Search

Eelamaravar

Eelamaravar

Month

October 2015

மாவீரன் பண்டாரவன்னியனின் 212வது வீரவணக்க நாள் இன்று!

bandaravanniyanமாவீரன் பண்டாரவன்னியனின் 212 ஆவது நினைவு நாள் இன்றாகும். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்

வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான்.முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாள்வீச்சில் 60 பேரை கொன்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன்.

பண்டாரவன்னியனின் 212 ஆம் ஆண்டு நினைவுநாளில் இன்று வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழினி பற்றிய சிங்கள ஊடகவியலாளர்களின் பார்வை

thamilini 2‘தமிழினி போன்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை எமக்குண்டு. இவர்கள் தமது நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே போராடினார்கள். ஆகவே அந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.’இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில், வாசனா சுரங்கிக விதானகே மற்றும் மாதவா கலன்சூரிய ஆகியோர் இணைந்து எழுதியுள்ள  Thamilini’s forte – Tamil women’s liberation  கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழினி, புனர்வாழ்வு பெற்ற பின்னர் மீண்டும் சமூகத்துடன் இணைந்து வாழ்ந்தார். புலிகள் அமைப்பில் இருந்த போது இவர் தனது கழுத்தில் சயனைட் வில்லையை எப்போதும் அணிந்திருப்பார். அதற்காக இவர் ஒரு தற்கொலைக் குண்டுதாரி அல்ல.

புலிகள் தமது கோட்பாட்டிற்காக போராட்டத்தை மேற்கொண்டனர். போரின் போது இவர்கள் இராணுவத்தால் அழிக்கப்பட்டனர். புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் போரின் பின்னர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டனர். இவர்களது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இறுதியில், சிறிலங்கா அரசாங்கமானது மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தது. இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றவர் என எவரும் இல்லை. ஏனெனில் நீண்ட கால யுத்தத்தில் வழமையாக இடம்பெறுவது போன்றே போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பாதிப்புக்களைச் சந்தித்தனர்.

இறுதியில் சமாதானம் ஏற்பட்டது. நாட்டில் சமாதானம் ஏற்பட்ட சிறிது காலமே ஆகியுள்ளது. ஆனால் தமிழினி நோயின் பிடியில் சிக்கித் தவித்தார். இறுதியில் இவர் நோயின் தீவிரத்தால் தற்போது இறந்துவிட்டார்.

கலிங்க மன்னனைப் போன்று ஈழத்தை வென்றெடுப்பதற்காகப் போராடிய தமிழினி அவருடைய மக்களால் நேசிக்கப்பட்டார். ஆனால் நாங்கள் எல்லாளன் போன்ற ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துச் சண்டையிட்டு கட்டப்பட்ட நாட்டை சேர்ந்தவர்கள்.

தமிழினி போன்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை எமக்குண்டு. இவர்கள் தமது நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே போராடினார்கள். ஆகவே அந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தனது தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் விடுதலைக்காகப் போரிட்ட ஒரு பெண்மணியாக தமிழினி திகழ்கிறார். பெண்கள் பெருமளவில் நசுக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பெண்களால் எதிர்நோக்கப்பட்ட பாலியல் அடக்குமுறைக்கு முன்பாக தமிழினி எவ்விதத்திலும் தடுமாறவில்லை.

சிங்களப் பெரும்பான்மை சமூகத்தவரால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதியைத் தடுப்பதற்காகவே தமிழினி, புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

தமிழினி தெரிவு செய்த பாதை கடினமாக இருந்த போதிலும், இவர் ஒரு கொலைகாரியாக செயற்படவில்லை. இவர் பாதிக்கப்பட்ட தனது சமூகத்தின் மனிதாபிமானியாக செயற்பட்டார். இவர் தற்போது உயிருடனில்லை.

எந்தவொரு சாவும் பிறரது வாழ்விற்கு ஒரு பாடமாகும். தமிழினியின் இறப்பும் தற்போது உயிர் வாழ்வோருக்கு அறிவை வழங்கும் ஒரு பல்கலைக்கழகமாகக் காணப்படுகிறது. இந்த அறிவை அடையாளங் காண்பதற்கு ஒருவர் மீண்டும் தனது பழைய வாழ்விற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்.

சிவசுப்பிரமணியத்திற்கு ஐந்து பெண் பிள்ளைகள். இவர்கள் பரந்தனிலுள்ள சிவபுரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தனர். சிவகாமி சிறுமியாக இருந்த போது சிவசுப்பிரமணியம், இறந்து விட்டார்.

இவர் இறந்ததிலிருந்து இவருடைய மனைவி தனது ஐந்து பிள்ளைகளையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்கவேண்டியிருந்தது. சிவகாமி 1972 மே 23 அன்று பிறந்தார். இவர் கல்வியில் மிகவும் கெட்டிக்காரி.

பல்வேறு கடினங்கள் மத்தியிலும் இவர் க.பொ.த.உயர்தரக் கற்கைநெறியை பரந்தன் இந்துக் கல்லூரியில் தொடர்ந்தார். சிவகாமிக்கு 14 வயதாக இருந்தபோது இவரது குடும்பத்தினர் பரந்தனிலிருந்து இடம்பெயர்ந்தனர்.

இவர் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளில் 1991ல் இணைந்து கொண்டு சயனைட் குப்பியை அணிந்தார். அத்துடன் தனது கைகளில் துப்பாக்கியையும் ஏந்தினார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகப் போரிட்டார். 1995ல் தமிழினியின் அமைப்பு கிளிநொச்சிக்கு நகர்ந்தது.

இவர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவின் மூலை முடுக்கெல்லாம் அறிந்து வைத்திருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்குச் சென்ற புலிகளின் பெண்கள் அணிக்கு தமிழினி தலைமை தாங்கினார்.

இவர் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டார். இவர் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் நலன்களில் அதிகம் கவனம் செலுத்தினார்.

சிறிலங்கா இராணுவப் படைகள் ஜெயசிக்குறு நடவடிக்கையை முன்னெடுத்த காலப்பகுதியில், தமிழினி, முல்லைத்தீவு, மல்லாவி, துணுக்காய் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களின் வேலைத்திட்டங்களைப் பொறுப்பெடுத்தார். இவர் மிகவும் கடினமாக உழைத்தார். இவரது போக்குவரத்திற்காக எம்டி 90 உந்துருளி வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்ட இவரது சகோதரிகளில் ஒருவர் போரில் மரணித்தார். இவரது மூன்று சகோதரிகள் புலிகள் அமைப்பில் இணைந்தனர்.

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் பின்னர் தமிழினி அரசியற் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இவர் புலிகளின் அரசியற் துறை மகளிர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

புலிகளின் தத்துவாசிரியரான அன்ரன் பாலசிங்கம், இவரது மனைவி அடேல், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

நாங்கள் போரின் நிலைப்பாட்டிலிருந்து தமிழினி தொடர்பாக எழுதவில்லை. இவர் எமது தமிழ் சகோதரிகளில் ஒருவராவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான அனுசரணையாளர்களில் ஒருவராகச் செயற்பட்டார். போரின் இறுதிக்கட்டம் வரை இவரது மனஉறுதி மிகவும் உயர்வாகவே காணப்பட்டது.

இப்போரின் இறுதியில் அதாவது மே 18, 2008ல் புலிகளின் பெரும்பாலான தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட போதிலும் தமிழினி உயிருடன் இருந்தார்.

இவர் தனது சீருடையைக் கழற்றி விட்டு, சாதாரண உடையுடன் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சாதாரண ஒரு பெண்ணாகச் சென்றார். எனினும், இவரால் நீண்ட நாட்கள் ஒளித்திருக்க முடியவில்லை.

ஏனெனில் புலிகளின் அரசியற்துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக இவர் செயற்பட்டதால் இவரை மக்கள் நன்கறிந்திருந்தனர்.

இவர் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு சில ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் யூலை 2013ல் விடுவிக்கப்பட்டார்.

இவர் இதே ஆண்டு ஜெயக்குமாரனைத் திருமணம் செய்து கொண்டார். இவர் வாசிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தவில்லை. இவர் தமிழ் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தார்.

தமிழினி தனது 43வது வயதில் புற்றுநோய் காரணமாக சாவடைந்தார். இவரது உடலம் சிவபுரம், பரந்தனில் அடக்கம் செய்யப்பட்டது. மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், குருகுலராஜா, ஐங்கரநேசன், டெனீஸ்வரன், சிவாஜிலிங்கம் போன்ற பல்வேறு தமிழ் அரசியல்வாதிகள் தமிழினியின் இறுதிநிகழ்வில் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது இரங்கல் செய்தியை அனுப்பியிருந்தார். அனைத்துலக தமிழ் அமைப்புக்கள் பலவும் தமது இரங்கல்களை வெளியிட்டிருந்தனர்.

தமிழினி தனது இறப்பின் ஊடாக எமக்கு பாடம் ஒன்றைக் கற்பித்துள்ளார். தமிழினியினுடைய விருப்பமாக இருந்த விடுதலைக்காக மூன்று பத்தாண்டு காலமாக யுத்தம் இடம்பெற்றது. ஆனால் இன்றுவரை இந்த விடுதலை பெறப்படவில்லை.

மே 17 அன்று, தமிழினி தனது முகநூலில் ‘2009ல் ஒரு இரவில் எல்லாம் முடிந்துவிட்டது. இது தொடர்பில் வார்த்தைகள் இல்லை. இதற்காக அழுவதற்கு கண்ணீரும் இல்லை. இவை இன்னமும் அடையப்படவேண்டும். இறப்பு அவற்றின் முடிகளைச் சூடியுள்ளன. இன்று போராட்டம் இன்னமும் உயிர்வாழ வேண்டியுள்ளது, இது பிழைத்திருக்க வேண்டிய தேவையுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

தகைசார் ஆளுமை மிகுந்த தமிழினி

tamilini 5தமிழ் கூறும் நல்லுலகம் தமிழினி என்ற தலை மகளை, தலைவியை இழந்து நிற்கின்றது. சாதாரண குடும்பம் ஒன்றில் சாதாரணப் பெண்ணாக அவதரித்த அவர், இறுதி வரையிலும் வித்தியாசமான ஒரு சூழலில் வாழ்ந்து மறைந்தவர்.

தகைசார்ந்த ஆளுமை, கொள்கைப் பற்று, உறுதியான செயலாற்றல், பண்புகளுக்குள்ளே மிளிர்ந்து வெளிப்பட்ட அழகிய பெண்மை போன்றவற்றின் உறைவிடமாக அவர் திகழ்ந்தார்.

இயற்பெயர் சிவகாமி. சுப்பிரமணியம் சிவகாமி. இறக்கும்போது அவருக்கு வயது 43.

நடுத்தரப் பெண்ணாக, நடுத்தர வயதுப் பெண்ணாக தனது வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் அவர் உயிர் கொல்லும் ஒரு கொடிய நோயுடன் மட்டும் போராடி மறையவில்லை.

அடக்குமுறைகளுக்கும், ஆட்கொண்டு அடிமைப்படுத்துகின்ற அரசியல் ஆணாதிக்கச் செயற்பாடுகளுக்கும் எதிரான ஒரு போராட்டமாகவே அவருடைய வாழ்க்கை அமைந்திருந்தது.

