முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக கருணா இன்று அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள கருணா இன்று பிற்பகல் வேளையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அதிலிருந்து விலகி, மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலததில் அவருக்கு பிரதியமைச்சர், மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் போன்ற முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
விநாயகமூர்த்தி முரளிதரனை டிசம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று நிதி மோசடி விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டபோது இவர் கைது செய்யப்பட்டார்.
விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் 800 மில்லியன் ரூபா பெறுமதியான அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.
விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்த அரச வாகனத்தை மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
**
கருணா குழுவுடன் இணைந்து பல கொலைகளைச் செய்துள்ளேன்? நேரடிச் சாட்சி!
கருணா குழுவினருடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் பல கொலைகளை தான் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்சியான முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரி நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.
ரவிராஜ் கொலை வழக்கின் இரண்டாவது பிரதிவாதியின் சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தனவின் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே குறித்த சாட்சியளர் மேற்படி சாட்சியத்தைப் பதிவு செய்தார். இந்த விடயத்தை சாட்சியாளர் வெளிபப்டுத்திய போது மன்றில் பிரசன்னமாகியிருந்த சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய கடும் எதிர்ப்பினை முன்வைத்ததால் மன்றில் சிறிது நேரம் வாதப் பிரதிவாதங்கள் நீடித்தன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்பாதுகாவலராக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் லக்ஷ்மன் ஆகியோரை படுகொலை செய்த விவகாரம் தொடர்பிலான சாட்சி விசாரணைகள் நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணி லால் வைத்திய திலகவின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு ஜூரிகள் முன்னிலையில் ஆரம்பமானது. முதலாவது சாட்சியாளரான அரச சாட்சியாக மாற்றப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரி முதலாவது சாட்சியாக நேற்றும் சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.
பிரதிவாதி சட்டத்தரணிகளான அசித் சிறிவர்தன மற்றும் அனோஜ பிரேமரத்னவின் குறுக்குக் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு அவர் அளித்த சாட்சியம் வருமாறு :
அசித்: 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியின் கிழகில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் சேவையாற்றிய காலப்பகுதியில் கருணா குழுவுடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டீரா?
பதில்: ஆம்
அசித்: அந் நடவடிக்கைகள் எவ்வாறானது என விளக்கமுடியுமா?
பதில்: அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட, உட்படாத பகுதிகளில் புலிகள் அமைப்புக்கு எதிராக கருணா குழுவினருடன் இணைந்து தாக்குதல்களை நடத்துவது. அவர்களை கொலை செய்வது.
அசித்: நீர் கூறுவது அனைத்தும் உண்மை என்பது தானே உம்முடைய நிலைப்பாடு?
பதில்: ஆம்
அசித்: இவ்வழக்கின் குற்றம் மற்றும் சதி தொடர்பில் நீர் கூறிவதும் அப்படியானால் உண்மை தானா?
பதில்: ஆம்
அசித்: உம்மை பொறுத்தவரை இரு நிலைப்பாடுகள் உள்ளன. ஒன்று, ரவிராஜ் கொலையை வெளியே கூறாமைக்கு உயிர் அச்சுறுத்தல் காரணம். மற்றையது, கொல்லப்பட்டது ரவிராஜ் தான் என்பதை நீர் வானொலி ஊடாகவே அறிந்துள்ளீர். அப்படித்தானே?
பதில்: ஆம்
அசித்: நீர் பொய் சாட்சி கூறுகின்றீர் என நான் பரிந்துரைக்கின்ரேன்.
பதில்: அதனை நான் நிராகரிக்கின்றேன்.
அசித: ரவிராஜை கொல்லப் போகும் திட்டம் உமக்கு ஏற்கனவே தெரியும் தானே?
பதில்: இல்லை.
அசித்: கடந்த 2015.2.26 அன்று நீர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழக்கிய வாக்கு மூலம், அதாவது நீர் உண்மைகளை மட்டுமே கூறியதாக கூறும் வாக்கு மூலத்துக்கு அமைய ரவிராஜை சாமி கொலை செய்ய தீட்டிய திட்டம் உமக்கு தெரிந்துள்ளது. அது தொடர்பில் நீர் வாக்கு மூலம் அளித்துள்ளீர். ?
