Search

Eelamaravar

Eelamaravar

Month

December 2014

தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அக்காவின் அறியாத போராட்ட குணம்

அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மதிவதனி குறித்து தன்னுடைய ‘சுதந்திர வேட்கை’ என்ற நூலில் குறிப்பிடும் போது, ”மதியைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுத்தது, தலைவர் பிரபாகரனுக்குக் கிட்டிய மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்.prabakaran family 30

திருமணம் ஆன இத்தனை ஆண்டுகளில், மிகவும் சோதனையான இடர் படிந்த காலங்களில்கூட நிலையான மற்றும் ஆழமான அன்பையும், இனிமையான குடும்ப வாழ்வையும் பிரபாகரனுக்கு மதி வழங்கியிருந்தார். எனினும், திருமண வாழ்வு என்பது மதிவதனிக்கு மலர்ப்படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும் பொறுமையும் கொண்ட மதி, எத்தனையோ தடவை மிகவும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தலைவர் பிரபாகரனின் போராட்டப் பணிகள் காரணமாக, இருவருக்கும் இடையில் நீண்டகாலப் பிரிவுகள் ஏற்பட்டதுண்டு. திருமணமான புதிதில் தனிமைத் துயரை அனுபவிக்கும் கொடுமைக்கு உள்ளானார் மதி. இந்திய இராணுவம் புலிகளுடன் பெரும் போரைத் தொடங்கிய காலத்தில் மதி இவ்விதமான துன்பங்களுக்கு ஆளானார். இந்தியாவுக்கும் புலிகளுக்கும் போர் தொடங்கியதும், நல்லூர் கந்தசாமி கோயிலில் தன் பிள்ளைகளுடன் அகதியாகத் தஞ்சமடைந்தவர்களுள் மதியும் ஒருவர். பின்னர் பிள்ளைகளை தன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, முல்லைத்தீவின் அளம்பில் காடுகளுக்குள் களமாடிக் கொண்டிருந்த தன் காதல் கணவர் பிரபாகரனுடன் இணைந்தார்.

அளம்பில் முகாமின் மீது தொடர்ந்த ஷெல்லடிகள், பீரங்கித் தாக்குதல்கள், விமான குண்டு வீச்சுகளுக்கு மத்தியில், பிள்ளைகளைப் பிரிந்த ஓர் இளம் தாய், பிரிவுத் துயரிலும் கணவனோடு அந்தப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார். துன்பச் சூழலில் ஆறுதலாக இருந்த தன் தம்பி பாலச்சந்திரனையும் அந்தப் போரில் இழந்த மதி, குழந்தைகளோடு சுவீடனுக்குப் பயணமானார். முன்பின் அறிமுகமில்லாத கலாசாரம், இடையறாத ஆபத்து நிறைந்த போர்க்களத்தில் நிற்கும் கணவனைப் பிரிந்த சோகம், சென்ற நாட்டிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள இயலாத சூழலில் நேர்ந்த துன்பமான தனிமையுடன் பிரபாகரனுக்கும் அவருக்குமான பிரிவு முடிவுக்கு வந்தது.prabakaran family 28

பிரேமதாசாவுடன் 1989-ல் புலிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியபோது, மதி இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை பாலா (அன்டன் பாலசிங்கம்) செய்தார். மதி கொழும்பு சென்றடைந்ததும், அங்கிருந்து அளம்பில் காடுகளுக்குச் செல்ல உலங்குவானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார் பிரேமதாசா. 1989-ல் மதி கணவரோடு சேர்ந்து கொண்டார்.

திருமணமான நாளில் இருந்து மதிக்கு நிரந்தரமான ஒரு வீடும் இல்லை. பாதுகாப்பான குடும்ப வாழ்வும் இல்லை. இருந்தபோதிலும், ஒரு கெரில்லாப் படைத் தளபதியின் மனைவிக்கு உரிய கண்ணியத்தோடும் துணிச்சலோடும் ஒரு நிலையான வாழ்வுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்! என விரிவாக சொல்லியிருக்கிறார்.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு பிரபாகரனோடு சேர்ந்த மதி, இந்த இருபதாண்டுக் காலத்தில் பிரபாகரனை விட்டு எங்குமே விலகியதில்லை! புலிகளின் பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி, சில நிகழ்வுகளைக்கூட அவர் முன்னெடுத்திருக்கிறார். 1984 அக்டோபரில் திருப்போரூரில் மணமுடித்து, தங்கள் முதல் மகனைக் கருவுற்றபோது, ஜெயவர்த்தன அரசாங்கம் ‘ஓபரேஷன் லிபரேஷனை’ தொடங்கியிருந்தது.

சுற்றிவளைப்புகளுக்கு மத்தியிலும், பீரங்கி விமானத்தாக்குதலுக்கு மத்தியிலும் முதல் மகன் பிறந்த நேரத்தில் பிரபாகரன் தன் தளபதிகளோடு களத்தில் நின்றார். சில நாட்கள் கழித்தே மகனைத் தொட்டுப் பார்க்க முடிந்தது. அந்தப் பிள்ளைக்கு இலங்கை இராணுவ மோதலில் கொல்லப்பட்ட தன் தொடக்க கால நண்பனான சார்ள்ஸ் அன்டனி (சீலன்) யின் பெயரையே சூட்டினார்கள் இருவரும். அடுத்து பிறந்த பெண் குழந்தைக்கு வீரச்சாவடைந்த துவாரகாவின் பெயரை வைத்தார்கள். கடைசியாக பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறந்த மகனுக்கு இந்திய இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்ட தன் தம்பி பாலச்சந்திரனின் பெயரை வைத்து அழகு பார்த்தார் மதிவதனி.

இந்த இருபதாண்டுகளில் போருக்கும் சமாதானத்துக்கும் இடையில் வதைபட நேர்ந்த வாழ்க்கை குறித்து மதிவதனி கவலைகள் எதுவும் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளதெல்லாம் ஒரே ஒரு வருத்தம்தான். இப்போதும் அவர் பிள்ளைகளைப் பிரிந்து இருக்கிறார். இன்று மதிவதனி தாய்லாந்தில் இருப்பதாகவும், கனடாவில் இருப்பதாகவும் சொல்லப்படும் சூழலில், இக்கட்டான எந்தச் சூழலிலும் அவர் பிரபாகரனைப் பிரிந்ததில்லை என்பதுதான் அந்தப் போராளிப் பெண்ணின் குணம்.

********prabakaran family 33

தலைவர் வே.பிரபாகரன் திருமணமான நாளில் இருந்து நிரந்தர வீடும் இல்லை

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், இவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை என்று குறிப்பிடுவார்கள். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பெற்றோருக்குச் சொந்தமான வீட்டைத்தான் அனேகமானவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீடு என்று குறிப்பிடுகின்றார்கள்.

ஆனால் திரு. பிரபாகரன் அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு அடி நிலம்கூடக் கிடையாது என்பதுதான் உண்மை.

திரு. பிரபாகரன் அவர்களுடைய திருமணகாலம் முதல்கொண்டு அவர்களை நன்கு அறிந்தவர்களாக அன்டன் பாலசிங்கம் தம்பதியினர் இருந்து வருகின்றார்கள்.

திருமதி அடேல் பாலசிங்கம், தனது சுதந்திர வேட்கை நூலில், பிரபாகரன் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

மதியை (திருமதி பிரபாகரன்) பொறுத்தவரையில் திருமண வாழ்க்கை ஒன்றும் அவருக்கு மலர் படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும் பொறுமையும் கொண்ட மதி எத்தனையோ தடவைகளில் மிகவும் நெருக்கடியான துயர் சூழல்களை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டி இருந்தது.

பிரபாகரன் அவர்களது போராட்டப் பணிகள் காரணமாக தம்பதிகளுக்கு இடையில் நீண்ட காலப் பிரிவுகளும் ஏற்பட்டதுண்டு. திருமணமான நாளில் இருந்து மதிக்கு ஒரு நிரந்தர வீடும் இருந்ததில்லை. பாதுகாப்பான குடும்ப வாழ்க்கையும் கிடையாது.

இருந்த போதிலும் ஒரு கெரில்லா படைத்தலைவரின் மனைவிக்குரிய துணிச்சலுடனும், கண்ணியத்துடனும், அவர் செயற்பட்டிருந்தார்| என்று திருமதி அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.prabakaran family 13

அகதி வாழ்க்கை

இந்தியப் படை ஈழ மண்ணை ஆக்கிரமிக்க ஆரம்பித்த போது மற்றய தமிழ் அன்னையர் போலவே திருமதி பிரபாகரன் அவர்களும் திடீர் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

இந்தியப் படையினர் தம்மால் முடிந்த அளவிற்கு அடாவடித்தனங்களை மேற்கொண்டபடி யாழ்பானத்தை முற்றுகைக்குள்ளாக்கிய போது பல பெண்கள், தய்மார் இந்தியப் படையின் கொடூரங்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கோவில்களிலும், பாடசாலைகளிலும் அடைக்கலம் தேடிக்கொண்டார்கள்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான அகதிகள் அடைக்கலம் தேடியிருந்தார்கள். பிரபாகரன் அவர்களின் மனைவி மதிவதனி அவர்களும், குழந்தைகளும் மக்களோடு மக்களாக நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அகதி வாழ்க்கை வாழவேடி ஏற்பட்டது.

தலைவர் பிரபாகரன் அவர்கள் போராட்டத்தை வன்னியில் இருந்து நெறிப்படுத்திக்கொண்டிருந்த போது அவரது மனைவி பிள்ளைகளோ மக்களுடன் மக்களாக இந்தியப் படையினரின் கொடூரங்களை அச்சத்துடன் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி என்று இந்தியப் படையினருக்கோ அல்லது தமிழ் இயக்க உறுப்பினர்களுக்கோ தெரிந்தால் அதோகதிதான்.

அவரை வைத்தே பிரபாகரன் அவர்களுக்கு வலை விரித்திருப்பார்கள். அவரைத் தொலைக்காட்சியில் காண்பித்து அசிங்கப்படுத்தியிருப்பார்கள். அவரது பிள்ளைகளைத் துன்புறுத்தி கொலை செய்திருப்பார்கள்.

அக்காலத்தில் அத்தனை அட்டூழியங்களை இந்தியப் படையினரும், அவர்களுடன் இணைந்திருந்த தமிழ் படை உறுப்பினர்களும் மேற்கொண்டிருந்தார்கள். அனாலும் தெய்வாதீனமாக அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அடைக்கலம் தேடியிருந்த பெரும்பாலானவர்களுக்கு மதிவதனி அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அனேகமானவர்கள் அச்சத்துடனும், பதட்டத்துடனும் அங்கு தவித்துக் கொண்டிருந்ததால், அருகில் இருப்பவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று விடுப்பு விசாரித்துக் கொள்ள நேரமில்லாமல் இருந்தது.

பரவிய வதந்தி:

இப்படி இருக்கையில் இந்தியப் படையினரிடையேயும், தமிழ் இயக்க உறுப்பிர்களிடையேயும் ஒரு வதந்தி வேகமாகக் பரவ ஆரம்பித்தது. தலைவர் பிரபாகரன் அவர்கள் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் மக்களுடன் மக்களாக மறைந்து தங்கி இருப்பதாக அந்த வதந்தி வேகமாகப் பரவியது.

பிரபாகரன் அவர்களின் துனைவியார் அங்கு மறைந்திருந்ததை அறிந்ததால் இந்த வதந்தி பரவ ஆரம்பித்திருந்ததா, அல்லது யாராவது வேண்டுமென்றே இப்படி ஒரு வதந்தியை பரவ விட்டிருந்தார்களா என்று தெரியவில்லை.

நல்லூரும், கந்தசுவாமி கோயிலும் யாழ் உயர் சாதியினர் என்று கூறப்படுபவர்களின் ஒரு அடையாளமாகக் கருதப்பட்டதன் காரணமாக, இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழு உறுப்பினர்கள் இப்படி ஒரு கதையைக் கட்டிவிட்டிருக்கலாம் என்றும் அங்கு பேச்சடிபட்டது.