தமிழ்ப் பெண்களின் கௌரவமான வாழ்க்கைக்கு, ஒவ்வொரு இளம்பெண்ணும் ஆற்றல் மிகுந்தவராக ஆளுமை மிக்கவராக, தனது இனத்திற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவராகத் திகழ வேண்டும் என்பதற்காக அவர் அயராமல் செயற்பட்டிருந்தார்.

இனத்தின் மீதும் சமூகத்தின் மீதும் நாட்டின் மீதும் பற்றுகொண்டு பாடுபட்ட அவர் இறுதிக்காலத்தில் தனக்காகப் போராடினார்.

முன்னைய போராட்டம் அவருக்கு வெற்றியளித்திருந்தது. பின்னைய போராட்டம் அவரைப் புற்றுநோயின் பிடியில் சிக்கி பூவுலக வாழ்க்கையில் இருந்து நீங்கச் செய்துவிட்டது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தினால் ஆட்கொள்ளப்பட்ட அவர், சந்திரிகாவாக விடுதலை அமைப்பில் உட்புகுந்து, சாம்பவியாகத் திகழ்ந்து தமிழினியாக – அனைவருக்கும் ஓர் இனிய அரசியல் தலைவியாக ஆளுமையோடு செயற்பட்டிருந்தார்.

இரண்டு தளங்களில் அவருடைய வாழ்க்கை அடங்கியிருந்தது. அவரைப் பொறுத்தமட்டில், இரண்டு தளங்களுமே, பெண்மைக்கும் பெண்களுக்குமான உரிமைகளுக்கான போராட்ட களங்களாகவே அமைந்திருந்தன.

அந்தப் போராட்ட களங்களில் அவர் வித்தியாசமானவராக, விட்டுக் கொடுக்காத கொள்கைப் பிடிப்புள்ளவராக, உறுதியான செயற்பாட்டாளராகத் திகழ்ந்தார்.

இரண்டாவது தளமாகிய அவருடைய வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் அவரை, பலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அரசியல் இராணுவ சூழல்களில் சிக்கியிருந்த அவரை, தவறான அனுமானத்துடன் நோக்கினார்கள். அந்த நோக்கு அவரைப் பெரிதும் புண்படுத்தியிருந்தது.

சாதாரண பெண்களை, பண்பட்டவர்களாக, சமூகத்தின் கண்களாக, உரிமைக்கும் நீதிக்கும் நியாயத்திற்கும் போராட வல்லவர்களாக உருவாக்குவதற்காக அவர் தன்னுடைய வாழ்க்கையின் முதல் தளத்தில் செயற்பட்டிருந்தார். அற்காகத் தனது வாழ்க்கையையே அவர் அர்ப்பணித்திருந்தார்.

ஆனால் அந்த அர்ப்பணிப்பை சரியான முறையில் அடையாளம் காணாதவர்கள் அவருடைய மனம் பெரிதும் புண்படும் வகையில், அவருடைய வாழ்க்கையின் இரண்டாவது தளத்தில் நடந்து கொண்டார்கள். அதனால், அதற்கு எதிராகவும் அவர் போராட வேண்டியிருந்தது.

முன்னைய போராட்டத்தில் அவர் கம்பீரமான ஆளுமையோடு செயற்பட்டிருந்தார். ஆனால் இரண்டாவது களம், ஒரு வகையில் அவரைப் பெரிதும் மனதளவில் துன்புறுத்தியதாகவே குறிப்பிட வேண்டியுள்ளது.

அதனால் அவர் தளர்ந்து போனார். தனிமையில் வாடினார். போதாக்குறைக்கோ என்னவோ அவரை, கொடிய புற்றுநோயும் பற்றிப் பிடித்து பழிகொண்டுவிட்டது.

சமூகத்திற்காகவும், மானுடத்திற்காகவும் பாடுபட்ட பலர் கொடிய நோய்களுக்கு ஆளாகி மடிந்து போன வரலாறு நிறையவே இருக்கின்றன. அந்தப் பட்டியல் வரிசையில் தமிழினியின் வாழ்க்கையும் இப்போது இணைந்திருக்கின்றது.

தமிழர் வரலாற்றில் வீரமங்கைகள் பலரைப் பற்றி பதிவு செய்திருக்கின்றார்கள். அரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் அரசகுலத்துப் பெண்கள் வீரம் செறிந்தவர்களாக ஆளுமை மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள் என வரலாறுகள் கூறுகின்றன.

அவர்களைப் பற்றிய வரலாற்றுக் கதைகள் நிறையவே இருக்கின்றன. அதேநேரம் அரச ஆட்சி முறை மாற்றம் பெற்று ஜனநாயக ஆட்சிமுறை தோற்றம் பெற்ற காலத்திலும் பல பெண்கள் ஆளுமை மிக்கவர்களாக வாழ்ந்திருக்கின்றார்கள். சமூகத்தின் கண்களாகத் திகழ்ந்திருக்கின்றார்கள்.

ஆனால் தமிழினியின் வாழ்க்கை வித்தியாசமானது. சேற்றில் செந்தாமரை மலர்ந்தது போன்று, அடக்கு முறைகளுக்குள்ளே ஆளுமை மிக்கவராக, கருணை கலந்த வீரம் செறிந்த மங்கையாக வாழ்ந்து மறைந்துள்ளார்.

பரந்தனைச் சொந்த இடமாகக் கொண்டு, பதின்ம பருவத்தில் அவர் கல்வி கற்றவேளை, இளமைப் பருவத்தில் (இருபதாவது வயதில்) காலடி எடுத்து வைத்தபோது, அவர் மாணவர்களுக்கான அரசியல் செயற்பாட்டில் பிரவேசித்திருந்தார்.

அதுவே விடுதலைப் புலிகள் அமைப்பின் உள்ளே அவருடைய பிரவேசமாகவும் அமைந்துவிட்டது.

சந்திரன் பூங்கா என்றால் கிளிநொச்சியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் கிளிநொச்சி நகரைப்பற்றி தெரிந்தவர்களுக்கும் நன்கு தெரியும்.

தற்காலத்து இளைஞர்களுக்கு அந்தப் பூங்காவின் வரலாறு தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்திரன் என்ற போராளியின் நினைவாகவே சந்திரன் பூங்கா உருவாகியது. உருவாக்கப்பட்டது, இப்போது அது இராணுவத்தினருடைய போர் வெற்றிச் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது.

இந்த சந்திரனுடைய போராட்ட வாழ்க்கை சிவகாமியைப் பெரிதும் கவர்ந்திருந்தது. கவர்ந்திருந்தது என்பதைவிட அவருடைய மாணவ பருவ வாழ்க்கை, வித்தியாசமான ஒரு திசையில் திரும்புவதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்றே கூற வேண்டும்.

சந்திரன் சிவகாமியின் சகோதர உறவு முறையானவர் என கூறுகின்றார்கள். விடுதலைக்கான ஆயுதப் போராட்ட களத்தில் மறைந்துபோன சந்திரனின் நினைவாக, சிவகாமி சந்திரிகா என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

தொண்ணூறுகளில் மாணவர்கள் மத்தியில் அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்ட சந்திரிகா விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் குறிப்பிடத்தக்க ஒருவராக,

ஆயுதமேந்திப் போராடியவர்களுக்கு அவசியமான அடிப்படை அரசியல் அறிவையும் தெளிவையும் ஊட்டுபவராகத் திகழ்ந்தார். ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு முன்னதாகவே, அரசியல் செயற்பாட்டில் அவர் திறமை காட்டியிருந்தார்.

ஆயுதமேந்திப் போராட வேண்டும். பல களமுனைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் அவருடைய உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த போதிலும், அவரால் முழுநேர களப்போராளியாகப் பங்கெடுத்துச் செயற்பட முடியவில்லை.

அதற்கான சந்தர்ப்பம் அவருக்குக் கிட்டவில்லை. மாறாக போhராட்டத்தில் இணைந்து கொண்ட இளம்பெண்களை, பண்பட்டவர்களாக, அடிப்படை அரசியல் அறிவும் சமூகப் பிரக்ஞையும் கொண்டவர்களாக உருவாக்குவதற்கான அரசியல் கல்விச் செயற்பாட்டில் அவர் முழுமையாக ஈடுபட்டிருந்தார்.

முன்னணி போர்க்களங்களில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆவலே பேர்க்களத்தில் சாதனை புரிந்து மறைந்த சந்திரனின் நினைவாக, சந்திரிகா என்றும் பின்னர், சாம்பவி என்ற போர்க்களத்தில் மறைந்துபோன போராளியின் பெயரைச் சூட்டிக்கொள்ளவும் அவரைத் தூண்டியிருந்தது.

சிவகாமி, சந்திரிகா என்ற பெயரில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அரசியல் பிரசார மேடைகளில் அவர் ஆற்றிய உரைகள் தினசரிகளில் முக்கிய இடம் பிடித்திருந்தன.

அந்தக் காலப்பகுதியில் சந்திரிகா பண்டாரநாயக்கா அரசியலில் புகுந்து ஜனாதிபதியாக மாறியிருந்தார். இதனால் யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பிரதேசம் ஆகியன உள்ளிட்ட வடபகுதியின் தினசரிகளில் எந்த சந்திரிகா என்ன சொன்னார் என்பது சாதாரண மக்களுக்குக் குழப்பம் தருவதாக அமைந்தது.

இதனையடுத்து, சிவகாமி தனது சந்திரிகா என்ற பெயரை, சாம்பவி என மாற்றி சூடிக்கொண்டார்.

சிவகாமிக்கு சாம்பவி என்ற பெயரும் நிலைக்கவில்லை. உரிமைகளுக்காகப் போராடிய அதேவேளை, தூய தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற செயற்பாடு முன்னெடுக்கப்பட்டபோது,

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பலருடைய பெயர்கள் தூய தமிழ்ப்பெயர்களாக மாற்றப்பட்டன. அப்போது சாம்பவியாக இருந்த சிவகாமி தனது பெயரைத் தமிழினியாக மாற்றிக்கொண்டார். அதுவே அவருடைய நிரந்தரப் பெயராகிப் போனது.

யுத்தம் முடிவுக்கு வந்து, செட்டிகுளம் மனிக்பாம் முகாமில் குடும்பத்தினருடன் தஞ்சமடைந்திருந்தபோது, தமிழினி விசேட படை அணியினரால் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் தீவிர விசாரணையின் பின்னர் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் 2013 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டபோது,

அவர் தமிழினியாகத் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை. மீண்டும் சிவகாமியாக, தனது தாயாருடனும் சகோதர சகோதரிகளுடனும் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்றே அவர் விரும்பியிருந்தார்.

தனது குடும்பத்தினருக்காகச் செயற்பட வேண்டும் என எண்ணியிருந்தார். அந்த எண்ணமும் அவருக்கு சீராக நிறைவேறவில்லை.

புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர், விடுதலையாகி சமூகத்தில் அவர் இணைந்து கொண்ட போதிலும், அவருடைய பாதுகாப்பு அங்கு உறுதிப்படுத்தப்படவில்லை. சுடு சொற்களால் அவரைப் பலரும் சுட்டெரித்தார்கள். புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்து அவர் மீது பகிரங்கமாகப் பல கண்டனங்கள் எழுந்திருந்தன.

