Search

Eelamaravar

Eelamaravar

Month

February 2015

எழுச்சிப் பாடகர் குட்டிக்கண்ணன்

Singer Kuddikannanகுட்டிக்கண்ணா போய் வா…!

குட்டிக்கண்ணன் அவரது தாய்மண் திருகோணமலை. 1990ல் ஸ்ரீலங்கா படையினரின் தாக்குதல்கள் மற்றும் தமிழினச்சுத்திகரிப்பால் அவன் குடும்பம் இடம்பெயர்ந்து வன்னிக்கு வருகின்றது.

தாயின் அன்பும் அரவணைப்பும் இவனுக்கு கலைகளை ஊக்கப்படுத்தி இவன் கிராமத்தில் ஓர் அரங்கத் திறப்பில் முதல் பாடலை பாடுகிறான்.

இவனது தாய் அன்று ஓர் பாடலை தேர்வாக்கி கொடுக்கிறாள். இவனது குரலில் தமிழீழத்தில் ஒலித்த முதல் பாடல்……………

ஐந்தடி கூட்டுக்குள்ளே
ஐம்பது பேரை போட்டடைத்தான்
அம்மா என்று சத்தமிட்டால்
அடியும் உதையும் தாராதவன்.

இது இவனை தமிழீழத்தில் ஓர் கலைஞனாக (பாடகனாக) அறிமுகம் செய்கின்றது.

இவன் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் 6ம் தரம் (வகுப்பில்) கல்விகற்றும் தேசத்திற்காக உழைக்க 11 வயது அளவில் அவன் விடுதலைப்புலிகளின் கொள்கைமுன்னெடுப்புப்பிரிவு வீதி நாடகக்குழுவில் இணைந்து பாடகனாகவும் நடிகனாகவும் மாறினான். அதில் சிறுவனான அவனின் குரலில் வந்த தெருவழிநாடகப்பாடல்கள் மக்கள் உள்ளங்களில் உணர்வேற்றின.

அவனது குடும்பம் வறிய குடும்பம். மிக வறியநிலையில் வற்றாப்பளை கேப்பாபுலவில் வாழ்ந்தது. அந்த நிலையில் அவன் நாடகங்களில், பாடகனாகவும் நடிகனாகவும் இருந்தான். சிறுவனின் குரல் எழுச்சியாக இருந்தது. இசைப்பாடல்களை கொள்கை முன்னெடுப்புப்பிரிவு தொகுதிகளாக வெளியிட்டபோது தெருவழி அரங்குகளில் அவன் பாடிய பாடல்களும் புதிய பாடல்களும் இடம்பிடித்தன. இசையின் நுணுக்கங்கள் இல்லாத போதும் மக்களின் உள்ளங்களில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் எழுச்சியாகப்பாடியது அவனின் வெற்றி. அவன் கண்ணன் தமிழீழத்தில் பல கண்ணன்கள் இசையுலகில் இருக்க இவன் குட்டிக்கண்ணன் என்று பெயர்பெற்றான். அவனின் சிறுவன் குரல் வளம் இருக்கும் வரை சிறுவனாக பாடினான். ஆடினான் மக்கள் மனங்களை கொள்ளை கொண்டான்.

இன்றும் ஓர் தனித்துவமான இடங்களின் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை (விடுதலை விரும்பிகள்) இவன் பாடல்.

இவனது சங்கிதம் கேள்வி ஞானம் மட்டுமன்றி முறையாக சங்கிதத்தை சங்கீத பூசனம் பாலசிங்கம் ஆசிரியரிடம் கற்று அது இவனது வளர்ச்சிக்கு ஓர் அங்கமாக திகழ்ந்தது என்பதை யாரும் மறக்க முடியாதது.

தேசத்தின் விடியலின் கனவுகள் சுமந்து இவன் நடித்த தெருவழி நாடகங்கள் இன்றும் மக்கள் மனங்களை விட்டு அகலாத அந்த நாடகங்கள் இவன் திறனை உரைத்து வரலாற்று ஏட்டில் பதிந்துகொள்ளும்.

அவைகள்……………..

இரும்புத்திரை,
ஒளி பிறந்தது,
கூடுகலைந்த மேகங்கள்,
வீரம் விளைந்த பூமி

ஆகிய நாடகங்கள் மக்களால் பெருதும் வரவேற்றக்கப்பட்ட தெருவெளி நாடகங்கள்.

இரும்புத்திரை எனும் நாடகத்தில் இவன் அழுது அழுது பாடிப் பாடி நடித்ததை எம்மால் எப்படித்தான் மறக்க முடியும்…………?

பாசம் என்ற கூட்டுக்குள்ளே
பதுங்கி வாழலாமா?
தேசம் என்ற சொந்தம் காக்க
மறந்து போகலாமா?
ஆசை இங்கு யாருக்கு இல்லை
அனுபவிக்க தேசம் இல்லை
ஆட்டம் போடும் இராணுவத்தை
அழித்திடத்தான் மனதுமில்லை
வேடிக்கை பார்க்குதே சில உள்ளங்கள் – இங்கே
வாடிக்கை ஆனதால் துயர் கோலங்கள்……..

என் அன்னை பூமியில் ஏன் இந்த சோகம்
இதயங்கள் மாறல்லை யார் செய்த பாவம்

இந்தப் பாடல் குட்டிக்கண்ணனே தெருவழி நாடகங்களில் பாடினான் ஆயினும் “போர்ப்பறை“ இறுவட்டில் தவமலரின் குரலில் ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ கவிஞர்களின் வைர வரிகள் இவன் குரலில் பலரின் மனக்கதவைத் திறந்து விடுதலைப் பயணத்தில் நடைபோட வைத்தது என்பதும் நிசத்தமான உண்மை.

இவனிடம் சிலநேரம் கூறுவது என்னால் மறக்க முடியாத ஓர் நிகழ்வு…….

ஓர் கலைநிகழ்ச்சியில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இவனை அழைத்து; பாராட்டி தான் வைத்திருந்த பேனாவை எடுத்து இவனிடம் கொடுத்து சில அறிவுரைகளும் கூறினார். அது யாராலும் இலகுவில் மறக்க படும் சம்மவம் இல்லை. அதுவும் இவனுக்கு சற்று உந்துதலும், இவனது தேச உழைப்பிற்கு ஓர் அங்கிகாரத்தைக் கொடுத்தது.

இவன் குடும்பப் பின்னணியில் இடம்பெயர் வாழ்வில் வறுமை வாட்ட போர்நிறுத்த உடன்பாடு அவனது குடும்பத்தை தாய்மண் திருமலை நிலாவெளிக்கு செல்ல வழிவகுத்தது. அங்கு ஓரளவு வசதியுடன் வாழ்க்கை போகத்தொடங்க அவன் குட்டிக்கண்ணன் என்ற நிலையில் இருந்து குரல் மாறியது. இந்த மாற்றத்துடன் அவன் பெரிதாக பேசப்படவில்லை.

திருகோணமலையில் போர்நிறுத்த காலத்தில் மீண்டும் சிங்கள அரசின் இனச்சுத்திகரிப்பு தொடங்க மீண்டும் அவன் வன்னிக்கு வந்தான். பாடசாலை மாணவனாக உயர்தரத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற நிலையில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தான். குட்டிக்கண்ணன் தகுதியை குரலில் இழந்த அவன் பெரிய கண்ணனாக பாடல் பாட தன்னை தயார்படுத்திக்கொண்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராளியாகி களத்தில் குதித்தான். போராளி சிலம்பரச(ன்)னாக உருவெடுத்துக் கொண்டார்.

சிறுவனில் மக்கள் குரலால் எழுச்சிகொள்ள வைத்த அவன் விடுதலைப் போராட்டத்தகுதிக்கான வயதை அடைந்ததும் தனது பாடல்களில் ஒலித்த குறிக்கோளை களத்தில் காட்டத்தொடங்கினார்.அவ்வாறு களத்தில் எதிரியுடனான போரில் அவன் வீரச்சாவைத் தழுவினான்.

ஆயினும் உன் பாடல் இன்றும் தமிழீழத்தின் விடுதலை நோக்கிய எதிர்கால சிற்பிகளின் நெஞ்சங்களில் நிறைந்த வண்ணம்தான் உள்ளது.

ஓர் நாள் வருவோம் உன் கல்லைறை நோக்கி விடியலின் செய்தியுடன் நிம்மதியாக உறங்கிடு தோழனே.

நினைவுகள் மீட்டல்களுடன்:- அ.ம. இசைவழுதி.

**

குட்டிக்கண்ணன் குரலோசையில் விடியலின் பாடல்கள்……….

ஆண்டாண்டு காலமதாய்…..

அன்பிற்கு அர்த்தமாய்…..

டப்பாங் கூத்து……

எங்கள் அண்ணன்……

கூக்கு கூக்கு…….

பாரதி போல மீசை……

சிட்டுக் குருவி மெட்டு……

சிறகு விரிக்கும்……

தர்மம் ஒரு நாள்……..

காணொளி: நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது…பாடல் மேஜர் சிட்டு

ltte-soosai

பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு

சிட்டுவை சந்திக்கின்ற போதெல்லாம் பலமுறை இப்பாடலை பாடும்படி கேட்டு அதனுள் உருகிப்போனதுமுண்டு.

இறுதியாக அவன் வீரச்சாவடைவதற்கு சில வாரங்கள் முன்பு உடையார்கட்டு குளக்கட்டு வீதியில் ஈருளியை நான் ஓட்ட அவன் பாடிக்கொண்டு வந்தது அழியா ஞாபகம்.

1996 இல் ஓயாத அலைகளுக்காக இந்தப் பாடல் பாடப்பட்டிருந்தாலும் இப்போதெல்லாம் 2009 க்காக அப்போதே இந்தப் பாடல் பாடப்பட்டு விட்டதோ என்ற எண்ணமே என்னுள் மேலோங்கி நிற்கிறது…

நீங்களும் மீண்டும் ஒரு முறை இப் பாடலை கேட்டுப்பாருங்களேன்.

தமிழீழ சட்டவாளர் ஆ.இ.ஆரா–முகநூலிலிருந்து

Maj Siddu  Singer ltteமேஜர் சிட்டுவின் ஈழ கீதங்கள்

முகநூலில்( Facebook )தேசியத் தலைவர் பிரபாகரன் பதிவுகள்

CLICK HERE -முகநூலில் தொடர

https://www.facebook.com/pages/Prabakaran/350023658432514

prabakaran-facebook

http://www.eelamview.com/prabhakaran/

https://velupillaiprabhakaran.wordpress.com/

பிரபாகரன் நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை…!

leader prabakaranதலைவர் பிரபாகரன் அவர்கள் தாயகத்தை உண்மையுடன் நேசித்த, துணிச்சல் மிக்கதொரு வீரனாகவே எப்பவும் என் மனதில் தோன்றினார்….!

பிரபாகரன் அவர்களது ஆளுமை பற்றி, நான் அவரை நேரில் சந்திப்பதற்கு முன்னராகவே அவர் பற்றி எனக்குள்ளிருந்த பிம்பத்தை நினைத்துப் பார்ப்பதிலிருந்து தொடங்க விரும்புகிறேன்.

எண்பதுகளில் இயக்கங்கள் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்த காலங்களில் பிரபாகரனை பலரும் ‘தம்பி’ என்று தான் அழைத்துக் கொண்டிருந்தார்கள். என் தம்பியர்கள் (மாவீரர்கள்- மொறிஸ், மயூரன்) இருவரும் அவரை ‘அண்ணர்’ என்று விழித்துப் பேசுவார்கள்.

இதில் எதனை நான் பாவனையில் வைத்துக்கொள்வது என்று அப்போது எனக்குள் குழப்பம் இருந்தது! அவர் என்னைவிட வயதில் கூடியவர் என்பதால் ‘தம்பி’ என்று அவரைக் குறிப்பிட்டுப் பேசுவதும் எனக்கு ஒட்டாத ஒரு சொல்லாக மனதிற்குள் நெருடியது. அதனால் போராளிகளுடன் பேசும் போது ‘பிரபா’ என்று மட்டும் அவரைக் குறிப்பிடுவேன். என் தந்தை அவரை ‘விறைச்ச மண்டையன்’ என்பார். அவர் அப்படிக் குறிப்பிட்டுப் பேசும் போது அந்தச் சொல்லிற்குள் ஒருவித பாசம், கோபம், பெருமை எல்லாம் அடங்கியிருப்பதாய் எனக்குத் தோன்றும்.

1983 யூலையில் தமிழர்களுக்கு எதிராகக் தென்னிலங்கை முழுவதும் சிங்களக் காடையர்களால் நடாத்தப்பட்ட கலவரத்திற்கு சில மாதங்களிற்கு முன்னர், பலாலி வீதியில் புலிகள் நிகழ்த்திய சிங்கள அரச இராணுவத்திற்கெதிரான குண்டுத் தாக்குதல் நடைபெற்ற சமயம் நான் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். தாக்குதலினால் ஏற்பட்ட பரபரப்புகள் அடங்க சில நாட்கள் பிடித்தன.

அது நடந்து முடிந்த மறுவாரம் வழமை போல மீண்டும் பேருந்தில் பயணித்து, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகாக உள்ள பலாலி வீதியில் இறங்கிய போது குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை என் கண்களால் பார்க்க முடிந்தது. வீதியில் பென்னம்பெரிய குழியொன்று ஏற்பட்டிருந்தது. அத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். நான்கு தமிழ் பாடசாலை மாணவிகளை சிங்கள இராணுவத்தினர் கடத்திச் சென்று கற்பழித்ததன் எதிரொலியாக அந்தத் தாக்குதல் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்டது என்று செய்திகள் அடிபட்டன.

அதன் விளைவு முழு நாட்டையும் எப்படிப் புரட்டிப் போடப் போகிறதோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியே அதிகம் வராமல் முடங்கிக் கிடந்தார்கள். அந்த வீதி முழுவதும் ஒரு மயான அமைதி நிலவிக்கிடந்தது. எத்தனை நாட்களிற்கு இப்படி இருக்கப் போகிறது என்ற யோசனையுடன் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நடைபெற்றுக்கொண்டு தானிருந்தன.

ஆனால் அந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்களை தமிழ் மக்களில் பலரும் மாபெரும் துணிச்சல்காரர்களாகவும் வீரர்களாகவும் மனதினுள் நினைத்துப் பெருமைப்படத் தொடங்கி விட்டார்கள். அந்தப் பெருமை என்னையும் மூழ்கடித்திருந்தது! அந்தக் காரியத்தைச் செய்த பெடியளை (‘பெடியள்’ என்று தான் போராளிகளை யாழ்ப்பாண மக்கள் செல்லமாக அழைத்துக் கொள்வார்கள்) சந்திக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் கண்ணால் ஒரு தடவை பார்த்தாவது விடவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் மேலோங்கத் தொடங்கியிருந்தது.