இந்த வதந்தி நல்லூர் கந்தசுவாமி கோயில் வளாகத்திற்குள் தங்கியிருந்த மக்களிடையேயும் பரவ ஆரம்பித்தது. அடுத்து என்ன நடக்கும் என்கின்ற அச்சம் அங்கு தங்கியிருந்த மக்களிடையே பரவ ஆரம்பித்தது.

மற்ற அகதி முகாம்களில் நடந்து கொண்டதைப் போன்று இந்த முகாமிலும் இந்தியப் படையினர் கொடூரமாக நடந்து கொள்ள ஆரம்பித்தால் என்னசெய்வது என்கின்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது.

இந்தா இந்தியப் படையினர் வந்துவிட்டார்கள்.. அதோ அந்தப் பகுதியால் வந்துகொண்டிருக்கின்றாhகள்.. முகாமைக் குறிவைத்து விமானத்தாக்குதல்கள் நடைபெறப் போகின்றதாம். முகாமைக் குறிவைத்து யுத்த தாங்கிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றதாம்.. என்று பல வதந்திகள் அங்கு தங்கியிருந்த மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தன.

பலர் இரவோடு இரவாக முகாமைவிட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். அவ்வாறு வெளியேறிவர்களுள் மதிவதனி அவர்களும் ஒருவர்.

காட்டு வாழ்க்கை:

இந்தியப் படையினரின் நெருக்குதல் குடாநட்டில் அதிகமாக ஆரம்பித்தைத் தொடர்ந்து திருமதி மதிவதனி அவர்கள் வன்னிக்குச் சென்று தங்கவேண்டி ஏற்பட்டது.

தனது பிள்ளைகளை தனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறுப் பகுதியில் உள்ள அலம்பில் காடுகளில் முகாம் வாழ்க்கை வாழ நேரிட்டது.

இந்தியப் படையினரின் செல் மழை இந்த காடுகளில் தொடர்ந்து பொழிந்த வண்ணமே இருந்தன. விமானக் குண்டு வீச்சுக்களும், இடையறாத முற்றுகைகளும் இந்த காடுகளில் இடம்பெற்ற வண்ணமே இருந்தன.

ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விதமான ஆபத்துக்கள். பல்வேறு வடிவங்களில் ஆபத்துக்கள் அவர்களைச் சூழ்ந்த வண்ணமே இருந்தன.

போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம்

எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம்.FR-Sandra

இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன.

மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காரண கின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாது, அனைத்து இனமக்களுக்கும் சேவை புரிந்த ஒரு நல்ல இதயங்கொண்ட மனிதரை ஏன் அன்று திட்டமிட்டு அழித்தார்கள் என்பதை எமது இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டும் என்பது இந்த நினைவு கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு துணிந்து களமிறங்கி சேவை செய்த பாதர் சந்திரா அவர்கள்தமிழ்தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக்கொண்டவராக காணப்பட்டார். அதனால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு பலம்பொருந்தியதாகவும், அனைத்து விடயங்களிலும் தகமைசார் செயற்பாட்டாளர்களை கொண்டிருந்ததற்கும் வணபிதா சந்திரா அதிபர் வணசிங்க போன்ற தனலம்ற உன்னத மனிதர்களின் செயற்பாடுகளே காரணமெனலாம்.

1983ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் 1988ம் ஆண்டு வரை விடுதலைப் போராட்டம் மக்கள் எழுச்சியுடன் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த வேளையில் சிங்களப் பேரினவாதிகளின் குறி தமிழ்மக்களை அழிப்பதாக அமைந்திருந்தன. இக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் பலம் பொருந்திய நியாயம் கேட்கும் நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ராஜதந்திரிகள் உலகபொதுஅமைப்புக்கள் பிரதிநிதிகளைசந்தித்து உண்மை நிலையை வெளிப்படுத்தும் அமைப்பாகச் செயல்பட்டதனால் எதிரிகளின் எண்ணங்களில் இடர்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன.

பங்குத்தந்தை சந்திரா அவர்கள் எந்த விடுதலை அமைப்பையும் சேர்ந்தவரில்லை தமிழ்மக்களின் சுதந்திர வாழ்வை உண்மையாக நேசித்ததனால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்தார். அக்காலத்தில் பல இயக்கங்கள் செயல்பட்ட போதும் இவருடைய சேவை மக்கள் நலன் சார்ந்ததாக மட்டுமே இடம்பெற்றிருந்தன. மக்களுக்காக வாழ்ந்த மட்டக்களப்பு மக்கள் குழுத்தலைவர். மக்கள் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தில் மன்னிக்க முடியாத நிகழ்வாகவும், மறக்க முடியாத துயர சம்பவமாகவும் நடந்தேறியிருந்தன

வணக்கத்துக்குரிய பங்குத்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்கள் 09.08.1948 அன்று மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை சென் மேரிஸ் பாடசாலையிலும் , உயர்கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் கற்றார் .

தனது குருக்கல்வியை இந்தியா பெங்களூரிலும், சென்னையிலும் பயின்று 1972. 09. 21 நாள் அன்று குருப்பட்டத்தை மட்டக்களப்பு மறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில் ஏற்றார் .

உதவித் பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர் தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா தேவாலயத்திலும், திருகோணமலை மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவலையத்திலும் பணிபுரிந்து 1978ம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் நிருவாகத்துக்கு நிதிப்பொறுப்பாளராக செயலாற்றினார்

1981ம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வரானார் இதேகாலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் இருந்தார் . 1984ம் ஆண்டு மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்றார் .

பாதர் சந்திரா அவர்களின் மக்கள் சார்ந்த பல நிகழ்வுகளில் இரு நிகழ்வை இங்கு குறிப்பிடலாம் .19.1.1986 அன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியில் அமைந்திருந்த இருதயபுரம் சிங்கள விசேட அதிரடிப் படையினரால் அதிகாலைவேளையில் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது .ஊரில் வாழ்கின்ற மக்களுக்கு என்ன நடந்தது ? மக்களின் நிலை என்ன ? என்பதை எவராலும் அறிய முடியாமல் இருந்த வேளையில் பாதர் சந்திரா அவர்கள் தனது மோட்டார் சைக்கிலில் உயிரைவிட மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டுமென்பதற்காக துணிந்து சிங்கள இராணுவத்தின் காவலையும் மீறி உள்ளே சென்று மக்களுக்கு பக்கபலமாக நின்றார். இச்சுற்றி வளைப்பில் இருபதுக்கு மேற்பட்ட மக்கள் சிங்கள அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் .

இன்னுமொரு நிகழ்வாக 1988ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான சுகுணா, இஸ்லாமியக் பெண்ணான ரிபாயா ஆகிய இருவரையும் EPRLF குழுவினர் பிடித்து சென்று தங்களது வாவிக்கரை தங்குமிடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். இச்சம்பவத்தை அறிந்த மக்கள் குழுத்தலைவர் பாதர் சந்திரா அவர்கள் இந்தியப் படை அதிகாரிகலுடன் தொடர்பு கொண்டு இருவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் சுகுணாவை மாத்திரம்தான் அவரால் மீட்க முடிந்தது. மற்றைய பெண்ணான ரிபாயாவுக்கு என்ன நடந்தது என்பதை அன்ரில் இருந்து இன்று வரையும் அறிய முடியவில்லை. இந்த சம்பவத்தில் நேரடியாக பங்குகொண்டவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினராக இருக்கின்ற இரா. துரைரெட்ணம் என்பதை உறுதிப்படுத்தபட்ட பின்பும் அவராலும் இதற்குரிய பதில் இன்று வரையும் வழங்கப்படவில்லை. பாதர் சந்திரா அவர்களும் தான் இருக்கும் வரை ரிபாயாவை மீட்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு – அம்பாறையில் சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிட்டு இருதயபுரம், நற்பட்டிமுனை, உடும்பன்குளம், மண்முனை கொக்கொட்டிச்சோலை இறால் பண்ணை , மயிலந்தனை புணணை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளை வெளி உலகிற்கு கொண்டுவருவதில் பாதர் சந்திரா அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்களவு இருந்தன. இவ்வாறு மக்கள் நலன் பாதுகாப்பு என்பதில் தூய எண்ணத்துடன், செயல்பட்ட துறவியான இவர் இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் பல இடையூறுகளை மக்கள் சேவையில் சந்தித்திருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டப்பாதையில் இலக்குத் தவறிய பயணத்தில் செயல்பட்ட இயக்கங்கள் பாதையிலிருந்து விலக்கப்பட்ட நிலையில், இந்தியப்படையினரின் பிரசன்னம் எமது மண்ணில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளையும் போராட்டத்தை ஆதரித்து நின்றமக்களையும் அழித்தொழிப்பதற்கு இந்திய படையினருடன், தமிழ் இயக்கங்களான, EPRLF, TELO, ENDLF போன்றவற்றின் உறுப்பினர்களும் துணைபோயினர்.

இந்நாளில் தங்களைத் தமிழ்த்தேசியவாதிகளாகக்காடடி நிற்கின்ற இரா.துரைரெட்ணம், பிரசின்னா, ஜனா போன்ற வர்களின் தலைமையில் தமிழ்த்தேசவிரோதக் குழுக்கள் அந்நாளில் செயல்பட்டதை எவரும் மறுப்பதற்கில்லை, தமிழ்மக்களும் எளிதில் மறக்க மாட்டார்கள். இவர்களின் துரோகத்தனத்திற்கு அன்று இந்தியப் படையினர் துணைநின்றனர். இதற்கு பின்பு சிங்களப்படையினருக்கும் இவர்கள் துணைநின்றனர்.

மக்கள் சேவையை முன்னிறுத்தி செயல்பட்ட பங்குத்தந்தை சந்திரா அவர்களை 06.06.1988 அன்று மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தினுள் வைத்து தமிழ்த் தேசிய விரோதிகளினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் .அன்று மறைக்கப்பட்ட கறுப்புத் திரையினுள் இவர்களாலும், இந்தியப் படையினராலும் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையும், அடக்கு முறைகளையும் வெளிக்கொண்டு வந்து நியாயம் கேட்ட மக்கள் சேவையாளனான கிறிஸ்துவத்துறவியின் குரல் ஒய்ந்து விட்டதை எண்ணி, அடுத்த குரல்களான வணசிங்கா அதிபர் அவர்களையும், ஆரையம்பதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அதிபர் அவர்களையும் அழித்தனர். விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழீழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட மக்கள் சேவையில் ஈடுபட்ட தனிநபர்களுக்கு எதிரான படுகொலைகளில் மிகப் பெரிய நீதியற்ற படுகொலைகளாகக் இக்கொலைகளைக் குறிப்பிடமுடியும்.

இன்று தமிழ் தேசியத்தை ஊடகத்துறையில் வளர்த்த பிதாமகர்கள் தாங்களே என நீட்டி முழங்கும் பலர் இவ்வாறன மனிதர்களின் கொலைகளை வசதியாக மறந்துவிடுகின்றனர் . தங்களின் இருப்பையும் தாம் சார்ந்தவர்களின் இருப்பையும் பதவிகளையும் தக்கவைப்பதற்காக வரலாறுகளை கூட தமக்கு வசதியான காலத்தில் தொடங்க முற்படுகின்றனர். இந்த ஊடக வியாபரிகளினது நோக்கமும் , வணபிதா சந்திரா போன்றவர்களை கொலைசெய்த கொலயளிகளினது நோக்கமும் ஒன்றாகவே இருக்கமுடியும் .

இக்கொலைகளை எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் பணியில் உள்ள எவரும் நியாயப்படுத்த முடியாது.