புலம்பெயர் தமிழர்களின் ஊடகங்களும் அவரைப் பெரிதும் சாடி வந்தன. மறுபக்கத்தில் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், அவர்களை முள்ளின்மேல் இருப்பதைப்போன்று புலனாய்வாளர்களும் இம்சித்துக் கொண்டிருந்தார்கள்.

பதிவுகள், விசாரணைகள் என்று மீண்டும் மீண்டும் பழைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்வதும் விசாரணைகளை நடத்துவதுமாக அவர்கள் முன்னாள் போராளிகளை நிம்மதியிழக்கச் செய்திருந்தார்கள். (இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கின்றது).

இத்தகைய ஒரு சூழலில்தான் அவர் அஞ்ஞாத வாசம் செய்ய நேர்ந்தது. அந்த ஆளுமை மிக்க தலைவியின் வாழ்க்கை சோகம் மிகுந்ததாக, சமூகத்தில் பலருக்கும் தெரியாத ஒன்றாக மாறிப் போனது.

உயர்ந்த கம்பீரமான தோற்றம். தீட்சண்யமானதாயினும் கருணை நிறைந்த பார்வை. அதில் ஒரு கட்டுக்கோப்பும், கண்டிப்பும் துல்லியமாகத் தெரியும். ஆழமான கருத்துக்கள் செறிந்த அமைதியான வார்த்தைகள்.

எதிரில் இருப்பவர்களைச் சிந்திக்கச் செய்யும் வல்லமை கொண்டiயாக அவைகள் இருக்கும். அவருடைய மேடைப் பேச்சு சாதாரணமானது என்றே கூற வேண்டும்.

அடுக்குமொழி கிடையாது. கேட்போரைக் கவர்ந்து இழுக்கின்ற கவர்ச்சியும் இருக்காது. ஆனால் நீரோடை போன்று அமைந்திருக்கும். ஆயினும் கேட்பவர்களை கருத்துக்களினால் கட்டிப்போட்டு விடும்.

பன்முக ஆற்றல் கொண்டிருந்த அவர், கவிதை எழுதுவார். சிறுகதைகள் எழுதியுள்ளார். சிறந்த நாடக நடிகை. இயல்பிலேயே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். கவிதைகள் கதைகளை ரசித்து வாசிப்பதில் அலாதி விருப்பம் கொண்டவர்.

தான் விரும்பியவற்றை, தன்னுடன் இருந்த பெண்களைக் கூட்டி வைத்து, ஒரு நாடகம் நடிப்பதைப் போன்று நளினங்களுடன், அந்தந்த கதைகள் அல்லது கவிதைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றி, ரசனையோடு வாசித்துக் காட்டி மகிழ்வார்.

மற்றவர்களையும் மகிழ்விப்பார் என்று அவருடன் நெருங்கிப் பழகிய பெண்கள் கூறுவார்கள்.

தன்னுடன் பணியாற்றிய பெண்கள், சீரான தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும். கம்பீரமாகத் திகழ வேண்டும். ஆளுமையுடன் செயற்பட வேண்டும் என்பதற்கான அடிப்படை விடயங்களில் அவர் மிகவும் கண்டிப்பாக இருப்பார் என்று அவர்கள் இப்போது நினைவுகூர்கின்றார்கள்.

தமிழினியினால் வழிகாட்டப்பட்ட பல பெண்கள் இன்று புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைந்து – அந்த சமூக சூழலுக்கு ஏற்ற வகையில் ஆளுமை உடையவர்களாகத் திகழ்கின்றார்கள்.

சிலர் பொதுப் பணிகளில் ஆர்வமுள்ளவர்களாகவும், கவிஞர்களாக, எழுத்தாளர்களாகவும்கூட திகழ்கின்றார்கள். போராட்ட கால வாழ்க்கையில் மட்டுமல்ல.

போருக்குப் பிந்திய வாழ்க்கைச் சூழலிலும் தலைநிமிர்ந்து வாழத்தக்க வகையில் தமிழினி தங்களை வழிநடத்தியிருக்கின்றார் என்று அவர்கள் தமிழினியைத் துயரத்துடன் நினைவுபடுத்துகின்றார்கள்.

விடுதலைப்புலிகளின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த தமிழினி எவ்வாறு உயிர் தப்பினார்?

போராடச் சென்ற அவர் ஏன் இறுதி நேரத்தில் குப்பியடித்துச் சாகவில்லை? என்று, அவர் மனிக்பாம் முகாமில் வைத்து கைது செய்யப்பட்டதும் பலரும் வினா எழுப்பியிருந்தார்கள்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர், படையினருக்கு விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள், அவர்களுடைய போராட்டம் பற்றிய தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இராணுவத்தினரிடம் பிடிபடாமல் தப்புவதற்காகத் தனது உயிரை மாய்த்துக்கொள்ளாமல், அவர் விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்து தப்புவதற்காகவே இராணுவத்தினரிடம் சரணடைந்த துரோகச் செயலைப் புரிந்திருந்தார் என்று அவர் மீது பழி சுமத்தப்பட்டிருந்தது.

ஆயினும் பின்னர் காலப்போக்கில் அது அவர் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு என்பது பலருக்கு உறைத்திருந்தது.

விடுதலைப்புலிகளின் அரசியல் துறையில் ஆழமாக ஈடுபட்டிருந்த அவரை அப்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தனது அரசியல் நலன்களுக்காக அவரை தனது அணியில் இணைத்து அரசியல் செய்வதற்கான திட்டம் ஒன்றையும் வைத்திருந்தது.

அதனால் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர், படையினரால் கைது செய்யப்பட்ட கேபி போன்றவர்களை வடமாகாணத்தின் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதுபற்றிய தகவல்கள் ஊடகங்களில் அப்போது பரவலாகவும் உறுதியான முறையிலும் கசிந்திருந்தன. இதுவும்கூட தமிழினி மீதான புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் எழுந்திருந்த சீற்றத்திற்கும் கோபத்திற்கும் ஒரு காரணமாக இருந்தது.

ஆயினும் அவர் சாதாரண ஒரு பெண்ணாக, சமூகத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவே, இறுதிச் சண்டையின் பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசித்தார்.

அவர் ஓமந்தையில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போதிலும், ஏனைய போராளிகளைப் போன்று போராளிகளுக்கான முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படவில்லை. மாறாக அவர் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்கு எவ்வாறு சென்றார்; என்பது பற்றிய விமர்சனம் இருக்கின்றது.

உண்மையாக அப்போது என்ன நடந்தது என்பதுபற்றிய தகவல்கள் வெளிப்படவில்லை. ஆனால், அவர் மனிக்பாம் முகாமில் தாயாருடன் இருந்தபோது கைது செய்யப்பட்டார் என்பது உண்மை.

விடுதலைப்புலிகளின் உயர் மட்டத்தலைவர்களில் ஒருவராகிய தமிழினி இராணுத்தினாரல் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் உடனடியாகக் கொழும்புக்குக் கொண்டு சென்று விசாரணை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவர் இளைஞர் யுவதிகளுக்குப் பயிற்சியளித்தார்.

புலம்பெயர்ந்துள்ள விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அவரிடம் விசாரணை செய்தவர்கள், அவரை பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவராகக் காணவில்லை.

அதாவது, தென்பகுதியில் பொது இடங்களிலும், பொதுமக்கள் மீதும் முக்கிய அரசியல்வாதிகள், படையதிகாரிகள், முக்கியஸ்தர்கள் மீதும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள், துபபாக்கிப் பிரயோகங்கள் என்பவற்றுடன் தொடர்புகொண்டிருந்தார் என்பதற்கான சாட்சியங்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

மாறாக அவர் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைச் செயற்பாடுகளில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஓர் அரசியல் செயற்பாட்டாளராகவே கண்டிருந்தனர்.

இதன் காரணமாகவே அவர் மீது பாரதூரமான குற்றச் சம்பவங்களுடன் – பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் அல்லது குற்றச்செயல்களைப் புரிந்திருந்தார் என்று குற்றம் சாட்டவில்லை.

தமிழினியின் கம்பீரமான தோற்றமும், எதிராளியையும் சிந்திக்கச் செய்து ஏற்றுக்கொள்ளத்தக்க பேச்சுத் திறனுமே, அவர் கைது செய்யப்பட்டிருந்தபோது,

அவரை விசாரணை செய்தவர்களும் அவருடைய வழக்கை விசாரணை செய்த நீதிபதியும், அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றுவதற்கான அவருடைய நியாயத்தன்மையை ஏற்றுக்கொள்ளச் செய்திருந்தது என கூறவேண்டும்.

தமிழினி கைது செய்யப்பட்டதும், அவருடைய வழக்கில் பிரபல சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அப்பாத்துரை வினாயகமூர்த்தியே, அவருக்காக முன்னிலையாகியிருந்தார்.

பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய சட்ட உதவிகளை வழங்கி, அவர்களுக்கு சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவனம் ஒன்றே வினாயகமூர்த்தியை தமிழினிக்காக முன்னிலைப்படுத்தியிருந்தது.

அப்போது, புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்தும், அவர்களுடைய பல்வேறு அமைப்புக்களிடமிருந்தும், விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தார் என்ற சாரப்பட, தமிழினிக்கு எதிராக எழுந்திருந்த சீற்றமும்,

குற்றச்சாட்டுக்களும் சட்டத்தரணி வினாயகமூர்த்தியை, தமிழினிக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதில் இருந்து ஒதுங்கச் செய்திருந்தது. இதனால் சில வழக்குத் தவணைகளில் தமிழினிக்காக எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், நோர்வேயில் வசித்து வரும் தமிழினியின் சகோதரி துஷித் ஜோன்தாசன் என்ற சட்டத்தரணியை அவருக்காக ஏற்பாடு செய்திருந்தார்.

ஆயினும் அவர் தன்னுடன் பணியாற்றிய மஞ்சுள பத்திராஜா என்ற சட்டத்தரணியை தமிழினிக்காக முன்னிலையாகச் செய்திருந்தார்.

சட்டத்தரணி ஜோன்தாசனின் பணிப்பில் மஞ்சுள பத்திராஜா கிரமமாக தமிழினிக்காக நீதிமன்றத்தில் வாதாடி வந்தார். அதற்காக அவர் கட்டணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் தமிழினியின் வழக்கை விசாரணை செய்த முன்னாள் கொழும்பு நீதவான் ஹப்புஆராச்சி மற்றும் ரஷ்மி சிங்கப்புலி ஆகியோர் குறுகிய கால தவணைகளையே விதித்திருந்தனர்.

அது மட்டுமல்லாமல், விடுதலைப்புலிகளின் உயர் மட்டத் தலைவர் என்ற ரீதியில் அவரைத் தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும் என்பதிலும், அவருடைய பாதுகாப்பிலும் அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நலன்களையும் பாதுகாப்பையும் நேரடியாகச் சென்ற பார்வையிடுவதற்கான அதிகாரம் நீதவான்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதனால் தமிழினியின் வழக்கை விசாரணை செய்த நீதவான் ஹப்புஆராச்சி தமிழினியை அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் சென்று பார்வையிட்டு அவருடைய நிலைமைகளை நேரடியாகக் கண்காணித்திருந்தார்.

அந்த நேரத்தில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களையும், அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களையும் கடும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் என இரண்டு ரகங்களில் பட்டியலிட்டு விசாரணைகளை மேற்கொண்டு,

அதற்கேற்ற வகையில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்கள். அரசியல்துறை செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தமிழினியை அவர்கள் தீவிரவாதப் பட்டியலில் இணைத்திருந்தார்கள்.