அந்த ஆசை எனக்கு மட்டுமல்ல எமது மக்கள் பலருக்குமே அது இருந்தது. அதிலும் இளம் ஆண்கள், இளம் பெண்கள் பலரும் தம்மையறியாமலே மனத்தைரியம் அதிகரித்து, இலேசாக முறுக்கேறியது போல் ஆகியிருந்தார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. சிங்கள இராணுவ வாகனங்களை வீதிகளில் காணும்தோறும் ஏதோ அடிமைப்பட்டவர்கள் போல அச்சமும் பதற்றமும் மேலோங்க கூனிக்குறுகி, அடங்கியொடுங்கிப் போகும் நரகநிலை மாறி, இனி நாம் தலைநிமிர்ந்து பயமேதுமின்றி வீதிகளில் நடக்கலாம் என்ற இனம்புரியாத உணர்வு எமக்குள் தலை தூக்கத் தொடங்கியிருந்தது.

அந்தத் தாக்குதலில் பிரபாகரன் தன் இரண்டு கைகளிலும் துப்பாக்கியேந்தி சுட்டுத்தள்ளினார் என்று எமது கல்லூரி இளைஞர்களிற்குள் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் உற்சாகமாகவும் ரகசியமாகவும் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் சில இளம்பெண்கள் சேர்ந்து கல்லூரி பாட இடைவேளைகளில் இதுபற்றியே அடிக்கடி பேசிக்கொண்டிருப்போம். ஒட்டு மொத்த தமிழ் மக்களிடையேயும் அந்தச் சமயம் அதுவே பெரும் பேசுபொருளாக இருந்தது!

இதன் விளைவு தான் 1983ம் ஆண்டு யூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக தென்னிலங்கை முழுவதும் சிங்களக் காடையர்களால் நிகழ்த்தப்பட்ட பெரும் இனஅழிப்புக் கலவரம்! 1981ல் சிங்கள இராணுவத்தினரால் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட போது தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருந்த மனக்கொந்தளிப்பிற்கும் எழுச்சிக்கும் மேலானதொரு பெருந்தாக்கத்தை அந்தக் கலவரம் ஏற்படுத்தியிருந்தது. அந்தக் கலவரத்தில் நாலாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள் உயிரோடு எரித்தும் வெட்டியும் அடித்தும் கொல்லப்பட்டனர்.

தமிழர்களின் இருப்பிடங்கள், வியாபார தாபனங்கள் வழிபாட்டுத் தலங்கள் யாவும் எரியூட்டப்பட்டன. தென்னிலங்கைச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் சிறைக்குள் வைத்தே சிங்களக் கைதிகளால் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த இந்த வேளையில், அரசினால் பயங்கரவாதத் தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, வெகு சுலபமாக அப்பாவித் தமிழர்கள் குற்றவாளிகளாகப் பெயர் சூட்டப்பட்டு சிறைகளுள் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் வாய்கள் அரச தடைச்சட்டத்தினால் இறுக்கப் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

ஏன்? எதற்கு? என்ற கேள்விகளிற்கு அங்கு இடமிருக்கவில்லை. ‘யாரும் வாய் திறக்காமல் இருக்கக் கடவீர். நாம் சொல்வதே வேதம். விரும்பினால் கேளுங்கள். மீறினால் சுட்டுத் தள்ளப்படுவீர்கள் ‘ என்கிற ஒரு மௌனமொழியை அரசு கட்டவிழ்த்து விட்டிருந்தது.

இந்த நிலையைத் தொடர்ந்து பல சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக…. யாவும் இப்போ மனக்கண்ணில் வந்து போகிறது.

தமிழர்களுக்கு ஒரு துணிச்சலும் வீரமும் மிக்க தலைவன் வேண்டும். இல்லையேல் தமிழினம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிடும் என்ற ஆதங்கம் தம்மையறியாமலே ஒவ்வொருவர் எண்ணத்திலும் வீச்சமுடன் உதிக்கத் தொடங்கியிருந்த சரியான நேரமும் அதுதான் என்று நம்புகிறேன். அரசியல் கொள்கைகளில், வழிநடத்தல்களில் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் இல்லாமலில்லை. அது எங்கு தான் இல்லாமலும் இருந்திருக்கிறது?

அப்பொழுதிருந்தே ‘தம்பி’ என்று பலராலும் அன்பாக அழைக்கப்பட்ட பிரபாகரன் என்னும் தலைவனை நானும் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படத் தொடங்கிவிட்டேன். யாழ்ப்பாண சமூகக் கட்டமைப்பிற்குள் வாழும் ஒரு சாதாரணமான இளம்பெண்ணுக்கு அக்கட்டமைப்பு விதித்திருக்கும் எழுதப்படாத சட்டங்களை மீறி, அவள் செயற்படுவதென்பது அப்போது மிகவும் கடினமான காரியம். இத்தகைய சூழ்நிலையில், தாக்குதலை நிகழ்த்திய இளைஞர்களையெல்லாம் சந்திப்பதென்பது சாத்தியமே இல்லாதது என்று தெரிந்தும் அந்த நினைப்பிலும் அந்த நினைப்பில் உருவாகும் தெம்பிலும் பல காரியங்களை உற்சாகமாகச் செய்ய முடிந்திருக்கிறது.

என் மூத்த தம்பி – மொறிஸ், 1983க் கலவரத்திற்குப் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பின்னர் அவர்களுக்கும் எமக்குமான உறவு மேலும் அதிகரித்திருந்த வேளையில் ஒரு நாள் வல்வெட்டித்துறைப் பகுதிக்கு ‘அண்ணர் வருகிறார்’ என்ற பரபரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்டிருந்தது. என் தம்பி மொறிஸ் ம் அவரைச் சந்திப்பதற்குப் பறந்து போய் விட்டான்.

நானும் போனால் என்ன என்று எனக்குள் மனம் துடித்துக் கொண்டிருந்தது. வீட்டில் அதற்கான அனுமதி கடைசிவரைக்கும் கிடைக்காது என்ற துயரத்தில் தம்பி வரும்வரை நான் காத்திருந்தேன். பின்னர் என் தம்பி வந்து, அவரைச் சந்தித்த விபரத்தை ரகசியமாக எனக்கு மட்டும் சொன்னான். வேறேது தகவல்களும் கேட்கக்கூடாது என்றும் சொல்லி வைத்தான். நானுமோ பிய்த்துப் பிய்த்து விபரம் கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் ஒரு துரும்பும் சொல்லாமல் போய்விட்டான். அதன் பின்னர் பிரபாகரன் என்ற அந்த வீர இளைஞனைப் பற்றிய பேச்சுக்கள் எமது வீட்டில் மிகத் தாராளமாக அடிபடத் தொடங்கியிருந்தன. அவனோடு சேர்ந்திருந்து பணியாற்றியவர்களின் திறமையும் வீரமும் கூட அந்நேரம் பேசப்படத் தொடங்கியிருந்தன.

அந்த நிகழ்விற்குப் பின்னர் நடந்துவிட்ட பல சம்பவங்கள் தமிழர் வரலாற்றில் பதியப்பட வேண்டியவையாகின.

சிங்கள அரசிற்கெதிராகவும் தமிழர் பகுதியில் நிலைகொண்டு பல சித்திரவதைகளைச் செய்து கொண்டிருந்த சிங்கள இராணுவத்திற்கெதிராகவும் பிரபாகரன் தலைமையில் பல தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. அவற்றில் பல வெற்றிகரமான தாக்குதல்களாக அமைந்திருந்தன. இதனால் பிரபாகரன் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி இலங்கை முழுவதும் மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளிலும் செய்திகள் வியப்புடன் பேசப்படத் தொடங்கியிருந்தன.

விடுதலைப்புலிகள் அமைப்பினால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் அவரது போராற்றல் பற்றியும் அவரது அமைப்பின் ஒழுக்க நெறிகள் பற்றியும், அவரது அமைப்பில் இணைந்து போராடிய ஏனைய போராளிகள் பற்றியும் அவர்களது அர்ப்பணிப்புகள் பற்றியும் எழுதுவதென்றால் அது ஒரு மகா காவியமாகும்.

இந்திய இராணுவம் தமிழர் பகுதியில் அமைதி காக்கவென்று எமது மண்ணில் வந்திருந்த போது எவ்வளவோ அனர்த்தங்கள் நிகழ்ந்து எண்ணுக்கணக்கற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் – இந்திய இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்திருந்த அந்தச் சூழ்நிலையில், திடீரென என் தம்பியின் தோழர்கள் வந்து ‘சுதுமலைப் பொதுக்கூட்டம்’ பற்றிச் சொன்னார்கள். அந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுதக்கையளிப்பு நிகழ்வு நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கான காரணமும் அந்த இக்கட்டான சூழலும் பற்றி தமிழ்மக்களிடையே தெளிவற்ற குழப்பமான நிலை தோன்றியிருந்தது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வியே எல்லோர் மனதிலும்.

எல்லா ஊர்களிலிருந்தும் வந்த தமிழ் மக்கள் பெருந்திரளாக அங்கு கூடியிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் தான் ‘தலைவர்’ என்றும் ‘அண்ணர்’ என்றும் பலராலும் அன்போடு அழைக்கப்படும் பிரபாகரன் அவர்களை நான் முதன் முதலாக நேரில் கண்டேன். அப்போது இராணுவ உடை தவிர்த்து, சாதாரண சிவில் உடையில் ஒரு பொதுமகன் போல அவர் காட்சியளித்தார். சுற்றிவர இந்திய இராணுவ வீரர்கள். மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மேடையில் அவரின் அருகில் அப்போது விடுதலைப்புலிகள் அமைப்பின் யாழ்.மாவட்டத் தளபதியாக இருந்த கிட்டண்ணா.

அந்த மாபெரும் கூட்டத்தில் வைத்து பிரபாகரன் அவர்கள் ஆயுதக்கையளிப்பு பற்றிய விடயத்தை அறிவித்தபோது கூட்டத்தில் இருந்த சிலர் புரிந்தோ புரியாமலோ கரகோஷம் எழுப்பினார்கள். அந்த ஓசை ஏற்படுத்திய துயரம் அண்ணர் பிரபாகரன் உட்பட, அங்கு குவிந்திருந்த போராளிகளின் முகங்களை இருளடையச் செய்த காட்சி இப்பவும் என் கண்களுக்குள் நிற்கிறது.

அந்த வரலாற்றுச் சம்பவத்திற்குப் பின்னர் அவர்களது போராட்ட வடிவமே முழுமையாக மாறத்தொடங்கியிருந்த போது அவர் வெகுதூரத்திற்குப் போய்விட்டிருந்தார். மக்கள் பிரதேசங்களிற்குள் நின்று பணியாற்றிக் கொண்டிருந்த போராளிகளே அவரைச் சந்திப்பதற்கு ஏங்கிக் கொண்டிருந்த ஒரு நிலை தான் அப்போது அங்கே இருந்தது. ஒரு நாள் திடீரென்று என் தம்பி-மயூரன் காட்டிற்குள்ளிருந்து வந்திருந்தான். அமைப்பு சம்பந்தப்பட்ட அலுவலாக வந்திருப்பான் என்று ஊகித்தேன். ஓர் இரவு நீண்ட நேரம் மொறிஸ் உடன் தனிமையாகப் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் பேசியதில் ஒரு சிறுசொல்லைக் கூட என்னால் அறியமுடியாமல் இருந்தது. அது எனக்கு ஒருவகை அவஸ்தையாகவும் இருந்தது.

பிரபாகரன் அவர்களைச் சுற்றியிருந்த காடும் காடு சார்ந்த இடமும் வரவர ஒரு மாயப்பிரதேசம் போலவே பலருக்கும் தோற்றம் காட்டத் தொடங்கியிருந்தது. அங்கு செல்வதை பலரும் ஒரு தவமாக நினைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து எமது மண்ணில் நடந்துவிட்ட சம்பவங்கள் ஒன்றா இரண்டா? ஏராளம்! வடமராட்சி ‘ஒப்பிறேசன் லிபறேசன்’ முடிவுற்ற பின்னர் வடமராச்சியில் நிகழ்ந்த (1988) முதல் நூல்வெளியீடு என்னுடைய ‘நிழல்கள்’ சிறுகதை குறுநாவல் தொகுப்பு வெளியீடு தான் என்பதை பின்னாளில் நிகழ்ந்த சம்பவங்களின் வாயிலாக அறிந்து கொண்டேன்.

அந்தச் சமயம் வடமராட்சிப் பகுதி முழுவதும் யுத்த அழிவுகளிற்குப் பின்னரான ஒருவித மயான அமைதி தான் நிலவியிருந்தது. அந்த நாட்களை நினைக்கும் போது இப்போதும் உயிர் சிதைவது போன்ற ஒரு பதைப்பு ஏற்படுகிறது. யாரும் எதையும் செய்வதற்குச் சக்தியற்றவர்களாக அழிவுகளின், உயிரிழப்புகளின் துயரத்தில் மூழ்கிப் போயிருந்தார்கள். அவ்வப்போது இராணுவத்தினரால் அமுல்பபடுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், மேலும் மக்களை முடக்கிப் போட்டிருந்தது. எனது நூல் வெளியீடு நடைபெறவிருந்த பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தின் முன்பாக, முதல் நாள் குண்டு வெடித்த காரணத்தால் குறிப்பிட்டபடி மறுநாள் அங்கே விழாவைச் செய்ய முடியாமல் போய்விட்டது.

விழாவில் பேசுவதற்காக ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விமர்சகர்களுக்கு இதுபற்றி நேரத்துடன் அறிவிக்க முடியாமல் ஊரெங்கும் ஊரடங்குச் சட்டத்தை இந்திய இராணுவம் அமுல்படுத்திவிட்டிருந்தது. இதனால் இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்த பருத்தித்துறை ‘யதார்த்தா இலக்கிய வட்டத்தினர்’ குழம்பிப் போயிருந்தார்கள். சிலருக்கு உட்பாதைகளினூடாக ஆட்களை அனுப்பி, நிலைமைகள் அறிவிக்கப்பட்ட போதும், சிவத்தம்பி மாஸ்ரர், கோகிலா மகேந்திரன் அக்கா, யோகராஜா மாஸ்ரர், தெணியான் ஆகியோர் சற்றே தூரத்திலிருந்து பிரயாணம் செய்து வந்து திரும்பிப் போனார்கள். இது எனக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் மிகுந்த கவலையையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தியிருந்தது.