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் அடிமை நிலையைத் திணிப்பதே ஆக்கிரமிப்பு வாதிகளின் கொள்கையாகும். இக்கொள்கைக்கு துணைபோயுள்ளதன்மூலம் மூன்று கல்விமான்களை மட்டக்களப்பில் அழித்து மக்கள் சார்பாக ஒலித்த குரலை அணைத்து மார்தட்டி எக்காளமிட்ட இக்குழுவினருக்கு தமிழ் மக்களின், உரிமைபற்றியோ, விடுதளைபற்றியோ, கதைப்பதற்கு எந்த அருகதையுமில்லை இவ்மூவரின் இழப்பு அன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகவிருந்தன

இருபத்தைந்து வருடங்கள் கழிந்த நிலையில் பங்குத்தந்தை சந்திரா அவர்களை நாம் நினைவு கூருகின்றோம். இவரை நினைவில் கொள்வது தமிழ்மக்களின் தலையாய கடமையாகும் ,பாதர் சந்திரா அவர்கள் வாழ்ந்தகாலம் தமிழ்மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு துணிந்த ,துறவியொருவர் வாழ்ந்தகாலமாகும் .இக்காலத்தில் மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழ் அரசியல் வாதிகள் எவரும் ,சுயநலம் கருதி மக்கள் நலன்சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக தங்கள் பதவி ,அரசியல் வாழ்வு என்பனவற்றிக்காக தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்த வண்ணம் செயல்பட்டனர் .இன்று இவர்கள் போற்றப் பட்டாலும் உண்மையை ஒரு போதும் மறைக்கமுடியாது

உணர்வும், உறுதியும், நேர்மையும் , பொதுநலமும் உள்ளமக்கள் எமது மண்ணில் வாழும்வரை, பாதர் சந்திரா, வணசிங்கா ஐயா போன்றவர்களின் நினைவும், தன்னலம் கருதாத மக்கள் சேவையும் மறைக்கப்படமாட்டாது என்றும் பரம்பரைபரம்பரையாக நினைவில் நிலைத்து நிற்கும்.

காலவோட்டத்தில் தமிழ்த் தேசியம் கரைந்துவிடாது காக்கப்பட புல்லுருவிகளும், துரோகிகளும், இனப்படுகொலையாளர்களும் தூக்கி வீசப்படவேண்டும். இதற்கு எமது மண்ணில் வாழும் தமிழ்மக்கள் உறுதியான பதிலை தேர்தல் காலங்களில் வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழினத்தின் விடிவுக்கு, விலைபோகாத தலைவர்களை நாம் உருவாக்க முடியும்.

மதம் மொழி பார்க்காது மனிதனை நேசித்தம மனிதனின் மரணத்திற்காக ஓர்கணம் தலைசாய்த்து …..

நினைவுப்பகிர்வு:- எழுகதிர்.Father_ltte

லெப். கேணல் லக்ஸ்மன்

Lt.Col.Laxman‘தமிழீழம்’

இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.

ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே அல்லாமல், இருவேறு துண்டுகளின் கூட்டல்ல.

வல்லிபுரக்கோயில் மணற்காட்டில் – அலைகளாய் விழுந்து உவகையோடு எழுகின்ற இந்துமா ஆழி, ‘எங்கள் கடல்!’ என்றால் ‘குமணக்’ கரையின் மணலில் உருண்டு, கண்களை எரித்துச் சுகம் விசாரிப்பதும் ‘எங்களோடது!’ தான்; ‘கருவேலன் காட்டு’ ஓரத்தில் மோதி பாரையோடு சுறாவும் திருக்கையும் தருவதும் ‘நம்மடது’ தான் – தமிழீழம் ஒன்று தான்!

‘வாளேந்திய சிங்கம்’ தானேந்திடும் வாளால் துண்டாக்கிப்போட்ட பின்பு, கூட்டாகிச் ‘சங்கம்’ அமைக்க – இது சோவியத் சாம்ராஜ்ஜியமும் அல்ல; துகள்க்ளாக்கிப் பிளவுபடுத்தி சீரழித்துச் சிதைத்துவிட – இது ‘பொஸ்னியா’வும் அல்ல.

‘கரந்தனாற்றில்’ கால் நனைத்துக் கொண்டு தமிழீழம் என்றால், வரண்டுபோய்க் கிடக்கின்ற ‘வழுக்கியாறும்’ தமிழீழம்தான். மன்னாரை ஈரமாக்கும் ‘பறங்கியாறு’ம் அதுதான், ‘மணலாறு’ம் எங்களதேதான்!

இலங்கையில்…..

ஆசியாக் கண்டத்தின் தெற்கே, இந்துமா சமுத்திரத்தின் தாலாட்டில் மிதக்கும் அந்த மாங்காய் வடிவச் சிறு தீவில் –

அதன் – வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்குப் பிரதேசங்களில் – தமிழர்கள் காலாதி காலமாக வேரோடி வாழ்ந்த 20,000 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு; தமிழர் மூதாதையரின் வியர்வை கலந்த 23,000 சதுர கிலோமீற்றர் கடற்பரப்பு; இவற்றின் மேலாக கூரையாய் வரியும் தமிழர் சரித்திரத்தின் மூச்சுக் கலந்திருக்கும் வான் பரப்பு – இந்த மூன்றுக்கும் ஒரே பெயர், அதுதான் தமிழீழம்.

வடக்கையும் கிழக்கையும் “இணையக்கூடாது! இணைக்கக் கூடாது!” என்று கொழும்பிலிருந்து கத்திக்கொண்டிருக்கிறார்கள். அது எமக்குப் புரியவுமில்லை; புரிந்துகொள்ள நாம் விரும்பவுமில்லை; விரும்பவேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், ‘இணைப்பது’ அல்லவே எமது பிரச்சினை. தமிழீழத்தை (வடக்கையும் கிழக்கையும்) ‘பிரிக்கக்கூடாது’ என்பதுவே எமது பிரச்சினை. தேசம் பிரியக்கூடாது, யாரும் பிழைக்கவே கூடாது என்பதற்காகவே நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம்; விடவே மாட்டோம்!

ஓரங்களில் அரிக்கப்படாத – நடுவினில் பிரிக்கப்படாத – நிறைவு குறைக்கப்படாத, உருக்குலைவற்ற தமிழீழத்தை மீட்டெடுத்து, தமிழனின் சுதந்திர தனியரசைப் பிரகடனப்படுத்தும் வரை, விடவேமாட்டோம்!

கொக்குவில் புயலாகும்; கொக்குத்தொடுவாய் களமாடும்; கொம்மாந்துறை அனலாகும்; தனியரசு எமதாகும் வரை தமிழீழம் போராடும். பலாலி வீதியிலிருந்து புனானை வீதியீறாக விடுதலைப் போர் நீளும். புலி ஆடும் கொடி எங்கள் நிலம் ஆளும் நாள் வரை போர் நீளும்! போர் நீளும்! விடவே மாட்டோம்.

தேசத்தை மீட்கும் இன்றைய போரில் தென்னக வீரர்கள் வடக்கில் அணிவகுத்துள்ளார்கள்; எல்லைகள் கீறும் நாளைய போரில், வடபுலி வீரர்கள் தெற்கில் வேலிபோடுவார்கள்.

தமிழீழம் ஒன்றேதான் ஒரு நாடு, ஒரு கொடி ,ஒரு தலைவன்.

ஒரு ஆவணி மாதத்து அதிகாலை. கச்சான் காற்றின் மெல்லிய வருடல் வைகறைப் பொழுதில் சூரியக் குளியல். எழுவான்கறையின் உளமெல்லாம் உற்சாகம். சாளைவலைத் தோணிகளில் கரை திரும்பிக்கொண்டிருந்த தேசத்தின் மீனவ சமூகம். “கெதியாய் போயிடவேணும் குமார்…… கச்சான் வலுத்துதெண்டால் மறுகா தண்டு வலிக்கிறது கஸ்டமா போயிடும்………….” இவ்விரண்டு ஆட்கள், சிலதுண்டு வலைகளோடு பிடித்தெடுத்த மீன்கள்; கரை நோக்கிய வள்ளங்கள்.

பதினைந்து வயதேயான இளம்பராயம்; தேவைக்கும் அதிகமாகத் துளியும் பெருக்காத தேகம்; தோள்கள் திரண்டு, நெஞ்சு அகன்று, இடுப்பு ஒடுங்கி, கால்கள் வலுத்து – உடலை வருத்தி வருத்தி உழைத்ததால் இறுக்கமாகிய அழகு மேனி; சுருள் சுருளாகப் படரும் தலை முடிகள்; முழு நிலவாக ஒளிரும் முகம்; சதா புன்னகைக்கும் கண்களின் ஆழத்தில் உற்றுப் பார்த்தால் மட்டுமே தென்படும், அந்த சோகத்தின் மெல்லிய கீறல். நெற்றியில் சிந்தனையின்……………

குமார் நிமிர்ந்து நிலத்தைப் பார்த்தான். மேற்புறத் தொடுவானில் ‘குப்பிமலை’யும் ‘தொப்பிக்கல்’லும் பனுமூட்டங்களினூடு மெல்லிய நீல முகடுகளாய்…… கண் குளிர்ந்த காட்சி.

தோணி கரை ஒதுங்கியது. கடலுக்குள் இறங்கியவன் குனிந்து வள்ளத்திலும் தண்ணீரிலும் தொட்டு இரண்டு கைகளையும் நெஞ்சில் வைத்து கண்களை மூடினான். வலைகளை இழுத்து, பட்டிருந்த மீன்களை எடுத்து, கூடையில் நிறுத்து, விலைபேசி…………. கச்சான் பலமாக ஊதத் தொடங்கிற்று. இரவு தொழிலுக்குப் போய்வந்தவர்கள் கண்ணாப் பற்றையோரங்களில் ஓய்வாக அரட்டையடிக்க, விற்போரும் வாங்குவோரும் நிறைய, களைகட்டிக் கலகலத்தது கடற்கரை. குமாருக்கு அவசரம்; நேர நெருக்கடி; மிதிவண்டியை உருட்டிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். “குமார் சாப்பிடாமல் போறான்……….. அவனைச் சாப்பிடச் சொல்லுங்கோ………..” மீன்வாடிக்குப் பக்கத்திலிருந்த குடிலுக்குள்ளிருந்து ஒரு உடன்பிறவாச் சகோதரியின் பாடக்குரல். “குமார் சாப்பிட்டுட்டுப் போவன் தம்பி………..”

“அக்கா, தங்கைச்சிக்குப் பள்ளி துவங்கிற நேரமாயிற்றுதண்ணை……….. ஏத்திப்போய் விடனும்…….. நான் பிறகு வாறனண்ணை…..” குடிலுக்குள் எட்டிப்பார்த்து – “அக்கா வாரனுங்க……….” சைக்கிளை உருட்டினான்.

“ம்…..” குடிலுக்குள்ளிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு கச்சானோடு கலந்தது.

கல்குடா ஒரு பூர்வீக தமிழர் நிலம். கல்மடு அங்கொரு சிற்றூர். அண்ணார்ந்து பார்த்தாலும் வறுமைக்கோடு தெரியாத ஆழத்தில் வாழ்ந்த மக்கள். வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்திழுக்கும் சுந்தரபுரியாக மாறிவிட்ட தங்களூரில், மண்ணின் பண்பாடுகளையும், இனத்தின் உன்னதங்களையும் கறைபடியாமல் காத்தார்கள் அவர்கள். அதிலொரு குடும்பம் அவனுடையது.

சிங்களத்தைச் சரளமாகப் பேசியவன். உல்லாசப் பிரயாணிகளை வழிகாட்டக்கூடியளவுக்கு ஆங்கிலமும் பேசினான். பகலில் அவனுக்கு அதுதான் வேலை. பக்குவமாய் பாதுகாக்கும் இரண்டொரு நல்ல உடைகள் அவனுக்குத் துணை. சின்னவன், நல்லவன், பண்பானவன், ஏழை. விடுதிச் சொந்தக்காரர் நாளாந்தம் அவனுக்கென ஊர்பார்க்கும் வெள்ளைக்காரர்களை வைத்திருப்பார். கூட்டிக்கொண்டு அவன் பகலெல்லாம் திரிவான். மானிடப் பண்புகளும், சீரிய ஒழுக்கங்களும் மலிவு விலைக்கு ஏலம்போன உல்லாச விடுதிகளில், உடலாலும் உள்ளத்தாலும் சேதப்படாமல் வாழ்ந்தவன்.