அதனால் அவருக்கு எதிராகக் கடும் குற்றச்சாட்டுக்களைப் பாதுகாப்பு அமைச்சினால் சுமத்த முடியவில்லை.

ஆயினும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத நிலையில் அவர் விடுதலையாகியதன் பின்னர், என்ன செய்வார், எப்படி நடந்து கொள்வார் என்பதைத் தீர்மானிப்பதில் பாதுகாப்பு அமைச்சு தடுமாற்றமடைந்திருந்தது.

விடுதலைப்புலிகளின் உயர் மட்ட அரசியல் தலைவியாக இருந்த தமிழினி வெளியில் சென்றதும், விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஈடுபடமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது?

புலம்பெயர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற விடுதுலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொண்டு அந்த அமைப்புக்கு மீண்டும் உயிர் கொடுக்கமாட்டார? என்பது போன்ற கேள்விகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளைக் குடைந்து கொண்டிருந்தன.

இருப்பினும் அவரைப் புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்படுத்தி விடுதலை செய்யலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

அரச தரப்பினர் தமிழினியை தமது அரசியலுக்குப் பயன்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, அதனை தமிழினி உறுதியாக மறுத்துவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் விடுதலையாகியதும், பொதுப் பணிகள் எதிலும் பங்கெடுக்கப் போவதில்லை. குடும்பவாழ்க்கையில் ஈடுபடப் போகிறேன் என அடித்துக் கூறியிருந்தார்.

அதற்கான உறுதிமொழிகளும் அவரிடமிருந்து பெறப்பட்டதன் அடிப்படையிலேயே அவரை விடுதலை செய்வதற்கு அவர்கள் தீர்மானித்துப் புனர்வாழ்வுப் பயிற்சிக்கு அனுப்பியிருந்தார்கள். அதன் பின்னர் தமிழினி விடுதலையாகினார்.

விடுதலைப்புலிகளின் சுதந்திரப்பறவைகள் என்ற அமைப்பின் செயற்குழு உறுப்பினராக இருந்த தமிழினி சிறைச்சாலையில் இருந்து விடுபட்டு சுதந்திரப் பறவையாக வெளியில் வந்த போதிலும், சுதந்திரப் பறவையாக அவரால் வாழ முடியாமல்போனது வருந்தத்தக்கது.

தமிழினியைப்போலவே ஆற்றல் மிகுந்த பல முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான பெண்கள், தமிழ் சமூகத்தினால் சரியான முறையில் அடையாளம் காணப்படாததாலும், அவர்களுடைய பெறுமதி உணரப்படாததாலும்,

சமூக வாழ்க்கையில் இயல்பாக இரண்டறக் கலக்க முடியாமலும், இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமலும் – அதற்கான வாய்ப்பு வசதியைப் பெற முடியாமலும் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதே, தமிழினி என்ற சீரிய தன்மை கொண்ட தலைவிக்கு செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

செல்வரட்னம் சிறிதரன்

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.

praba quotes poor people

எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.

எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

விடுதலைப் போராட்ட வரலாற்றின் திருப்பு முனை எல்லாளன் நடவடிக்கை ஐந்தாம் ஆண்டு நினைவுகள்

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய  நினைவுநாள் 22- ஒக்டோபர் -2012 இன்றாகும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய நாளாக 2007 ஆம் ஆண்டு காணப்படுகின்றது.

தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மாவீரர்களின் ஆண்டு 22- ஒக்டோபர்-2012 ல்நினைவுகூரப்படுகிறது.

தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி படம்எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்து சென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை.

அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்படுகின்றது.

அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படைத் தளம் மீது “எல்லாளன்” என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் மேலும் பல வானூர்திகள் சேதமாக்கப்பட்டன.

இந்த எல்லாளன் சிறப்பு நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

“எல்லாளன் நடவடிக்கை” 22-10-2007

ellaalan-attack-bt-ltte 21 praba

அவர்களின் விபரம் வருமாறு:

லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் – திருகோணமலை)
லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் – யாழ்ப்பாணம்)
லெப். கேணல் மதிவதனன் (பாலசுப்பிரமணியம் தயாசீலன் – யாழ்ப்பாணம்)
மேஜர் சுபன் (கதிரவன் ஜீவகாந்தன் – யாழ்ப்பாணம்)
மேஜர் கனிக்கீதன் (இராசன் கந்தசாமி – மட்டக்களப்பு)
மேஜர் இளம்புலி (துரைரட்ணம் கலைராஜ் – யாழ்ப்பாணம்)
மேஜர் காவலன் (சண்முகம் சத்தியன் – கிளிநொச்சி)
மேஜர் எழிலின்பன் (விமலநாதன் பிரபாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் தர்மினி (கணேஸ் நிர்மலா – கிளிநொச்சி)
கப்டன் புரட்சி (செல்வராசா தனுசன் – யாழ்ப்பாணம்)
கப்டன் கருவேந்தன் (மயில்வாகனம் சதீஸ்குமார் – கிளிநொச்சி)
கப்டன் புகழ்மணி (தர்மலிங்கம் புவனேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் புலிமன்னன (கணபதி நந்தகுமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் அன்புக்கதிர் (வில்சன் திலீப்குமார் – முல்லைத்தீவு)
கப்டன் சுபேசன் (நாகராசா மகாராஜ் – மன்னார்)
கப்டன் செந்தூரன் (கணேசநாதன் தினேஸ் – யாழ்ப்பாணம்)
கப்டன் பஞ்சீலன் (சிவானந்தம் கஜேந்திரன – மட்டக்களப்பு)
கப்டன் ஈழப்பிரியா (கந்தையா கீதாஞ்சலி – யாழ்ப்பாணம்)
கப்டன் அருள்மலர் (சேவியர் உதயா – யாழ்ப்பாணம்)
கப்டன் ஈழத்தேவன் (தங்கராசா மோசிகரன் – யாழ்ப்பாணம்)
லெப். அருண் (பத்மநாதன் திவாகரன் – யாழ்ப்பாணம்)

எல்லாளன் முழுநீளத் திரைப்படம் காணொளி

தமிழுலகம் மறவாத் தமிழினி….

*thamilini

அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில். – தமிழினி ஜெயக்குமாரன் –thamilini 11

போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது.
வெடியதிர்வுகளின் பேரோசைகளால
குடி பெயர்ந்தலையும்’
யானைக் கூட்டங்களாக
இருண்ட முகில்களும் கூட
மருண்டு போய்க் கிடந்தன.
பகலை விழுங்கித் தீர்த்திருந்த
இரவின் கர்ஜனை
பயங்கரமாயிருந்தது
அம்பகாமப் பெருங்காட்டின்
போர்க்களத்தில்.tamilini 8

காதலுறச் செய்யும்
கானகத்தின் வனப்பை
கடைவாயில் செருகிய
வெற்றிலைக் குதப்பலாக
சப்பிக்கொண்டிருந்தது
யுத்தம்.

மீளாப் பயணம் சென்ற தோழி
விடைபெறக் கை பற்றி
திணித்துச் சென்ற கடதாசி
செய்தி சொன்னது..
காலமாவதற்காக காத்திருக்கும்
அம்மாவின் ஆத்மா
கடைக் குட்டியவளின்
கையாலே ஒரு துளி
உயிர்த் தண்ணிக்காகத்
துடிக்கிறதாம்.

எவருக்கும் தெரியாமல்
என்னிடத்தில் குமுறியவள்
விட்டுச் சென்ற
கண்ணீர்க் கடலின்
நெருப்பலைகளில்
நித்தமும்
கருகிக் கரைகிறது
நெஞ்சம்.

தனி மனித
உணர்ச்சிகளின் மீதேறி
எப்போதும்
உழுதபடியே செல்கின்றன
போரின்
நியாயச் சக்கரங்கள்.

அக்கணத்தில்
பிய்த்தெறியப்பட்டிருந்த
பச்சை மரங்களின்
இரத்த வீச்சத்தை
நுகர்ந்த வல்லுாறுகளின்
நீண்ட நாக்குகளில்
உமிழ்ந்து
பெருகுகிறது
வெற்றிப் பேராசை.

இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினி-விக்கினேஸ்வரன்

tamilini 5“ இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினியை நினைத்து நான் பெருமையடைந்தேன்” என வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் இழப்பிற்கு அனுதாபம் தெரிவித்து வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில்,

உணர்வும் அறிவும் ஆளுமையுங் கொண்டஒரு ஜீவன் எம்மைவிட்டு ஏகிவிட்டது. புற்று நோய்த் தாக்கத்தினால் உயிர் துறந்த சகோதரி தமிழினி அவர்களின் அகாலமரணம் தமிழ் மண்ணின் ஒரு பேரிழப்பாகும்.

சகோதரி தமிழினி அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டு வந்தவர். அதன் காரணமாகப் போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுப் புனர்வாழ்வு பெற்றுத் திரும்பியவர்.

தமிழ் மக்களுக்கிடையே எழுச்சிபெற்ற விடுதலைப் போராட்டமானது இனத்துக்கான விடுதலைப் போராட்டம் என்ற மட்டத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. அது சமூக விடுதலை நோக்கியதாக, பெண் விடுதலையை நோக்கியதாகப் பல்பரிமாணம்மிக்க ஒரு போராட்டமாகவே நடைபெற்றது.

தனித்துவமான பண்பாட்டுடன் கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகத்தின் போக்கில் பெண் அடக்கு முறை என்பது காலாதிகாலமாக இருந்தே வந்திருக்கிறது.

அத்தகைய ஆணாதிக்கச் சமூகத்தில்,பெண்களும் ஆண்களுக்குச் சமனான உரித்தைப் பெற்றவர்கள் என்ற பாரதியின் புதுமைப் பெண் சிந்தனைக்கு விடுதலைப் போராட்டமானது செயல் வடிவம் கொடுத்திருந்தது என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள் விடுதலைப் போராட்டத்தில் தம்மையும் இணைத்துக் கொண்டு வீரவீராங்கனைகளாக வீரியம் பெற்றார்கள். எம் சமூகத்தில் தாய் தந்தையர்க்கும் பின்னர் கணவருக்கும் பின்னால் அடங்கி ஒடுங்கி, நாணிக்கோணி வாழ்ந்த எமது பெண்கள் சமர்க்களத்தில் தீரத்துடன் போராடும் வல்லமை பெற்றார்கள்.

சமூகக் கட்டமைப்புகளைத் தலைமையேற்று நடாத்தும் வல்லமை பெற்றார்கள்.

அத்தகைய பெண் தலைமைத்துவத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக சகோதரி தமிழினி அவர்கள் விளங்கியிருக்கின்றார்.

போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் சகோதரி தமிழினி அவர்களின் இழப்புத் தொடர்பாக எமது மக்கள் கொண்டிருக்கின்ற கவலையும் கரிசனையும் அந்தப் பெண் போராட்ட காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறையையும் அவரிடத்தில் காணப்பட்ட தலைமைத்துவப் பண்பையும் பறைசாற்றுவனவாகவே அமைகின்றன.

