன குறித்த பார்வை ஒன்றை இந்த கட்டுரை முன்வைக்கிறது.

“ஆனால் அந்த முடிவு ஓர் ஆரம்பமுமாகும். மிகஅதிக நேரத்தை இந்த போராட்டத்தில் அர்ப்பணித்த முகுந்தன் அவனது கடைசி வருட பல்கலைக்கழக பரீட்சையை திரும்ப எடுக்க வேண்டிய நிலையில் அவனைப்போல் மேலும் பல உலக நாடுகளில் புலம்பெயர் தமிழ் இளவயதினர் அரசியல் மீள்எழுச்சி ஒன்றை அனுபவித்துள்ளனர். ஈழ சுதந்திர தாயகத்தை பெற்று கொள்ளும் போராட்டம் தோல்வியில் முடிவடைவதை கண்டு அந்தப் போராட்டத்தை மேற்கு நாடுகளில் தமது கைகளில் எடுத்து கொள்கின்றனர். அவர்கள் தமது தவணைக்கு ஏற்ப உறுதியுடன் போராடுவார்கள். நிகழ்காலத்திற்க ஏற்ப இதனை ஒரு Black Berry revelolution என்றே கூறலாம்.” (FT-2009)

மேற்படி பந்தி இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகும். அந்த பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த காலங்களில் Black Berry என்ற கைதொலைபேசி மிகவும் பிரபல்யமாக இருந்தது. ஒரு குறும் தகவல் அனுப்ப வேண்டுமானால் ஒருவருக்கு ஒரு தடவையில் அனுப்பக்கூடிய நிலையே ஏனைய கைத்தொலைபேசிகளில் வசதி இருந்தது ஆனால் Black Berry யில் மட்டும் ஒரே தடவையில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு அனுப்பக்கூடிய வசதி இருந்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி எமது இளைஞர் யுவதிகள் திடீரென கூடி போராட்டத்தை ஆரம்பிக்கும் வலுவைப் பெற்றிருந்தனர்.

தொடர்ந்து தமிழ் மக்களது நகர்வுகளிலும் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் புலம்பெயர் நிறுவனங்களின் பங்களிப்பிலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது. ஆனால் அன்று ஆயுதப்போர் முடியும் தறுவாயில் தமிழ் மக்கள் தமது கையில் இருந்த தொலைதொடர்பு தொழில்நுட்ப உபகரணங்களின் உபயோகத்தின் வேகமும் தன்மையும் இன்று அதிக வசதிகள் இருந்தும் அதன் திசை பல்வேறு கோணங்களில் இருப்பதை காணகூடியதாக உள்ளது.

இந்தநிலையில் சர்வதேச அரசியலில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்த பார்வை ஒன்று மிகவும் அவசியமாகிறது. பல்வேறு வகையான உதாரணங்கள், பார்வைகள் இங்கே வைக்கப்படலாம். சமூக தளங்களின் ஆக்கிரமிப்பு இன்றைய உலகில் அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு சமூகங்களும் துறை ஆர்வலர்களும் இதனை தமது தேவைக்கு ஏற்றாற்போல் பாவித்து வருகின்றனர்.

வலையமைப்புகள் சட்டபூர்வமாகவும் உதாரணமாக அரசாங்க அலகுகள் பொது நிறுவனங்கள் என்பனவும், சட்டத்துடன் இணைந்து கொள்ளாத வகையிலும் உதாரணமாக உள்ளூர் கள்வர் குழுக்களில் இருந்து பயங்கரவாத நடவடிக்கை குழுக்கள் வரை, செயற்படும் தன்மையை பொதுவாக பார்வையில் உள்ளது.

வலையமைப்பு என்பது முடிச்சுகளின் தொடர்ச்சியான இணைவே ஆகும். ஒரு சங்கிலித்தொடர் இணைவை ஏற்படுத்தக் கூடிய குறிப்பிட்ட உறவுநிலையின்பால் கொண்டுள்ள கட்டமைப்பு என்று கூறலாம். சர்வதேச அரசியலில் இந்த முடிச்சுகள் தனிப்பட்டவர்கள், குழுக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், அரசுகள் அல்லது அரசாங்க அலுவல் பகுதிகளும் அதன் உத்தியோகத்தர்களும், ஆகிய பல அலகுகளாக பார்க்கப்படுகிறது.

அதனால் வலையமைப்பு என்பது கணணிப் பார்வையில் வெளிப்படக்கூடிய ஒரு சமூக அசாதாரண நிகழ்வுகளை உலகம் பார்க்கும் தன்மை என்று கூறலாம். இதிலே ஒரு முக்கிய விடயம் என்னவெனில் பெரும்பாலான வலையமைப்புகள் அதிகாரங்களால் கட்டப்படுத்த முடியாத நிலை இருப்பதாகும்.

2009 ஆம் ஆண்டு இறுதியில் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இடம்பெற்ற சமூகத்தள உபயோகங்கள் குறித்த பார்வை அதிகாரத்திற்கு எதிராக இடம்பெற்ற பிரச்சாரத்தில் முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது. ஈரானில் 2009இல்இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஏற்கனவே நாட்டின் தலைவராக இருந்த அகமதி நிஜாட் அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டதும் தேர்தலில் ஒழுங்கு முறையீடு இடம்பெற்றதாக கூறி எதிர்க்கட்சியினர் பெரும் போராட்டங்களை நடத்தினர்.

போராட்டங்களை ஒழுங்கு செய்வதற்கும் சர்வதேச அளவில் பிரச்சாரப்படுத்துவதற்கும் அதன் ஏற்பாட்டாளர்கள் வீதிகளில் இறங்கி ஆதரவு தேடி நிற்கவில்லை பதிலாக கணணிகளை உபயோகித்து கீச்சகம் (ருவிட்டர்) கணக்கு வாயிலாகவும் முகநூல் (பேஸ்புக்) வாயிலாகவும் ஆதரவு தேடினர். உறுதியான இணைய சேவைகள் இல்லாத போதும் கிடைத்த வசதிகளை வைத்து கொண்டு சர்வதேசமெங்கும் தமது கருத்துகளும் பார்வைகளும் சென்றடையும் படி செய்தனர்.

ஈரானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அனுமதியற்ற ஒன்றுகூடல்களுக்கு தடை விதித்திருந்தது. சீர்திருத்தவாதிகளான எதிர்கட்சியினர் திட்டமிடுவதற்கும் ஆட்திரட்டலுக்கும் முகநூல் பக்கங்களை இரகசிய குழுக்களாக பயன்படுத்திக் கொண்டனர். இதன் மூலம் அரச அதிகார வரம்புகளை மீறி தினமும் தெகிரானிலும் இதர பிரதான நகரங்களிலும் தொடர்ச்சியாக கூட்டங்கள் இடம்பெற்றன.