மாலையானதும் மீண்டும் ஓட்டம். மிதிவண்டியில் களைக்க களைக்க ஓடி பள்ளிக்கூட வாசலில் காவலிருப்பான். பள்ளிவிட்டதும் – அக்காவையும் தங்கையையும் திரும்ப வீட்டிற்கு ஏத்திப் போவான். வீட்டு வேலைகளில் சின்ன ஒத்தாசைகள் செய்துவிட்டு, இரவானதும் கடற்தொழிலுக்குப் போகப் புறப்பட்டு விடுவான்.

இருள் கவிந்த அந்தி நேரம். மிதிவண்டியை உருட்டிக்கொண்டு அவன் படலைக்கு வர, பின்னாலே ஓடிவந்த தங்கைச்சி கைகளில் பிடித்தாள், திரும்பினான். அக்கா அவனையே பார்த்தபடி வாசல் கதவோடு சாய்ந்திருந்தாள், தங்கை ஏக்கமாய் பார்த்தாள்.

“இண்டைக்கு மட்டும் தொழிலுக்குப் போகவேணாமண்ணா…….. எங்க கூடவே இருங்கண்ணா……” அவள் கேட்டது தங்களது மகிழ்வுக்காக அல்ல; அவனது ஓய்வுக்காக மட்டுமேதான். இரக்கமாய்க் கேட்டவளைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. தொண்டைக்குள் எதுவோ அடைக்க, குரலுக்குப் கண்ணீர்தான் வந்தது தங்கையை கட்டி அணைத்துக்கொண்டான். கட்டுப்படுத்தமுடியாத கண்ணீர் அவனுக்கும் வந்தது; அவளுக்கும் வந்தது. துன்பச் சிலுவைகள் சுமந்தனர் பிஞசுகள். துயரமே வாழ்வான வாழ்வு. தங்கையின் தலையில் தடவிக்கொண்டே அவன் சொன்னான். “இண்டைக்கு நான் போகலேண்ணா….. நாளைக்கு நாம் சாப்பிடமுடியாதம்மா!”

மிதிவண்டி அவனோடு உருளத் தொடங்கியது.

எதிர்பாராமல் ஒருநாள் கண்களை மூடிக்கொண்டு துடிக்கவிட்டுச் சென்றுவிட்டார் அன்பு அப்பா! அடுத்து வந்த நாளொன்றில், தனியாகத் தவிக்கவிட்டுக் காணாமல் போனாள் அம்மா! துயரக் கடலில் தூக்கிவீசப்பட்டனர் பச்சைக் குழந்தைகள். துடுப்பற்ற படகாய் மிதந்தவர்களுக்கு துணையாகி வாழ்ந்தான் குமார்; அவன்தான் எங்கள் லக்ஸ்மணன். தோழர்களின் அன்புக்குரிய பொம்மரண்ணன். சகோதரிகளை தன் நெஞ்சுக்கூட்டுக்குள் குடியிருத்தி வைத்திருந்த அன்புச் சகோதரன். சகோதரிகளின் ஒரு அசாதாரண பாசத்தைக் கொண்டிருந்தவன் அவன். தங்கச்சியில்தான் தனது உயிரையே வைத்திருந்தான். எல்லையற்ற அன்பால் பாதுகாத்து, எத்தனையோ கனவுகளோடு அவளை வளர்த்தான். அன்னையாகவும், தந்தையாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும் – அவர்களுக்கு எல்லாமாகவும் அவனே வாழ்ந்தான். தனக்கு கிடைக்காத கல்வி அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்ற ஆதங்கத்தோடு அவன்பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; அனுபவித்த கஷ்ரங்கள் சொற்பமல்ல. அவர்களுக்காக, சுமைகளில் அழுத்தியவனைப் பார்த்து, அவன் அறியாமல் அவர்கள் அழுவார்கள். கடுங்குளிருக்குள் அலைகளோடு மாரடித்துவிட்டு வருபவன், பகல் வெயிலுக்குள் வெளிநாட்டுக் காரர்களோடு அலைந்தான். பாவம். ஓய்வே இல்லை…… ஓயவே இல்லை……!

அனையிரவுச் சமரில் உலகம் கவனம் செலுத்திக்கொண்டிருந்தது. எங்கும், எவரிலும் அதே பேச்சு; அதே சிந்தனை. புலிவீரர்களை ஈன்ற தாய்மார்கள் மட்டுமல்ல, திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் இருந்த தோழர்களும் தவித்துக்கொண்டிருந்தார்கள். பெரும் சமர்க்களம் ஒன்றில், இயக்கத்தின் பெரிய தொகுதி வீரர்கள் போரிட்டுக்கொண்டிருக்கும்போது, அந்தக் களத்திற்கு அப்பால் நிற்கும் ஒரு போராளியாலும் கூட அமைதியாக இருக்கமுடியாது. அந்த மனப்போராட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நீங்களும் விடுதலைப் புலிகளின் போராளியாக இருக்கவேண்டும். சந்திவெளித் திடலிலிருந்த ‘கிலோவண்’ முகாமின் போராளிகளும் இதே தவிப்போடுதான் தகவல் தொடர்புச் சாதனத்தைச் சூழ குழுமுவார்கள். ஒவ்வொரு காலையிலும் வரும் களநிலைச் செய்திகள், வீழ்ந்தவர்களின் நீண்ட பட்டியலைத் தருகின்றபோது – ஆன்மா துடிக்கும். அந்த ஒரு காலை; அவர்கள் காத்திருந்த வேளை – தரையிறங்கி நடந்த படையினரை எதிர்கொண்ட நேற்றைய சண்டையில் களப்பலியானோர் பெயர்கள்…………. வரிசையாய்……….. ஒன்றன்பின் ஒன்றாய்……….. அதிலொன்றாய்…….! “லெப்ரினன்ற் சுனேத்ரா! – வேலாயுதபிள்ளை ஜெயந்தி, கல்மடு, கற்……..! மட்டக்……..!……..” அவன் அதிர்ந்ததை………. முகம் இறுகியதை…….. நிலை குலைந்ததை…….அருகிலிருந்தவர்கள் கவனிக்கவேயில்லை. “அம்மான்! ……….. என்ர தங்கைச்சி………….” என்று விம்மியபோது, பக்கத்திலிருந்த தோழனின் கைகளில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதபோது, நண்பர்கள் விக்கித்துப் போனார்கள்.

கெட்டிக்காரி; கல்லூரியில் சிறந்து விளங்கியவள்; விவேகமானவள் – ‘ஸ்டெதஸ்கோப்’ வளைந்து தொங்கும் தோள்களோடு அவள் ஒய்யாரமாக நடந்து வருவதைக் கண்நிறையப் பார்க்க காத்திருந்தவன்; காலம் அவளது தோள்களில் துப்பாக்கியைத் தொங்கவிட்டுக் களத்திற்கு அனுப்பியபோதும் வருத்தப்படாதவன்.

“என்ற தங்கச்சி! என்ன விட்டுட்டுப்போட்.a…..” சொல்லிச் சொல்லி அழுதுகொண்டே இருந்தான்.

மற்றவர்களிடம் காணமுடியாத சில அபூர்வ தன்மைகளைக் கொண்டிருந்ததால் – மெதுவாக, ஆனால் உறுதியாக வளர்ந்து மேல்நிலைக்கு உயர்ந்த புரட்சிவீரன்.

தென் பிராந்திய யுத்த அரங்கில், தன்னிகரில்லாப் போர் நாயகர்களாக விளங்கிய குறிப்படத்தக்கவர்களுக்குள் – தானும் ஒருவனாக ஒளிர்ந்த சண்டைக்காரன்.

களமுனையில் மாறுபடும் தளநிலமைகளின் போக்குகளுக்கு ஏற்ப தீர்மானங்களை எடுபதிலிருந்து, பொறுப்பெடுத்த பணிகளை எவ்வளவு விரைவாகவும் எவ்வளவு சுலபமாகவும் ஆற்றிமுடிக்க இயலுமென்பதையே சிந்தித்து செயற்படுத்துவது வரை – எதிலெல்லாம் ஈடுபட்டானோ அதிலெல்லாம் – அவன், மதிநுட்பத்தோடு காட்டிய அசாத்திய துரிதத்திற்காகவே ‘பொம்மர்’ என்பது அவனது மறுபெயர் ஆனது. முற்றுமுழுதாகவே அது காரணப்பெயர்தான். ‘பொம்மரண்ணா! பொம்மரண்ணா……” என்று ஒரு கூட்டம், பொழுதெல்லாம் அவனைச் சுற்றிக்கொண்டே திரியும்.

அவன் –

அதிர்ந்து அனல் கக்கும் படைக்கலங்களின் முன்னால், துணிந்து களமாடும் ஒரு போர்வீரன்; நுட்பமாய் வென்றிடும் ஒரு தளபதி; நம்பி வேலைகளைக் கொடுத்துவிட்டுப் போனால், இம்மியும் பிழையாமல் முடித்திடும் செயல் வீரன். ஒருநாள் அவனுடன் பழகக் கிடைத்தாலும் ஒருநாளும் அழியாத நினைவாகும் நண்பன்; இடையறாத போராட்ட அனுபவத்தில் இனங்காணப்பட்ட நேர்த்தியான பொறுப்பாளன்; விரிவுரை நிகழ்த்துகையில் ஒரு படையியல் பேராசான்; தேடிக்கேட்டுப் படிக்கையில், ஒரு அடக்கமான மாணவன்; கட்டுப்பாடாய் – ஒழுக்கமாய் – தமிழினத்தின் பண்பாட்டு நெறிபிறழாத மனிதனாய் வாழ்ந்து, இயக்கத்தின் உயிரிய விழுமியங்களைக் காத்து நின்ற புலிகளின் போராளி; ஆலோசகனாகி, அறிவுரைகள் சொல்லி, தளபதி கருணாவின் தோளோடு தோள் நின்ற அந்தப் படைவீரன் – சாதனை செய்து, சரித்திரம் படைத்து, பிரபாகரன் என்ற தலைவனுக்கு பெருமையினைத் தந்த புலிவீரன்.

ஆயித்தமலை, வரம்புயரத்திற்கு நீருயர்ந்து நெல் உயர்ந்திருக்கும் வயற்சேனை. அது – நீண்டு விரிந்து கிடக்கும் பரந்த வெளி; நான்கைந்து கிலோ மீற்றருக்கு ஈ எறும்பே இல்லாத வெட்டைத் தரை. நெற்கதிரைத் தவிர மண் மட்டத்திற்கு மேல் மங்கலாயும் ஏதும் தெரியாத புவியமைப்பு. இந்தச் சேனை நிலத்தை சரி நடுவாகக் குறுக்கறுத்துப் போகிறது – கரடியனாற்றையும் உன்னிச்சையையும் தொடுக்கும் பெருந்தெரு. இந்த வீதியால் நாளாந்தம் நடை ரோந்து போனது. சிங்கள அதிரடிப் படையணி ஒன்று. இந்த வெட்டை நிலப்பாதையில் வைத்து இந்த அணி மீது தாக்குவது பற்றிக் கதைத்தால், தேர்ந்த ஒரு படைத்துறை நிபுணன் ‘முட்டாள்’ என்பான். ஏனென்றால் தாக்குதலுக்குச் சாதகமே இல்லாத தளநிலைச் சூழல் அது. ஆனாலும் தாக்குதலை நடாத்துவது என முடிவெடுத்தான் லக்ஸ்மணன். புலிகள் இயக்கத்துக்குரிய தனித்துவம் அதுதான்! ஏற்கனவே தலைவர் சொல்லியிருப்பது போல, “அதீதமான தன்னம்பிக்கைதான் எமது பலமும்; பலவீனமும்.” பாதகமானது எனக் கருதப்பட்ட அதே காரணத்தையே அவன் சாதகமாக்கினான். எதிர்ப்பை எதிர்பாராமல் எதிரி கவனயீனமாக நகரும் வேளை – அவதானமற்ற அலட்சியமாகவும், உசார் நிலையற்ற உல்லாசமாகவும் காலாற நடைபயிலும் அந்தப் பகைப் படையணி, ஒரு வாய்ப்பான இலக்குத்தான்!