சகோதரி தமிழினி அவர்கள் புனர்வாழ்வுச் சிறையில் இருந்த காலப்பகுதியில், 2010ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அப்போது, தமிழினி அவர்களை அரச தரப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடுமாறும், அவ்வாறு போட்டியிட்டால் அவருக்கு விடுதலையை வழங்குவதாகவும் அப்போதைய அரசாங்கம் தமிழினியுடன் பேசியதாகவும்,

அந்தப் பேரத்துக்கு சகோதரி தமிழினி அவர்கள் சோரம் போகவில்லை என்பதையும் அறிந்து பெருமைப்பட்டேன்.

இடையறாத இலட்சிய தாகத்தடன் பயணித்த, நெஞ்சுரம்மிக்க தமிழினி அவர்களின் எண்ணமெல்லாம் தமிழ் மக்களின் விடுதலை பற்றியும் தமிழ்ப் பெண்களின் உயர்ச்சி பற்றியதாகவுமே இருந்திருக்கின்றன.

அவரது எண்ணங்கள் ஈடேற இதய சுத்தியோடு நாம் அனைவரும் உழைக்கவேண்டும். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

தமிழினி அவர்கள் ஒரு முன்னாள் போராளி என்ற நிலையில் தானும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடலாம் என்ற நிலையிலும் தமிழினி அவர்களை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்ட அவரது கணவர் பாராட்டுக்குரியவர்.

அந்த முன்னுதாரண புருஷரினதும், தமிழினி அவர்களின் குடும்பத்தினரதும் ஆற்றொணாத் துயரில் நானும் பங்குகொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

thamilini-funeral-1

வீரமும் தீரமும் அறிவும் கொண்ட தமிழ் பெண்களின் சாட்சியாக விளங்கியவர் தமிழினி – சீமான் இரங்கல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு மகளிர் அணிப் பொறுப்பாளராக இருந்த தமிழினி ஞாயிறு அதிகாலை காலமானார். அதையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கை.

தமிழீழ தேசிய ராணுவமான விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளீர் அணியின் அரசியல் பிரிவு பொறுப்பாளாராக இருந்த பெருமதிப்பிற்குரிய தமிழினி என்ற சிவகாமிஜெயக்குமரன் கடந்த 18-10-2015 ஞாயிறு அதிகாலை காலமானார் என்ற செய்தி எம் ஆழ் மனதில் மீளா பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது. தாம் கொண்டிருந்த மண்ணின் விடுதலை என்ற பற்றுறுதியில் இருந்து இறுதிவரை விலகாமல் இருந்த தமிழினி தமிழீழ தாயக விடுதலைப் போரில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் களத்திலும், அரசியல் பிரிவிலும் போராடியதன் அடையாளச்சின்னமாக விளங்குகிறார். இனவிடுதலை, பெண்விடுதலை, சமூகவிடுதலை என்ற புரட்சிக்கர கோட்பாட்டுத் தளங்களில் தாயக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எமது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் வழிகாட்டுதலில் ஆண்களுக்கு இணையாக பல்லாயிரக்கணக்கான பெண்களும் பங்குகொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் செழுமைப்படுத்தினார்கள். அவ்வரிசையில் கடந்த 1991 ஆம் ஆண்டு தேச விடுதலை உணர்வின் பாற் ஈர்க்கப்பட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தமிழினி 2009 மே மாதம் வரை மக்களோடு மக்களாக களத்தில் நின்று தமிழீழ மக்களையும், தாயக விடுதலையையும் தன் உயிருக்கு மேலாக நேசிக்கிற தனது உணர்வினை மெய்ப்பித்தார்.

மக்களையும், மண்ணையும் உயிராக கடைசி வரை நேசித்து வாழ்ந்த தமிழினி மறைவு தமிழ்த் தேசிய இனத்தின் ஈடுசெய்ய முடியா இழப்பு. கடந்த 2009 ஈழப்போரின் முடிவிற்கு பின் தமிழினி சிங்கள பேரினவாத ராணுவத்தினால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு பல்வேறு சித்தரவதைகளுக்கு உள்ளாகி மனதும் உடலும் சுகவீனமாகி, திட்டமிட்ட தவறான சிகிச்சையால் உயிர்கொல்லி புற்றுநோய்க்கு ஆளாகி மறைந்திருப்பது சிங்கள பேரினவாதத்தின் கோர முகத்தை உலகிற்கு அம்பலப் படுத்தி இருக்கிறது. முள்ளிவாய்க்கால் போரினில் பிடிப்பட்ட, சரண் அடைந்த முன்னாள் போராளிகள் பலரும் இப்படியாக மர்மமான முறையில் மரணமடைந்து வருவது ஏற்கனவே எம்மைப் போன்ற தமிழ் அமைப்புகள் இனவாத சிங்கள பேரினவாத அரசின் மீது சுமத்தி வருகிற இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கிறது..

சிங்கள பௌத்த இனவாதிகளின் வன்முறைக்கு எதிராக முக்கியமாக தமிழ்ப்பெண்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புலிகள் கட்டமைத்த மக்கள் ராணுவத்தில் பங்கேற்று களத்தில் நின்ற பெண்களின் வீரத்திற்கும் தீரத்திற்கும் சாட்சியாக இருந்தவர் தமிழினி. வீரமும் தீரமும் மட்டுமல்லாது தனது மிகுந்த அறிவுத்திறனால் அரசியல் பிரிவு மகளிர் அணியில் தலைமை பொறுப்பாளராக உயர்ந்த நன்மதியாளர் தமிழினி. “தமிழினி ஒருபோதும் சிங்கள மக்களிடம் குரோத மனப்பான்மையுடன் இருக்கவில்லை” என்று சிங்கள பத்திரிக்கையாளர்களே பாராட்டும் வண்ணம் அரசியல் பிரிவில் மிகுந்த முதிர்ச்சியோடும் நுண்ணறிவோடும் செயல்பட்டவர்.

நான் ஈழம் சென்றிருந்த காலத்தில் பெருமதிப்பிற்குரிய தமிழினி அவர்களை சந்திக்கிற மகத்தான வாய்ப்பு எனக்கு வாய்த்தது. அச்சந்திப்பில் என் மீது அவர் காட்டிய அன்பும், அக்கறையும் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாதவை. அவருடனான கலந்துரையாடலில் அவர் தமிழக அரசியலையும், உலக அரசியலையும் எந்த அளவிற்கு உள்வாங்கியிருந்தார் என்பதையும், உலக அரசியல் அறிவில் அவர் எத்தகைய நிபுணத்துவம் கொண்டிருந்தார் என்பதையும் நான் அறிந்தேன். ஆயிமாயிரம் மாவீரர்களின் இலட்சியக்கனவான தமிழீழ சோசலிச குடியரசு நாட்டினை உருவாக்குதலில் பெண்களின் கடமை குறித்து தனக்கென தனித்துவமான பார்வையை தமிழினி கொண்டிருந்தார். கனவும், இலட்சிய நோக்கும், புரட்சிக்கர சிந்தனையும், தலைமை மீது அளவுக்கடந்த பற்றுறுதியும் தமிழினி அவர்களை தனித்துவப்படுத்தின.

இறுதிக்காலங்களில் பேரினவாத சிங்களக் கரங்களில் அவர் சிக்குண்டு பட்டப் பாடுகள் அளவற்றவை. மிகச்சிறந்த குண இயல்புகளோடு, சித்தாந்த தெளிவோடு, உலகம் தழுவிய அரசியல் பார்வையோடு விளங்கிய பெருமதிப்பிற்குரிய போராளி தமிழினி சிங்கள பேரினவாதம் மிதித்துப் போட்ட எம் காந்தள் மலர்களில் ஒன்றாக திகழ்கிறார். விடுதலைப் போரில் தமிழ்த்தேசிய இனம் அடைந்த துயர்களில்,இழப்புகளில் ஒன்றாக தமிழினியின் இழப்பும் இருக்கிறது. எந்த இலட்சியத்திற்காக அவர் களத்தில் நின்றாரோ, அந்த இலட்சியம் நிறைவேறுவதற்கு உயிர் உள்ளளவும் உழைப்போம் என அவர் மறைந்த இந்த துயர்ப் பொழுதில் நாம் தமிழர் கட்சி உறுதியேற்கிறது.

பெருமதிப்பிற்குறிய போராளி தமிழினி அவர்களுக்கு எனது புரட்சிகர வீரவணக்கத்தினை நாம் தமிழர் கட்சி சார்பில் செலுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்.
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

**thamizhini
தமிழீழ தேசம் பெருமைகொள் சமூக அரசியற் விடுதலைப் போராளி தமிழினி : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

அனைத்துலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போர்க்களத்திலும் அரசியல், சமூகத் தளங்களிலும் பெரும் சாதனைகளில் நிகழ்த்திய அற்புதமான பெண் ஆளுமைகளில் ஒருவராக தமிழினி அவர்கள் திகழ்ந்திருந்தார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விடுதலை அடைந்த சுதந்திர ஈழத்திருநாட்டில் பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சமத்துவமாக, சமூக நீதிமிக்க சமூகத்தில் வாழவேண்டும் என்ற கனவுடன் தனது வாழ்வை போராட்டத்தில் அர்ப்பணித்த தமழினிக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவரது குடும்பத்தினரதும் உலகத் தமிழ் மக்களதும் பெருந்துயரில் தன்னை இணைத்துக் கொள்கிறது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியின் முழுமையான வடிவம் :

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளினர் அரசியற்துறைப் பொறுப்பாளராக பணியாற்றிய தமிழனி அவர்கள் காலமாகிய சேதிஅறிந்து உலகத் தமிழினம் ஆறாப் பெருந்துயரில் மூழ்கியிருக்கிறது.

விடுதலை அடைந்த சுதந்திர ஈழத்திருநாட்டில் பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சமத்துவமாக, சமூக நீதிமிக்க சமூகத்தில் வாழவேண்டும் என்ற கனவுடன் தனது வாழ்வை போராட்டத்தில் அர்ப்பணித்த தமழினிக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவரது குடும்பத்தினரதும் உலகத் தமிழ் மக்களதும் பெருந்துயரில் தன்னை இணைத்துக் கொள்கிறது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழீழத்தின் பெண் போராளிகள் போர்க்களத்திலும் அரசியல், சமூகத் தளங்களிலும் ஆற்றிய பெரும் சாதனைகள் அனைத்துலகின் கவனத்தையும் ஈர்த்தவை. பலஅற்புதமான பெண் ஆளுமைகளை தமிழீழ விடுதலைப் பேராட்டம் உருவாக்கியருந்தது.

பெண்கள் தொடர்பாகசமூகத்தில் நிலவிய இறுக்கமான மதிப்பீடுகள் காரணமாக பல்வேறு துறைகளிலும் பெண்களால் சாதனைகளை நிலைநிறுத்த முடியும் என்பது நிறுவப்படாத சமூக யதார்த்தம் நிலவியதொரு சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகள் பல்வேறு துறைகளிலும் சாதணைகள் படைக்கும் புதமைப்பெண்களாக உருவெடுத்தனர். சிறப்பான தலைமைத்துவ ஆளுமைகள் உருவாகின.

இவர்களில் ஒருவராக சிறந்த தலைமைத்துவப் பண்புகள் கொண்டதோர் அற்புத ஆளுமையாக தமிழினி அவர்கள் தன்னை நிலைநிறுத்தியவர்.