(இதன் போது எழுந்த சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய அக்கேள்விக்கு எதிர்ப்பு தெரிவித்தார். வாக்கு மூலத்தை மன்றில் வாசித்து காட்டுவதற்கும் இடம்கொடுக்கக் கூடாது என்றார்)
அசித் : ரவி ராஜ் கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் நீர் பொலிஸ் சேவையில் இருந்தீரா?
பதில்: ஆம்
அசித்: அப்படியானால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்புக்கள் உமக்கும் இருந்தது?
பதில்: ஆம்
அசித்: அப்படியானால் நீர் சாட்சியம் அளிக்கும் போது கூறினீர், ரவி ராஜ் கொலையின் முக்கிய பிரதிவாதிகளான சாமி சரண் ஆகியோர் கொழும்பில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருந்ததாக. அப்படியானால் அது தொடர்பில் நீர் உமது உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தீரா?
பதில்: இல்லை.
அசித்: ரவிராஜ் கொலைக்கு அவர்கள் தயாரானமை நீர் அறிந்திருந்தீர். அப்படி இருந்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்யப் போவதை ஏன் நீர் அறிவிக்கவில்லை.?
பதில்: என்னிடம் புலி இயக்க முக்கியஸ்தர் ஒருவரை கொல்லப் போவதாகவே கூறினர்.
அசித்:இல்லை. நீர் ரவிராஜை கொல்லப் போகும் திட்டத்தை முன் கூட்டியே அறிந்திருந்தீர். ஆகவே தான் பொலிசாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் சாமி தன்னிடம் கூறியதாக அந்த விடயத்தை கூறியுள்ளீர்?
பதில்: ஞாபகம் இல்லை.
அசித்: சரி, ரவிராஜ் கொலைக்கு முன்னர் உளவு பார்த்ததாக ஏதும் தகவல்களை சாமி கூரினாரா?
பதில்: ஆம், ரவிராஜின் வீட்டுப் பகுதியில் சோதனை நடவடிக்கை ஒன்றினை சாமி, சரண், டூசேன், பிரசாத், வஜிர,செனவிரத்ன ஆகியோர் இணைந்து முன்னெடுத்ததாக கூறினார்.
( இதன் போதும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தமது எதிர்ப்பை முன்வைத்ததையடுத்து, நீதிபதி மணி லால் வைத்திய திலக, அந்த சோதனை நடவடிக்கையில் சாட்சியாளர் நேரடியாக பங்கேற்ராரா என கேள்வியை தொடுத்தார். அதற்கு சாட்சியாளர் இல்லை என பதிலளித்தையடுத்து அது தொடர்பில் கேள்வி கேட்க அனுமதியளிக்க மறுத்தார்.)
அசித்: உமக்கு பிறகு சாட்சியளிக்கவுள்ள 2 ஆவது சாட்சியாளரை தெரியுமா?
பதில்: ஆம்
அசித்: மூன்றாவது சாட்சியாளரை தெரியுமா?
பதில்: ஆம்
அசித்: 2006.11.09 ஆம் திகதி நீரும், ஏனைய இரு சாட்சியாளர்களும் சேர்ந்து தொழில் நுட்ப கல்லூரி சந்தியில் ரவிராஜை கொலை செய்ய முயன்ற போது அவ்விடத்தில் மோட்டர் சைக்கிளில் இருந்தீர் தானே?
பதில்: இல்லை. அதனை மறுக்கின்ரேன்.
அசித்: ரவிராஜ் கொலைக்கு முன்னரேயே, கொலை செய்யப்பட்ட தினம் நீர் செலுத்திய மோட்டர் சைக்கிள் உமக்கு தரப்பட்டது.
பதில்: இல்லை
கேள்வி: தலை கவசம் கூட ஒரு வாரத்துக்கு முன்பே உம்மிடம் கொடுக்கப்பட்டது என நான் யோசனை செய்கின்றேன்.
பதில்: அதனை நிராகரிக்கின்றேன்.
அசித்: நீர் கருணா குழுவுடன் இணைந்து செய்த குற்றத்தை மறைக்க பிரதிவாதிகளுக்கு எதிராக பொய் சாட்சி கூறுகின்றீர் என் நான் பிரேரிக்கின்றேன்.
பதில்: நிராகரிக்கின்றேன்.
அசித்: ரவிராஜின் கொலை இடம்பெற்ற தினம் சாமி உம்மை எங்கு வரச் சொன்னார்?
பதில்: பொரளை கனத்தை அருகே
அசித்: கனத்தை என்பது மிக விசாலமான பகுதி. அதன் முன்பாக ஒரு சுற்று வட்டம் உள்ளது. அந்த சுற்றுவட்டம் ஊடாக 5 பாதைகள் பிரிந்து செல்கின்ரன?