தானே நின்று பொம்மர் வேவு பார்த்தான்; இடம் தேர்ந்து, நாள் குறித்தான்; வீரர்களை ஒழுங்குபடுத்தித் தயாரானான். தளபதி கருணா ஒப்புதல் தந்தார்; புறப்பட்டான்.

உருமறைப்பு – போரில் இது ஒரு முக்கிய அம்சம். தாக்குதல் நடவடிக்கைகளின் போது இன்றியமையாத ஒரு பாத்திரம் இதற்குண்டு. உருமறைப்பானது, எதிரிக்கு எம்மை மறைப்பதுடன் எமது தந்திரோபாயத்தையும் மறைக்கின்றது. அதனால், தாக்குதலின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் அதுவும் பெரும்பங்கு வகிக்கின்றது. களத்தைத் திறப்பது நாங்களாய் இருக்கவேண்டும்; அவனாய் அல்ல.

ஒவ்வொரு வீரனாக லக்ஸ்மணன் தானே உருமறைத்துவிட்டான். போரின் இந்தத் தனிக்கலை அவனுக்கு ஒரு கைவந்த கலை.

வரம்போடு வரம்பாக, நீரோடு நீராக, நெல்லொடு நெல்லாக, புல்லோடு புல்லாக…………. காத்திருந்தார்கள்; பாயத் தயாரான புலிகள் பதுங்கிக் காத்திருந்தார்கள். வந்து கொண்டிருந்தான் – சாகத் தயாரான வகையில் பகைவன் வந்து கொண்டிருந்தான்.

பார்க்கின்ற தூரத்திலிருந்து கேட்கின்ற அளவுக்கு நெருங்கினான். எட்டித் தொடக்கூடியவாறு……. இதோ பகைவன்! பக்கத்தில்!! கணக்கான இடைவெளி சரியான தருணம். வெற்றிக்குரிய மணித்துளி இதுதான்! தீப்பொறி கக்கும் ‘ஜீ திறீ’ யோடெழுந்து, ஆட்டத்தைக் கோலாகலமாக ஆரம்பித்துவைத்தான் லக்ஸ்மணன். ஆவேசத் தாக்குதல்! உயிர் சிலிர்க்க வைக்கும் சண்டைக் கணங்கள். வெட்டை வெளித் தரையில் இந்த உச்சிப் பகற்பொழுதில் எங்கிருந்தையா வந்தனர் புலிகள்……….? நடப்பதென்னவென உணரும் முன்னரே சுருண்டு விழுந்தனர் பகைவர். சிங்களக் கொமாண்டோ அணி தன்னில் 14 பேரை பிணங்களாய் இழந்தது. தப்பியோடியவர்கள் தப்பிப் போனமை ஏதோ கடவுள் கிருபையால்தான். என்ன அதிசயம் பாருங்கள், புலிகளுக்குச் சொந்தமான ஒரு துளி இரத்தமும் சிந்திடாமல் பெற்றெடுத்த வெற்றி அது!

‘அகத்தினழகு முகத்தில் தெரியும்’ என்பதற்கு, சாலப் பொருத்தமானவன் அவன். வெளித் தோற்றத்தால் என்றல்ல, உள்ளத்து அழகினால் எங்களது உள்ளங்களை ஊடுருவி வாழ்ந்த ஒரு அற்புதமான நண்பன். அவனது அகத்திலும் முகத்திலும் மிளிர்ந்த பேரழகு. எல்லோரையும் வசீகரித்ததென்றால் மிகையே அல்ல. இனம்புரியாத அந்த ஈர்ப்புச் சக்தியின் வீச்செல்லைக்குள் அகப்படாதவர்களே இல்லை. எவரையும் கவரும் அபூர்வம் அவனில் மறைந்து கிடந்ததை நாங்கள் கண்டோம். எங்கும், எப்போதும், எவ்விதமாகவும் எடுத்துக்காட்டிச் சொல்லக்கூடியவனாக வாழ்ந்த – மாண்பான மனிதன் லக்ஸ்மணன்.

ஒரு மேற்சட்டை, ஒரு காற்சட்டை, ஒவ்வொரு உள்ளாடையோடு ஒரு சாரம் கிழியக் கிழியத் தைத்து, எந்தச் சோலியுமில்லாமல் லக்ஸ்மணன் ஓராண்டைச் சமாளிப்பான். கந்தையாகக் கந்தையாகக் கசக்கிக் கட்டி – சிக்கனமாய் வாழ அவன் கற்றுத்தரவில்லை; அப்படியாக வாழ்ந்தவனை பார்த்து நாங்கள் கற்றுக்கொண்டோம்.

ஈடுபட்ட பணிகளிலெல்லாம் ஈடுபாட்டோடு இயங்கி – ஆற்றல், புலமை, திறமை அனைத்தையும் அர்பணித்து வரலாற்றில் முத்திரையைப் பதித்தவர்கள் எண்ணக் கூடியவர்கள்தான். லக்ஸ்மணனும் அவர்களில் ஒருவனாகி, தலைவரின் விருப்பத்துக்குரிய ஒரு போராளியாகி, அவரது சிந்தையைக் கவர்ந்து உயர்ந்தான். அந்த உயர்ச்சி “லக்ஸ்மணனைப் போல………” என அவர் முன்னுதாரணம் காட்டுகின்ற உன்னதத்தை அவனுக்குப் பெற்றுத் தந்தது.

அவன் நின்ற இடம் சிறப்பைப் பெற்றத்து. அவனிடம் நின்றதால் குழுவொன்று மதிப்பைப் பெற்றது. சமையலில் உருசை; விளையாட்டில் திறமை; வேலையில் வேகம்; சண்டையில் வீரம். “பொம்மரண்ணான்ர குறூப்”ற்கு தனிப் பெயர் இருந்தது. ஏனைய குழுக்களிலிருந்து வேறுபாடு அப்பட்டமாய்த் தெரிந்தது.

காடென்ன? மலையென்ன? நடுப்பகல் வெயிலென்ன? நள்ளிரவுப் பொழுதென்ன…? பொம்மரண்ணா வேலைக்கென்றால் பின்னுக்கு நின்றவர்கள் கிடையாது; பின்னுக்கு நிற்பாட்ட ஆளே கிடையாது.

பெரும் தாக்குதலுக்குப் புறப்படும் போது, அவனது ஒழுங்கமைப்பைப் பார்க்கலாம். தாக்குதற்திட்டம் பெரிதாகும் போது, தயார்ப்படுத்தல் மிகப் பெரிதாய் இருக்கும் தயார்ப்படுத்தல் பெரிதாகும்போது, அவனுக்கே அது ஒரு சுமையாய் குவியும். எல்லாச் சுமைகளையும் தானே ஏற்பதால், அவனது தளபதிகளுக்கு வேலைப் பளு குறையும்.

பானை சட்டி எடுத்து, பருப்பு அரிசி பொதி செய்யும், படைவீரருக்கு ரவை எண்ணி, மருந்துப் பெட்டியில் பொருள் பார்த்து……… ஒவ்வொரு ‘கிளைமோரு’க்கும் இடம் காட்டி, ஒவ்வொரு வீரனுக்கும் நிலை காட்டி, ஒவ்வொரு அங்குலமாய் வியூகம் போட்டு……………… சென்று, வென்று மீண்டும் வரும்வரை, ஒவ்வொரு அடியிலும் அவனது உழைப்பிருக்கும்.

லக்ஸ்மணன் – நீங்காத நினைவுகளாய் ஆழ்மனதில் பதிந்துபோன அடலேறு அவன். ஒன்றை நினைக்க இன்னொன்று வருகின்றது அதை நினைக்க வேறொன்று வருகின்றது. வருவதை நினைக்க அடுத்தடுத்து வருகின்றது ஓயாத எண்ணங்களாக, நினைவுகளின் தொடரசைவு……….. நினைவுகள் அழிவதில்லை; அழிவதேயில்லை.

பயிற்சியில் நாங்கள் சோம்பலாகி பம்மாத்து விட்டபோது பக்கத்தில் நின்று தெம்பாக்கி சேர்ந்து வளைந்தவன்; தளத்தைச் செப்பனிட நாங்கள் கிடுகு காவி கூரை வேய, கம்பு தூக்கி மூடை அடித்துக் கூடவே முறிந்தவன். பிழைகள் இழைத்து நாங்கள் தவறுகள் செய்தபோது, பக்குவமாய் அணுகி எம்மை அன்பால் திருத்தியவன்; தவறுகள் செய்துவிட்டு நியாயம் சொல்வோர் மத்தியில், தனது தவறுகளாச் சுட்டியபோது அமைதியாய் ஏற்றுக்கொண்டவன். தவறுகளுக்காக தண்டனைகள் தந்தபின்பும், மேன்மையாய் விளக்கி அறிவுரை சொன்னவன். கீழ் இருக்கும் போராளி பெரியதாய்ச் செய்தபோது, மேலே இருக்கும் தளபதியிடம் இனங்காட்டி விட்டவன். கண் திறப்பான் என்று நாங்கள் காத்திருந்தபோது, கண் திறக்கவில்லை அவன் காவியமாய் ஆனான்.

நினைவுகள் அழிவதில்லை; அவை அழிவதேயில்லை!

வாவிகளில் மீன்பிடித்து வந்து கறியாக்கித் தந்தான். உண்டு சுவைத்தோம். சண்டைக்குப் போய் ஆறுகடக்கத் திக்குமுக்காடியபோது ‘வெல்லங் கம்பில்’ கயிறு திரித்து ஆறு கடத்திக் கூட்டிப் போனான். வென்று மீண்டோம். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வீரனாகினான். சேர்ந்து மகிழ்ந்தோம். நீருக்குள் மீனாகி நீந்தினான். பார்த்து வியந்தோம். ஆறிழுத்துப் போன தோழர்கள் போனவர்தானென விக்கித்தவேளை, நீரிழுத்துப் போகாமல் மீட்டெடுத்துப் போட்டான் – அதிர்ந்து இன்புற்றோம். மேற்கத்தைய இசையில் கிற்றார் துணையுடன் சொற்றுணை வேதியனை….. மனியாய்ப் பாடினான். கூடிக் குதூகலித்தோம். பாலு அண்ணனோடு நடைப் போட்டியில் நாரி வருத்தத்தால் பின்தங்கிப் போனான். நாமும் வருந்தினோம். தளத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் தசைகளை முறுக்கி எண்ணையில் ஜொலித்தான். பார்த்து இரசித்தோம். காத்திருந்து நாங்கள் பரிதவித்துப் பார்த்திருக்க பூத்து விழி சிரியாமலே……… பூ உதிர்ந்து போனான் – உயிருக்குள் அழுகின்றோம்.

நினைவுகள் அழிவதில்லை; அவை அழிவதேயில்லை………………

சண்டை செய்யத் தெரிந்தவன். சண்டையைச் செய்விக்கவும் தெரிந்தவன். போராளிகளை நிர்வகிக்கத் தெரிந்தவன். போரை நிகழ்த்தவும் தெரிந்தான்……….. களங்களிற்குத் திட்டமிட்டத் தெரிந்தவன், சமர்களை வெல்லவும் தெரிந்தவன்……. லக்ஸ்மணன் ஒரு போரியல் வல்லுனந்தான்; போரின் ஒவ்வொரு கூறிலும் அவன் தலை சிறந்து விளங்கியவன்; படைத்துறையில் ஒரு நிபுணனாகவே திகழ்ந்தவன். அவன் பங்கேற்ற களங்களிலெல்லாம் ஒரு All Rounder ஆக சகலகலா வல்லவனாக மட்டுமல்ல, Man of the Battle ஆக – அந்தக் களத்தின் நாயகனாகவும் விளங்கியவன்.