ஈரானிய அரசு இணைய தடை மென்பொருள்களை பிரயோகித்து தகவல் வடிகட்டும் நடவடிக்கைகள் பலவற்றை அமல்படுத்தி இருந்தது. போராட்டங்களும் அதிகரிக்க இணையத்தளங்களும் முகநூல் பக்கங்களும் ஆங்காங்கே தடை செய்யப்பட்டன. தகவல் வடிகட்டல் மேலும் இறுக்கப்பட்டது. இணைய சேவையின் துரிதம் (வேகம்) பத்தில் ஒரு மடங்காக குறைக்கப்பட்டது.

அதேவேளை தெகிரானில்இணையசேவை ஈரானிய தொலைதொடர்பு நிறுவனத்தால் மட்டுமே வழங்கப்படுவதால் கணினி உபயோகம் செய்தவரின் IP முகவரியை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருந்த போதிலும் போராட்டக்காரர்களின் செயற்பாட்டை இலகுவில் முறியடித்து விட முடியவில்லை.

தொடர்ந்து 2011இல் அராபிய இலைதுளிர்கால எழுச்சிகளிலும் சுமார் பத்தில் ஒன்பது ரியூனீசியர்களும், எகிப்தியர்களும் முகநூலை தமது போராட்ட ஒழுங்குபடுத்தும்ஊடகமாகப் பயன்படுத்தினர் என்பது செய்தி. முகநூலிலே அழைப்பு விடுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் எல்லாம் பிரதான நகர வீதிகளிலே முடிவடைந்தன. அரசாங்க பிரச்சார இயந்திரங்களின் வார்த்தைகளும் படங்களும் எழுத்துகளும் முகநூல், கீச்சகம்(ருவிட்டர்) போன்ற சமூகத்தளங்களால் முறியடிக்கப்பட்டன. பெறுமதியற்றப் போயின.

நாம் எந்த வீதியில் நிற்கிறோம் என்ன செய்து கொண்டு நிற்கிறோம் என்ற நிகழ்கால தகவல்களை புகைப்படங்களுடன் வலையமைப்புகள் ஊடாக இதர நாடுகளுக்கும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதனால் ஒரு அரசு மட்டுமல்ல தெற்கு மத்திய தரைகடலில் ஆரம்பித்த அதிகாரத்துக்கு எதிரான போராட்டங்கள் அரபு நாடுகள் எங்கும் பரவியதை பார்த்தோம்.

அரசுகள் இணையத்தளங்களையும் முகநூல் பக்கங்களையும் தடை செய்தன. ஆனால் இவை மக்களின் எழுச்சியை மேலும் தூண்டுவதாகவே அமைந்தது. புதிய பல ஆக்கங்கள் ஊடாக தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன, போராட்டங்கள் இடம்பெற்றன.

தகவல் தொலைதொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் தேசங்களுக்கிடையே பல மாற்றங்களை உருவாக்கி இருந்தது. மக்கள் புதிய விடயங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக அமைந்தது. சனநாய நடைமுறைகளை தெரிந்து கொண்டவர்களாக மக்கள் மாறினர்; வெளிநாடுகளின் கவனத்தை மிகவும் விரைவாக அணுகக்கூடிய தன்மையை உணர்ந்தனர். மனித உரிமை அமைப்புகள் சனநாயக மாற்றங்களுக்கு குரல் கொடுக்கும் நிறுவனங்களின் தலையீட்டை உருவாக்கினர். இதனால் தான் இன்றைய நிலையை வடஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் அடைந்திருக்கின்றன.

தொடர்ந்து தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி கண்டு வருவதை Manuel Castlls என்ற ஆய்வாளர் இந்த வளர்ச்சியை பற்றி எழுதும்போது மனித நாகரீகத்தின் செயல்முறை வளர்ச்சிப்போக்கில் ஆரம்பத்தில் மண்ணை ஆய்வு செய்து தயாரிப்புகள் மூலம் விவசாயம் செய்து தனது தேவையை பூர்த்தி செய்யும் வழிவகைகளை கண்ட பிடித்தோம். அது விவசாய புரட்சி காலமாக கணிக்கப்பட்டது. பின்பு கைத்தொழில் நாகரீகம் ஆரம்பமானது. மிகப் பரந்த அளவில் முளை விட்டு வளர்ந்தது. உயிரோட்டம் இல்லாத சக்தியின் பயன்பாட்டை கொண்ட பொறிமுறைகளின் வளர்ச்சியால் உற்பத்திகள் அதிகரித்தது. புதிய தொழில்நுட்பங்கள் வந்தன.

இந்த தொழில்நுட்ப வளர்ச்சி மனித இனத்தைச் சமூக ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், இப்பொழுது நாம் அறிதலை பிரதான மூலப்பொருளாக கொண்ட உற்பத்திக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே காண்பதுவும் வாழ்வதுவும் மூன்றாவது நாகரீகமான தகவல்தொடர்பு நாகரீகத்தில் என்பது Castlls அவர்களின் வாதமாகும்.

இந்த நாகரீகம் வளர்ந்த நிலையை அடையும் வரை, அதிகாரங்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைகள் இருக்கும் சட்டபூர்வ வலையமைப்பு சமூகங்கள் தமது தொழிற்பாட்டில் இடையூறுகள் ஏற்படவும், தகவல் திரிபுகளை உருவாக்கவும் கூடிய தடங்கல்கள் ஏற்பட பெரும் வாய்ப்புகள் உள்ளன.