விழா நடைபெறும் நாள் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக அனைவருக்கும் அறிவித்த பின்னர் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. அச்சமயம் பருத்தித்துறைப் பொறுப்பாளராக இருந்த ரவிராஜ்(மாவீரன்) என்னிடம் ஆளனுப்பியிருந்தான். பொட்டம்மான் என்னை நேரில் வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்துள்ளதாக வந்தவரிடம் செய்தி கொடுத்தனுப்பப்பட்டிருந்தது. என் மனதிற்குள் ஒருவித பதற்றம் தலைதூக்கத் தொடங்கி விட்டது. நான் மொறிஸ்க்கு ஆளனுப்பி விடயத்தைத் தெரிவித்தேன். அதற்கு அவன், ‘ஒரு பிரச்சனையுமில்லை.. அவசியம் சென்று சந்தியுங்கள்…’ என்று மட்டும் செய்தி அனுப்பியிருந்தான். அன்று பின்னேரம் என் அம்மாவைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பொட்டண்ணாவை (‘அம்மான்’ என்றும் அப்போது அவரைப் பலரும் அழைப்பார்கள்) சந்திப்பதற்காக பஸ்ஸில் புறப்பட்டேன். வல்வெட்டித்துறைப் பகுதியில் தான் அந்தச் சந்திப்பிற்கான இடம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. நான் முதன்முதலாக நேரில் பொட்டண்ணாவைச் சந்தித்ததும் இந்த இடத்தில் தான். நானும் அம்மாவுமாகப் போய்ச் சேர்ந்த இடத்திற்கு சில நிமிடங்களிலேயே அவரும் வந்து சேர்ந்தார்.

அவர், நடக்கவிருக்கும் எனது புத்தக வெளியீட்டு நிகழ்வு பற்றி விபரமாக விசாரித்தார்.

‘இந்தக் காலகட்டத்தில் இந்த மண்ணிலிருந்து யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிற துணிச்சலான படைப்புகள் கட்டாயம் வரவேணும். அதிலும் ஓர் இளம்பெண்ணான நீங்கள் அதைத் துணிவாகச் செய்யுறீங்கள் என்கிறது எங்களுக்கு சந்தோசம். உங்கட இந்தப் புத்தக (நிழல்கள்) வெளியீட்டு நிகழ்விற்கு எங்களிட்டையிருந்து ஏதும் உதவிகள் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கோ….’ என்று சொல்லிவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார். எனக்கு என்ன கேட்பது என்று தெரியாமல் பதற்றத்தோடு அவரை நோக்கினேன்.

இது நடந்தது 1988ன் நடுப்பகுதியில். 1987 யூலை மாதம் தான் நான் எனது தொழிற்கல்வியை முடித்துக் கொண்டு யாழ்.அரச செயலகத்தில் பணியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். நூல் வெளியீட்டிற்கான போதிய பொருளாதார வசதி இல்லாத ஒரு சூழலில், நான் நினைத்தே பார்த்திராத ஒரு வேளையில் ‘பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினர்’ தாமாகவே முன்வந்து எனது சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கப் போகிறார்கள் என்ற செய்தியை எனக்குத் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலை தெரிந்து தானோ என்னவோ அம்மான் அடுத்த விடயத்தைத் தொட்டுப் பேசினார்.

‘இந்தப் புத்தக வெளியீடு சார்பாகப் பொருளாதார வசதிகள் ஏதும் தேவையென்றால் நாங்கள் செய்கிறம்…’ என்றார். மறுகணமே எனக்கு சந்தோச அதிர்ச்சியில் நாக்குளறத் தொடங்கி விட்டது. நான் ஒரு துளியும் எதிர்பார்த்திராத விடயம் அது. நெகிழ்ச்சியில் வார்த்தைகள் தொலைந்து போன அந்தக் கணங்கள் இப்பவும் ஞாபகத்தில் இருக்கிறது.
நான் பேசாமடந்தையாகவே இருந்தேன். அம்மா என்னைப் பார்த்தா. நான் அம்மாவைப் பார்த்தேன். அவ்வளவு தான்!

‘நாங்கள்…செய்கிறம்…’ என்பதில் இருக்கும் ‘நாங்கள்’ என்பது எங்கோ ஒரு காட்டிற்குள் இருக்கும் அண்ணரின் இதயத்திலிருந்து புறப்பட்டு, அம்மானின் வாய் வழியாக வந்த செய்தி என்பதை பின்னர் கிடைத்த தகவலினூடாக நான் அறிந்து ஆச்சரியப்பட்டேன்! அன்றைய அந்த நெருக்கடியான சூழ்நிலையில் அம்மானின் அந்த வார்த்தைகள் என் கண்களில் நீரை வரவழைத்தது. அதற்குக் காரணமாக இருந்த, பிரபாகரன் என்ற அந்த ஆத்மாவை ஒரு வீரனாக மட்டுமல்ல, உயர்ந்த கலைஞனாகவும் என்றைக்கும் நான் போற்றுகிறேன்!

மறுநாள் என் தம்பியின் தோழனும், போராளியுமான ரவிராஜ் என்னிடம் சில தொகைப் பணத்தைக் கொண்டு வந்து தந்திருந்தான். அதனைத் தொடர்ந்து பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினரின் ஒழுங்கமைப்பில் குறிப்பிட்ட தினத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது. அம்மானால் அனுப்பப்பட்டிருந்த போராளிகள் சிலரும் அங்கு பார்வையாளர்களாக வந்திருந்தார்கள். விழா முடிவுற்ற பின்னர், அங்கு விற்பனையான புத்தகங்களிலிருந்து கிடைத்த நிதி மூலம் அவர்கள் உதவிய நிதியை அவர்களிடமே நன்றியுடன் கையளித்தேன். என்றைக்கும் மறக்கமுடியாத அந்த சம்பவத்தின் பின்னர், தலைவர் பிரபாகரன் அவர்களும் அவரின் வழிகாட்டலில் தொடரும் அவரது தோழர்களும் என்னுள் ஒருபடி மேலே உயர்ந்து காட்சியளிக்கத் தொடங்கினார்கள்.

அவற்றிற்குப் பின்னர் எவ்வளவோ நடந்து விட்டிருந்தன. அவர்கள் நானாகவும் நான் அவர்களாகவும் என் மனதிற்குள் ஓர் இயல்பான ஐக்கியத்தோடு வாழ்ந்ததாகவே இப்போதும் உணர்கிறேன். விடுதலைக்காகத் தம் உயிரையே அர்ப்பணித்துப் பணியாற்றியவர்களில், கடைசிவரை வாழ்ந்தவர்கள், இறந்துபோனவர்கள், பிரிந்தவர்கள், பழகியவர்கள் எல்லோரும் என் உடன்பிறப்புகளாகவே இப்போதும் தோன்றுகிறார்கள். எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் அவர்களின் அன்பும், பரிவும், தோழமையும் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் துயரமும் கலந்ததொரு இனிமையான வேதனையை அவை தருகின்றன.

மறுவருடம், எனக்கு திருமணம் நிகழ்ந்தேறிவிட்டது. நாம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த வீடு, 1990ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த கோட்டைத் தாக்குதலின் போது அரச விமானப்படையினரின் தாக்குதலில் தரைமட்டமானது. அதன் பின்னர் எல்லாவற்றையும் போட்டதுபோட்டபடி விட்டுவிட்டு, லண்டன் வந்து சேர்ந்த போது, சொந்த மண்ணைப் பிரிந்து வந்துவிட்ட ஏக்கத்திலும் துயரத்திலும் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதே வேளை, நான் பயணம் வெளிக்கிடும் சமயம், என் மூத்த சகோதரன் சங்குப்பிட்டி, தாண்டிக்குளத்தருகில் இராணுவ ஷெல் தாக்குதலில் காலை இழந்துவிட்டிருந்த கொடியநிலையும் அதுபற்றிய நினைவுகளும் மேலும் எனக்கு அதிக மனவலியைத் தந்து கொண்டேயிருந்தன.

அச்சமயம் மனம் தாளாமல் நான் எழுதிய ஒரு கதை ‘அக்கினியில் கருகும் ஆத்மாக்கள்’. பிரான்ஸிலிருந்து அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘பாரிஸ் ஈழநாடு’ பத்திரிகை நடாத்திய ஒரு சிறுகதைப் போட்டியில் அக்கதைக்கு முதற்பரிசு கிடைத்த செய்தி தாயக பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன. அந்தப் பத்திரிகைச் செய்தியை காலமாகிவிட்ட திருச்செல்வம் அண்ணை (புலோலி வாசிகசாலை பொறுப்பாளர், வீரகேசரி நிருபர்) வெட்டி, எனக்கு தபாலில் அனுப்பி வைத்திருந்தார். அதே செய்தியைப் பார்த்த பின்னரோ என்னவோ, வன்னிக் காட்டிற்குள் அண்ணருக்கு அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த என் தம்பி- மயூரன் ஒரு நான்கு வரிக்கடிதம் தபாலில் அனுப்பியிருந்தான்.

அதில் ‘இளையக்கா, நீங்கள் நாட்டை விட்டுப் போனதைப் பற்றி அண்ணர் என்னிடம் கூறிக் கவலைப்பட்டார். நீங்கள் இங்கிருக்க வேண்டியவர் என்றார்’ என்று எழுதியிருந்தான். அதைப் பார்த்ததிலிருந்து நான் அப்படியே மனம் நொருங்கிப் போனேன். தனிமையிலிருக்கும் போது அதை நினைத்து எத்தனையோ தடவைகள் அழுதிருக்கிறேன். அதேவேளை என்னையறியாத ஒரு பரவசமும்.. தலைவர் என்னை இவ்வளவு ஞாபகத்தில் வைத்திருக்கிறார் என்ற பரவசம் அது!

அந்த ஏக்கமும் துயரமும் என்னை முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். பல சமயங்களில் அது விடயமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிப் போயிருந்தேன் என்பது தான் உண்மை.

1993ல் தம்பி – மயூரன் தவளைப்பாய்ச்சலில் மாவீரனாகிப் போனான். அதன் பின்னரான வலியை வார்த்தைகளில் வடிக்க முடியாமல் அல்லாடினேன். அதன் பின்னர், நான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த பல விடயங்களை என்னால் எழுதவே முடியாமல் போய்விட்டது. சிந்திக்கும் திறன் வரட்சி பெற்றுவிட்டது போல் உணர்ந்தேன். அப்போது தான் 2003ம் ஆண்டில் குறிப்பிட்ட சில மாதங்கள் சமாதான காலமாக தாயகத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நான் என் அதிர்ஷ்டமானதும் அதிர்ஷ்டமற்றதுமான காலமாகவே இப்பவும் மனதிற்குள் நினைக்கிறேன்.

சகோதரர்களின் இழப்பிற்குப் பின்னர், மீண்டும் அந்த மண்ணில் கால் வைப்பதற்குத் தைரியமில்லாமல் இருந்த எனக்கு, அந்தச் சமாதானக் காலகட்டத்தில் சாத்தியமாகப்போகும் பயணம் பற்றி எதையும் கற்பனை பண்ண முடியாமலே இருந்தது. என் அண்ணனும், என் தம்பியர்களும் அவர்களின் இன்னுயிர்த் தோழர்களுமில்லாத அந்த மண்ணை நான் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்ற திகைப்பும் அச்சமும் என்னை உள்ளுரப் புரட்டிப் போட்டிருந்தது. நான் என் மண்ணில் கால் பதிக்கும் போது அவர்கள் யாருமற்ற அந்த வெறுமையை என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியாமல் இருந்தது. ஆயினும் நடப்பது நடக்கட்டும் என்ற ஒரு வெற்றுத் துணிச்லோடு தான் நான் என் கணவர் பிள்ளைகளோடு புறப்பட்டேன். அதற்கான ஒரே காரணம் வன்னிக்குள் ஒரு தடவையேனும் கால் வைக்க முடியும் என்ற துளி நம்பிக்கை மட்டும் தான்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப்பகுதியில் இருக்கிறது என் ஊர். அந்த மண்ணில் கால்வைத்த போதே என் நெஞ்சம் குமுறத் தொடங்கிவிட்டது! நான் பிறந்த மண்ணும், நான் வாழ்ந்த வீடும் கடந்தகால நினைவுகளால் சுட்டெரித்து, கண்ணீரில் என்னை மூழ்கடித்தது. அங்கிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்கள், நினைவுத்தூபிகள், உருக்குலைந்து கொண்டிருக்கும் பிரபாகரனின் வீடு, உருமாறிப்போன நிலங்கள், சிதறியும் புதிதாக உருவாகியுமிருக்கும் வீடுகள், மரங்கள், காணிகள், கடற்கரை…. என்று எல்லாவற்றிலும் கடந்து போன நினைவெச்சங்களைப் பூசிப் பூசி எதெதையோ தேடிப் பார்த்துக்கொண்டு திரிந்தேன்.

திடீரென்று ஒருநாள், வன்னியில் அப்பொழுது ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரருடன் தொடர்பு கிடைத்தது. அந்தத் தொடர்பில் தான் எமது வன்னிப்பயணமும், தலைவர் பிரபாகரன் அவர்களை நாம் சந்திக்கப்போகும் அந்த நாளும் தீர்மானிக்கப்பட்டது. மறுநாளே, எம்மை அழைத்துச் செல்வதற்காக வன்னியிலிருந்து ஒரு வாகனம் வருகிறது என்றும் ஆயத்தமாக இருக்கும்படியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நான் எப்பொழுதோ சந்திப்பதற்கு ஆசைப்பட்டிருந்த, ஏங்கியிருந்த அந்தக் காலம் கடந்து பதினைந்து வருடங்களிற்குப் பின்னர் அதே தலைவர் பிரபாகரன் அவர்களைக் காணப்போகிறேன் என்ற உணர்வு என்னுள் ஒருவித மகிழ்ச்சியையும் அதேவேளை ஒருவித பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அவரை நான் முதற்தடவையாகச் சந்திக்கப்போகும் அந்த வேளையில், மாவீரர்களின் சகோதரியாகவா அல்லது ஒரு படைப்பாளியாகவா அல்லது அவரின் திறமைகளையும் பண்புகளையும் இரசிக்கும் ஓர் இரசிகையாகவா, அல்லது அவர்களுக்கு விசுவாசமாகவும் நேசமாகவும் இருந்த ஒரு சகோதரியாகவா சந்திக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

முடிவில் ஒரு படைப்பாளியாக, அவருக்குப் பிடித்தமான, ஆழ்ந்த வாசிப்பிற்கு உகந்ததான ஒரு கனமான நூலை அவருக்குப் பரிசளிப்பதென்ற முடிவோடு பயணத்திற்குத் தயாரானேன். அந்தப் பிரயாணம் எந்தப் பிரச்சனையுமில்லாமல் குறிப்பிட்டபடி குறிப்பிட்ட நாளில் அமைந்தது.