தமிழீழவிடுதலைப் பேராட்டத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக சரிசமமாகப் பங்குபெறவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த தமிழினி அதற்காக மிகவும் கடுமையாக உழைத்தவர்.

சமூகத்தில் நிலவிய பல்வேறு வகையான பிற்போக்குத்தனங்களுக்கும் எதிராகவும் குரல் கொடுத்த தமிழினி அவர்கள், ஈழத்தமிழர் தாயகத்தில் தேசிய விடுதலையும் சமூக விடுதலையும் பெண்விடுதலையும் அமையப் போகும் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசின் ஊடாக வென்றெடுக்கப்படவேண்டும் என்ற தெளிவான சிந்தனையுடன் போராட்டக் களத்தில் நின்றவர்.

தனது 18 வருட பேராட்ட வாழ்வின் ஊடாக ஒரு பண்பட்ட, பக்குவமான போராளியாவும் தலைவியாகவும் உயர்ந்து நின்ற தமிழினி அவர்கள், தான் சந்திக்கும் எவரையும் தனது கருத்துக்களால் கவர்ந்து கொண்டவர்.

மிகவும் தெளிவாக, நிதானமாக நட்புக் கலந்த முறையில் அவர் உரையாடும் பாங்கினால் இவர் தலைமை தாங்கிய தமிழீழ மகளிர் அரசியற் துறைக்கு வலுச் சேர்த்தவர்.

சந்தித்த சிங்கள மற்றும் அனைத்துலகத்தைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்கள், ஊடாகவியலாளர்கள், இராஜதந்திரிகள் அனைவரதும் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டவராக விளங்கியவர்.

மே 2009ம் ஆண்டு மே மாதத்தில் தமிழின அழிப்பின் ஊடாக சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த வேளை சிங்களத்தின் போர்க் கைதியாகிப் போக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழினியும், ஏனைய ஆயிரக்கணக்கான போராளிகளும் உள்ளாகிக் கொள்கின்றனர்.

சுதந்திர வேட்கையுடன் நிமிர்ந்து நின்ற எமது போராளிகள் இத் தருணத்தில் பட்டிருக்கக்கூடிய வேதனைகள் எழுத்துக்களால் முழமையாக வடிக்க முடியாதவையாகவே இருக்கும்.

தமது தோழர்களதும் மக்களதும் குருதியாலும் ஈகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசம் சிங்களப் படையினரால் சிதிலமாக்கப்பட்டு, மக்கள் அனைவருமே தமது மண்ணில் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு துன்புறுவுதைக் காணும் எந்தப் போராளியினால்தான் அதனை சகித்துக் கொள்ளமுடியும்?

தமிழினியின் நிலையும் இத்தகையதாகத்தான் இருந்தது.

சிங்களப் படையினர் தம்மிடம் போர்க்கைதிகளாகிய போராளிகளை சித்தரவதை செய்து துன்புறத்திய விதம் குறித்து எமக்குக் கிடைக்கும் தகவல்கள் எம்மை ஒருபுறம் தாளாத வேதனைக்கும் மறுபுறும் ஆறாத அறச் சீற்றதத்துக்கும் உள்ளாக்கியிருக்கின்றன.

தமிழினியும் மிகப் பெரும் கொடுமைகளை சந்தித்தே சிங்களத்தின் பிடியில் இருந்து வெளிவர வேண்டியிருந்தது.

பின்னர் குடும்ப வாழ்வில் இணைந்து கொண்ட தமிழினி தனது நினைவுகளையும் உணர்வுகளையும் கவிதைகளாக, கதைகளாக வெளிப்படுத்தும் ஒரு படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தினார்.

போராட்டக்களத்தில் அவரது பங்களிப்பும் சிங்களத்தின் சிறையில் பட்ட துயரங்களும் இணைந்த நிலையில் வரலாற்றில் நின்று நிலைக்கக்கூடிய நல்ல பல ஆக்கங்களை படைக்கக்கூடிய ஆற்றல் அவருக்குஉண்டு என்பதனை அவரது படைப்பக்கள் வெளிப்படுத்தின.

அவர் இன்னும் சிலகாலம் உயிருடன் இருந்திருப்பாராயின் அவர் காலத்தால் அழியாதவொரு படைப்பாளியாகவும் பெண்களதும் குழந்தைகளது நல்வாழ்வுக்கும் உதவுபவராகவும், சமூகநீதிமிக்க சமூகம் ஒன்றைக் கட்டிஎழுப்புவதற்கான ஒரு சமூகப் போராளியாகவும் தன்னை நிலைநிறுத்தியிருப்பார் என்றெ நம்புகிறோம்.

தமிழினிக்கு தாயக,புலம்பெயர் மற்றும் உலகத்தமிழ் மக்கள் செலுத்திய இறுதிவணக்கம், மக்களுக்காக உண்மையாகப் போராடிய பேராளிகள் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியமாக இருக்கிறது. மக்கள் மனங்களில் இருக்கும் தமிழினி போன்ற போராளிகளின் நினைவுகள்
இப்போராளிகளின் அரசியற்கனவுக்கு வலுச்சேர்ப்பதா அமையும் என்பது திண்ணம்.

தமிழினி அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரியாதை கலந்த இறுதி வணக்கம் !

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

**
விதைக்கப்பட்டது தமிழினியின் வித்துடல்

புற்றுநோயால் சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) யின் வித்துடல் இன்று பிற்பகல் பரந்தன், கோரக்கன்கட்டு மயானத்தில் விதைக்கப்பட்டது.

முன்னதாக, பரந்தன், சிவபுரத்தில் உள்ள தமிழினியின் இல்லத்தில், பெருமளவு பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இல்லத்தில் நடந்த இறுதிக்கிரியைகளை அடுத்து, இறுதி வணக்கக் கூட்டம் எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தலைமையில் இடம்பெற்றது.

thamilini_last_003 thamilini_last_005 thamilini_last_006 thamilini_last_007 thamilini_last_008 thamilini_last_009  thamilini-funeral-3

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வடமாகாண முதலமைச்சர் சார்பில் அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாண அமைச்சர் குருகுலராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதையடுத்து,தமிழினியின் வித்துடன், பேரணியாக கோரக்கன்கட்டு மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு அவரது கணவன், இறுதிக் கிரியைகளை மேற்கொண்ட பின்னர், வித்துடல் விதைக்கப்பட்டது.

தமிழினியைத் தொடர்ந்து மற்றொரு முன்னாள் பெண் போராளியும் மரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையில் முள்ளிவாய்க்கால் மனித பேரவலமான இன அழிப்பு நடைபெற்ற நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு மகளிர்க்கு பொறுப்பாக இருந்த மருத்துவ போராளி திருமதி சசிதரன் தாருஜா (29) இன்று மர்மமான முறையில் சாவடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மருதமடு 1 ம் வட்டாரம் கைவேலியை சேர்ந்த இவர் முன்னாள் போராளி ஒருவரின் மனைவியும் 2 பிள்ளைகளின் தாயாரும் ஆவர்.

இன அழிப்பு போரின் போது திருமதி தாருஜா சசிதரன் விழுப்புண் அடைந்து உடல் முழுவதும் காயங்களுடன் வாழ்ந்து வந்தார் . குறிப்பாக இரு கண்களும் பார்வை இழந்து இருந்தார். படுகையில் படுத்திருந்த வேளை மரணம் அடைந்துள்ளார்.

தமிழினி மறைவுக்கு இரங்கல்கள்

tamilini 5“உள்ளிருந்து குமுறும் நெருப்பு ”

தமிழை உரைத்த இனி
வருவாளா மீண்டும் இனி
அரசியல் புரட்சி மொழி
இன்று கொடுத்தோமே பலி

மௌனத்தில் புதைத்தாள்
மரண வதைகளை அன்று
மௌனியாய் துயில்கிறாள்

வீரமகள் பேழையில் இன்று
காடையரின் கைக்கூலிகளே வாரும்
காவுகொடுத்த உயிரின் கதை கேளும்
மாற்றானுக்கு மாலையிடும் மடையர்களே வாரும்
மங்கையை இழந்ததன் பின்னணியைப் பாரும்

மரணத்தின் பின் முழக்கமிடும் மகான்களே
அரவணைக்கா உம் அனுதாபம்
அந்தியேட்டி பதாதையிலும்
அனைத்துலக செய்தியிலும் எதற்கு ..?

தலைமைப் போராளியையே மறந்த
தமிழ்பேசும் தனவான்களே ..
தாயப்பூமியில் இன்னும் எத்தனையோ
தமிழினியர் தவிக்கிறாரையா ..!

கோடி விலை கொடுத்து நயன்தாரவையும்
கொட்டகை மேளமிட்டு நமீதாவையும்
கூப்பி அழைக்கும் பறந்துபோன பறவைகளே
பார்வையை கொஞ்சம் திருப்பிப் பாருங்கள்

வெள்ளையனுக்கு பிறந்தவன் என்ற எண்ணத்தில்
வீராப்பு மொழியுரைக்கும் வித்தகர்களே

எதிரியுடன் கைநனைக்கும் எம்மினப் புறாக்களே
இவளின் கதையையும் கருத்தினிலே பாரும்
துயிலட்டும் தீபமொன்று
எரியட்டும் மனதில் என்றும்
தீபங்களைத் தானே அழிக்கலாம்
தமிழனின் தியாகம் தீயாய் வாழும்

————–” வன்னியூர் செந்தூரன் “——thamilini (1)

தமிழினி மறைவுக்கு வைகோ இரங்கல்

இலங்கைத் தீவில் தமிழ் ஈழத் தாயக விடுதலைக்காக முழுமையான அர்ப்பணிப்போடு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயலாற்றி வந்த சகோதரி தமிழினி நேற்று உயிர் நீத்தார் என்ற செய்தி என்னை துக்கத்தில் ஆழ்த்தியது.

சிறந்த மதிநுட்பமும், அறிவாற்றலும், உயர்ந்த பண்புகளும் கொண்ட இத்தமிழ்மகள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் முழு நம்பிக்கைக்கு உரியவராக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயலாற்றி வந்தார்.

தமிழ் ஈழத்தின் தொன்மை வரலாறு, சிங்களரின் கொடிய அடக்குமுறை, அனைத்துலக நாடுகளின் அணுகுமுறை அனைத்தையும் தேர்ந்து தெளிந்திருந்த இந்த வீராங்கணை இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றினார். 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலை காலகட்டத்தில் சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, 2013 வரை சிறப்புத் தடுப்பு சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. தடுப்பு முகாமில் சொல்ல இயலாத சித்ரவதைகளுக்கு ஆளாகியிருக்க வாய்ப்பு இருக்கிறது. உயிரை விட மானத்தைப் பெரிதாகப் போற்றுகிற அந்த வீர தமிழ் நங்கைகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பொதுவாக வெளியிடுவதில்லை.
நெடுதுயர்ந்த கம்பீரமான தோற்றமும், இனிய பண்புகளும் நிறைந்த வீராங்கணை தமிழினியின் நல்லடக்கம் நாளை நடைபெறுவதாக அறிகிறேன். வீர மங்கையர் குலத்தின் மணிவிளக்காம் தமிழினி மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.

***thamilini

காவியமொன்று காற்றடங்கிப்போனது.

சுதந்திரப்பறவை
சிறகுடைந்து
சிறைக்குள் வீழ்ந்துபோனது.