இதன் ஒருகட்டமாகவே அண்மையில் தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் ரஷ்ய தலையீட்டின் மூலம் வெற்றி பெற்றதான குற்றச்சாட்டும் உள்ளது. தேர்தல் பிரச்சார காலங்களில் அவருக்கு எதிராக போட்டியிட்ட ஹிலாரி கிளின்ரன் அவர்களின் பிரச்சாரத்தை சமூகத்தளங்களில் வலுக்குறைவடைய செய்தமை, திரிபுபடச் செய்தமை, ட்ரம்ப் அவர்களின் பேட்டிகளை அதீத வலை நீரோட்டத்தில் அதிக பார்வையாளரை சென்றடைய வைத்தமை என பல்வேறு நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆக வல்லரசுகள் கூட வலையமைப்பு சமூகங்களால் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வலையமைப்பு சமூகங்களை கணினியில் கட்டுப்படுத்தும் உலக வலையமைப்புத் திட்டம் குறித்த Castlls அவர்களின் ஆய்வில் புதிய சட்டதிட்டங்களை கொண்ட ஒரு வலையமைப்பு கட்டமைப்பை உருவாக்குவது மிக அவசியமானது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஒரு உதாரணமாக கடந்த வருடம் நைஜீரியாவில் போக்கோ ஹராம் என்ற பயங்கரவாதக் குழு இருநூறு பாடசாலை மாணவிகளைக் கடத்திச் சென்றிருந்தது. அந்த நிலையில் Bring Back Our Girls என்ற போராட்டம் உலகெங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் அமெரிக்க அதிபரின் துணைவி மிஷேல் ஒபாமா அவர்களும் இணைந்து குறுந்தகவல் புகைப்படம் வெளியிட்டு தனது ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச அளவில் சமூகத்தளத்தின் தாக்கமும் அதன் பின்னூட்டப் பொறிமுறையும் எவ்வளவு பெறுமதி வாய்ந்தது என்பதையும், இராசதந்திரத்தில் சமூகத் தள யுகம் ஒன்று உருவாகுவதையும் இது எடுத்து காட்டுகிறது.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் கூட கீச்சக (ருவிட்டர்) பாவனையில் அவர் விட்ட தவறுகளால் தேர்தல் பிரசாரத்தில் கேள்விக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் அண்மையில் தென்சீன கடல் பகுதியில் அமெரிக்க ஆளில்லா நீரடி வேவு கலத்தை சீனர்கள் கைப்பற்றியதையிட்டு ட்ரம்ப் கீச்சகம் (ருவிட்டர்) மூலமே தமது எதிர்ப்பு கருத்தை வெளியிட்டிருந்தார்.

சர்வதேச இராசதந்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நடைமுறை உலக பொருளாதார ஒழுங்கை நிலை நிறுத்தலுக்காகவும், மேலைத்தேய யதார்த்தவாத கட்டமைப்பை பேணிப்பாதுகாக்கவும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு உலகில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வலையமைப்பு மூலம் சமூக அமைப்புகளை ஒழுங்குபடுத்துதல் ஆகிய தேவைகளுக்காக அவசியமானது என்ற கருதப்படுகிறது.

ஏற்கனவே சர்வதேச அரசியலில் உள்ள பலசமநிலையும் மேலைத்தேய யதார்த்தவாதமும் இதற்கு ஈடுகொடுக்குமா என்பது மிகப்பெரும் கேள்வியாக உள்ளது. சர்வதேச அரசியலில் யதார்த்தவாதம் என்பது இயற்கையாக மனிதஇனத்தின் பண்புகளில் இருந்து உருவான தற்காப்பை மையமாக கொண்டு வளங்களை திரட்டி உயர்ந்த நிலையை அடையும் நோக்கில் அடாவடித்தனம் கொண்ட தன்மையாகும். பூகோள சட்டத்தை நிலைநிறுத்த பொதுவான ஒரு அமைப்பு இல்லாத நிலையில் வல்லரசு நாடுகளால் யதார்த்தவாதம் பேணப்படுகிறது.

இதனை நிரூபிக்கும் வகையில் உலகில் பல்வேறு நாடுகள் முகநூல் பக்கங்களையும் நுண்பதிவுகளையும் பல்வேறு வகையிலும் தடை செய்தும் கண்காணித்தும் வருகின்றன. உதாரணமாக சீனாவில் முகநூல் முற்று முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சமூக திடநிலை எப்பொழுதும் அதி உச்சநிலையில் பேணப்படுவது சீன கம்யூனிச கட்சியினதும் சீன அரசாங்கத்தினதும் பண்பும் பொறுப்பும் ஆகும்.

அதேவேளை 2009ஆம் ஆண்டு தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்பாடுகளுடன் கையாளப்படும் என்ற உத்தரவாதத்தின் கீழ் SINA கூட்டுத்தாபனம் என்ற சீனாவின் மிகப்பெரிய இணைய ஊடக நிறுவனம் நுண்பதிவு சமூகத்தளத்தை உருவாக்குவதற்கு சீன அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற்றிருந்தது.

Sina Weibo என்ற பெயரில் சீனாவில் முதலாவது சமூகத்தளம் உருவானது இதனை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான சமூகத்தள வியாபார நோக்க இணையத்தளங்கள் உருவாகின. Weibo வின் பாவனை சீனாவில் சுமார் நான்கு வருடத்தில் 331 மில்லியனாக அதிகரித்தது. ஆனால் அதீத உபயோகமும் சுதந்திரமான தகவல் பரிமாற்றங்களும் உடனடியாக தகவல்கள் பரிமாறி கொள்ளப்பட்டதால் மக்கள் கருத்துகள் மிகவும் தாராளமாக இணைய நீரோட்டத்தில் கலந்தது. சுதந்திர பேச்சுரிமை சமூகநீதி என்பன குறித்த உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய கலந்துரையாடல்கள் அதிகரித்து காணப்பட்டன.

தொடர்ச்சியான கண்காணிப்புகளின் பின்பு 2013ஆம் ஆண்டு சீன அரசாங்கம் தொடர்ச்சியான சில நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. Weibo, Wechat ஆகிய சமூகத்தள நிறுவனங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியாக உள்ளக தகவல் தணிக்கை சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அத்துடன் சமூகத்தள பாவனையாளர்களும் பெருமளவில் குறைந்தனர். தனிப்பட்டவர்களோ அல்லது ஊடக நிறுவனங்களோ சமூக திட நிலையை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டால் தண்டிக்கப்படுவார்கள். இதனால் Weibo, Wechat போன்ற சமூகத்தளங்கள் என்றும் சுதந்திரமாக செயற்பட முடியாது.

ஆனால் இந்திய நிலவரத்தில் அரசியல் தலைவர்களே சமூகத்தளங்களில் அங்கத்தவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரதமர் மோடி அவர்களே முகநூல், கீச்சகம் (ருவிட்டர்) பக்கங்களை தமது பிரச்சார ஊடகங்களாகவும் சர்வதேச தொடர்பு ஊடகங்களாகவும் புலம்பெயர் இந்தியர்களிடம் வைத்து கொள்ளும் உறவுப்பாலமாகவும் உபயோகித்து கொள்கிறார்.