‘ஜீ திறீ ஏ திறீ’ – (G3 A3) சுரிகுழல் துப்பாக்கிதான் சிறுரக சுடுகலன்களுக்குள் அவனது விருப்பத்தேர்வு. தலைவர் அவர்களுக்கும் அது பிடித்தமானது; ‘ஹெக்லர் அன் கொச்’ நிறுவனம் உருவாக்கிய பெருமையைப் பெற்றது.

சீறிப்பாயும் சன்னங்களினூடு ‘ஜீ திறீ’ யோடு அவன் முன்னேறும் விரைவு சண்டைக்காரர்களையே அசத்தும். சுட்டுக்கொண்டிருக்கும் பகைவனைச் சுட்டு வீழ்த்தும் வேகம்….. அந்த வேகத்தோடேயே அடுத்தவனைக் குறிவைக்கும் லாவகம்……. அதே சமநேரத்திலேயே வீரர்களை நகர்த்திச் செல்லும் திறமை……… பார்ப்பவர்களை அதிசயிக்கவைக்கும். தொய்ந்து கொண்டிருக்கும் சண்டைக்குள் அவன் புகுந்தால், புலிகள் பிய்த்துக் கொண்டு பாய்வார்கள். ‘வோக்கி’ யில் அவனது குரலைக் கேட்டாலே, அவர்களுக்குள் புதுத்தெம்பு புகுந்து விளையாடும். மூக்கென்றால் மூக்கு , கண்ணென்றால் கண், நெஞ்சென்றால் நெஞ்சு – சொல்லிச் சுடுவான் லக்ஸ்மணன் – மில்லி மீற்றரும் விலகாது; நம்பி வைத்திருந்த ‘ஜீ திறீ’யும் அவனுக்குத் துரோகம் இழைத்தது கிடையாது………. அவனொரு அசகாயசூரன்.

தளபதி கருணாவின் நேரடிக் கவனிப்பின் கீழிருந்த பிரத்தியேக தாக்குதலணியின் கொமாண்டராக லக்ஸ்மணன் நியமிக்கப்பட்டிருந்தான். மட்டு – அம்மாறை மாவட்டப் படையணியில் இவன் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். அங்கு போரிட்டாலும் சரி, எங்கு போரிட்டாலும் சரி லக்ஸ்மணன் இல்லாமல் அந்தப் படையணி சண்டையிட்டதேயில்லை. அவனை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கலாம்; எப்பேர்ப்பட்ட தாக்குதலுக்கும் திட்டமிடலாம். “பொம்மரண்ணன்ர குறூப் இறங்கியது எந்தப் பக்கம்………?” என்பதை அறிய, தாக்குதல் திட்ட வரைபடத்தைச் சுற்றி போராளிகள் ஆவலாய் நிற்பது வழமை. எதிரியின் பலமான அரண் என்று கருதும் மிகவும் இறுக்கமான ஒரு பகுதி லக்ஸ்மணனின் அணிக்கு ஒதுக்கப்படும். திட்டம் செயல் வடிவம் பெறும்போது, முதலில் வீழும் பகுதியும் அதுவாகத்தானிருக்கும். எங்களுக்கு ‘பொம்மரால்’ வான் வழியால் மட்டும்தான் பிரச்சினை. பகைவனுக்கோ, ‘பொம்மரால்’ கால் வைத்த இடமெல்லாம் பிரச்சினை. அவனது பேரைக் கேட்டாலே ஒரு கலக்கம்; ‘வோக்கியில்’ குரல் கேட்டாலே நடுக்கம்; எதிரிக்கு அவனென்றால் நடுக்கத்தோடு காய்ச்சல். இது ‘உண்மை; வெறும் புகழ்ச்சியல்ல’

உன்னிச்சையில் இடர்பாட்டுக்குள் சிக்கிய ஒரு பலமுனைத் தாக்குதல் மேஜர் லத்தீப்போடு இன்னும் சிலரை, எதிரியின் எல்.எம்.ஜி ஒன்று வீழ்த்திற்று. அந்த முனையில் வியூகம் குலைந்தது; சண்டை குழம்பியது; வீரர் தடுமாறிய நேரம். அந்த எல். எம்.ஜியின் நிறுத்தமற்ற கதறல் முழுத் தாக்குதளையுமே பிசகிவிடச் செய்யக்கூடிய இக்கட்டான தருணம். பொருத்தமானவனாகத் தேவைப்பட்டான் இன்னொரு முனையில் நின்ற லக்ஸ்மணன். எல்.எம். ஜி. அரணுக்கு நேரெதிராக ஒரு அணியை இறக்கி கவனத்தை திசை திருப்பிவிட்டு, எதிரியின் பார்வையில் படாமல் தூரத்தால் வளைந்து நகர்ந்து, அந்த அரனைப் பின்பக்கத்தால் நெருங்கி பிரரியில் தாக்கினான். அந்த எல். எம்.ஜி புலிகளின் கைக்கு வந்ததுடன் சண்டையின் போக்கு புலிகளின் சார்பாகத் திசைமாறிய பின்னர் – வெற்றியும் புலிகளின் கைக்கே வந்தது.

முதலாவது ஈழப்போரில் பிரசித்தி பெற்றது வடமராட்சித் தாக்குதல் – அப்போது மட்டக்களப்பிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு படையணியில் அவன் சாதாரண போர்வீரனாக பங்கேற்றான்; இரண்டாவது ஈழப்போரில் சரித்திரம் படைத்தது பூநகரித் தாக்குதல் – இப்போது மட்டக்களப்பிலிருந்து பங்கேற்ற ஒரு படையணியில் ஒரு பகுதிப் பொறுப்பாக லக்ஸ்மணன் படை நகர்த்தினான்.

நாகதேவன்துறை இறங்கு தளத்தை கடற்புலி வீரர்கள் வளைத்துக்கொள்ள – ஞானி மேடம் முகாமையும், அதற்கு அரணாய் அமைக்கப்பட்டிருந்த காவலரண் தொகுதிகளையும் உலோலடக்கிய கடற்படைத் தளத்தை மட்டக்களப்புப் படையணி முற்றுகையிட்டது.

தளத்தின் கிழக்குப் பாதுகாப்பு வியூகத்தில், கறுக்காய்த் தீவுப் பகுதி முன்னணிக் காவலரண் வரிசையைத் தகர்த்தெறிந்து பாதை திறந்து, ஞானிமடம் முகாமை அந்தப் பக்கத்தால் தாக்கவேண்டியது லக்ஸ்மணனின் தாக்குதற் பிரிவிற்குரிய பணி.

கிழக்குப் பகுதியால் இவர்கள் முகாமை நெருங்கும் அதே சமநேரத்தில் – தளத்தினது தெற்குப் பகுதியில் பூநகரியிலிருந்து வரும் பிரதான வீதியோரக் காவலரண்களை உடைத்துக்கொண்டு உள்நுழையவேண்டிய இன்னொரு தாக்குதற் பிரிவு, சிக்கல்பட்டுவிட்டது.

தென்பகுதியில் எதிரி பலத்த எதிர்பார்ப்பைக் காட்டியதால், அந்த அணி உட்புகுவது கைகூடவில்லை. சண்டை நீள அணி சேதப்பட்டுக் கொண்டேயிருக்க அணி பலவீனமாகிக்கொண்டே போனது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணி லக்ஸ்மணணின் தாக்குதற் பிரிவுக்குத் துணையாக வந்து சேராததினால், முகாமைத் தாக்குவது சாத்தியப்படவுமில்லை.

சமர் நீண்டுகொண்டிருந்தது; வீரர்கள் வீழ்ந்துகொண்டிருன்தனர்; இரவு விடிந்துகொண்டிருன்தனர்; நிலைமை பிசகிக்கொண்டே போனது. உடனடியாக மாற்றுவழி ஒன்று தேடவேண்டிய கணங்கள், தென்பகுதியில் இறங்கிய தாக்குதலணிக்குப் புதுப்பலம் சேர்த்து ஒரு அகோரத் தாக்குதலை நிகழ்த்தி, அரண்களை உடைத் தெறிய வேண்டும். தளபதி பானு தீர்மானித்தபோது, மனக்கண் முன்னாள் லக்ஸ்மணன் நின்றான். இத்தகைய இறுக்கமான சூழ்நிலைகளை இளக்கிவிடுவதற்குரியவன் அவன்தான்.

கிழக்குப் பகுதியிலிருந்த அணி பின்னுக்கு எடுக்கப்பட்டு தென்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. குழுக்கள் துரிதமாக மீள ஒழுங்கமைகப்பட்டன. உடனடித் தாக்குதற் பிரிவொன்று உருவாக்கப்பட்டது. லக்ஸ்மணன் தான் கொமாண்டர். மூர்க்கத்தனமான ஒரு தாக்குதல், கணிக்கப்பட்ட நேரத்துக்குள் காரியம் முடிய தெற்குப் பாதுகாப்பு அமைப்பையும் உடைத்தெறிந்துகொண்டு, புலிகளின் தாக்குதற் பிரிவுகள் ஞானிமடம் முகாமைச் சுற்றி முற்றுகையிட்டன. பூரணமாகவே புலிகளுக்குச் சார்பான தலைநிலை பிறந்தது. எனினும் – பொழுது விடிந்து விட்டதால் முகாம் தாக்குதல் அடுத்த இரவுக்கு ஒத்திப்போடப்பட்டது.

மூன்றாம் நாள் மாலை – ஞானிமடம் கடற்படை முகாமை அழித்து, பூநகரி கூட்டுத்தளத் சமரை வென்று, புலிகளின் படையணிகள் வெற்றி வாகையொடு மீண்டுவர.

லக்ஸ்மணனை மட்டக்களப்பு – அம்பாறைப் பிராந்தியத்தின் துணைத் தளபதியாகத் தலைவர் அவர்கள் நியமித்தார்.

தென்பிராந்தியப் படையணி புனருத்தாரணம் செய்யப்பட்டு புதுமெருகூட்டப்பட்டு – புதிய நிர்வாகக் கட்டமைப்புகளுடன் மட்டக்களப்புக்கு புறப்பட்டபோது எவ்வளவு குதூகலத்தை அவனில் கண்டோம்.

தளபதி ராம் இதற்குத் துணைச் சேனாதிபதியாக அவன்……….

எத்தனை கனவுகள்……….. எத்தனை கற்பனைகள்……….. தென்தமிழீழமெங்கும் புலிக்கொடி கட்டும் ஆசைகள்……….

கட்டுமுறிவுக்குளம் தாக்குதலில் பாதிப் பொறுப்பெடுத்துச் சென்றவன், பூமாஞ்சோலைத் தாக்குதலில் முழுவதையும் பொறுப்பெடுத்தான். மட்டு நகரிலிருந்து ஏழே கிலோ மீற்றர் தூரம்தான். சற்றுச் சிக்கலான இலக்கு. சிக்கெடுத்துச் சிக்கெடுத்துப் பழகிப்போனவன் – முடிவெடுத்தான்.

படியாய்ச் சென்றனர்; பகையை வென்றனர். மீளத் திரும்பிட அவர்கள் தயாரான வேளை…….. அதிர்ந்து ஒரு வெடியோசையோடு அந்தத் துயரம் நிகழ்ந்தது!

போரெடுத்துப் போரெடுத்துப் பகைவனை அழித்துக்கொண்டேயிருந்த எங்களின் பொம்மரை, மறைந்து கிடந்த ஒரு பகையாளன் ‘கிரனேட்’டால் வீழ்த்திவிட்டான்.

எட்டாண்டு காலமாக ஓயாத புயலாகச் சுழன்றடித்த அந்த வீரனை, கைக்குண்டின் சிதறல்கள் சுயநினைவற்று வீழ்த்தின. “பொம்மரண்ணா……! பொம்மரண்ணா….!!” என்று மௌனமாய்க் கதறிய தோழர்களின் மடியில் சாவோடு போராடிய அந்த வீரன்.

மரணத்தை வென்றான்; மனங்களில் நிறைந்தான் எம்முள் நிலையான நினைவானான்!