புனர்வாழ்வு பூதத்தின்
இனவாத வாயுக்குள்
குதறுண்டுபோனது.

குற்றுயிராய்
சிறைமீண்டதும்
கொடியபுற்றுநோய்
கொண்டுபோனது.

பதினெட்டு ஆண்டுகள்
பரணி பாடிய
பறையொன்று
ஒலியிழந்து போனது.

பெண்ணியம் பேசிய
பெருமேதையொன்று
மண்ணின் பசியோடு
விண்ணுலகம்போனது.

விடுதலையின்
கண்ணியம் காத்த
கண்ணகியொன்று
கண்ணகன்றுபோனது.

கழப்பின்றி
களப்பணியாற்றிய
காவியமொன்று
காற்றடங்கிப்போனது.

ஜயகோ
நேற்றுவரை
மூசியடித்த
புயலொன்று
புகழுடலாய்போனது.
-தூயவன்-thamilini_12

தமிழினி …..

நான் தமிழீழத்தில் நின்ற காலங்களில் அதிகமாக சந்தித்து உரையாடிய, கருத்துக்களை பகிர்ந்துகொண்ட முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவர் தங்கை தமிழினி. அரசியல், கலை இலக்கியம், பெண்விடுதலை, தமிழீழ விடுதலைப் போராட்டம், அண்ணன் பிரபாகரன் அவர்களின் ஆளுமைத் திறன், விடுதலைப் போராடக் காலத்தில் போராளிகளுக்குள் மலரும் காதல், இயக்கம் அதைக் கையாளும் விதம், பெண் போராளிகளுக்கு பெண்ணியம் சார்ந்த வகுப்புகள் நடத்தப்படவேண்டிய தேவை குறித்து பல நாட்கள் பலமணிநேரங்கள் கலந்துரையாடியிருக்கிறோம். என்னை அண்ணா… என்று அன்பொழுக அழைக்கும் அன்புத் தங்கை அவர். என்னையும் என் ஓவியங்களையும் ஆழமாக உள்வாங்கியவர். மிகத் தெளிவாக கருத்துகளை வெளிப்படுத்தும் அற்புதமான பேச்சாளர். மிக ஆழமான வாசகர். ரசிகர். எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் உடையவர்….தமிழீழம் கிளிநொச்சியில் நடைபெற்ற என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி, மற்றும் புயலின் நிறங்கள் ஓவிய நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றினார். வேறுசில நிகழ்வுகளிலும் நாங்கள் இருவரும் கலந்துகொண்டிருக்கிறோம்.

முள்ளிவைக்காளுக்குப் பிறகு அவர் சரணடைந்த செய்தியறிந்தேன். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அவர் அனுபவித்து வரும் சித்திரவதைகள் குறித்த செய்திகள் கசிந்து என்னை வந்தடைந்த போது எனக்கு மிகவும் வேதனையாகவும் துன்பம் தருவதாகவும் இருந்தன. அந் நேரத்தில் எல்லாம் போராளிக்கே உரிய கம்பீரமான அவரின் தோற்றப் பொலிவு என் கண்களில் நிழலாடும்…..

சில மாதங்களுக்கு முன் என்னோடு தொடர்புக்கு வந்தார். நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. வணக்கம் அண்ணா, நலமேயுள்ளேன். இலங்கையில்தான் இருக்கிறேன். உங்களின் தொடர்பு கிடைத்தையிட்டு மிகவும் மகிழ்ச்சி. உங்களின் ஓவியப்பணிகள் தொடர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். என்று செய்தியும் அனுப்பினார்.
அவர் எழுதிய சில கவிதைகள் மற்றும் சிறுகதைகளை படித்து மகிழ்ந்தேன். அவர் உடல் மற்றும் மனக் காயங்களிலிருந்து மீண்டுவிட்டார் என்றே எண்ணியிருந்தேன்… ஆனால் இவ்வளவு விரைவாக நம்மை விட்டுச் செல்வார் என்று எண்ணவில்லை.

தமிழினி… தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எண்ணிலடங்கா வரலாற்றுச் சுவடுகளில்…
நீங்கா இடம் பிடித்திருக்கிறீர்கள். என்னோடு நீங்கள் பேசியவை என் காதுகளில் என்றும் ஒலித்துக்கொண்டே….இருக்கும். நாம் அமர்ந்து பேசிய அந்த இடங்களும் உங்கள் உடல்மொழியும் என் கண்களில் என்றும் நிழலாடிக் கொண்டேயிருக்கும்.

தங்கையே….தமிழினியே….சென்று வா….
உனக்கு என் வீர வணக்கம்.

ஓவியர் புகழேந்தி.
19.10.2015.

**thamilini 3

தமது இனத்தின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்தார் தமிழினி! – சிங்கள ஊடகவியலாளர் புகழாரம்

விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினிக்கு சிங்கள ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன புகழாரம் சூட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினியின் மறைவு குறித்து நாடுகடத்தப்பட்டுள்ள சிங்கள ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தனவின் எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரை கொழும்பு நியூஸ்டுடே இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அஞ்சலிக்கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழினி ஒருபோதும் சிங்கள மக்கள் தொடர்பில் குரோத மனப்பான்மையுடன் இருக்கவில்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்தது.

தமது இனத்தின் விடுதலைக்காக அவர் தன்னை அர்ப்பணித்திருந்தார். அதே நேரம் பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் அவர் எதுவித விட்டுக் கொடுப்புகளுக்கும் தயார் இல்லை என்பதையும் உணர்த்தியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற வகையில் அவர் கைது செய்யப்பட்டதே தவறானது. எனினும் அதன் பின்னர் நடைபெற்ற சட்ட இழுத்தடிப்புகள் மற்றும் தடுத்துவைப்பின் கொடூரங்கள் காரணமாக அவர் மனதளவில் பாதிக்கப்பட்டார். அதன் காரணமாகவே மரணம் அவரை சீக்கிரமாக அழைத்துக் கொண்டுவிட்டது.

தென்னிலங்கையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள சிங்களப் பெண்கள் குறித்தும் தமிழினியிடம் விசாலமான பார்வை இருந்தது. சுருக்கமாகச் சொல்வதானால் சிங்களப் பெண்களின் மனச்சாட்சிக்கான தமிழ்க்குரலாக அவரை அடையாளப்படுத்தலாம்.

தமிழினியின் மறைவு எங்கள் சகோதரியின் மறைவாகவே எங்களால் உணரப்படுகின்றது என்றும் மஞ்சுள வெடிவர்த்தன தனது இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.thamizhini

*
தமிழீழப் பெண்களின் அரசியல் ஆளுமையின் வடிவமாகத் திகழ்ந்தவர் வீரப்புதல்வி தமிழினி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழினி அவர்கள் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளமை எம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

சுப்பிரமணியம் சிவகாமி என்கிற தமிழினி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1991 ஆம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்டது முதல் தனது பல்துறைசார் திறன்மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளார். பேச்சாற்றல், படைப்புத்திறன் என்பவற்றுடன் சிறந்த அரசியல் அறிவுமிக்கவராகவும் விளங்கிய தமிழினி அவர்கள் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் என்கிற நிலையில் இருந்து ஆற்றிய பணிகள் ஏராளம்.

தமிழீழப் பெண்களை அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்களாக மாற்றியதில் தமிழினியின் பங்கு அளப்பரியது. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ‘பிரிகேடியர்’ சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் இணைந்து தாயகத்தில் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டுவந்த சமகாலத்தில் வெளிநாடுகளில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளிலும் பங்கேற்றிருந்தார்.

சிங்கள பௌத்த பேரினவாத அரசால் 2009 இல் தமிழீழ தேசத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்புப் போரின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். சிங்கள கொடுஞ்சிறையில் சொல்லொனாத் துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த தமிழினி அவர்கள் புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்டு 2013 இல் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சிறை வாழ்வில் அனுபவித்த கொடுமைகள் யாவும் புனர்வாழ்வு காலத்திலும் தொடர்கதையாகிய நிலையில் தளராத மன உறுதியுடன் இயல்பு வாழ்வில் அடியெடுத்துவைத்த தமிழினி அவர்களது வாழ்க்கைப் பயணம் இன்று அதிகாலையுடன் முடிந்துபோனமை பெரும் துயரமாகும்.

தமிழீழப் பெண்களின் அரசியல் ஆளுமையின் வடிவமாகத் திகழ்ந்த தமிழினி அவர்களது இழப்பு ஈடுசெய்ய முடியாததென்றாலும் அவர் உயிர் மூச்சாய் கொண்ட இலட்சிய தாகம் உயிரோடுதான் உள்ளது. அந்த இலட்சிய தாகத்தை ஈடேற்றுவது எங்கள் ஒவ்வொருவரது கடமையாகும்.

தமிழினி அவர்களுக்கு உலகத்தமிழர்கள் சார்பில் எமது அகவணக்கத்தை செலுத்துவதோடு அவரது இழப்பால் துயருற்று வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

***thamizhini 2
எங்கள் தமிழினிக்கு இறுதிப் பரணி…….!

எங்கள் தமிழினி போய்விட்டாள்
கரிய உருவமும்
காந்தம் கவ்விய பேச்சும்
நீள் துயிலில் நெடும்பயணத்துக்கு தயார்

காலம்
எங்கள் வல்லமை யாவற்றையும்
கபளீகரம் செய்துவிட்டதுபோல
காய்ச்சி விழும் ஈயம் போல
கண்ணீர் சுடசுட விழுகின்றது
பெண்ணின் உண்மைப்பேரழகை
எங்கள் தெருக்களில் பரவித்திரிந்த
கண்ணுக்கும் கருத்துக்கும் அழகான
புறநானூறொன்று விண்ணுலகம் போயிற்று

சிவகாமி
அவளின் பள்ளிப்பருவத்தில்
எங்கள் கிளிநொச்சி மருநிலத்தில்
பொங்கித்திருந்த புல்லரிக்கும் பேச்சை
அள்ளிப்பருகியிருந்தோம் நாம்.
பரந்தனின் உயர்தரம் கற்கின்றபோது
அவளுக்குள் இருந்து நெருப்பொன்று
எட்டிப்பார்ப்பாதை கண்ணுற்று
சிலிர்த்தது எங்கள் மண்
எங்கள் தோழிகளுக்கு நெஞ்சு சிலிர்க்கும்படி
ஒரு வல்லவள் ஒருவள் வாய்க்கின்றாள் என
எங்கள் புளுதித்தெருக்களில்
பூகம்பக்குஞ்சுகள் பொரிப்பதற்கு அடைகாத்தன.

பெண் கண்ணாடிச்சந்திரன் என
செல்லமாய் நாமழைத்த
மகளிர் அணியின் மலை சரிந்தது.
தொண்ணூறில் ஜெயந்திநகரில்
செல்வம் மாமா
மண்ணின் தேவைபற்றி
புரட்சி மாரி பொழிந்தார்.

சிலிர்த்து எழுந்தாள் சிவகாமி
அதன் பிறகு வெள்ளைச்சீருடையில்
அவளை பல மாதங்களாய் காணோம்.
பின்னொரு நாளில் அவளின்
புதிய பிரசவத்தை பார்த்தோம்.
நிலமதிரப் பிறந்த நெற்றித்திலகமென
உலகறிய நம் தமிழினி நடந்தாள்.