ஆகவே சமூகத்தளங்கள் இன்று வெளியுறவுக் கொள்கையின் பிரதான ஊடகமாக மாறி இருக்கிறது. சமூக அங்கத்தவர் ஊடகவியலால் மிகப்பெரிய பாரம்பரியச் செய்தி நிறுவனங்கள் பல இந்த நேரடி சமூக தொடர்பாடலால் தமது வியாபாரத்தை இழந்து வருகின்றனர். புதிய ஊடக நிலவனப்பை உருவாக்கி உள்ளது. தடைகள் அற்ற நாடுகளில் மிகவும் இலகுவான வளர்ச்சியை கண்டு வருகிறது. மற்றைய நாடுகளில் அதிகாரத்திற்கு சவால் விடும் எதிரியாக பார்க்கப்படுகிறது.

நல்ல விடயங்களுக்கு பயன்படுத்தப்படும் போது அனைத்து மனித இனத்திற்கும் வளர்ச்சியையும் தீய விடயங்களில் பயன்படுத்தப்படும் போது டிஜிட்டல் வயதின் மறுபக்கத்தையும் காணக்கூடியதாக இருக்கிறது.

எமது சமுதாயத்தைப் பொறுத்தவரையில் சமூகத்தளங்களின் பயன்பாடு பொதுவாக தனிப்பட்ட தகவல்களை பரிமாறி கொள்ளும் ஊடகமாகவே பெருமளவில் பார்க்கப்படுகிறது. எமது பாரம்பரிய ஊடகங்கள் நேரடி செய்தி சேகரிப்பு கலந்துரையாடல் நிகழ்வுகளுக்காக உபயோகப்படுத்துகின்றன. அரசியல் நோக்கில் நிறுவனங்களின் அங்கத்தவர்கள் அங்காங்கே Skype மாநாடுகளை உபயோகப்படுத்துவது கவனத்தில் கொள்ளக் கூடியதாக உள்ளது.

ஆனால் மேலைத்தேயங்களில் அரசியல் இடம்பெறுவது போன்ற சமூகத்தளத்தை பிரதானமாக கொண்டு எந்த ஒரு அமைப்பும் இயங்கவில்லை என்றே கூறலாம். மேல் நாடுகளில் தமது இரத்த உறவுகளை கொண்ட எம் போன்ற சமுதாயம் மிகவேகமாக பல துறைசார் விடயங்களை ஒழுந்கமைத்து செயற்பட மிக அதிகமான இடம் இருக்கிறது.

இல்லையேல் இந்த இடத்தை இட்டு நிரப்புவது உள்ளூர் சங்கிலித் திருடர்களாகவே இருப்பர். அவர்கள் தமக்குள்ளே வலயம் அமைத்து செயல்படும் நிலைதான் ஏற்பட்டு வருகிறது.

-by புதினப்பணிமனை

– லோகன் பரமசாமி

முன்னாள் போராளிகளின் அவலநிலை -5 !

தமிழ இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்..
அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்…
வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!!

நன்றி
IBC Tamil

*
நாட்டுக்காகப் போராடி சற்கர நாற்காலியே வாழ்க்கையாகிப்போன எங்களுடன் ஒரு நிமிடம் பேசமுடியாதவர்களா எங்கள் மக்கள் பிரதிநிதிகள்?

கடந்த 24ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உயிரிழை என்ற அமைப்பினர் சென்றிருந்தனர்.

யுத்தத்தில் ஈடுபட்டு, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காதவர்களை உள்ளடக்கிய அமைப்பே உயிரிழை அமைப்பாகும்.

இவர்கள் மருத்துவ வசதியுடன் தங்கியிருப்பதற்கான இல்லம் ஒன்றினை அமைப்பதற்கு அனுமதி பெறும் நோக்கிலேயே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குச் சென்றனர்.

உயிரிழை அமைப்பின் சாா்பாக அதன் செயலாளா் சு.இருதயராஜாவும் அவருக்கு உதவியாக ஒரு இளைஞனும் மாவட்டச் செயலகத்திற்கு சென்றிருந்த நிலையில் மாவட்டச் செயலக நிா்வாகம் அவா்களை முன் அனுமதி பெறாமல் கூட்ட மண்டபத்திற்குள் அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்ட நிலையில் அவா்கள் தகவலை தங்களின் நிா்வாகத்திற்கு தெரியப்படுத்தி விட்டு தாங்கள் கொண்டு சென்ற கோரிக்கை கடிதத்தோடு மாவட்ட செயலக வாசலில் சக்கர நாற்காயில் கூட்டத்திற்கு சமூகமளிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்க காத்திருந்தனா்.

இதன்போது, முதலாவதாக வடக்குமாகாண கல்வி அமைச்சர் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தபோது சற்கர நாற்காலியிலிருந்து கோரிக்கைக் கடிதத்தை நீட்டியபோது ஆ… என்ன? எனக் கேட்டுவிட்டு பிரத்தியேகச் செயலாளரைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

அடுத்த இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சமூகமளித்தபோது, அவரிடம் தமக்கு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பாகத் தெரியப்படுத்தினோம். அத்துடன் தமக்கு கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக தொலைபேசியூடாகவும் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால் நாம் வாசலில் காத்திருந்தபோது அவர் எம்மைக் கணக்கிலெடுக்காது சென்றுவிட்டார்.

அடுத்தாக வடக்கு மாகாண முதலமைச்சா் சமூகமளித்த போது வாசலில் நின்று கோரிக்கை கடிதத்தை கொடுத்துள்ளனா் அவரும் நடந்தவாறே பாா்கி்றேன் என்று கூறியபடி தனது பிரத்தியேக செயலாளரிடம் கடிதத்தை கொடுக்குமாறு கூறியவாறே மண்டபத்துள் பிரவேசித்தார்.

அடுத்ததாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரவேசித்தபோது அவரிடமும் கோரிக்கைக் கடிதத்தை நீட்டியபோது அதனைப் பெற்றுக்கொண்ட அவர் சில நிமிடங்கள் உரையாடிவிட்டு அவர்களது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுச் சென்றார்.

அடுத்ததாக அங்கஜன் இராமநாதன் பிரவேசித்தபோது அவரிடமும் கோரிக்கைக் கடிதம் வழங்கியபோது அவர் நீண்டநேரம் உரையாடிவிட்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

தாம் யாரையெல்லாம் நம்பி அங்கு சென்றோமோ அவர்கள் தம்மை மதிக்காது அவமதித்துள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.

‘நாட்டுக்காக போராடி முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்காது சக்கர நாற்காலியே வாழ்க்கை என்று இருக்கின்ற எங்களுடன் பொறுமையாக ஒரு நிமிடம் கூட பேச முடியாதவா்களா எங்களின் பிரதிநிதிகள்’ என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பிரபாகரனின் உயரிய பண்புகள் !

தலைவர் பிரபாகரனின் தோற்றம் வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள்.

ஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள் புலிகளென்றால் அது மிகையாகாது.