வன்னிமண் எங்களை மிகுந்த அன்போடும் மரியாதையோடும் வரவேற்றுக் கொண்டது. இது எங்கள் மண், இவர்களெல்லாம் எம்மவர்கள் என்று நினைக்கும் போதே ஒருவித பரவசம் நிறைந்த உற்சாகம் என்னையறியாமலே ஏற்பட்டது. வன்னி மண்ணின் இராச்சியம் என் கண்களை ஆச்சரியத்துடன் அகல விரிய வைத்தது! வன்னியை ஆண்ட பண்டாரவன்னியன் காலத்தில் கூட இத்தனை கரிசனையோடு ஒவ்வொரு துறைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்திருக்குமா? இத்தனை கட்டுக்கோப்புடன் ஓர் அரசபரிபாலனம் நடந்திருக்குமா? இத்தனை நேர்த்தியான ஒரு மகளிர் இராணுவப்படையணி இருந்திருக்குமா? என்ற கேள்விகளும் பிரமிப்பும் எனக்குள் ஏற்பட்டது.

ஒவ்வொரு துறைகளும் வெகு நேர்த்தியாக இயங்கிக் கொண்டிருந்தன. செல்லுமிடமெங்கும் அந்தந்தத் துறைகளின் செய்காரியங்களும் அவற்றின் நேர்த்தியும் வாயைப் பிளக்க வைத்தன! உள்நாட்டு வளங்கள் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு, ஓர் அழகான புதிய உலகம் அங்கு உருவாகியிருந்தமை கண்டு வியந்தேன்! பிரபாகரனும் தோழர்களும் கனவு கண்ட அந்தப் பொன்னான தமிழீழம் எப்படியிருக்கும் என்பதற்கு உதாரணமாக அதன் அடிப்படை வடிவம் அங்கே உருவாகியிருந்தமை கண்டு அதிசயித்தேன்!

எமக்கான தங்குமிடம், உணவு, வாகனவசதி யாவும் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களின் காரியதரிசியும் ஊடகத்துறைப் பொறுப்பாளராகவுமிருந்த தயா மாஸ்ரர் அவர்களால் கரிசனையோடு கவனிக்கப்பட்டது. தமிழ்செல்வன் அவர்களின் அலுவலகத்தின் வெளியே ஒரு அழகான நீண்ட காற்றோட்டமான கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. அங்கே பலரையும் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அரசியல்துறைச் செயலகத்தில் நான் நின்றிருந்த சமயம் அங்கு வந்து என்னைச் சந்தித்துக்கொண்ட கலைஞர்களில் கவிஞர் நாவண்ணன், கருணாகரன், நிலாந்தன், தமிழ்க்கவி ஆகியோரை இன்றைக்கும் மறக்கமுடியவில்லை.

நான் சென்று பார்த்த பல முக்கியமான பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், புலிகளின்குரல் வானொலி ஆகியவை என்னை அப்படியே இழுத்து வைத்திருந்தன என்று தான் சொல்ல வேண்டும்!

கலைபண்பாட்டுக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர்களில் துளசிச்செல்வன் என்னை அழைத்துச் சென்று உட்காரவைத்து, அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வேற்றுமொழித் திரைப்படங்களை திரையில் ஓடவிட்டு எமக்குக் காண்பித்தார். அது சம்பந்தமான எனது கேள்விகளிற்கெல்லாம் துளசிச்செல்வன் அழகாகப் பதிலளித்தார். அவர்களது தொழில்நுட்பப் பணிகளிற்கான கல்வி, பயிற்சி வகுப்புகள், மற்றும் தொழில்சாதனங்கள் என எல்லா வசதிகளையும் தலைவர் மிகுந்த கவனத்துடன் தமக்கு அளிப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்கள். எனக்கு அந்தக் கலைக்கூடங்களை விட்டுப்பிரியவே மனமில்லாமல் இருந்தது.

அது போல் புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த அத்தனை ஆண், பெண் கலைஞர்களும் எம்மை இதமாக வரவேற்று, இரண்டு மணிநேரத்தை எமக்காக ஒதுக்கி, எம்முடன் ஒன்றாக உட்கார்ந்து ஒரு சிறு விருந்துபசாரமே பண்ணிவிட்டார்கள். நான் அப்போது இலண்டனிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வானொலியில் சில நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தேன் என்பதனால் அவர்கள் என்னை ஒரு படைப்பாளியாக மட்டுமல்லாமல், ஒரு வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் வரவேற்றுக் கொண்டு உரையாடலைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அங்கு அந்த வானொலி நிகழ்ச்சிகளை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்பதனையும் அதற்காக தலைமை எத்தனை வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது என்பன பற்றியும் மிகுந்த பொறுப்புணர்வோடு ஒவ்வொருவரும் விளக்கினார்கள். அப்போது புலிகளின்குரல் வானொலிக்கு ஜவான் என்று அழைக்கப்படும் தமிழன்பன் அவர்கள் பொறுப்பாக இருந்தார். பின்னர் ஜவானைச் சந்தித்ததும் அவர் எம்மை நாயாற்றுப்பாலம் வரை அழைத்துச் சென்று, அந்தவிடத்தில் நடாத்தப்பட்ட வெற்றிச்சமர் பற்றி மிகுந்த களிப்போடு விளக்கியதும் இன்றைக்கும் என் ஞாபகத்தில் அடிக்கடி வந்து போகும் காட்சிகள்!

தமிழ்ச்செல்வன் அவர்களது அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த சமயம், ஒரு மாலை நேரம், இந்தியாவிலிருந்து அங்கு வந்து தங்கியிருந்து போராளிகளுக்கு கல்வி கற்பித்துக்கொண்டிருந்த ஒரு தமிழ் பேராசிரியரிடம் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, திடீரென்று தயா மாஸ்ரர் எம் முன்னால் வந்து நின்றார். ‘தலைவர் வந்து நிற்கிறார். வரட்டுமாம். உடனே வெளிக்கிடுங்கோ’ என்றார். சந்தோஷ அதிர்ச்சியில் ஒருகணம் நெஞ்சுத் தண்ணீர் வற்றிவிடும் போலிருந்தது! அரக்கப்பரக்க வெளிக்கிட்டோம். மனதிற்குள் என்னையறியாத ஒருவித பதற்றம்.

மறுகணமே எம்மை அழைத்துச் செல்வதற்கான வாகனம் வந்து நின்றது. புறப்படும் போது எமது புகைப்படக்கருவி, ஒளிப்பதிவுக்கருவி ஆகியவற்றையும் எம்மோடு எடுத்துச் சென்றோம். இலேசாக இருள் கவிந்து கொண்டிருந்தது. நான்கைந்து வீடுகள் ஒன்றாக இணைக்கப்பட்டது போல் தோன்றிய ஒரு நீளமான பெரிய வீட்டின் முன்னால் இறக்கப்பட்டோம். அங்கே உள்நுழைந்த போது சில போராளிகள் நிலையெடுத்தபடி நின்றிருப்பது தெரிந்தது. அவர்களில் சிலர் எமது புகைப்படக்கருவி, ஒளிப்பதிவுக் கருவி எல்லாவற்றையும் வாங்கி உள்ளே வைத்துவிட்டார்கள்.

நான் திகைத்துப் போனேன். ‘இல்லை அது வேணும்…’ என்று மெதுவாக தயக்கத்துடன் கூறினேன். அவர்கள் எதுவும் பேசவில்லை. வாயை மறைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு அனுமதியில்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டி, சைகையால் தெரிவித்தார்கள். எனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. அவர்கள் யாவரும் பொட்டம்மானின் புலனாய்வுப் படையணியினர் என்று பின்னர் நடந்த சம்பவமொன்றில் அறிந்து கொண்டேன்.

இன்னுமொரு வாகனம் அந்தக் கட்டடத்திற்கு வந்து சேர்ந்தது. எம்மை அதில் ஏறச் சொன்னார்கள். ஐந்து நிமிடங்களில் ஒரு பூந்தோட்டத்திற்குள் நுழைவது போல் தோன்றியது. நீளமான அந்தப் பூங்காவின் மத்தியில் மினுமினுவென்று ஒரு கண்ணாடிக் கட்டடம். அது தான் வெளிநாட்டிலிருந்து வரும் அரசியல் அதிகாரிகளைச் சந்திக்கும் கட்டடம் என்று பின்னர் அறிந்து கொண்டேன். கட்டடத்தின் வாயிலருகில் வாகனம் போய் நின்றது. திரும்பிய பக்கமெல்லாம் வண்ணவண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கின! தூய்மையும் அழகும் கலந்த ரம்மியமான அந்தச் சூழலில் வார்த்தைகள் தொலைந்து போயின!

நாம் உள்ளே நுழைகிற தருணம், எமக்குப் பின்னால் வாகனச் சத்தம் கேட்டது. கறுப்புக் கண்ணாடிகளால் மூடப்பட்டதொரு வாகனம் வந்து வாசலில் நின்றது. பின்னால் அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள். கறுப்பு உடைகளுடன் ஆயுதம் தாங்கிய போராளிகள் மளமளவென்று குதித்து இறங்கி நிலையெடுத்து நின்று கொண்டார்கள். நான் திகைத்துப் போய் அப்படியே வாசலில் நின்றிருந்தேன். எங்கிருந்தோ மேலும் சில போராளிகள்; வந்து குவிந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தின் நடுவில் தலைவர். சிரித்தவாறே உள்ளே நுழைந்தார்.

‘வாங்கோ… என்ன நிக்கிறியள். உள்ளை வாங்கோ.. இருங்கோ…’ என்றவாறே உள்ளே போடப்பட்டிருந்த மெத்தை இருக்கைகளில் எம்மை அமரச் செய்து தானும் எம் முன்னால் அமர்ந்து கொண்டார். தலைவர் சாதாரண சமாதான கால உடையுடன் தான் வருவார் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு அவரின் இராணுவ உடையுடனான அந்தக் கம்பீரத் தோற்றம் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவுமிருந்தது.

அவரை ஒரு சிறந்த வீரனாக என் மனதிற்குள் எப்படி நான் உருவகித்திருந்தேனோ அதுபோலவே மிகுந்த உற்சாகத்தோடும் தீரக்களையோடும் அவர் என் முன்னால் கம்பீரமாகக் காட்சி தந்து கொண்டிருந்தார். கூடவே தமிழ்ச்செல்வன் அவர்களும் வழமையான அவரது வெண்மை ததும்பும் புன்னகையோடு வந்து அமர்ந்து கொண்டார். முதலில் என்ன பேசுவது, எங்கே தொடங்குவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த என்னை மிகவும் குசாலாகச் சிரித்துக் கொண்டு ‘எப்பிடி பயணம்? எல்லாம் இங்கை வசதியாக இருக்கோ..’ என்று வெகு சாதாரணமாகக் கேட்டு கதையைத் தொடங்கினார் தலைவர். வெகு இயல்பாகவும் பக்கத்து வீட்டுக்காரரோடு பத்தும்பலதும் பேசிச் சிரிப்பது போலவே அவருடனான உரையாடல்கள் அமைந்திருந்தன.

அவரின் வெளிப்படையான இயல்பான பேச்சு மனதிற்குள்ளிருந்த பதற்றைத்தையெல்லாம் ஒருநொடியில் ஓடிமறையச் செய்துவிட்டது. லண்டன் நிலவரங்கள் பற்றியும் மிகவும் சிரத்தையுடன் விசாரித்துப் பேசினார். லண்டனில் அப்போது தேசியப் பணிகளிற்குப் பொறுப்பாக இருந்தவர்கள் பற்றியும் பேச்சுகள் வந்து போயின. பேச்சிற்கிடையே தேநீர், பலகாரங்கள் எல்லாம் சுடச்சுட வந்து கொண்டிருந்தன.

‘இதெல்லாம் யார் செய்கிறார்கள் சுடச்சுட வருகுது..’ என்று கேட்டேன். ‘உவங்கள் தான்… எங்கை… இன்னும் கொஞ்சம் கொண்டு வாருங்கோ…’ என்றவாறே சிரித்துக்கொண்டு பின்னால் திரும்பினார்.

மனது அதீத மகிழ்ச்சியில் நிரம்பியிருந்ததாலோ என்னவோ எதையும் சுவைத்துச் சாப்பிடக்கூடிய மனநிலை அப்போதெனக்கு இருக்கவில்லை. அடிக்கடி பேச்சினிடையே ‘ஆறப்போகுது சாப்பிடுங்கோ..’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் அவருடன் பேசுவதையே அதிகம் விரும்புபவளாக கேள்வி மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தேன். கடைசிக் காலங்களில் அவரோடு இருந்த என் தம்பி – மயூரன பற்றிக் கேட்டேன். அவனைப் பற்றி பல விடயங்களைச் சொல்லிச் சிரித்தார்.

‘அவன் பூநகரித் தாக்குதலுக்குப் போக முதலே என்னை அதுக்கு விடுங்கோ… இதுக்கு விடுங்கோ எண்டு ஆக்கினை பிடிச்சுக் கொண்டுதான் இருந்தவன். நான் இப்ப அவசரப்படாதை பிறகு பார்க்கலாம் எண்டு கடத்திக் கொண்டேயிருந்தன். எங்கையாவது நான் வந்து இருந்தால் என்ரை கண்ணுக்கு முன்னாலை வந்து நிண்டு எதையாவது நோண்டிக்கொண்டு நிற்பான். கடைசியா சரி எண்டு அவன்ரை ஆசைக்காகத் தான் போக விட்டனான்..’ என்று கூறிவிட்டு சில கணங்கள் மௌனமானார்.

அவர் குறிப்பிட்டது ‘பூநகரி தவளைப் பாய்ச்சலை’ என்று எனக்கு விளங்கியது. அந்தப் பேச்சினிடையே பின்பு தம்பி- மொறிஸ் ஐப் பற்றியும் பல விடயங்கள் பேசினார்.
‘கடைசி வரைக்கும் அவனைச் சந்திக்க முடியாமலே போயிட்டுது… ஒரு கட்டத்தில இங்கால வாறதாத்தான் இருந்தது. அதுக்கிடையில….’ என்று வசனத்தை முடிக்காமலே என்னைப் பார்த்தார்.