பதில்: ஆம்
அசித்: அப்படியாயின், கனத்தை அருகே வருமாறு சாமி கூறியதும் நீர் எப்படி சரியாக, மாதா வீதிக்கு மிக அருகில் போய் நின்றீர்? ஏற்கனவே உமக்கு பாதை அறிவிக்கப்படாமல், சதி தெரியாமல் இருப்பின் எப்படி அது சாத்தியமாகும்?
பதில்: இல்லை. சாமி வரச் சொன்னதாலேயே அங்கு சென்றேன்.
அசித்: அங்கு சாமி, சரண் வந்தனரா?
பதில்: ஆம். கறுப்பு முச்சக்கர வண்டியில் சாமி சரண், டூசேன் ஆகியோர் வந்தனர்.
அசித்: வேறு யார் வந்தனர்?
பதில்: பச்சை மற்றும் கிறீம் நிர முச்சக்கர வண்டிகளில்பிரதிவாதிகள் வந்தனர். கிறீம் நிற முச்சக்கர வண்டியில் கடற்படையைக் குறிக்கும் எழுத்துடன் கூடிய இலக்கத்தகடு காணப்பட்டது.
அசித்: அந்த முச்சக்கர வண்டிகளில் வந்தோர் யார்?
பதில்: ஞாபகம் இல்லை
அசித்: ஞாபகம் இல்லை என்பது பொய். கறுப்பு முச்சக்கர வண்டி மட்டுமே வந்தது. அதில் கருணா குழுவினர் வந்துள்ளனர்.?
பதில்: இல்லை மறுக்கின்றேன்.
அசித்: சாமி, சரண், டூசேன் ஆகியோர் இந்த வழக்கில் தற்போது இல்லாததால் நீர் தப்பித்துக்கொள்வதற்காக இவ்வாறு பொய்யான சாட்சியம் அளிக்கின்ரீர்?
பதில்: இல்லை. அதனை மறுக்கின்ரேன்.
அசித்: மட்டக்களப்பில் கருணா குழுவினர் பல கொலைகளை செய்துள்ளனர்?
பதில்: ஆம்
அசித்: கருணா குழுவினருடன் இணைந்து நீரும் பல கொலைகளை செய்துள்ளீர்?
பதில்: ஆம்
(இதன் போது அந்த கேள்விக்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். புலிகள் இயக்கத்தினரையே கொலை செய்ததாகவும் பிரதிவாதியின் சட்டத்தரணியின் கேள்வி தவறானது என வாதிட்டார். இதன் போது ஏனைய பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளான ரசிக பாலசூரிய மற்றும் அனோஜ பிரேமரத்ன ஆகியோரும் எழுந்து அசித் சிறிவர்தனவுடன் சேர்ந்து தொடர் வாதங்களை முன்வைத்தனர். பிரதி சொலிசிர்ரர் ஜெனரல் தேவையில்லாமல் குருக்கீடு செய்வதாகவும் கேள்வி சரியானதே எனவும் பதிலும் கிடைத்துவிட்டதாக அவர்கள் கூறினர். வாதப் பிரதிவாதம் முற்றிய நிலையில் பொதுவாக கொலைகளை செய்தீரா என எப்படி வினவ முடியும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளிடம் கேட்டார். இதன் போது சிரேஷ்ட சட்டத்தரணி அனோஜ பிரேமரத்ன, கடத்தப்பட்ட சீனி முதலாளி, மேலும் பல தன்மிழ் அப்பாவிகள் யார் என கேள்வி எழுப்பினார். அதற்குள் தலையிட்ட நீதிபதி மணி லால் வைத்திய திலக வாதத்தை நிறைவுக்கு கொண்டுவந்து சமாதானப்படுத்தினார்.
இதனையடுத்து மூன்றாவது பிரதிவாதியின் சட்டத்தரணியான அனோஜ பிரேமரத்ன சாட்சியாளரான பிரித்தி விராஜ் மனம்பேரியை குறுக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தினார்.
அனோஜ: சாமியின் அறிவுறுத்தல் படி போகும் போது யாரையோ ஒரு மனிதரை கொல்லப் போவதை நீர் அறிந்திருந்தீரா?