முகம் தெரியாத ஒரு வெள்ளையனிடமோ அல்லது கருப்பனிடமோ நீ யார் என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு, தமிழன் என்று கூறிப்பாருங்கள், உடனே அவர்களிடமிருந்து வரும் கேள்வி “தமிழ்ப் புலியா” எனப் புன்னகையுடன் வெளிவரும்.!

தமிழ்மொழியை தாய்மொழியாக்கொண்டவர்களுக்கு புலிகளே இன்று அடையாளம். இங்கே தான் புலி எதிர்ப்பாளர்கள் வெளிவருகின்றனர். பிரபாகரன் என்னும் தாரகமாத்திரம் தமிழரை ஒன்றிணைவதை, தமிழர் விரோத சக்திகள் விரும்புவதில்லை.

பிரபாகரம் நிகழ்ச்சியில் பிரபாகரனோடு பழகியவர்கள் சொல்வதைக் கேளுங்கள்

இதனால் தான் எமது முன்னோர்களான வீரமன்னர்களின் வரலாற்றையும் மறைத்தனர்.

இப்போது, உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் ஒரே சொல்லாக தலைவர் பிராப்பகரனே இருக்கின்றார் என்பதால், இன்று தலைவரை இளம் தலைமுறையினர் நெஞ்சில் வைத்து சுமக்கின்ரனர்.

இதன் அபாயத்தை உணர்ந்த புலி எதிர்ப்பு சக்திகள், தலைவர் பிரபாகரனுக்கு சேறடிக்கும் முயட்சியில் இறங்கியுள்ளது. அதற்கு அவர்கள் சமூகவலைத்தளங்களையே பாவிக்கிறனர். இதில் பிரதான பங்கு வகிப்பவர்கள் யாரென்று பார்த்தால் 2009 வரை முக்காடு போட்டு மறைப்பில் திரிந்த சிலரே ஆகும்.

எமது மக்களால் தேசத்துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு, தமிழர் மரபிலிருந்தே ஒதுக்கப்பட்ட சிலரே இதில் முன்னிக்கின்றனர். இதில் பலர் தங்கள் தவறை உணர்ந்து ஒதுங்கி விட்டனர். சிலர் இப்போது மீள் சுழற்சியில் தயார்படுத்தப்பட்டு களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின்முக்கிய பணி தலைவருக்கு சேறடிப்பது, புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதே முதல் நோக்கம். அவர்களின் நோக்கம் தலைவரை பெரும் கொலைகாரன் போல சித்தரிப்பதேயாகும்.!

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் அல்லது தண்டனைகளை இன்று அது ஒரு குற்றம் போல நிறுவ முற்படுகின்றனர். இந்த தண்டனைகளை புலிகள் ஏன் வழங்கினர் என்பதை நாசுக்காக மறைத்துவிடுகின்றனர்.

இவர்கள் போன்றவர்களிடம் இளையதலைமுறையினர் மிக அவதானமாக இருக்கவும். தயவு செய்து இவர்களை கடந்து போங்கள். இவர்கள் விரிக்கும் மாயவலையில் சிக்காதீர்கள்.

எனது பதிவுகள் ஊடாக நான் கடந்துவந்த பாதைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்?

அந்த பயணங்களின் போது தலைவருடனான எனது சந்திப்பில் “நான் எவ்வாறு தலைவரைப் புரிந்து கொண்டேன்.?

எனது பார்வையில் தலைவர் எப்படியானவர் என்பதை,1988களின் மணலாற்றில் வைத்து ஒரு வருட காலம் அவருடன் பயணித்த போதும், பின்னர் வேறு துறையில் பயணித்தபோது, அவருடனான சந்திப்புகள் மூலம், நான் அவரைப்புரிந்து கொண்டதை, உங்களோடு பகிர விரும்புகின்றேன்.! தலைவரைப்பற்றி பலர் கூறியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் கூறப்போவது எனது பார்வையில் அவர் எப்படியானவர்.?

#இந்திய இராணுவ முற்றுகையின் போது, அந்த நேரங்களில் முகாமில் போராளிகள் என்ன உணவை உண்டார்களோ, அதுவே அவரது உணவாகவும் இருந்தது. தனக்கென்று ஒருபோதும் சிறப்பான உணவை சமைத்து அவர் உண்டதில்லை.!

#நேரத்தில் கஞ்சியோ அல்லது பருப்பும் சோறும் என்றாலும் அது போராளிகளுக்கு கிடைத்துவிட்டதா என்பதை உறுதி செய்தபின்பு தான் தனது உணவுக்கு தயாராவார். பருப்பும் சோறும் என்றாலும் அந்த உணவை ரசனையோடு உண்பார். யாரவது தன்னை பார்க்கவந்தால், நலம் விசாரித்தபின் அவரது கேள்வி “சாப்பிட்டியா”..!

#அவர் தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு மட்டுமல்லாது, போராளிகள் அனைவரும் இரவு உணவருந்தியதும் பல் துலக்க வேண்டுமென்றும், மலசல கூடம் சென்று வந்ததும் சவக்காரம் இட்டு கைகழுவ வேண்டும் என்பதையும் தந்தைக்குரிய கண்டிப்புடன் கூறுவார்/அதை நாம் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவார். அதை கடைப்பிடிக்க (மறந்துபோய் விடுதல்) தவறியோரை தண்டனைகள் மூலம் நல்வழிப்படுத்துவார்.

#உணவுகளை வீணாக்குவது அல்லது பராமரிப்பு பொருட்களை (சம்பூ,சவற்காரம்,உடைகள்,பாதணிகள் போன்றவை) வீணாக்குவதை கடுமையாகக் கடிந்துகொள்வார். அது மக்கள் பணம் என்பதை அடிக்கடி போராளிகளுக்கு வலியுறுத்துவார்.

#இது எனக்கு கிட்டண்ணை கூறியது.!
ஆரம்பகாலங்களில் தானும் ரஞ்சண்ணையும், போராட்டம் சம்பந்தமாக வெளியில் சென்று களைத்துப்போய் முகாம் திரும்பினாள். தாங்கள், கழட்டிப்போட்டுவிட்டு சென்ற அழுக்கான உடைகளை (உள்ளாடைகள் உட்பட) தலைவர் தனது ஆடைகளுடன் சேர்த்து துவைத்து வைத்திருப்பாராம். அத்தோடும் தங்களுக்கு சமைத்து தருவதற்கும் அவர் ஒரு போதும் பின்நின்றதில்லை என்பார் பெருமையாக. இது தான் எங்களின் தலைவர். இதே பழக்கம் போராளிக்குள்ளும் கடைசிவரை இருந்தது.