அவனது பேர் சொல்ல – அவனது கைகளில் வளர்ந்த நூற்றுக்கணக்கான போராளிகள், தானை வீரர்களாகவும், தளபதிகளாகவும் இன்று அணிவகுத்துள்ளார்கள்.

மகிழடித் தீவிலிருந்து நெடுந்தீவு வரை தமிழன் வென்றெடுக்கும் நாளினுக்காக அவர்கள் போரெடுப்பார்கள்! போரெடுப்பார்கள்!! லக்ஸ்மணனின் புதைகுழி மீதினில் புலிக்கொடி நாட்டுவார்கள்.

எரிமலை (வைகாசி 1995) இதழிலிருந்து

மண்ணையும் மக்களையும் நேசித்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

மட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க நாள்Maamanithar-Joshap-Paraajasingkam

தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.

பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது

மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது. தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்து வருகின்ற தெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.

அவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும். விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம். தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.
இன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள். ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.

கதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை?

ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா?

ஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா?

குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா?

ஆந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா? இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும்;;உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும்; என்பதே.

மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன. மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.

தேசியத் தலைவரின் மாமனிதர் விருது

கரும்புலி கப்டன் நாகராணி

BT Cap Nagaraniபாதுகாப்பு….

அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது.

புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது.

முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக் குளமென்பதை நடைபெற்ற சண்டைகள் மூலம் விடுதலைப் புலிகளின் படையணிகள் வெளிப்படுத்தி நின்றன.

எத்தகைய சூழல் ஏற்படினும் அந்த இடத்தை இராணுவம் அடித்துப்பிடிக்க விடுவதில்லையென்ற உறுதி எல்லோரிடமும் இருந்தது. அதே உறுதியோடு தான் நாகராணியுமிருந்தாள்.

அவளொரு R.P.G சூட்டாளர். புளியங்குளத்தில் சிங்களப்படைகளின் மனோபலமென்பது அவர்களின் டாங்கிகளில்தான் தங்கியிருந்தது. டாங்கிகள் வெடித்துச் சிதறும் போது கூடவே முன்னேறி வரும் படைகளின் மனோபலமும் வெடித்துச் சிதறிவிடும். அதன் பின் களத்திலே சிங்களப்படைகளைக் காணமுடியாது.

அன்றைய நாளும் அப்படித்தான் எதிரியால் எந்த நேரமும் தாக்கப்படக்கூடிய அந்தப்பகுதிக்குள் அவள் எதிரியின் அசைவை எதிர்பார்த்தபடியிருந்தாள். ஆனால், இன்று எதிரி வருவதாக இல்லை. ஆனால், வந்தது புதிதாயொரு பிரச்சினை. அது இயற்கையால் வந்த சிக்கல்.

வானம் கறுத்து மழைக்கான அறிகுறி தென்பட்ட கொஞ்ச நேரத்தில் மெல்லியதாகத் தொடங்கிய மழை. செல்லச்செல்ல அதிகமாகிக் கொண்டே போனது. மழை பெய்தால் வெள்ளம் தாராளமாக ஓடக்கூடியதும், நிற்கக்கூடியதுமான பிரதேசமது.

மழை நீர் சிறிது சிறிதாக உட்புகத் தொடங்கு கிறது. உட்புகுந்த நீர் ஆரம்பத்தில் நாகராணியின் பாதங்களை நனைக்கின்றன. அவள் தான் நனைவதைப் பற்றிக் கவலைப்படாமல் சு.P.பு உந்துகணைச் செலுத்தியைப் பாதுகாத்துக்கொண்டாள். மழை விடுவதாக இல்லை. நீர்மட்டம் குறைந்து கொண்டே போனது. பாதத்தை நனைத்த நீர் முழங்கால் மட்டத்தைக் கடந்து இடுப்பு வரை சென்று கொண்டிருந்தது.

ஆனால், இதைச் சாட்டாக வைத்து காப்பரணை விட்டுப் பின்வாங்க முடியாது. ஏனெனில் எதிரிகளின் டாங்கிகள் அதிகம் முன்னேறக்கூடிய பகுதி அது. மழையைத் துணையாக வைத்து எதிரிப்படைகளின் கவசங்கள் முன்னேறக்கூடும். அதனால், தண்ணீரைப் பற்றிக் கவலைப்படாமல் அவள் விழிப்பாயிருந்தாள். மழையும் அவளைப் பற்றிக் கவலைப்படாமல் தன்பாட்டில் பொழிந்து கொண்டிருந்தது.

மழை நீர் இப்போது அவளின் இடுப்பைக் கடந்து மேல்நோக்கிச் செல்கிறது. அவளின் கைகள் சோரத் தொடங்குகின்றன. கைகளை ஆற்றுவதற்கு கீழே விட்டால் R.P.G நனைந்துவிடும். அந்தவேளையில் அவளுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் கூடவிருந்தவர்களுமில்லை.

ஏனைய பொருட்களைப் பாதுகாப்பதில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அதிகரித்த நீர்மட்டம் இப்போது நெஞ்சைத் தாண்டி நின்றது. R.P.Gயைக் கொஞ்சமும் கீழிறக்க முடியாது. பேசாமல் தலையில் தூக்கி வைத்தபடியிருந்தாள். தனக்கு எந்தச்சேதம் வந்தாலும் R.P.Gக்கு எதுவும் நடந்து விடக்கூடாதென்பதில் அவள் உறுதியாயிருந்தாள்.

வீரத்தின் சிகரங்கள்………

உடற்சோர்வு அவளது தாங்கு சக்தியைக் கடந்து விட்டபோதும் அது நனைந்து விட்டால் தனது செயற்திறனை இழந்துவிடும். அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடியைப் புரிந்தவளாய் அன்றைய நாளில் இயற்கையின் சவாலைவென்று தன் ஆயுதத்தைப் பாதுகாத்தாள்.

இந்த மனோதிடத்துடனும், அசையாத உறுதியுடனும் தன் தேசத்தின் மீது வைத்திருந்த ஆழமான நேசத்தின் காரணமாய் அவள் கரும்புலியானாள். அவளின் கரும்புலி வாழ்க்கையென்பது சிங்களத்தின் குகைக்குள் இருந்தது. கரும்புலியாகி சிங்களத்தின் இருப்புக்களை உடைப்பதற்கு பெரும் பலம் சேர்த்த அவள் 25.12.1999 அன்று ஆனையிறவு பெருந்தளத்தினுள் ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிக்கு அடிக்கல்லாகி வரலாறாகினாள்.

புரட்சிமாறன்.
விடுதலைப் புலிகள் (04புரட்டாதி 2008)

ஓய்வறியாத ஒரு போராளி அப்பையா அண்ணை

மீண்டும் ஒருமுறை அப்பையா அண்ணையின் நினைவுநாள் வந்துள்ளது. அப்பையா அண்ணை என்றவுடன் நினைவுக்கு வருவது அந்த ஓய்வு ஒழிச்சல் இல்லாத போராளித்தனமே. அதிலும் அப்பையா அண்ணையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீலன், சங்கர் போன்றோர் திணறி ஓடி ஒழியும் காட்சிகள் இன்னமும் நினைவுக்குள் நிற்கிறது.Lt.Col. Appaiya

சீலன், சங்கர், கிட்டு போன்றோர் அதிகூடிய வேகத்துடனும் பயமில்லாத வீரத்துடனும் தினமும் ஏதாவது செயற்பாட்டில் செறிவாக ஈடுபடுபவர்கள். அவர்களின் வேகமே மிக அதிகம் என்று அண்ணை அடிக்கடி சொல்வார். அப்படியான சீலன்,சங்கர் போன்றோரையே திணறடிக்கும் வேகமும் புதிய திட்டங்களும் நிறைந்தவராக அப்பையா அண்ணை இருந்தவர். பெருகி ஓடி வரும் பெரும் காட்டாறு போன்றது அவரின் விடுதலைப் போராட்ட ஆர்வம்.

அதனை தக்கவைத்து தேக்கி செற்பாட்டில் ஆரோக்கியமாக ஈடுபடுத்துவதற்குள் சீலன் ஆட்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும். ஏதாவது ஒரு வெடிப்பொருளுடன் வந்து நிற்பார்’.புதிய தாக்குதல் ஒன்றுக்கான திட்டத்துடன். ஏற்கனவே திட்டமிடப்பட்டு தகவல் சேகரித்தல், வளங்களை தேடல் என்ற நிலையில் இருக்கும் பெருந்தாக்குதலை இந்த தாக்குதல் திட்டம் நடைபெறாமலேயே செய்துவிடும் என்று சொல்லி அப்பையா அண்ணையை கொஞ்சம் பொறுக்க சொல்லி கெஞ்சுவார்கள். அதற்காக அப்பையா அண்ணையை வேறு இடங்களுக்கு தங்க அனுப்பியும் விடுவார்கள்.

ஒருமுறை இப்பிடித்தான் அப்பையா அண்ணையின் உரு கொஞ்சம் அதிகமாகி விடவே அவரை எங்கள் பகுதியில் தங்கவைக்க அனுப்பிவிட்டான் சீலன். எங்களுருக்கு அருகில் இருக்கும் பொலிகண்டிப் பகுதியில் இருக்கும் எமது நெருங்கிய ஆதரவு உறவு ஒன்றின் வீட்டில் தங்கவைத்தோம்.

அப்போதுதான் சிவநேசன்(சூசை) போன்றவர்கள் அமைப்பில் இணைவதற்காக கதைத்துக் கொண்டிருந்த பொழுதது. அப்பையா அண்ணையை ஒருநாள் அவர்கள் கடற்கரைக்கு கூட்டிச் சென்றிருந்தார்கள். அந்த நேரத்தில் சிங்கள கடற்படை இப்போதையை போலவே எந்தவித பயமும் இன்றி குளங்களில் பயணம் செய்வது போல கடலில் ரோந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.

எதிர்ப்படும் கடற்தொழில் படகுகளை மறித்து சோதனை இடுவது அடிப்பது என்று ஒரு கடல்அரக்க இராஜ்ஜியம் தான். எல்லோரும் இதனை பலநூறு தரம் பார்த்திருப்போம். எங்களுக்குள் தோன்றாத ஒரு புது திட்டம் அப்பையா அண்ணைக்கு வெளித்தது. மறுநாளே ‘சீலனையும், சங்கரையும் உடனே பார்க்க வேணும்’ என்று ஒரே வற்புறுத்தல்.

அனுப்பி ஒரு வாரத்துள் அப்பையா அண்ணையை கூட்டிக்கொண்டு மீண்டும் அங்கு போனால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? ஆனால் அப்பையா அண்ணை கேட்டுவிட்டால் பிறகு மறுத்து ஆகாது. இறுதியில் சீலனே கொஞ்சம் இறங்கி வந்து ‘அப்பையா அண்ணை அங்கே வரவேண்டாம். நாங்களே அவரிடம் பொலிகண்டிக்கு வருகிறோம்’ என்று சொல்லி வந்தார்கள்.

சீலனை கடற்கரைக்கு கூட்டிச் சென்ற அப்பையா அண்ணை ‘ நேவி போர்ட் இந்த பக்கத்தாலே வரும் போது ஒரு பார்சலை அல்லது சாக்குமூட்டையை கடலில் தற்செயலாக மிதக்க விடுவோம். அவன் அதனை எடுக்கும் போது அது வெடித்தால் எப்படி இருக்கும்’ இதுதான் அப்பையா அண்ணையை கொஞ்சம் ஓய்வெடுங்கோ என்று அனுப்பின இடத்திலை அவர் கண்டுபிடித்த திட்டம்.

இந்த இடத்திலை அப்பையா அண்ணையை பற்றி கொஞ்சம். சீலனுக்கு நன்கு தெரியும் அப்பையா அண்ணை ஒரு தாக்குதல் திட்டம் தருகிறார் என்றால் அதன் ஒவ்வொரு தொழில்நுட்ப வேலையையும் அவர் செய்ய முடியும் என்றால் மட்டுமே தருவார். அதுதான் அப்பையா அண்ணை.