பதில்: புலிகள் இயக்க உறுப்பினர்.. என இழுக்கும் போதே
அனோஜ: புலிகள் இயக்கமோ, ஐ.எஸ். அமைப்போ, போகோ ஹராமோ ஏதோ ஒரு அமைப்பை சேர்ந்த ஒரு மனிதனை கொல்லப் போவதை அறிந்திருந்தீரா?
பதில்: ஆம்.
அனோஜ: நீர் இவ்வழக்கில் மன்னிப்பு பெற விதிக்கப்பட்ட நிபந்தனையைத் தானே தற்போது இப்படி சாட்சி சொல்வது. இதனைப் பெற சட்ட மா அதிபருக்கு நீர் நன்றி தெரிவித்தீர்தானே?
( இக்கேள்வியின் போது பிரதி சொலிசிர்ரர் ஜெனரல் மீள தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்.)
அனோஜ: அரசுக்கு பக்கச் சார்பாக சாட்சியளிப்பதாக கூரினீர் தானே? அது தானே நிபந்தனை?
பதில்: ஆம்
( கனம் நீதிபதியவர்களே, அரசின் சார்பாக சாட்சியம் அளிப்பதாக அவர் கூறவில்லை. அரசாங்கத்துக்கு பக்கச் சார்பாக வாக்கு மூலம் அளிப்பதாகவே அவர் நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.)
அனோஜ: உமக்கு நிபந்தனை பிணை கடந்த 2015.10.05 அன்று கிடைத்தது?
பதில்: ஆம்
அனோஜ: கஞ்சா தூள் 160 கிலோ விற்பனை செய்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டது அதன் பின்னர் தானே?
பதில்: ஆம்
அனோஜ: குறித்த வழக்கில் இரு சாட்சிகள் விசாரிக்கப்பட்ட பின்னரேயே நீர் குற்றத்தை ஒப்புக் கொண்டீர். அதன் பின்னரேயே உமக்கு தண்டமும் 10 வருட ஒத்தி வைக்கப்பட்ட தண்டனையும் வழங்கப்பட்டது. இதன் போது சட்ட மா அதிபர் சார்பிலும் உமக்கு குரைந்த பட்ச தண்டனையே கோரப்பட்டது. இவையனைத்தும் இவ்வழக்கில் அரச சாட்சியாக சாட்சியமளிப்பதற்கான நிபந்தனையல்லவா?
பதில்: இல்லை.
( இதன் போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த கடும் ஆட்சேபனை வெளிட்டார்.)
அனோஜ: நீர் கிழக்கில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹனின் கீழ் எப்போது கடமையாற்றினீர்?
பதில்: எனக்கு ஞாபகத்தில் உள்ளதன் படி 2005 ஜனவரி முதல் டிசம்பருக்கு உட்பட்ட காலப்பகுதியில்
அனோஜ: 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரபல சீனி வர்த்தகர் நடராஜா ஸ்ரீ ஸ்கந்தராஜவை கடத்தியமை தொடர்பில் நீர் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாரா?
பதில்: ஆம்
அனோஜ: சட்ட மா அதிபர் அது தொடர்பில் குற்றம் சாட்டியுள்ளார் தானே?
பதில்: ஆம்
( இதன் போது அது குறித்து வேறு ஒரு வழக்கு இடம்பெறுவதால் அவ்வழக்குக்கு சாட்சியாளரின் சாட்சியாளரின் பதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அதில் அவர் ஒரு பிரதிவாதி என்பதல் அவருக்கு பாதக நிலைமை ஏர்படலாம் எனவும் சுட்டிக்கடடப்பட்டது. அதனால் அக்கேள்விகள் தவிர்க்கப்படல் வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரலினால் கோரப்பட்டது. எனினும் சிரேஷ்ட சட்டத்தரணி அனோஜ பிரேமரத்ன, சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தமக்கு அக்கேள்விகளை தொடுக்க முடியும் என்பதையும், அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதையும் எடுத்துக்காட்டி குறுக்கு விசாரணைகளை தொடர்ந்தார்)
இந் நிலையில் நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்த நீதிபதி மணி லால் வைத்திய திலக இன்று காலை10.30 க்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். அதுவரை பிரதிவாதிகளை கொழும்பு விளக்கமறியல் சிறையிலும் முதலாவது சாட்சியாளரை மெகசீன் சிறையிலும் விஷேட பாதுகப்புக்கு மத்தியில் தடுத்து வைக்க நீதிபதி உத்தர்விட்டார்.
நன்றி : வீரகேசரி
Recent Comments