‘அவங்கள் சொன்னதைச் செய்திட்டாங்கள். நான் இன்னும் செய்யேல்லை. அவங்களுக்குக் கிட்ட நிக்கிற தகுதி எனக்கின்னுமில்லை…’ இலேசான துயரத்துடன் அவர் அதைச் சொல்லும் போது குரல் தாழ்ந்து போயிருந்தது. அந்த வரிகளின் பின்னர் அங்கு சில விநாடிகள் மௌனம் நிலவியது. தமிழ்ச்செல்வன் கதையை மாற்றுவதற்காக வேறு ஏதோ என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். என் படைப்பு முயற்சிகள் பற்றிய பேச்சு மெதுவாக எழுந்தது.

பின்னர் நான் அவருக்காகவென்றே எடுத்துச் சென்றிருந்த ஈழத்து, புலம்பெயர்ந்த படைப்பாளிகளினது தொகுப்பு நூலை அவரிடம் கையளித்தேன். அவர் அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் ஈழத்துப் படைப்புகள் பற்றியும் தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடுகள் பற்றியும் பேசினார்.

‘ஒரு பிரச்சனையைத் தொட்டு ஒரு படைப்பை உருவாக்குபவன், அந்தப் பிரச்சனைக்கான தீர்வையும் முன்வைக்க வேணும்….இல்லாட்டில் அதை இன்னோர் தருணத்திலாவது வெளிப்படுத்த வேணும்…’ என்றார்.

நான் எதுவும் கூறாமல் அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தேன்.

விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகம் பற்றி நான் பேச்செடுத்த போது கவிஞர் நாவண்ணன் அவர்களின் படைப்புத்திறன், புதுவை இரத்தினதுரை அவர்களின் செயற்பாடுகள், அவர்களுக்கிடையேயான உறவுநிலை பற்றியெல்லாம் நகைச்சுவையோடு உரையாடினார். மேலும் தமிழர் கலாச்சாரத்தில் பெண்களின் நிலை பற்றியும் சிலவிடயங்கள் பேச்சில் வந்து போனது. இளையோரின் கல்வி, கலைவளர்ச்சி என்பவை சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது என்ற தொனியில் சில விடயங்கள் பேசிக்கொண்டிருந்தார். இடையில் நகைச்சுவையாக, அவற்றில் தான் செலுத்தும் கவனத்தை விட தன் மனைவி செலுத்தும் கவனம் அதிகம் என்றும் தன் பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனம் செலுத்திக் கவனிப்பவர் தன் மனைவிதான் என்றும் சொன்னார்.

நீண்ட நேர உரையாடல், சிந்தனை, சிரிப்பு, நகைச்சுவை, துயரம் என்ற உணர்வுகளோடு நகர்ந்து, கடைசியில் புகைப்படம் எடுப்பதில் போய் நின்றது.
‘எமது போட்டோ கமரா, வீடியோக் கமரா எல்லாவற்றையும் வேறொரு இடத்தில் வாங்கி வைத்துவிட்டார்கள்…’ என்று கவலையுடன் மெதுவாகச் சொன்னேன். உடனே விருட்டென்று இருக்கையை விட்டு எழுந்தார்.

‘டேய் என்னடாப்பா? என்ன செய்திருக்கிறியள்? ஓடிப்போய் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வாங்கோடா…’ என்று உரத்த குரலில் அதட்டினார், ஒருவித செல்லக் கோபத்தோடு!

நான் திடுக்குற்றுப் போனேன். நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு உரிமையோடு இந்த விடயத்தைக் கையாள்வார் என்று.அடுத்த நிமிடமே எமது புகைப்பட, ஒளிப்பதிவுக் கருவிகள் எம் முன்னால் இருந்தன.

தமிழ்ச்செல்வன் எங்களுடைய புகைப்படக்கருவியை வாங்கிப் படம் எடுக்கத் தொடங்கினார். தயாநிதி மாஸ்ரர் எங்கள் வீடியோ கமராவை வாங்கி ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினார்.

தலைவர் சிரித்தவாறே பகிடியாக, ‘பெரிய பெரிய தளங்களுக்குப் பொறுப்பானவர்கள் எல்லாம் இண்டைக்கு கமராவோட நிக்கினம்’ என்றார். சிரிப்பொலி அந்த மண்டபத்தை நிறைத்துக் கொண்டிருந்தது.

என் சின்னமகன் அந்த நேரம் பார்த்து, குளியலறைக்குள் நுழைந்திருந்தான். அவனுக்கு வன்னிக் காலநிலை மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்ததால் ஏற்கனவே காலையில் வாந்தி எடுத்திருந்தான். அன்றும் அந்த சமயத்தில் அதற்காகத்தான் போயிருந்தான் என்று நான் மனதினுள் யோசித்தேன். அவன் திரும்பி வரும் போது ‘பரவாயில்லை ஆற அமர அலுவலை முடிச்சுக் கொண்டு வாங்கோ. நாங்கள் காத்திருக்கிறம்..’ என்றார் தலைவர் பகிடியாக.

பின்னர் அவன் வாந்தியெடுக்கிறான் என்றறிந்ததும் உடனே ‘பிள்ளையை பொன்னம்பலம் ஹொஸ்பிட்டலுக்கு கூட்டிப்போங்கோ…’ என்று தமிழ்ச்செல்வனிடம் கட்டளையிட்டார்.

நான் ‘பரவாயில்லை….நாங்கள் போகும் போது அதில் போய் காட்டிவிட்டுப் போகிறோம் …’ என்று அவரைத் தடுத்தேன். அண்ணர் அவனுக்கு அருகில் வந்து அவனின் தலையைத் தொட்டுத் தடவி, ‘காய்ச்சல் காய்கிறதா? என்ன நடந்தது? இரவில ஏதும் நுளம்புத் தொல்லையோ?’ என்றவாறே ‘ஏண்டாப்பா அங்கை போய் அவயளின்ரை நுளம்பு வலையை திரும்ப ஒருக்கால் பார்த்து செக் பண்ணுங்கோ…’ என்று பின்னால் திரும்பிச் சொன்னார்.

அன்றைய மாலைப்பொழுது அவருடன் அப்படியே இனிமையாகக் கழிந்து போனது. எமக்காக ஏற்கனவே தரப்பட்டிருந்த அரசியல்துறை உப பொறுப்பாளர் தங்கன் அவர்களின் ஜீப் வண்டி வாசலில் வந்து நின்றது. நிர்மலன் சாரதி இருக்கையிலிருந்து இறங்கி புன்னகைத்தவாறே எம்மை வரவேற்றார்.

நாங்கள் வாகனத்தில் ஏறும் போது ஒரு கனவுலகிலிருந்து விடுபடுவது போல் தோன்றியது!

தாய் மண்ணிலும் மக்களிலும் மாவீரர்களிலும் அளவிலாப் பற்றும், அன்பும், நட்பும், கொண்ட ஒரு நேர்மையான தலைவனை விட்டுப் பிரிகிறேன் என்ற துயரம் மனதிற்குள் பொங்கிப் பிரவாகித்துக் கொண்டிருந்தது! நான் உயிராய் நினைக்கும் என் தாய்மண்ணின் ஒளிக்கற்றையொன்று கழன்று போவது போல் மனதிற்குள் வெறுமையாய் நின்றுகொண்டிருந்தேன்!

அண்ணர் கையை அசைத்தவாறே புறப்படுவது தெரிந்தது….!

அழியா நினைவுகளோடு..

சந்திரா இரவீந்திரன்

வைரவரிகள்

கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் குறிப்பேட்டு வரிகளிவை. பல கரும்புலி நடவடிக்கைகளில் பங்கு கொண்டு அவற்றைக் கருவேங்கை என்ற பெயரில் வைரவரிகளாக்கிய மேஜர் அறிவுக்குமரன் 11.04.2000 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவடைந்தார்.

Vairavarikal......black tigers

எவ்வளவு கஸ்ரப்பட்டு பயிற்சி எடுத்தும் கூட இதுவரை நடவடிக்கைக்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்காதபடியால் செங்கதிர் அழுதுகொண்டே இருந்தாள். அவள் மட்டுமல்ல எல்லோருமே. MI.17 உலங்கு வானூர்தி மீதான தாக்குதலுக்குச் சென்றபடியால் எமக்கும் இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. 25.01.1998 காலை மலர்வதற்கு முன் எங்கள் உள்ளங்கள் தான் மலர்ந்து மகிழ்ந்து கொண்டன. ஆம் குமுதன் அண்ணாவின் தலைமையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டோம். அதில் செங்கதிரும் ஒருத்தியாய்……..

வழமைபோல் பயிற்சிகள் ஆரம்பமாகின, பெருங்கடலில், சிறுங்கடலில், சேற்று நிலத்தில், மணல்பிரதேசத்தில், காட்டில், வெட்டைவெளியில், கட்டடத்தில், தடைகளில் என பாரம் தூக்கியபடியான பயிற்சிகள் இரவு பகலாய் ஓய்வு உறக்கமின்றி உண்பதற்கே நேரம் இன்றி கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எலும்பும் தோலுமாய் எம் உருவங்கள் இருந்தன. செம்பகத்தின் கண்கள் போல் எம் கண்கள் சிவந்து கிடந்தன, எனினும் பயிற்சி தொடர்ந்தது. இப்படித்தான் எதிரியின் இலக்கு மீது சாக வேண்டும் என்பதற்காய் இவர்கள் பயிற்சியில் கூட தம்மைச் சாகடித்துக் கொண்டிருந்தார்கள்.

எமது ஆயுதங்களும் வெடிமருந்துகளும், நீர்க்காப்பிடப்பட்டுத் தயார்படுத்தல்களோடு எஞ்சி நின்ற தோழிகளிடமும், பயிற்சி ஆசிரியர்கள், அங்கிருந்த முகாம் போராளிகளிடமும் விடைபெற்றோம்.

எமக்கான நகர்வுப் பாதைகளையும் தாக்குதல் வியூகத்தினையும் தாக்குதலுக்கான முடிவுகளையும் தளபதி தெளிவு படுத்தினார். இரவு உணவை மாலையே உண்டு, படங்கள் எடுத்து அவர்கள் விழிகசிந்து நிற்க நாம் கையசைத்து மீண்டும் விடை பெற்றோம். சிலருக்கு அதுவே இறுதி விடைபெறலாகவும் இருந்தது.

30.01.1998 மாலை 6.45க்கு பற்றைகள், அருவிகள் கடந்து, வெளிகள் வெட்டைகள் தாண்டி, நீரேரிக்கரையை அடைந்தோம். இராணுவ முன்னணிக் காவல் நிலையில் ‘ரீப்’ லைற்றின் ஒளிச் சிதறல்கள் மெல்லிய நீரலையில் பட்டுத் தெறித்து நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வர்ணஜாலமாய் அது காட்சியளித்தது. ஆனால் அதுவே மனதுக்குள் ஒரு ஆவேசக் கனலையும் மூட்டிக் கொண்டிருந்தது.

எம்மக்கள் தங்க இடமின்றி அகதியாய் தெருவெங்கும் குப்பி விளக்கே இன்றி அலைந்து திரிகையில் இவனோ எமது மண்ணில் திருவிழா நடைபெறும் கோயில்கள் போலல்லவா? இருக்கின்றான். நீரேரியால் நகர்ந்தோம். பாரப்பைகளை அணைத்தபடி சில இடங்களில் மார்பளவு நீரும், சில இடங்களில் கால் அளவு நீருமாகவே இருந்தது. இவற்றுக்கு ஏற்றால்போல் எம்மை எமது உருவை மறைத்தபடி நகரவேண்டி இருந்தது. எமது அணிக்கு முன்பாக ஆசா அக்காவின் அணி இயக்கச்சிப் பகுதியில் இருந்த ஆட்லறிகளை தகர்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தது.

முன்னணிக் காவல் நிலையின் கம்பி றோல்த் தடையைத்தாண்டி, காப்பரனையும் மறைப்பு வேலியையும் தாண்டி மீண்டும் இராணுவ வலயத்தின் உள்ளேயே கடல் நீரேரியால் நடந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் தரையில் நீர் வடியும் வரையும் நின்றோம். அப்போது மங்கை அக்கா என்னிடம் அறிவுக் குமரண்ண்ண நாங்கள் வரேக்க “பொயின்ற்றில்” இருந்து டோச் அடித்துப் பார்த்தாதானே அதாலே ஏதும் பிரச்ச்சினை வராதோ எனக்கேட்டார்.

சாதாரண போராளியான என்னிடம் அவர் கேட்டதற்கு நான் வேவுக்காரர் சொன்னபடியே அவன் இப்படித்தான் நெடுகவும் அடிப்பான். ஆனால் பயத்தில ஒண்டுமே செய்யமாட்டான் என்று சொன்னதையே சொன்னேன். பின் வெளிகள் ஊடாகவும் மணற்பாங்கான தரைத்தோற்றத்தின் ஊடாகவும் தடயம் இன்றி நகர்ந்து வீதி ஒன்றைக் கடந்து ஓரிடத்தில் தங்கி, உடனே எமது நீர்க்காப்பிடப்பட்ட ஆயுத வெடிபொருட்களை வெளியில் எடுத்து எம்மை தயார் செய்து கொண்டோம். பின் தடயப் பொருட்களையும், நனைந்த உடைகளையும் மறைத்துக் கொண்டு இரவு 12.40 க்கு தூங்கினோம். பின் அதிகாலை 4.10க்கு எழுந்து அதிக முட்பற்றைகள் நிறைந்த இறுசல் காட்டுக்குள் நுழைந்து முக்கோண நிலை எடுத்துத் தங்கினோம்.

கரும்புலி கப்டன் குமரேஸ் எப்போதும் பம்பல் அடித்தபடி எல்லோருடைய பழ ரின்னையும் வெட்டி வெட்டிச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். கரும்புலி கப்டன் செங்கதிர் ஆசை தீரும் மட்டும் நித்திரை கொண்டதால் அவளின் கண்கள் தவளையின் கண்போல வீங்கிக்கிடந்தது. அன்று தான் எல்லோருக்குமே நல்ல ஓய்வு கிடைத்தது. ஆசை தீரும் மட்டும் நித்திரை கொண்டாச்சு இனிச் செத்தாலும் பரவாயில்லை என்று சொன்னபோது அவளின் மெல்லிய உதடுகள் உதிர்த்த அந்த புன்சிரிப்பை எப்படித்தான் மறக்க முடியும். கரும்புலி மேஜர் குமுதன் அண்ணா அடிக்கடி அருகில் இருந்த மரத்தில் ஏறி எமது இலக்கு அமைந்திருக்கும் அந்த ஆனையிறவுத் தளத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

கரும்புலி கப்டன் செங்கதிர் நாம் கேட்காமலே (குமுதன், குமரேஸ், நான்) சொல்லிக் கொண்டிருந்தாள். நான் ஒன்பது வயதில என்ற ஆசை அண்ணாவைக் கண்டாப்பிறகு காணவே இல்லை என்றபோது அவளின் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. இயக்கத்துக்கு வந்தாப்பிறகு “அம்மா அப்பாவைக் கூடக் காணேல்ல” அது தான் எனக்குக் கவலை. மற்றும்படி இந்த மண்ணுக்காக என்னைத் தியாகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்வுதான். இதை நாங்களும் பெரும் வேதனையோடுதான் கேட்டுக் கொண்டிருந்தோம்.