ஆனால் அந்த தாக்குதல் முறை வேறுவேறு காரணங்களால் பின்னர் நடைபெறாமலேயே போய்விட்டது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் கடற்படை அணியாக வளர்ச்சி பெற்ற காலங்களில் இதனை ஒத்தமுறையில் பல தாக்குதல்களை நடாத்தி அப்பையா அண்ணைக்கு காணிக்கை ஆக்கினார்கள்.

பழைய போராளிகளுக்கு மட்டுமல்ல அப்பையா அண்ணையை தெரிந்த புதிய போராளிகளுக்கும் கூட அப்பையா அண்ணை வீரமரணமாகி பதினேழு ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதும் அவரின் பெயரை கேட்டதும் அவர்களின் மன எழுச்சியும், ஏதோ ஒரு பெரும் உணர்வும் பெருமிதமும் அவர்களின் கண்களிலும் கதையிலும் தெரிகிறதே அதுதான் அப்பையா அண்ணை இந்த போராட்டத்துள் விட்டு சென்றுள்ள அவரின் அழியாத சுவடு ஆகும்.

அப்பையா அண்ணை என்ற மனிதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பதித்த சுவடுகள் காலத்தால் மறையக் கூடியவை அல்ல. அவை மனங்களுக்குள் ஆழமாக கொலுவீற்று இருக்கின்றன.

மிகக்குறுகிய சாதிவாதமும் குழுவாதமும் பேசியபடி அமைப்பில் இருந்து சிலர் வெளியேறி சென்ற நேரமொன்றில் பலர் மனமொடிந்து விலகி சென்று கொண்டு இருக்க அண்ணை ஒரு கைவிரலில் இருக்கும் விரல்கள் அளவேயான உறுப்பினர்களுடன் நின்றிருந்த நேரத்திலேயே அப்பையா அண்ணையை தேசியத்தலைவர் முழுநேரமாக கொண்டுவருகிறார். அதற்கு முதலே அவர் தேசியத்தலைவரின் தொடர்பில் இருந்தார். ஆனால் பெரிதாக எவருக்கும் தெரியாமல் ஒருவிதமான உறங்குநிலை உறுப்பினராகவே இருந்தார்.

இத்தகைய சிலீப்பிங் செல்களை உருவாக்கி பேணுவதில் தலைவர் மிகவும் திறமையானவர். பகிரங்கமாக வெளித்தெரியும் கட்டமைப்பும் ஆளணியும் அழிக்கப்பட்டாலும் கூட இந்த உறங்குநிலை உறுப்பினர்கள் மீளவெளிவந்து செயற்படுவதே உலக மரபு. அப்பையா அண்ணையும் அப்படியே வெளிவந்தார்.

அவர் வேலைசெய்து கொண்டிருந்த மருத்துவமனை வேலையிலே தொடர்ந்தபடி தலைவரின் தொடர்பில் இருந்தவரை மண்ணுக்குள் புதைந்து நின்றுவிட்ட விடுதலைப் போராட்ட தேர் சக்கரத்தை நகர்த்தும் உன்னத பணிக்காக வரலாறு அழைத்து வந்தது.
உண்மையிலேயே அந்த பொழுதில் அப்பையா அண்ணை வந்திருக்காது விட்டால் மிகப்பெரிய தாக்குதல் திட்டங்கள் நடந்திருக்காது அல்லது சில காலம் தள்ளி நடந்திருக்கும் என்றே சொல்லலாம்.

ஒரு விடுதலை அழைப்புக்கு தேவையானது மக்கள் மத்தியில் கரைந்துறைந்து வாழ்ந்து கொண்டே போராட்டத்துக்கான தளத்தை விரிவுபடுத்துவதுதான்.

மக்கள் மத்தியில் வாழ வேணுமானால் எமக்கு வீடுகளும் தங்குமிடங்களும் வேணும். யார் தருவார்கள் அப்போது..??தேவையறிந்து அப்பையா அண்ணை களம் இறங்கினார்.தந்தையாக, சித்தப்பாவாக, மாமாவாக, அண்ணாவாக என்று ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு வேடம். போராளிகளை அறை எடுத்து தங்க வைத்துவிட்டால் அடுத்த கட்டம் இலகுவாக நகரலாம் என்பதால் அப்பையா அண்ணை அலைந்து திரிந்து பல பகுதிகளில் வீடுகளை, அறைகளை எடுத்து தங்குமிடம் ஆக்கினார்.

அப்படி அலைந்து திரிந்ததில் வீட்டு உரிமையாளர்களின் மனோவியலை அவர் ஆழமாக படித்தும் இருந்தார். இளவாலைப் பகுதியில் எடுத்து தந்த அறையில் இருக்கும் போராளிகள் தெல்லிப்பழையில் பொன்னம்மான் ஆட்கள் இருந்த வீட்டில் வந்து குளித்து சாப்பிடுவது வழமை. அப்பையா அண்ணை அடிக்கடி சொல்லுவார். ‘டேய், இளவாலை வீட்டு அறையில் இருக்கிற ஆட்கள் கிழமைக்கு இரண்டு நாள் தன்னும் அந்த வீட்டிலேயே குளியுங்கோடா வீட்டுக்காரன் சந்தேகப்பட போறான் சந்தேகப்பட போறான் என்று.

யார் கேட்டார்கள்.கடைசியில் ‘ தம்பியவையள் நீங்கள் இங்கை ரூம் எடுத்து இருக்கிறீங்கள். சீமென்ட் தொழிற்சாலையிலை வேலை செய்யிறீங்கள் என்றுதான் உங்கடை சித்தப்பா சொன்னவர். ஆனால் ஒருநாள்கூட இந்த வீட்டிலை நீங்கள் குளித்து நான் காண இல்லை.வேறு எங்கேயும் இன்னொரு ரூம் இருக்கோ’ என்று சந்தேகப்பட்டு கேட்க அந்த ரூமை காலி பண்ண வேண்டி வந்த போது அப்பையா அண்ணை ‘நான் சொன்னா ஆர் கேட்கிறாங்கள்’ என்று சொல்லி மீண்டும் இன்னொரு ரூம் தேடி அலைய தொடங்கியதுதான் அவரது இயல்பு.

விடுதலைப் புலிகள் என்றால் இப்பிடித்தான் இருப்பார்கள் என்று சிங்கள புலனாய்வு போட்டு வைத்திருந்த எல்லாவிதமான அனுமானங்களையும் சிதறடித்த தோற்றமும் வயதும் அப்பையா அண்ணைக்கு.

ஏற்கனவே வெடிப்பொருட்களுடன் ஏதாவது தொழில்நுட்பம் செய்யும் ஆவல் இருந்த பொன்னம்மான், சங்கர், செல்லக்கிளி, கிட்டு ஆட்களுக்கு அப்பையா அண்ணையின் வருகை பல கதவுகளை திறந்து விட்டிருந்தது. அதிலும் அப்பையா அண்ணைக்கும் சத்தியநாதனுக்கும்(சங்கர்) ஒருவிதமான வெடிகுண்டு பாசையே இருந்தது என்று சொல்லுமளவுக்கு எறிகுண்டுகளையும், கண்ணிகளையும் செய்ய முயற்சித்ததில் ஒரு ஒருமித்த உணர்வு இருந்தது.

இந்த விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பித்த நாட்களில் பகலில் குப்பை மேடுகளில் பார்த்து கண்வைக்கப்படும் பேணிகள், மார்மைட் போத்தல்கள், தோசைசட்டிகள் என்பன இரவில் குண்டுகள் செய்வதற்கான மூலப்பொருட்களாக அண்ணையால் தேடி எடுக்கப்பட்டதை போலவே அப்பையா அண்ணை தன் இறுதி நாள் வரைக்கும் எமது வளவுகளில் தெருக்களில் தேடி எடுக்கும் பொருட்களை போராட்டத்திற்காக பயன்படுத்தும் முறை பற்றி ஆராய்ந்தவர்.

இந்த விடுதலைப் போராட்டம் உலக விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமாக விமானங்கள், அதிவேக தாக்குதல் படகுகள், நீர்மூழ்கிகள், துல்லியமான எறிகணை வீச்சு என்று வளர்ந்ததற்கு ஏதோ ஒரு புள்ளியில் மிகப்பெரும் ஆதர்சமாக, ஊக்கியாக அப்பையா அண்ணையும் நின்றிருக்கிறார்.

இவ்வளவு செய்யும் அப்பையா அண்ணைக்குள் ஒரு குழந்தை மனது எப்போதும் தூங்காமல் விழித்தபடியே இருந்திருக்கிறது. அவர் எமக்கெல்லாம் தந்தையாக, சித்தப்பாவாக, மாமாவாக, பெரிய அண்ணாவாக வீடுகள், அறைகள் வாடகைக்கு எடுப்பதற்கு நடித்திருக்கிறார். ஆனால் உண்மையிலேயே அவர் போராளிகளை தனது பிள்ளைகளாகவே, தனது மருமக்களாகவே, தனது பெறா மக்களாகவே நினைத்திருந்தவர்.

சங்கர் முதன்முதலில் வீரமணமடைந்த சேதி கேட்டு அப்பையா அண்ணை ஒரு சின்னக் குழந்தை போலவே வெடித்து அழுத போதிலே அது புரிந்தது. பிறகு சீலன் போன போது, செல்லக்கிளி போன போது என்று..

வெறுமனே இந்த நினைவுகள் மீட்டி பார்ப்பதற்கு மட்டுமல்லமால் கற்றுக்கொள்ளவும் செய்தால் மட்டுமே நாம் அடுத்த கட்டத்துக்கு நகரமுடியும்.

அப்பையா அண்ணையின் நினைவுப்பாடம்: எல்லோரும் பகுதிநேர செயற்பாட்டாளர்களாக அரசியல் செய்தும் எழுதியும் கொண்டிருக்கும் இந்த பொழுதில் முழுநேரமாக தன்னை போராட்டத்துக்காக கொடுத்து முன்வந்த அப்பையா அண்ணையின் முனைப்பு நம் எலலோர்க்கும் வந்தே தீர வேண்டும்.

தனது மருத்துவமனை வேலையை விட்டுவிட்டு முழுமையாக அந்த வயதிலும் போராட முன்வந்த அப்பையா அண்ணை நம் எல்லோர்க்கும் எப்போதும் முன்மாதிரி தான். எப்போதும், எப்போதுமே….

-ச.ச.முத்து-

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் வீரவரலாறு -காணொளிகள்

anton balasingam

“தேசத்தின் குரல்” கலாநிதி.அன்ரன் பாலசிங்கம் 27.11.2005 உரை

இறுதி நிகழ்வில் வன்னியிலிருந்து தளபதிகளின் உரைகள்

பாடல்கள்

 

அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வில் வன்னியிலிருந்து தளபதிகளின் உரைகள் -காணொளி

anton balasingham funeral

இறுதி நிகழ்வில் வன்னியிலிருந்து தளபதிகளின் உரைகள்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில்

Thesathin Kural-2010

தேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு –  தேசியத் தலைவரின் அறிக்கை

LTTE leader paying homage to Anton Balasingham
தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
2006-12-14

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.

பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்

***

Pictures-தேசத்தின் குரல்/anton balasingam

  1. மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்
  2.  வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம்
  3. என்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு! வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்!
  4. “தேசியத்தின் குரல்” கலாநிதி அன்டன் பாலசிங்கம் 4ம் ஆண்டு வீரவணக்கம்
  5. சபைகளை வென்ற சாணக்கியன் தேசத்தின் குரல் -புதுவையின் குரலில்
  6. இன்றைய தருணத்தில் தேவைப்படுகின்ற ‘தேசத்தின் குரல்’
  7. தேசத்தின் குரலுக்கு வீர வணக்கம்

—————————————————-
Dr. Balasingham Last Speech at Alexandra Palace London

LTTE leader paying homage to Anton Balasingham 2

தேசத்தின் குரல் இரங்கல் செய்திகள்

 

Up ↑