#புலிகளமைப்பில் எல்லா போராளிகளுக்கும் தலைவருடன் நிற்கும் சந்தர்ப்பம் அமைவதில்லை, அவருடன் நிற்கும் போராளிகளுக்கு சுகயீனம் என்றால், ஒரு தாயின் பரிவும், அன்பும் நிச்சையம் கிடைக்கும். அந்த உண்மையான கருணையை நானும் அனுபவித்தேன்.!

#புன்னகையுடன் தாக்குதலுக்கு போராளிகளை அனுப்பிவிட்டு, தனது மன இறுக்கத்தை வெளிக்காட்டாது, உண்ணும் உணவில் நாட்டமில்லாது, அவர்கள் வரவுக்காக காத்திருப்பார்.

#வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்கள் மீதான அஞ்சலிகளின் போதோ அல்லது பின்னரோ, அவர் அழுததை நான் கண்டதில்லை. ஆனால், அந்த மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் எண்ணத்தை, தன்னுள் விதைத்து, அதை நிச்சையம் ஒரு நாள் நிறைவேற்றுவார்.
பழிவாங்கும் எண்ணம் எப்போதும் அவருடன் இருப்பதை கண்டுள்ளேன்.

#வரலாற்று நாவல்களைப்படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், அதைப்போராளிகளும் படிக்க வேண்டுமென்று எங்களுக்கும் வலியுறுத்துவார். அதன் தாக்கம் இன்றுவரை என்னுள் தொடர்கின்றது.

# 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த பின்னர்போ, ராளிகள் தலைவருக்கு எழுதும் கடிதங்களை, அவரே படிக்கும் பழக்கமுடையவர். இதனால் இரவு நித்திரைக்கு செல்வது தாமதமாகின்றது என்பதால் பொறுப்பாளர்களால், முக்கியமான பிரச்னை இல்லாவிட்டால் தலைவருக்கு கடிதமெழுத்துவதை தவிர்க்கும் படி, அண்ணைக்கு தெரியாமல் அன்புக்கோரிக்கை விடப்பட்டது. காரணம் இரத்த அழுத்த தாக்கம் அன்றைய நேரம் தலைவரிடம் இனம்காணப்பட்டமையே இதற்கு காரணம்.

#தனக்கு தெரியாத எந்த விடையமானாலும், அது பற்றித் தெரிந்த, சிறிய போராளிகளாக இருந்தாலும் கேட்டுத்தெரிந்து கொள்வதற்கு அவர் பின்நின்றதில்லை. அவரிடம், எமது எந்தக்கேள்விக்கும் சரியான பதில் இருக்கும்.!

#ஒரு சிறியபோராளியின் கூற்று, சரியாக அவருக்கு தோன்றினால், அதை ஏற்பதற்கு, ஒரு போதும் அவர் தயங்கியதில்லை.

# எந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் அவர் நிதானம் இழந்ததில்லை. அந்த நேரத்தில் அவரது முடிவுகள் தெளிவாகவே அவரிடமிருந்து பிறக்கும்.

#போராளிகளுடன் உரிமையுடன் உரையாடுவதே அவரது தனிச்சிறப்பு. அம்மான் தொடங்கி சிறிய போராளிவரை அந்த உரிமை,பாகுபாடின்றி தொடரும்.

#பொறுப்பாளராக இருந்தாலும் சரி போராளியாக இருந்தாலும் சரி பிழைகளுக்கான(யுத்த பின்னடைவுகளுக்கு) தண்டனை பாகுபாடின்றி கிடைக்கும். இதில் அம்மான் தொடங்கி பானு அண்ணை, பால்ராஜ் அண்ணவரை பெரும் பாலும் எல்லாத்தளபதிகளும் பாகுபாடின்றி தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

#1990இல் ஈழப்போர் தொடங்கிய நேரம், பலாலியில் இருந்து எதிரி முன்னேறிக்கொண்டிருந்தான். அப்போது போராளிகள் அணியொன்று குப்புளான் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த நேரம், அதிகாலை 3மணிக்கு எழுந்து ரோந்தில் சென்று வந்த அணியை, திடீர் என்று அங்குவந்த தலைவர், போராளிகளுடன் உரையாடும் போது, மாசிப்பனியினால் தலைமுழுவதும் ஈரமாக இருந்த போராளிகளை தொட்டுப்பார்த்து மனம் வருந்தினார்.

தன்னுடன் வந்த ரிச்சர்ட் (இவர் பின்னர் மரணமடைந்துவிட்டார்) என்பவரை அனுப்பி, எல்லோருக்கும் ரெஸ்சீன்(மெழுகுத்துணி) கொண்டு தொப்பி தைத்து கொடுத்தபின்,அவரை முகாம் திரும்பும்படி கூறிச்சென்றார். அன்று இரவே போராளிகள் எல்லோருக்கும் அந்த தொப்பி வந்துசேர்ந்தது.!

#ஒரு சந்திப்பின் பின் ஒரு பயணத்தின் போது ஒரு கர்ப்பணிப்பெண்னொருவர், கைவேலிக்கும், சுதந்திரபுரத்துக்கும் இடையில் கொளுத்தும் வெய்யிலில், ஒரு குழந்தையையும் தூக்கி சுமந்தபடி நடக்கமுடியாது சென்றதை கண்டா தலைவர், பாதுகாப்பு போராளிகளின் எச்சரிக்கையை கடிந்து வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்மணியை வாகனத்தில் ஏற்றியபின் தான் தெரியும், சுகவீனமுற்ற கணவனால் வரமுடியாமையால் நிவாரணப்பொருட்கள் வாங்குவதற்கு புதுக்குடியிருப்பு செல்வதை அறிந்து தனது போராளியொருவரையும், அந்த தாயுடன் துணைக்கு அனுப்பி தமிழ்ச்செல்வண்ணை ஊடாக அந்தக் குடும்பத்துக்கு உதவவைத்தார்.

#அது போலவே தான் தேராவில் பகுதியில் வைத்து கட்டுத்துவக்கு வெடித்து காயமுற்ற ஒருவரை தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது வைத்திய சாலைக்கு அனுப்புவதற்கு தான் இறங்கி காட்டில் நின்றுகொண்டு, அவர்களுக்கு உதவ முன்வந்தார். இந்த சந்பவத்தில் கூடயிருந்த அம்மான் பின்னைய நாட்களில் அடிக்கடி எமக்கு சொல்வதற்கு தவறவில்லை.