இருவர் நீர் எடுக்கச் சென்ற போது இராணுவத்தினர் வேட்டைக்குப் போய்க் கொண்டிருந்தார்களாம். நல்லவேளை அவன் இவர்களைக் காணவில்லை. ஆசா அக்காவின் ரீம் எம்மில் இருந்து 75 மீற்றரில் தான் தங்கி இருந்தது. மதிய உணவை எல்லோரும் உண்டோம். தடயப் பொருட்களை பாரப் பையினுள் திணித்து நானும் சுபேசன் அண்ணாவும் குமரேசும், இன்னும் ஓர் போராளியும் முற் பற்றைகளின் ஊடாக இழுத்துச் சென்று ஓரிடத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த வெடிச்சத்தம் எங்களை தங்கியிருந்த இடத்துக்கு வேகமாக ஓடவைத்தது – ஓடினோம். அங்கு போய்ப் பார்த்தபோது போராளி ஒருவரின் “ஜக்கட்” தவறுதலாக வெடித்து இருந்தது. முற்பற்றைகளும் மரக்கிளைகளும் துகழாகிக் கிடந்தது.

நல்ல வேளையாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. வெடிக்கும் போது நேரம் 4.40 இருக்கும். பின்னர் உடனேயே எமது நிலைகளை மாற்றி நகர ஆரம்பித்தோம். அது மிகவும் இறுசலான முட்பற்றைகள் நிறைந்த காடானபடியால் நகருவது மிகவும் கடினமானதாகவே இருந்தது. நகரும் திசை மாறி அதைத் தவறவிட்டபடியால் சங்கத்தார் வயலின் அருகில் இருந்த முகாமை அடைந்துவிட்டோம். அங்கிருந்து மெயின் முகாமுக் ‘ரெலிபோன்’ லைன் செல்லும் பாதையினைத் தொடர்ந்து நகர்ந்து ஓரிடத்தில் நீர் குடித்துக்கொண்டிருந்தபோது. கரும்புலி மேஜர் ஆசா அக்காவின் குழுவும் அவ்விடத்துக்கே வந்து சேர்ந்தது. எல்லோரும் எல்லோரிடமும் விடைபெற முன்னர். கரும்புலி கப்டன் உமையாள் என்னிடம் அண்ணா மில்லர் அண்ணாட்ட என்னத்தில போறிங்கள் எனக் கேட்டதற்கு நானோ கிபிரில தான் போக வேண்டும் என்று சொன்னேன் ஆனால் அவளோ அதைவிடவும் வேகமாய் போயேவிட்டாள். எல்லோருமே கட்டாயம் திரும்பி வாங்கோ, காயப்பட்டால் எல்லாம் ‘சாச்’ இழுத்துப் போடா தேயுங்கோ – என அதியுயர் பாசத்தின் வெளிப்பாடாய்ச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கரும்புலி மேஜர் மங்கையக்கா இலக்கை அழிச்சா கட்டாயம் திரும்பி வருவேன் என்று சொல்லிப் போட்டுப் போனவ தான். பின்னர் அவா வரவில்லையே என அறிந்தபோது இலக்கு அழிக்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டோம். இப்படித்தான் எல்லோருமே எல்லோரிடமும் மனமின்றி விடைபெற்றோம்.

31.01.1998 இரவு 7.50 தங்கித்தங்கி, மெல்ல மெல்ல அவதானித்தபடி L.P காரனின் கண்ணில் படாமல் நகர்ந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் தங்கி பழ ரின் சாப்பிட்டபோது குமுதன் அண்ணா ஏசியபடியால் குமரேஸ் வேண்டாம் என்றே இருந்தான் பின்னர் மெதுவாக எனக்கு வயிறு ஏலாமக் கிடக்கு ஆமிக்காம்ப்பில சோடா குடிச்சாத்தான் சரிவரும் என்று சொல்லி முடித்தான்.

கண்டிவீதியை கடப்பதற்காய் அதில் இருக்கும் காவல் நிலையில் எதிரியின் நடமாட்டத்தை அவதானிப்பதற்காய் வீதியில் இருந்து 30 மீற்றரில் தங்கியிருந்தோம். எம்மால் அதில் இருக்க முடியவில்லை. எதிரியின் மலநாற்றம் மூக்கைத்துளையிட உமிழ் நீர் வாயை முட்டியிருந்தது. துப்பினால் எதிரிக்கு கேட்டுவிடும் என்பதால் துப்பாமலே இருக்க வேண்டியிருந்தது. பின் கண்டி வீதியை எதிரியின் காவல் அரணுக்கு அருகினாலேயே பரவல் வரிசையில் நகர்ந்து கடந்து முற்பற்றைகள், வெளிகள் நீர் நிலைகள், சேற்று நிலங்கள் தாண்டி எதிரியின் “சாச்சர் லைற்றின்” பார்வையில் எம்மை அடிக்கடி மறைத்தும் நகர்ந்து புகையிரத வீதியையும் கடந்து நகர்ந்து கொண்டிருந்தோம். காவல் அரண்கள், அடுத்துள்ள பயிற்சி மைதானம், மண் அணை, வெட்டை வெளிகள் தாண்டி இறுதியாய் தங்குமிடத்தில் 12.30 மணிவரை தங்கினோம்.

கரும்புலி மேஜர் குமுதன் அண்ணா எல்லோருக்கும் குளுக்கோஸ் தந்தார். கரும்புலி லெப் . கேணல் சுபேசன் அண்ணா தான் குடித்த மீதி நீரை எனக்கு இறுதியாய் தந்தார். தண்ணீர்க் கான்களை அதிலேயே போட்டு விட்டு நகர்ந்தோம். அது பால்போன்ற நிலவு வெட்டை. எந்த இருட்டிலும் வானவிளிம்பு தெரியும் . அதைவிட கிளாலிப் பக்கமும் , வாடியடிப்பக்கமும், உல்லாச விடுதிப்பக்கமும் என எப்பக்கமும் எரிந்து கொண்டிருக்கும் ரீப் லைற்றினதும் “போக்கஸ்” லைற்றினதும் ஒளிகள் பாம்பு ஊர்ந்தாலே காட்டிக் கொடுத்துவிடும். அப்படியான உப்பள வெட்டை அது, மெல்லென அதனூடாக ஊர்ந்து ஊர்ந்தும் இருந்தபடியும் நகர்ந்து சுமார் 450 மீற்றர் தூரம் நகர்ந்திருந்திருப்போம். நாம் உள் நுழையும் காவல் நிலைக்கு முன்னால் நேர் எதிரே 65 மீற்றரில் நிலை எடுத்து எம்மையும், வெடிமருந்துகளையும், இறுதியாய் தயார் செய்து கொண்டோம்.

ஓர் போராளியும் நானும் காப்புச் சூட்டுக்கு தயாராகும் போது லெப் .கேணல் சுபேசன் அண்ணாவும் கண்ணாளனும் கம்பிறோல்த் தடையைத் தகர்ப்பதற்காய் டோபிடோவுடன் போனபோதுதான். வானவேடிக்கையையும் மிஞ்சியதாய் ஆசா அக்காக்கள் சென்ற முகாமின் பக்கம் வெடியதிர்வுகள் கேட்ட வண்ணமே இருந்தது. அதில் மேஜர் ஜெயராணி, கப்டன் உமையாள், கப்டன் தனா, கப்டன் நளா, கப்டன் இந்து, மேஜர் மங்கை, மேஜர் ஆசா ஆகியோர் உடல் கரைத்து தேச விடிவுக்காய் தம் தேகத்தை உப்பளக்காற்றோடு கரைந்தனர்.

டோபிடோவின் ஒளிச்சிதறலோடு சேர்ந்து கம்பிறோலும் மேலே எழுந்து கொண்டது. உடனே நாம் எல்லோரும் முதலாவது தடையினூடாகச் சென்று இரண்டாவது தடையை கட்டரினால் வெட்டும் போது, இடது பக்க காவல் நிலையில் இருந்து வந்த எதிரியின் சூடுகள் எம்மைக் காயப்படுத்திக்கொண்டே இருந்தது .எனது பக்கக் காவலரண் என்றபடியால் எனது RPK LMG அச்சூட்டை முற்றாக இல்லாது செய்துவிட.

கரும்புலி மேஜர் குமுதன் அண்ணாவுக்கு வலது கை முற்றாக முறிந்தே இருந்தது. அவரின் தொலைத்தொடர்பு சாதனம் நொறுங்கி விட்டது. கரும்புலி கப்டன் குமரேசிற்கு வலது கால் முற்றாக உடைந்த நிலையில் தடையுக்குள்ளேயே கிடந்தான். கரும்புலி கப்டன் செங்கதிருக்கு இடது கையிலும் வலது பாதத்திலும் காயம். மேலும் ஐந்து பேருக்கு சிறிய காயங்கள். எனக்கு வலது கால் மூட்டிலும் இடது காலின் முன்பகுதியிலும் ரவைகள் துளைத்து குருதி கொப்பளித்துக் கொண்டிருந்தது. “எல்லோரும் இதால வாங்கோ” என்ற குமுதன் அண்ணாவின் குரலோடு அவரோடு எல்லோருமே மிக வேகமாய் உள் நுழைந்து கொண்டிருந்தோம். காயத்தின் வேதனைகள் ஒன்றுமே எமக்குத் தெரியவே இல்லை.

ஆட்லறி நிலைப்படுத்தும் பகுதி வெறுமையாய் கிடந்தது. எங்கள் உள்ளத்திலும் ஒரு வித வெறுமை குடிகொள்ள லெப் .கேணல் சுபேசன் அண்ணாவின் 40mm செல்லும் எனது கவசத்துளைப்பு ரவையும் இடது புறத்தால் மாடிக்கட்டடத்தையும் தகரக் கொட்டகையையும் கிளியர் பண்ணிக் கொண்டிருக்கும் போது வலது புறமாய் இருந்து வந்த சூட்டினை நோக்கி சுட்டுக்கொண்டே போன சுபேசன் அண்ணரின் தொடர்பு மட்டுமல்ல அவரின் சுவாசமும் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு நின்றே போனது. அதுவரையும் குண்டு அடி ரவையடி அங்கால அடி இஞ்சால அடி என்று கட்டளையாய் வந்த அவரின் குரல் கணீர் என்று நின்றே போனது .

சுபேசன் அண்ணாவே!
கடைசியில் கூட அருகில் நின்று
கட்டளை பிறப்பித்து – உங்கள்
கட்டுடலை இறைப்பித்து போனவரே
பொறுமையின் பெறுமதியாய்
எமக்கு என்றும் வழிகாட்டி
நிற்பீர் – கடைசியாய்
நீர் தந்த தண்ணீர்
எமக்கு என்றும் கண்ணீராய்………

திடீர் என பெரிய கட்டடம் ஒன்றில் இருந்து வந்த சரமாரியான சூட்டில் எனது இடது மேல்புறக்கையில் காயமடைந்த நிலையிலும் அக்கட்டடத்தின் சூட்டினை எனது RPK LMGயிலும் கைக்குண்டுகளாலும் நிறுத்தும் போது, (இதில் ஏழு கைக்குண்டுகளைப் பாவித்தேன்)

இரு நண்பர்கள் உடனே அவ்விடத்துக்கு வந்தே விட்டார்கள். எதிரி தனது முகாமுக்குள்ளேயே கத்திக் கத்தி ஓடிக்கொண்டே இருந்தான். இப்போது எந்த எதிர்ப்புமே வரவில்லை. எல்லோரும் சத்தம் வரும் திசைகளை நோக்கிச் சுட்டுக் கொண்டே நின்றார்கள். கரும்புலி மேஜர் குமுதன் அண்ணா எல்லோரையும் “விக்ரோ” பண்ணும்படி கூறியதாக யாரோ சொன்ன போது பெரிய ஒரு வேதனையோடும், நெஞ்சு கனக்கும் வேதனையோடும், தொலைத்தொடர்பு பரிவர்த்தனையையும், கட்டளைத் தலைமையையும் குழப்பி திகிலடைய வைத்த அரைகுறை திருப்தியோடு எல்லோரும் பின்வாங்கினார்கள்.

நான் குமுதன் அண்ணரிடம் வந்தேன் அவர் அதிக குருதி வெளியேறியதாலும் மார்பிலும் காயமடைந்ததாலும் அதிகமாக மயக்கமடைந்திருந்தார். அந்த நிலையிலும் “அநியாயமாய்ச் சாகக்கூடாது எல்லோரும் போவோம்” என்று தன்னையும் கொண்டு போகும்படி சொல்ல, அவரை அணைத்தபடி எனது காயத்தின் ரண வேதனையோடு கூட்டி வந்தேன். கொஞ்சத் தூரத்துக்கு நண்பி ஒருவர் உதவி செய்தார். பின் வெடிமருந்துப் பையோடு அவாவும் போய்விட முன்னே மண் அணை அரைகுறையாய் வெட்டப்பட்ட கம்பித்தடையையும் தாண்டி வரும்போது.

கரும்புலி கப்டன் குமரேஸ் “அறிவுக்குமரண்ண என்னையும் கொண்டு போங்கோ காலில்லாட்டியும் இடியனையாவது கொண்டுபோய் இடிப்பன்” என்று அந்த முடியாத வேளையில் கூட சொன்னான். தான் தன்னை இழக்கின்ற போது எதிரியையும் இலக்கையும் அழிக்க வேண்டும் என்ற தவிப்பைப் பாருங்கள். என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் தவித்திருக்க அவன் எதுவுமே சொல்லவில்லை “சாச்சை” மட்டும் ஓன் (ON) பண்ணினான் . அதனோடு குமரேசின் இறுதியான வார்த்தையையும், அவனின் சிரித்தபடி இருக்கும் இளைய முகத்தையும், ஏன் அவனின் அந்தக் கட்டு உடலைக் கூட எங்களால் இனிக் காணவே முடியாது என்பதை நினைத்த போது நெஞ்சில் ஒரு பெரும் வேதனையும் உறைந்து போனது.

குமரேஸ்!
தம்பி
நீ விடைபெற்றுப் போய்
வெகு நாள் ஆகவில்லை – எனினும்
உடைபட்டுப் போனது – எங்கள்
உள்ளம்தான் – கால் உடைபட்டு
நீ கிடந்த காட்சியை
வெடியோடு நீ கரைந்த பொழுதினை
நினைக்கும் போது
வறண்டு போவது
தேகம் மட்டுமல்ல
கண்களும் தான் ….