எங்கள் தங்கச்சிகளுக்கு
தலைவியென அக்காவாய் இருந்து
அகன்ற வானத்தை கொடுக்க
பகலிரவாய்த் தேயந்தாள்.

மண்ணைக்காக்கவென இல்லங்களை விட்டு
எழுந்துவந்த சூரியப்புதல்விகளுக்கு
அகல்விளக்காய் அன்னையாய்
பரந்திருந்திருந்தாள் எம் பெண்ணரசி.
வெண்கலப்பானையில் சுண்டிவிட எழும்
கலக்கமற்ற முரசு ஒன்று
அவள் நாவிலே நிரந்தரமாய் இருந்தது.

தமிழினி இருக்கின்றான் என தமிழ் மகிழ்ந்திருந்தது.
புதுமைப்பெண்ணாருத்தியின்
பூகம்ப வார்த்தைகள் கண்டு தலைமகன்
அடிக்கடி நிமிர்ந்திருக்கின்றான்.
தமிழினி போய்விட்டாள்

தலைமகளே!
பாலா அண்ணனும் தமிழ்ச்செல்வனும்
உன் தங்கைகளும் இருக்கிற இடத்தில்
ஆயிரம் பெருமூச்சுக்களோடும்
வார்த்தைகளில் சொல்ல முடியா
நீயடைந்த வதைகளோடும்
இளைப்பாற ஆரம்பித்திருக்கிறாயா
எங்கள் மண்ணின் கங்கையே காவிரியே
வாகையே வளர்ந்து சென்ற இமயமே!

போருக்குப்பிறகு உன்னை ஊரில் காணவில்லை
உன்னை ஈன்றவளிடம் அடிக்கடி குசலம் விசாரித்தோம்.
சிறைகளில் நீயிருந்த தவங்களை
தாய் வந்து கண்ணீரோடு இதயங்களில் ஊற்றினாள்.
அக்கா பாவம் என்று

உன்னை பெற்றெடுத்தவள் சொல்கின்றபோது
அதன் பின்னிருந்த ஆயிரம் அர்த்தங்களை
உள்ளத்தில் புதைத்து உக்கினோம்.
உன் வேதனைகளுக்கு சேலை கட்டி
உன் வேட்கைகளை ஒப்பனை பூசி மறைத்து

மனிதகுல வேடனும் அவன் கூட்டங்களும்
மணவறையில் ஒரு பெண்ணுக்கு தோழியாய்
உன்னை இருத்தினாலும்
எங்கள் பெருமைக்குரிய பெண்ணே!

எங்கள் கண்ணுக்குள் நிற்பது
களத்தில் நின்ற தமிழினிதான்!
உன் வண்ணங்கள் எது என்பது
எங்கள் வாசலுக்குத்தான் தெரியும்
உன் வார்த்தைகள் எது என்பது
ஈழக்காற்றின் இதயத்துக்குத்தான் தெரியும்.
உன்னை யாரும் வென்றுவிடவில்லை.

மீண்டும் மஞ்சங்களை நோக்கி மட்டும்
பெண்கள் சாய்க்கப்படும் நிர்ப்பந்தங்கள்
இம்மண்ணில் முளைவிடுகையில்
நீ சென்றுவிடுதல் உசிதமென
சிந்தித்தாயோ என்னவோ!

இறுதி வேட்டுக்களொடு
சபதமெடுக்கும் உன் தோழிகள் முன்னே
விதைகின்ற உன் சந்தணமேனியை
வெறும் பாடையேல் ஏற்றி
வெறும் பட்டாசுகள் கொழுத்தி
இடுகாட்டில் எரிக்கிற
இதயம் கனக்கும் நாளில் நிற்கின்றோம்.

உன் வாசம் எப்பொழுதும் மண் வாசமாய் இருந்தது.
இன்றுவரையும் உன் வாழ்வும் வீடும்
ஏழ்மையின் அடையாளமாய் இருந்தது
அது விடுதலைப்போராளிக்கு
தங்க விருதுபோன்றது.
அப்போதும் இப்பொழுதும்
இறுதிவரையும் தமிழினிக்காக காத்திருப்பதாக
உன் அம்மா இருந்தாள்.

மாலதி சோதியா நளாயினி துர்க்கா
விதுசா அங்கயற்கண்ணி……
இம்மண் ஆரத்தழுவிய வீரத்தங்கைகளோடு
நீ மகிழ்கின்ற நாட்களா இது.
என் உடன் பிறந்த தங்கை இன்மொழியும்
அங்கேதான் இருக்கின்றாள்
இந்த அண்ணன் நலம்விரித்ததாய் சொல்லிவிடும்!

கடலென திரளத்தவிக்கும் மண்ணில்
நீ தனியே துயில்கிறாய்
காற்றென உன்னை பற்றி
பேசத்துடிக்கும் ஊமைகள் மத்தியில்
நெடும்பயணம்போகிறாய்
தேவாரம் திருவாசகத்தோடு மட்டும்
தமிழினி எங்கள் தலைவிக்கு
இறுதி விடைகொடுக்கவோ!

அவன் தீரத்தை வரித்து
அவள் வீரத்தை பாடி விடையளிக்க
இதயச்சிறைகளை உடைக்கவோ!
பட்டுச்சேலையுடுத்தி அனுப்பும்
பதுமையா இவள்
பட்டொளி வீசிபறக்கும்
எங்கள் பரம்பரையின் வீரக்கொடி போர்த்தியல்லவா
இந்த பூகம்பத்தை பூமியில் விதைக்கவேண்டும்!

எங்காத்தாள் என்று சொல்லி
எங்கள் பரம்பரை தமிழினி என்ற பெயரை
தலையில் வைத்துக்கொண்டாட
இறுதி வணக்கத்தை செய்ய முடியாத
சாபம் தமிழன் எனக்கு!

எங்கள் புழுதி வீதிகளில்
புதியவளாய் பிறந்து பெருமை தந்து
மண்ணுக்காய் தேய்ந்து
சொல்லிமாளா வதை சுமந்து
எமை பிரிந்து செல்லும்
கறுத்த மல்லிகையே கற்பகமே
கஸ்தூரியே காந்தப்பேச்சே!
விடை தந்தோம் எங்கள் விழியின் உறங்கும் நெருப்பே!

–பொன் காந்தன்cwdr_thamilini_1
தேசியக் கொடியோடு பயணிக்க வேண்டியவள்…
இன்று தனிமையோடு போகிறாள்!!!!

அடிமைப்பட்டுக் கிடந்த
தமிழர் தேசத்தில்
அடுப்பூதும் பெண்கள் கையிலும்…
ஆயுதம் ஏநத வைத்த
தலைவன் வழியில்…
அடிமை விலங்கினை
உடைத்தெறியவென
பூக்களும்….
போர்களம் போனவர்களில்
நீயும் ஒருத்தி..!

வலி சுமந்த
வீர மங்கையான நீ….
போர்க்களத்தில்….
வரி சுமந்த
புலியாகிப் புயலானாய்.!!
அரசியல் சாணக்கியத்திலும்
தென்றலாய்… பூவாய்…
உலா வந்தாய்..!!

இன்றோ…
நீ இறந்தநாள் என…
அனைத்துத் தமிழரும்
தமிழர் ஊடகங்களும்
கண்ணீர் அஞ்சலியோடு
அழுது தீர்க்கின்றனர்..!!!

ஆனாலும்…..
உனது சரித்திரம் அப்படியல்ல…

தலைவன் நிழலில்…
தலைவனின் பார்வையில்…
தளபதிகள் போராளிகளோடு
மக்கள் கடலில் சங்கமித்து
வானலைகளில்
விடுதலைக் கீதங்கள்
இசைக்கப்பட்டு…
தேசமெங்கும்
மஞ்சள் சிகப்புக் கொடிகள்
அலங்கரிக்க…
தோரணங்கள் தொங்க விடப்பட்ட
வீதிகளில் – தமிழீழ
தேசியக் கொடி போர்த்தப்பட்ட
உன் புனித
வித்துடல் பயணிக்க…

தெருவெல்லாம் காத்திருக்கும்
குழந்தைகள் முதல்
முதியவர்கள் வரை
தம் உறவொன்று
வீரமரணம் எய்தியதாக…
உன் புனித வித்துடலை
கண்ணீரோடு
மலர் மாலைகள் சாத்தி
வணங்கிக் கொள்ள…

தமிழீழ தாகத்தினைத் தாங்கி
தமிழர்களின்…
நினைவுகளைச் சுமந்து
“புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம்” என
துயிலும் இல்லத்தில்
இராணுவ மரியாதையோடு
வீரச்சாவாய்….
விதைக்கப்பட்டிருக்க வேண்டிய
உன் புனித வித்துடல்,

இன்றோ….
சாதாரண சாவாய்…
எதுவமற்று
வெறும் சடங்குகளோடு
தீயினில் சங்கமித்து
வெறும் சாம்பலாகிப் போனதே.!!!

வீர வரலாறாக…
வீர வணக்கத்தோடு…
உயர் பதவி நிலையோடு…
கல்வெட்டுகளிலும்
சரித்திரப் பக்கங்களிலும்
பதிக்க வேண்டிய உன்னை…

இன்றோ….
சூனியத்தில் இருந்து
சாபங்களை வேண்டி
வெறும் கண்ணீர்
அஞ்சலிகளோடு
கோழைகளாக…..
கையாலாகாத நிலையில்
வெட்கித்து நின்று – வெறும்
அஞ்சலி மட்டுமே செய்து
கண்ணீரோடு கதறுகின்றோம்.!!!

வீரச்சாவாய்…
வீர வரலாறுகளுடன்
விதைக்கப்பட வேண்டிய
உன் புனித வித்துடல்…

இன்று…

தீயினில் சங்கமாகி
சாம்பலாகிப் போனாலும்…
தமிழர்களாகிய நாம்
நெஞ்சமெல்லாம் சுமந்து
உனக்கான கல்லறை அமைத்து
வீர வரலாறுகளாய்….
உன் வரலாற்றுப் பக்கங்களையும்
உன் நினைவுகளையும்
எழுதி… எழுதியே…
வீரவணக்கம் செலுத்துவோம்!!!!

கவியாக்கம்:- வல்வை அகலினியன்.

**TAMILINI-6

உறவுக்கூடுகள் கலைந்து போனது!

ஈழத்தெருக்களில்
முழங்கிய உன் குரல்
அடங்கிப்போய் அமைதியாய்
கிடக்கின்றது.
உறவுக்கூடுகள்
கலைந்து போனதால்…

கொடிய நோய் வந்த
செய்தி எமக்கு தெரியாமல்
உரிமை சிறகொடிந்த
தோழிகளாய் நாம்
தொலைந்து
தொலை தூரமாகிப் போனோம்.!!

நேற்றைய காற்று
சாவு செய்தியை
காவி வந்தது.!!

எம் இனம் எங்கனும்
கலகலப்பிழந்தது
ஏற்க மறுத்தது மனது.!!
ஏற்றுக்கொண்டது நியதி

ஈழப்பெண்களின் வீரம்சொல்லி
நீ பாடிய தெருக்களில்
உன் தீரம் சொல்லி
கூவிட முடியா
வாயடைத்து நிற்கின்றோம்

உலகத்தமிழ் இனமே
ஊமையாய் அழுகின்றது
உண்மைகள் தெரியாது..!!

கவியாக்கம்:- மிதயா கானாவி

Up ↑