#மன்னார் பேசாலை, இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் கிறிஸ்தவ மக்களின் இறந்தவர்களின் நினைவு நாள் நிகழ்வொன்று அவர்களின் இறந்தோரைப்புத்தைக்கும் சேமக்களையில் பூசையின் நிறைவின் பின் அதில் பங்குபற்றிய இராணுவ உளவுத்துறை அதிகாரியை மேஜர்.ஜோனுடன் சென்ற இன்னொரு போராளி சுட்டு கொன்றுவிட்டார். நீண்டநாள் இலக்கு புலனாய்வுத்துறை போராளிகளால் அன்று அழிக்கப்பட்டது.

இதற்கு கிறிஸ்த்தவ மக்கள் தங்கள், புனித நாளில் இந்த தாக்குதல் நிகழ்ந்தமையால் தமது கண்டனத்தை கடிதம் மூலம் தலைவருக்கு தெரிவித்தனர். தலைவர், அந்த தவறை உணர்ந்து, அதற்கான மன்னிப்பை அரசியல்துறை ஊடாக அந்த மக்களுக்கு தெரிவித்தார்.

இந்த தாக்குதலை வழிநடத்திய புலனாய்வு அதிகாரியை பதவி குறைத்து தாக்குதல் மேற்கொண்ட போராளிக்கு ஒரு மாதம் பங்கரில் அடைக்கப்பட்டார். இது வெளித்தெரியாத போதும், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையில் தலைவரோ அல்லது போராளிகளோ தலையிட்டதில்லை இதுவும் தலைவரின் பெரும் சிறப்பு. இப்படி பல சம்பவங்கள் இருந்தபோதும், இந்த மூன்று சம்பவங்களும் போதும்,” தலைவர் எமது மக்களை எந்தளவு தூரம் நேசித்தார்” என்பதைக்காட்டுவதற்கு.!

#1997ம் ஆண்டு திருநெல்வேலியில் வைத்து, உளவுஇயந்திரத்தில் வந்த சிங்கள இராணுவத்தினர் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்கு பெண் சிப்பாய்கள் உட்பட 14சிங்களப்படையினர் பலியாகியிருந்தனர். இது வெற்றிகரமான தாக்குதல் என்றபோதும், எம் மக்களுக்கு எந்த சேதமும் வரக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்தபோதும் திடீர் என்று அவ்விடத்துக்கு வந்த இரண்டு மாணவிகளும் பலியாகினர்.

இதனால் சினம் கொண்ட தலைவர், இந்த தாக்குதலை மேற்கொண்ட அதிகாரியையும், போராளியையும் மூன்று மாதம் 4×4 கம்பிக்கூட்டினுள் அடைத்து தண்டனை வழங்கினார். பொறுப்பாளர் என்ற ரீதியில் அம்மானும் கடும் திட்டை வாங்கினார். வெளித்தெரியாத போதும் இப்படியான அசம்பாவிதங்களை தலைவரின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்.!

#புத்தூரில் ஒரு சம்பவம். குறிப்பிட்ட இடமொன்றில், இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பற்றையினுள், கள்ளிறக்கும் ஒருவரால், ஒரு கானில் கள்ளு மறைத்து வைக்கப்படும். இதை குறிப்பிட்ட காவலரணில் நிக்கும் சிப்பாய்கள் ஒவ்வொருத்தராக வந்து,அந்தக் கள்ளைக் குடித்துவிட்டு செல்வார்கள்.

இதை அறிந்த உளவுத்துறைப் போராளிகள் அந்த கள்ளுக்கானுக்குள், தங்களிடமிருந்த இரண்டு சயனைட் குப்பிகளை உடைத்து சயனைட் பவுடரை போட்டுவிட்டு வந்தனர். அதை அருந்திய நான்கு இராணுவத்தினர் மாண்டனர்.

போராளிகளின் பார்வையில் இது வெற்றிகரமான தாக்குதல். ஆனால், இந்த தாக்குதலின் பின் சம்பந்தப்பட்ட போராளியுடன் அம்மானும் தலைவரை சந்திக்கப் போன போது தலைவர் கூறினார். இந்த சம்பவம் என்னைத்தலைகுனிய வைத்துவிட்டது. வீரர்கள் ஒரு போதும் எதிரியை நஞ்சுவைத்து, நயவஞ்சகமாக கொல்லமாட்டார்கள்.

நேருக்கு நேர் மோதியே வெல்வார்கள் என்பதை மிகுந்த கோபத்துடன் கூறித்திட்டினார். திட்டுவாங்கியபின், அந்த போராளிக்கு ஒரு மாத பங்கரும், பொறுப்பாளருக்கு கடும் திட்டும் கிடைத்தது.

போரில் கூட தனக்கென ஒரு விதிமுறையை வைத்து, அதை போராளிகளிடம் எதிர் பாக்கும் தலைவர்.! இப்படி ஆயிரம் விடையங்கள் இருந்த போதும், பதிவின் நீளம் காரணமாக முக்கியமானவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.!

இது தான் எங்கள் தலைவன். எதிரிக்கு கூட வீரமரணம் தான் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதிகொண்ட தலைவன்.! உறுதியில் உருக்கை ஒத்த குணம் கொண்ட போதும் மனத்தால் குழந்தை போன்றவர். நகைச்சுவைகளை ரசித்து மனம் விட்டுச்சிரிக்கும் அழகு தனியழகே..

ஒரு சிலரைத்தவிர தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, அவரை ஒரு போதும் கண்ணால் காணாதபோதும், அன்புசெய்யும் ஒரு தலைவன், எமது தலைவன் மட்டுமே.!

நரிகளுக்கும், பச்சோந்திகளுக்கும், அவரை புரிந்துகொள்வது கடினமே.!

பெருமையுடன் துரோணர்.!!

நாம் தமிழரா, இழப்பின் வலியை உணருவோம்.. வேண்டாமே போலிச் சபதம்..!

இப்போதைக்கு அனைவரினதும் பேச்சு புது வருடம் பிறக்கின்றது, புதிதாக அனைத்தையும் தொடங்குவோம், அடுத்த வருடம் முதல் புதுப்பிறப்பு என்பதே.

அது சரிதான் இருந்தாலும் சென்ற வருடத்தின் அதாவது 2015 இறந்து 2016 இல் கால் பதிக்கும் போதும் இதைத்தானே பலர் சொன்னார்கள் ஆனாலும் சிலரைத் தவிர எதுவுமே மாற வில்லை.

நானும் மாறப் போவது இல்லை, நீங்களும் மாறப் போவது இல்லை, ஆனால் வருடம் மட்டும் மாற்றமடைந்து கொண்டு செல்லும்.