குமுதன் அண்ணாவைக் கொண்டு வந்து கொண்டே இருந்தேன். அவர் அடிக்கடி பிடியிலிருந்து நழுவி நழுவி தலையைக் குத்திக் குத்தி விழுந்து கொண்டே இருந்தார். அந்த ஆனையிறவின் கட்டளை மையத்தில் இருந்து 180 மீற்றரில் தன்னால் முழுமையாகவே இயலாது போக மயக்கமடைந்த நிலையிலும் நிதானமாய். தனது “சாச்சை” கழற்றி தனது நெஞ்சில் வைக்கும்படி கூறவே எப்படியோ மனதைத் திடப்படுத்தி அதைக் கழற்றி ON செய்யும் போது அதில் இருந்த இயங்கு நிலைத் தடையைக் கூறி அது இயங்காது எனக்கூறியபோது அவர் “என்னால இனி வரேலாது உங்கட சாச்சைக் கழற்றி வையுங்கோ” இதைக் கேட்டதும் நான் உறைந்தே போனேன், என்னோடு இருந்தவருக்கு எனது சாச்சையே வைப்பதா? என்னால் அதைப்பற்றி நினைக்கக் கூட முடியாமல் இருந்தது. அப்படி எண்டால் இரண்டு பேருமே ஒண்டாக் கிடந்து “சாச்” இழுப்பம் என்று வேதனையோடு கூறி முடிக்கும் முன் “அநியாயமாய் நாங்கள் சாகக்கூடாது. கெலிச்சண்டையைப் போல நிறையச் செய்திட்டுத்தான் வீரச்சாவடைய வேண்டும். இஞ்ச நடந்த பிரச்சனையை ஒண்டும் விடாமல் கட்டாயம் போய்ச்சொல்லுங்கோ” என இடைவிடாது சொல்லிச் சொல்லிக் கொண்டான். மீண்டும் மீண்டும் அதே போதனையும், அதே கட்டளையும் தான் என்ன செய்வது பெரும் வேதனையோடு எனது உடலோடு இருந்த ‘சாச்சை’ கழற்றி அவர் சொன்னபடியே நெஞ்சில் வைத்து ஒரு பொத்தானை ON பண்ணியபடி எஞ்சியிருந்த அவரின் இடது கையில் மற்றப் பொத்தானைக் கொடுத்த போது. மீண்டும் முன்னர் சொன்ன அதே போதனையும், கட்டளையும் அதனோடு இறுதியாய் தம்பி விமலநாதனிடம் சுகமாக இருக்கச் சொல்லுங்கோ கெதியாய் போங்கோ கெதியாய் போங்கோ….. இது தான் அவர் என்னிடம் மட்டுமல்ல அவர் உதடுகள் சொன்ன இறுதி வார்தையும்.

வோக்கி மட்டுமல்ல என் உள்ளமும் சிதைந்து போன நிலையில் அவரின் வோக்கியையும்”சாச்சின்” பொறித் தொகுதியையும் எடுத்துக் கொண்டு எனது பாதங்கள் தான் நகர்ந்தன. நான் நகரவே இல்லை. இப்போதும் அங்கு தான் என் உயிரே. 05 மீற்றர் தூரம் சென்றிருப்பேன். எதிரி அந்த நீண்ட இடைவெளியில் தன்னை மீண்டும் தயார்படுத்தித் தாக்க தொடங்கினான்.

அப்போது திரும்பிப்பார்த்தபடி போய்க் கொண்டிருக்க எனது சாச்சின் வெடியதிர்வோடு அதன் ஒளிச்சிதறல்களோடு குமுதன் அண்ணாவின் உடலும் செந்துகழாகியது. அம்மாவை விட பாசமாய் எம்மை அரவணைத்த அந்த உயிர் நண்பனை மூன்று களத்திலும் எமக்கு தலைமை தாங்கிய அந்த வீரனை, எனது வாழ்நாளிலே என் மனதைக் கவர்ந்த மாமனிதரை நாம் இழந்து போனோம்.

05 நிமிட நேரக்கணிப்பில் இருந்த குமரேசின் வெடிமருந்துத் தொகுதியோடும் கிளியர் செய்ய முன்னுக்கு வந்த எதிரிகளோடும் சேர்ந்து குமரேசின் உடலும் பெரும் வெளிச்சத்தோடு உப்புக் காற்றில் கரைந்து கலந்து என் மூச்சுக் காற்றோடு கலந்தது.

குமுதன் அண்ணாவே!
என் அம்மாவில் கூட காணாத
உங்கள் அரவணைப்பை
நினைக்க விழிகள் கலங்குதே
மூன்று களத்திலும் நீங்களே
தலைமை ஏற்றீர் -இன்று
எம் மூச்சில் கூட சுவாலை ஏற்றிச்
சென்றீரே……..

இந்த இரண்டு தோழர்களினதும் உடல்கள் சிதறியதைப் பார்த்த என் உள்ளமும் சிதறியதுதான். எனினும் எனது அப்போதைய நிலையை எனது அப்போதைய உணர்வை எப்போதுமே என்னால் எழுத்தில் வடிக்க முடியாது. ஏனெனில். ஒன்றாய் உண்டு ஒன்றாய் உறங்கி ஒன்றாய்ப் பயிற்சி எடுத்து. ஒன்றாய் பல தாக்குதல்களுக்குச் சென்று, ஒன்றாய் எந்த இன்பங்களையும் துன்பங்களையும் பங்கு கொண்டு ஒரு கூட்டுப் பறவைகளாய் இருந்த அந்தப் பாச உறவுகள், எம் உயிர்ச் சொந்தங்கள். என் கண்முன்னே எனது ‘சாச்’ சாலும் தங்கள் ‘சாச்’ சோடும் வெடித்து இருளோடு இருளாகிப் போனார்கள் அந்த இரும்பு மனிதரின் உள்ள உணர்வை அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை, எந்தக் கரும்புலிகளினால் கூட வார்த்தைக்குள் அடக்க முடியாது. கரும்புலிகளின் தியாகமே அப்படியானது தான். அவர்களின் நினைவைச் சுமந்தபடி என் உள்ளத்தில் ஒருவித புதிய உத்வேகம் உந்தித்தள்ள அந்த ஆனையிறவின் மையத்தால் நகர்ந்து கொண்டிருந்தேன்.

ஒரு சிறிய பற்றைக்குள் முனகல்ச் சத்தம் கேட்கவே அங்கு போய்ப்பார்த்தேன். திகைத்தே போனேன். கரும்புலி கப்டன் செங்கதிர். அண்ணா அவையள் முன்னுக்குப் போய்க் கொண்டிருக்க்கினம் அவள் சொல்லி முடிப்பதற்குள், இதுவரையும் இருவரையுமே காப்பாற்ற முடியாமல் போன வேதனை மேலிட இவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு துடிப்பு. ஒரு புதிய ஆவேசம் என்னில் எழ அவளைத் தூக்கி அவளின் ஒரு கையை என் தோளைப் பிடித்திருக்க எனது வலது கையால் அவளை அணைத்தபடி எனது காயத்தின் வேதனையோடும் அதை வெளிக்காட்டாமல் தாண்டித் தாண்டி அவளைக் கொண்டு வந்து கொண்டிருந்தேன். எதிரி முதலாவது ‘பரா’ வெளிச்சம் மறையும் முன்னர் மற்றப் பராவையும் அடித்துக் கொண்டிருந்தான். ஆனையிறவே அந்த நடு இரவில் பட்டப் பகலாய்க்கிடக்க கவர் எடுப்பதற்கு எந்த தடயமுமே இல்லாத அந்த வெட்டை வெளியால் நகர்ந்து கொண்டிருந்தோம். மோப்ப நாய்களும் துப்பாக்கி ரவையும், 40mm எறிகணையும் எம்மைத் துரத்திக்கொண்டேயிருந்தது. நாம் சென்றுகொண்டேயிருந்தோம்.

ஒரு இருசல் பற்றைக்கு அருகில் முன்னர் வந்தவர்களைக் கண்டு, பின் அவர்களோடு சேர்ந்து சென்றுகொண்டிருந்தோம். எதிரி துரத்திக்கொண்டேயிருந்தான். காயப்பட்டு அதிக குருதி வெளியேறியதால், செங்கதிர் தண்ணீர் தண்ணீர் என்று கத்திய வண்ணமே வர ஒரு உப்பு நீர் ஓடையில் நீரைக் குடித்ததும் உப்புத் தன்மை எமது காயங்களை இன்னும் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. செங்கதிர் மயக்கம் வரும்போது இருந்துவிடுவாள், பின்னர் படுத்தபடி ‘கொஞ்சநேரம் இருந்துட்டுப்போவம்’ என்பாள். புகையிரத வீதியைக் கடந்து வந்துவிட்டோம். செங்கதிர் படுத்தால் எழும்பவே மாட்டாள், எழுந்து நடக்கும்போது எனது பிடியிலிருந்து நழுவி அடிக்கடி மயங்கி மயங்கி இருந்துவிடுவாள்.

மற்றவர்கள் விடிவதற்கிடையில் கண்டிவீதியைக் கடக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்க… எங்களுக்காக நீங்கள் எல்லோரும் நின்று வீணாய்ச் சாகக்கூடாது நீங்கள் போங்கோ, விடிஞ்சாப்பிறகு கொஞ்சம் மயக்கம் தெளிஞ்சிடும் வாறம் என்று சொல்லி எனது ROK LMG யைக் கொடுத்துவிட அவர்களும் ஒரு றைபிளை வைத்துவிட்டுச் சென்றார்கள். மலேரியாக் குளிசை குடித்த மாதிரியான மயக்கம் ஏற்படவே வாயில் குப்பியும், கையில் குண்டுடனும், காயத்தின் வேதனையால் அனுங்கிக்கொண்டு கிடந்தோம்.

01.02.1998 காலை 6.00மணி இருக்கும் செங்கதிர் படுத்திருந்த பூவரச மரத்தடியில் எனது கோல்சரில் கிடந்த கைக் குண்டுகளில் ஒன்றினைச் செங்கதிருக்குக் கொடுத்துவிட்டு மிகுதி நான்கு குண்டுகளையும் இடுப்பில் செருகிவிட்டிருந்தோம். அது வெட்டை வெளி உருமறைப்புச் செய்யமுடியாத ஈச்சம் பற்றைகள் நாம் இருந்த இடத்திலிருந்து கண்டி ரோட் 300m றில் இருந்தது. அதன் இரு மருங்கும் 200m இடைவெளியில் காவல் அரண்கள் தெரிந்தன. பகலிலே வீதியைக் கடக்க முடியவே முடியாது. இருண்டபின் தான் அந்த வீதியைக் கடக்க வேண்டும். அதுவரையும் வேதனையைத் தாங்கியபடி சாப்பாடும், நீரும் இன்றி இருக்கவேண்டும். அதைப் பற்றி நினைக்கவே முடியாமல் இருந்தது.

செங்கதிரின் கால்காயத்திற்கு என்னிடமிருந்த ஒரேயொரு குருதித் தடுப்புப் பஞ்சணையைக் கட்டிவிட்டு அவளின் அருகிலே அடிக்கடி ஏற்படும் அரைகுறை மயக்கத்தில் கிடந்தோம்.

கரும்புலி கப்டன் செங்கதிர் குமுதன் அண்ணையாக்கள் பாவம் என அடிக்கடி சொல்லிச் சொல்லிக் கொண்டிருந்தாள். மற்றவர்களுக்காக இரக்கப்படுவதிலும், கவலைப்படுவதிலும் அவர்களுக்குத்தான் எவ்வளவு திருப்தி பாருங்கள்.

தண்ணீர்த் தாகம் அவளை வாட்டி எடுத்திருக்க வேண்டும். அடிக்கடி தாகத்தால் கத்திக் கொண்டிருந்தாள். மிகுதியாய் கிடந்த குளுக்கோசை அவளின் வாயில் கொட்டும்போது, அண்ணா இதை உமிஞ்சு சாப்பிடக் கூட உமிழ் நீர் இல்லை என அவள் கண்ணீரோடு சொன்ன வார்த்தை என் நெஞ்சை இப்போதும் உறைய வைத்துக் கொண்டேயிருக்கின்றது. அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அறியாமல் கதைத்துக் கொண்டிருந்தோம்.

நேரம் 7.40 மணி எமக்கு வலப்புறமாகக் கேட்ட நாயின் குரையல் சத்தத்தில் தலையை உயர்த்திப் பார்த்த போது எம்மை நோக்கி இராணுவத்தினர் வந்து கொண்டிருக்க, எல்லாமே வெட்டை வெளி ஆனபடியால் குரோலில் கண்டி ரோட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, செங்கத்திர் இதாலையும் வாறாங்கள் எனச் சொல்ல, திரும்பிப்பார்க்க, அதாலையும் வந்துகொண்டிருந்தான். எதுவுமே செய்யமுடியாது. மீண்டும் தங்கியிருந்த பூவரசம் மரத்தடியைநோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம்.

எதிரி எம்மை நெருங்கி விட்டான். சுட்டுக்கொண்டே இருக்கின்றான். எங்களின் முன்னால் மண்ணைக் கிளறுகின்றது. அப்போது எங்கள் கைக்குண்டுகள் “சேப்றி” இழுத்துத் தயார் நிலையில் கையில் இருக்க செங்கதிர் வயிற்றுக்குள் குண்டை வைத்துவிட்டாள். நானும் அப்படித்தான். செங்கதிர் எதுவுமே கதைக்கவில்லை. ஆனால், அவளின் கண்கள் எதையோ சொல்லிக்கொண்டிருந்தது.

எதிரியின் சூடு அவளின் உடலில் துளையிட்ட மாத்திரத்தில் குண்டின் வெடியதிர்வு அவளின் உடலை அப்படியே மல்லாக்காகப் புரட்டிவிட செங்கத்திர் என்னைவிட்டு கண்முன்னாடியே போய்விட்டாள். அதை என்னால் ஜீரணிக்க முடியாமல் இருந்தது. பின்னர் எதிரியின் சூட்டைக் காணவில்லை செங்கதிர் வெடித்ததைப் பார்த்து பயந்திருப்பான் போலத்தான் இருந்தது.