2016 , 2017 ஆக மாறப்போகின்றது அவ்வளவுவேதான். ஆரம்பத்தில் எந்த வகை பிரச்சினை இலங்கையில் காணப்பட்டதோ அதே பிரச்சினை தான் இன்றும் தொடருகின்றது.

எவராலும் அது மாற்றம் பெற வில்லை விளக்கமாக சொன்னால் 2016இல் ஆடைக்காக சண்டை போட்டவன் 2017 இல் அரிசிக்காக சண்டை போடப்போகின்றான் அவ்வளவே தான்.

அது மட்டுமே இங்கு சண்டைக்கான மூலப்பொருள். மாற்றமடைந்தால் போதாது சண்டை நிறுத்தப்பட வேண்டும் அத்தகைய மாற்றம் வந்ததா? நிச்சயமாக இல்லை.

இலங்கை அரசியலிலும் சரி சர்வதேச அளவிலும் சரி அப்படி பார்க்கப்போனால் எதுவுமே மாற வில்லை. இனியாவது மாறுமா அது காலத்திற்கே வெளிச்சம்.

ஊழல், திருட்டு, நம்பிக்கை துரோகம், பொய், வெட்டிச் செலவு, வீண் பொழுது போக்கு, மது, புகை, மாது, நேர முகைமைத்துவம் இன்மை, வீண் வாதம், வெட்டிப்பேச்சு, போலிச்சபதம் இது போன்று பல சொல்லிக்கொண்டே செல்லலாம்.

அடுத்தவன் துயரைக் கண்டு ஒதுங்கிப்போவது, யார் எக்கேடு கெட்டால் எமக்கென்ன என்று வாழ்வது. இது அனைவருக்கும் இருக்கின்றதா இல்லையா என்பது அல்ல இப்போதைய கேள்வி.,

சென்ற வருடமும் அதற்கு முந்தைய வருடமும் இவற்றில் ஏதோ ஒன்று அல்லது பல இருக்கத்தான் செய்தது. ஆனால் திருத்தப்பட்டதா? என்பதே கேள்வி. ஆனாலும் களிப்புடன் வரவேற்கின்றோம் புது வருடத்தை.

மாற்றுதிறனாளிகள், அனாதைகள், ஏழைகள் போன்றோரின் உண்மையான சிரிப்பை நாம் கண்டிருப்போமா? அவர்களுக்கு நாம் உதவியிருப்போமா? எத்தனைபேர் எம்மால் சந்தோசப்பட்டார்கள் என்று சிந்தித்திருப்போமா?

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றான் ஒருவன், ஆனால் அந்த சிரிப்பை எம் வெட்டிச் செலவுகள் மூலம் எமது குடும்பத்தார் முகத்தில் மட்டுமே தேடுகின்றோமே ஒழிய.,

உண்மையான கடவுளை தேடுபவர் நம்மில் பலர் குறைவு, இது வேதனைப்பட வேண்டியது. இதுவா நம் கலாச்சாரம் இதுவா நம் பண்பாடு? வெட்கப்பட வேண்டும் தமிழன் என்று சொல்வதற்கு.

தவறு இல்லாத புத்தனாக எவரும் மாறத் தேவையில்லை. ஆனால் சிந்திப்போம் நாளைய சமூகத்தை உருவாக்குவது இப்போது வாழ்பவர்களே..,

திருப்தி இல்லா ஓர் வாழ்வு, நாளைய பொழுது எழுந்தால் போதும் என்ற நினைவு, எனக்கான வேலையை சரியாய் செய்தால் போதும் என நினைப்பவர்களே நம்மில் பலர்.

மனசாட்சியை தொட்டு இதனை மறுக்க முடியாது இவ்வளவு தெளிவாய் பக்குவம் பேசும் நான் கூட இதில் அடக்கம் தான்.

ஆனால் நிச்சயம் நான் மாறப்போகின்றேன் இது வெட்டிச்சபதம் அல்ல. அதற்காக நான் ஒன்றும் உங்களையும் மாறச்சொல்ல வில்லை சிந்தித்தால் மட்டும் போதும்.

2 நிமிட சந்தோசத்திற்காக பல கோடிகளை வீணாக்குகின்றான் ஒருவன். ஒருவேளை உணவிற்காக பிச்சை எடுக்கிறான் இன்னும் ஒருவன்.

இன்றைய உலகம் இருப்பவனுக்கு கொடுக்கிறதே தவிர இல்லாதவனை நினைத்து பார்ப்பதில்லை. அவர்களைப் பற்றி சிறிதளவாவது இனி ஒவ்வொருவரும் சற்று யோசிப்போம்.

புது வருடம் என்பது ஏதாவது ஒரு வகையில் நம் வாழ்வை இன்னும் திட்டமிட்டு கடந்து வருட தவறுகளை திருத்தி வாழ்வை மேலும் சிறப்பாக்கி கொள்வதற்குத்தானே தவிர கொண்டாடி மகிழ்வதற்கு அல்ல.

இது அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும், நேற்றைய தவறு மீண்டும் வேண்டாம் தனிப்பட்ட குரோதங்கள் வேண்டாம் நினைத்துப்பாருங்கள் சுயநலம் அற்ற ஓர் இலங்கையை.,

இங்கு நான் உலகை சொல்ல வர வில்லை முதலில் எம்மை சுத்தப்படுத்துவோம் பின்னர் உலகிற்கு செல்வோம்.

மற்றுமோர் விடயம் நம்மை விட்டு பிரியும் அற்ப விடயத்திற்கும் கவலை கொள்ளும் எம் மனம் ஒரு ஆண்டே பிரிந்து செல்லும் போது அதனைக் கண்டு துயரடைவதில்லை.

மாறாக அதனைத் திரும்பிப்பார்ப்பதும் கூட குறைவு இனிமேல் திருந்திக் கொள்வோம். புது வருடத்தின் முதல் நாளன்று இன்று முதல் நான் நல்லவன் என்று போலி வீரச்சபதம் தேவையில்லை.

இழப்பின் வலியை உணர்ந்துவிட்ட தவறை திருத்திக்கொள்வோம். அப்படி இல்லாமல் போலிக் கொண்டாட்டங்கள் என்பது வெட்டி மார்தட்டல்கள் மட்டுமே.

முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்வதோடு ஓர் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக முடிந்த அளவு பொது நலத்தோடு நாளைய சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

ஏதாவது ஒரு வகையில் அடுத்தவருக்கு உதவி செய்து வறுமையை போக்க அடுத்தவர் பசியை பாதியளவாவது குறைப்போம். மிகக்கொடியது பசி அடுத்தவருக்கு அந்த கொடுமையை கொடுக்க வேண்டாமே..,

Up ↑