தங்கை செங்கதிரே!
எங்கு தான் உன்னைக் காண்பதினி ?
வெடித்துச் சிதறிட்ட வேளையில்
உங்கள் ஈகத்தையும்,;,;,
தண்ணீர்த் தாகத்தில்
நீ தவித்த பொழுதினையும்
எண்ணி அழுகின்றேன் – நெஞ்சுக்குள்
விம்மி அழுகின்றேன் மீண்டும்
சந்திப்பேன் மிக விரைவில்………..
உங்கள் ஆசைகளை நிறைவேற்றியபடி

ஏதோ ஒரு உணர்வு என்னை மேலும் உந்தித் தள்ள சேப்ரி அகற்றப்பட்ட அந்தக் கைக்குண்டோடு தாண்டித் தாண்டிச் சென்றுகொண்டிருந்தேன். எதிரியின் ரவைகளும் 40 mm செல்லும் எனக்கு முன்னால் வெடித்துக் கொண்டிருக்க ஆங்கிலத் திரைப்படக் கதாநாயகனைப் போல எந்தக் காயமும் இன்றிப் போய்க் கொண்டிருந்தேன். அதனை இப்போது என்னால் நினைத்தாலும் என்னால் நம்பமுடிவதில்லை.

200m தூரத்தில் ஒரு சிறிய நீர் நிலை தெரிய அங்கு போய் ஆசை தீருமட்டும் தண்ணீரைக் குடித்தேன். என்னால் குடிக்கமுடியவில்லை, செங்கதிர் தாகத்துடன் சொன்ன வார்த்தைகள் எனது உள்ளத்தை வெறுமையாக்கிக் கொண்டிருந்தது. என் உடல் பலவீனத்தால் சோர்ந்துபோக அந்த “சேப்ரி” அகற்றிய கைக்குண்டை வெடிக்காத மாதிரி சேற்றில் புதைத்துவிட்டு நீரோடு நீராகி பாசியோடு பாசியாக நீந்திச் சென்று எதிரிவரும் திசையின் பக்கமாய் இருந்த சம்புப் புல்லுக்குள் கிடந்தேன். அவ்விடத்திற்கும் ஆமி வந்திட்டான். குளத்தின் உள்ளும் குளத்தினைக் கடந்தும் எதிரியின் சூடுகள் சென்று கொண்டிருக்கின்றது. MI -24 கெலியும் தேடுதல் நடத்துகின்றது. ஆனால் என்னைக் கண்டுபிடிக்க அவைகளால் முடியவில்லை.

எனது இரண்டு கால் காயத்தையும் கைக் காயத்தையும் மீன்கள் குடைந்து குடைந்து பிய்த்துப் பிய்த்துச் சுவைத்துக் கொண்டிருந்தது. நான் உடல் ரீதியாய்ச் செத்துக் கொண்டே சொல்ல முடியாத அந்த ரண வேதனையோடு விறைத்துப் போய்க் கிடந்தேன். ஏதோ ஏதோ எல்லாம் செய்தது. ஆனால் அவற்றையும் விட எம் தோழர்ககளும் செங்கதிரும் வெடித்த நினைவும் இறுதியாய்ச் சொன்னவையுமே நினைவை நிறைத்துக் கொண்டிருந்தது. அப்போது வேதனை எல்லாம் எனக்கு வேதனையாய்த் தெரியவில்லை. ஆனால் இப்போது அதை நினைத்தால் அதுவே பெரும் வேதனையாய் என்னைக் கொல்லும். இப்படியாகத் தண்ணீருக்குள்ளே மீனோடும், வெளியே மூச்சு விடவும் அமிழ்ந்து அமிழ்ந்து போராடிக் கொண்டேயிருந்தேன். நண்பகல் 12.00 மணிக்கு பிறகுதான் இயக்கிச்சி முகாமிலிருந்து ஆட்லறிகள் ஏவப்பட்டன. சிறீலங்காவின் CTB பஸ்கள் காயப்பட்ட இராணுவத்தினரை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அந்த வேதனைகளோடும் மயக்க நிலையோடும் இருட்டும் வரை விறைத்தபடி தண்ணீருக்குள்ளே ஊறியபடி கிடப்பது என்பதை சாதராண நேரங்களில் நினைத்தால் கூட வேதனையாய்த்தான் இருக்கின்றது.

எனது கண்கள் மட்டுமல்ல அன்றைய வானும் இருண்டு கொண்டிருக்க மெல்ல மெல்ல எழுந்து குப்பியை வாயிலும், குண்டினைக் கையிலும் கொண்டு காலை இழுத்து இழுத்து செங்கதிர் வெடித்த அதே இடத்துக்குப் போனேன். அங்கு செங்கதிரின் கழுத்துத் தகடு மட்டுமே கிடந்தது. அவளின் உடலை எதிரி இழுத்துப் போன தடையம் புற்களில் தெரிந்தன. அதை எடுத்து எனது “பொக்கற்” க்குள் வைத்து விட்டு கண்டி றோட்டை நோக்கி நகர்ந்தேன். என்னில் இருந்து 75m தூரத்தில் 7,8 ஆமிக்காரன் அவதானிப்புக்காய் சென்று கொண்டிருப்பதை கண்டு, உடனே திரும்பி மீண்டும் செங்கதிர் வீரச்சாவடைந்த இடத்தில் தங்கினேன். வானத்திலே நிலவு. என் மனதிலோ இருளோடும் அவளின் நினைவோடும் அதிலே நிலவு மறையும் வரை கிடந்தேன்.

தனிமை என்பதையே உணரமுடியாத தனிமை அது. அவளின் அந்தத் தியாகத்தை தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் இறுதியாய் சொன்னதைக் கட்டாயம் சொல்ல வேண்டும். இதுவே எனக்குள் இருந்த வெறியாகும். இரவு 10.00 மணியிருக்கும் நிலவு மறைய மீண்டும் வானத்துச் சூரியனாய் பரா செல்கள் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்க எனது காலை இழுத்து இழுத்து ஒருவாறு கண்டி றோட்டையும் கடந்து கோயில் வயல்பகுதிக் காட்டுக்குள் வந்து விட்டேன், திசை மட்டுமல்ல எந்தப் பாதையும் இல்லாத முற்பற்றைகள் நிறைந்த காடு அது. எந்த வெட்டையையும் காணவில்லை. அங்கொன்று இங்கொன்றாய்த் தெரியும் பனைகளைப் பார்த்து நகர்ந்தால் அதன் அருகிலும் இருசல்காடுகளே, முட்கள் என் பாதங்களை மட்டுமல்ல என் காயங்களையும் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. எனக்கு உடல்ரீதியாய் சோர்வு ஏற்பட ஓரிடத்தில் படுத்தே விட்டேன்.

02.02.1998 காலை பழைய வயதானவர்களைப் போல தடியை ஊண்டியபடிதான் என்னால் நகர முடிந்தது. பகலில் கூட பற்றைகளின் ஊடாக நகர்வது கடினமாகவே இருந்தது. நகர்ந்து கொண்டு தான் இருந்தேன். சங்கத்தார் வயல்பகுதியில் இருந்த இராணுவ மினிமுகாமுக்கு அண்மையில் சென்று விட்டேன். இப்போது நான் வந்த பக்கமாக காட்டினைக் கிளியர் செய்ய ஆமிக்காறர் சென்ற தடயம் மட்டும் கண்ணில் தெரிய, நல்ல காலம் என்னை அவனுக்கு தெரியாமல் போன நிம்மதியோடு கிழக்குப் பக்கமாய் முகாமுக்கு சமாந்தரமாய் நகர்ந்து கொண்டிருந்தேன். இடைக்கிடை சப்பாத்துத் தடயங்கள். ஒருவாறு முன்னர் வந்து பாதை தெரியாமல் சென்ற அதே “ரெலிபோன்” வயர் வரும் பாதையை தொடர்ந்து நடந்து முன்னர் முக்கோண நிலை எடுத்த அதே இடத்தில் கிடந்தேன். அன்று புதைத்து வைத்து விட்டுப் போன மீதிச் சாப்பாட்டையும் பன்றி கிழறி, ஏதுமற்று எனது வயிற்றைப் போல் சாப்பாட்டுப்பையும் வெறுமையாய் கிடந்தது, தண்ணீர் விடாய் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்க முசுறு எறும்புகள் என் தசைகளில் புகுந்து கடித்துக்கொண்டிருந்தது. அதனைத் தடுக்கக் கூட சக்தியற்றுக் கிடந்தேன். குமுதன் அண்ணா, சுபேசன் அண்ணா, குமரேஸ், செங்கதிர் ஆகியோரோடு இறுதியாய் உண்டு அவர்க்களின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட அதே இடத்தில் அந்த நினைவுகளோடு தனிமையில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தேன்.

மாலையாகும் போது மெல்ல மெல்லச் சென்று அன்று சுபேசன் அண்ணாவோடு பாரப்பைகள் மறைத்து வைத்த இடத்தில் மீதிச் சாப்பாடு இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன். அங்கு அவற்றைக் காணமுடியவில்லை. இருட்டு வந்ததும் விக்னா வீதியையும் கடந்து மீண்டும் வெளிகள், பற்றைகள், வெட்டைகள் ஊடாக நகர்ந்து மின்சாரம் வழங்கும் மினிமுகாமுக்கு அண்மையில் சென்று விட்டேன். அங்கிருந்து நட்சத்திரங்களை வைத்து தெற்கு நோக்கி நகர்ந்தேன்.

கடல் நீர் ஏரிக்குள் இறங்கி விட்டேன் 200m சென்றிருப்பேன். கரையில வந்து எங்களின் 120mm எறிகணைகள் வந்து வெடிக்கின்றன.

நீரேரிக்குள் இருந்த பாசிகள் காயத்தை உரசிக்கொண்டிருந்தது, அவற்றுக்குக்கூட என் தசைகளும் குருதியும் தான் தேவைப்பட்டன போலும். நிலவு மறையும் வரை முன்னணி காவல் நிலைகளை அவதானித்தபடி நீருக்குள் கிடந்தேன். முதல் நாள் இரவு தாக்குதல் நடத்தி எமது அணிகள் வெளியேறியபடியால் எதிரி எல்லா நிலையிலும் ரோச் அடித்தபடியே இருந்தான். ஒரு மணி நேர இடைவெளிக்கு ஒரு முறை ஒரு இயந்திரப் படகு அவற்றை ‘அலேட்’பண்ணிக் கொண்டிருந்தது. எப்படியாவது அவற்றைக் கடந்து வரத்தான் வேண்டும். நிலவு மறையவும் மெல்ல மெல்ல சென்று அந்தப் படகு சென்று மறைந்த பின் காவல் நிலையிலிருந்து 15m வேலியைப் பிரித்து முதலாவது “ரீப் லைட்” லைனையும் கம்பி றோலை கையால் அழுத்தியபடியும் கடந்து இரண்டாவதையும் அப்படியே செய்து (கம்பி றோல் கறல் பிடித்து இருந்தபடியால் அழுத்தும்போது அது இலுகுவாய் அழுத்தப்பட்டது.) மீண்டும் கடல் நீரேரியால் கொம்படிப் பக்கமாய் நீருக்குள் தெரிந்த நிலப்பகுதிக்கு அண்மையில் சென்றபோது “பிறிஸ்ரல்”மணம் மூக்குள் நுழைய அது இராணுவப் பிரதேசம் என்பதை உணர்ந்து மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து உடல் நீரில் கிடந்தபடியால் மேலும் இயலாமற்போக மயக்க நிலையில் மணல் திட்டியில் படுத்துவிட்டேன்.

03.02.1998 காலையில் எதிரியின் காவல் நிலையில் ரீப்லைட் அணையமுன் மூன்றாவது நாளாகவும் வேதனைகளோடும், உள்ளத்திலிருந்த அந்த உறுதியோடும் உப்பு நீர் நிறைந்த வயிற்றோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். இரணைமடுவின் மேலதிக நீர் வெளியேற்றும் அந்த ஆற்றுப்படுக்கையை இரண்டு தடவை வெவ்வேறு இடங்களால் கடந்து நடந்து கொண்டேயிருக்கின்றேன், இப்போது எனது காயங்களை மணி இலையானும்,அந்த வெளியின் புற்களுமே சுவைத்துக்கொண்டிருக்க சூரிய வெப்பம் என் மேனியில் பட மேலும் தலைச்சுற்றாகவே இருந்தது. கரம்பைக் காய்களைச் சாப்பிட்டுக்கொண்ருக்கும் போதே, அவை உடனுக்குடன் வாந்தியாய் வெளியில் வந்து கொண்டேயிருக்கும்.

03.02.1998 அன்று முற்பகல் 11.40 மணிக்கு கண்டாவளைக் கிராமத்துக்குள் மெல்ல மெல்ல நுழைந்து கொண்டிருந்தேன். என்னைக் கண்டவுடன் தோட்டத்துக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தவர்கள் ஓடி விட்டார்கள். இருவர் மட்டுமே அசையாமல் நின்று பார்த்துக் கொண்டே நின்றார்கள். வேதனையிலும் சிரித்தபடி அவர்களிடம் விபரத்தைக் கேட்டபோது ஓடியவர்கள் ஆமிக்காரர் என நினைத்து ஓடுவதாயும், ஆமிக்காரார் என்றால் தடியூண் டியபடி வரமாட்டான் என்பதால் தாங்கள் ஓடவில்லை என்றும் சொல்லிக் கொண்டார்கள். பனையோலை வாளி யில் நீர் குடிக்கத் தந்தார்கள். எனது காயத்துக்கு பொழுத்தீனால் இலையான் மொய்க்காமல் கட்டிவிட்டு, தங்களின் மாட்டு வண்டிலைக் கொண்டு வந்து, அதில் என் காயங்கள் தாக்காத மாதிரி வைக்கோல் நிரப்பிய சாக்கில் என்னைத் தூக்கி ஏற்றிக் கொண்டு வந்தார்கள். நாங்கள் ஆழமாக நேசிக்கும் மக்களின் அந்த பங்கும் பணியும் இன்னும் தொடர வேண்டும். இடையில் வேவுப்புலி கப்டன் விடுதலையும் மற்றும் ஓர் போராளியும் என்னை உழவு இயந்திரத்தில் மாற்றி ஏற்றி வந்தார்கள்.

04.02.1998 அன்று சுய நினைவு பெற்று எழுந்தபோது நான் அபையன் மருத்துவ மனையில் மட்டுமல்ல ஈழநாதம் பத்திரிகையில், ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் வீரகாவியமான பதினான்கு கரும்புலிகளில் ஒருவனாய் இருந்தேன். மீண்டும் புதிய போரியல் அனுபவங்களின் ஊடே எதிரியின் இலக்கை நோக்கி என் பாதங்கள்……

நினைவுகளுடன்:- கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் (கருவேங்கை)
விடுதலைப்புலிகள் (வைகாசி, ஆனி 2007) இதழிலிருந்து

Up ↑