Search

Eelamaravar

Eelamaravar

Month

August 2012

நாட்டுப்பற்றாளர் நல்லதம்பி ஐயா


தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த கந்தையா நல்லதம்பி என்னும் பெயர் கொண்ட நல்லதம்பி ஐயா (G3 ஐயா) அவர்கள் 06 .08 .2012 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.

மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த நல்லதம்பி ஐயா அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு சுயமரியாதைக் கழகம் என்னும் பெயரில் பகுத்தறிவு அமைப்பைத் தோற்றுவித்த காலத்திலிருந்து, பின்னர் அறுபதுகளில் தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் ஏற்பட்ட தமிழர் எழுச்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் தமிழ்ச் சமூக முன்னேற்றத்துக்கும் அயராது உழைத்து வந்தவர்.

இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதவழியில் வீறு கொண்டெழுந்தபோது 1984 ஆம் ஆண்டிலிருந்து இறுதிவரை தமிழீழ விடுதலைப் புலிகளோடு தோளோடு தோள் நின்று பயணித்தார்.

இந்தியப் படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசிய உணர்வுமிக்க மூத்த மகனை ஒட்டுக்குழுக்களின் துப்பாக்கிக்குப் பலிகொடுத்த நிலையில் இந்தியப்படை நல்லதம்பி ஐயாவைக் கைதுசெய்து சிறை வைத்திருந்தது.

இவரின் இன்னொரு மகன் கப்டன். ரதீஷ் 24 . 10 .1987 அன்று களத்தில் வீரச்சாவடைந்தார்.

தேசியத்தலைவரால் அறியப்பட்டிருந்த தீவிர ஆதரவாளர்களுள் நல்லதம்பி ஐயாவும் ஒருவர்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்ட ஆரம்பகாலப் போராளிகளுள் இவரை அறியாத நிலையில் எவரும் இருந்ததில்லை எனுமளவுக்கு போராட்டத்தோடு ஒன்றித்திருந்தவர் நல்லதம்பி ஐயா.

தென்தமிழீழத்தில் எமது இயக்கத்தின் தொடக்ககால வளர்ச்சிக்கு நல்லதம்பி ஐயாவின் பங்களிப்பு அளப்பரியது.

எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் நல்லதம்பி ஐயாவின் அர்ப்பணிப்பும் செயற்பாடுகளும் முக்கியமானவை.

எமது போராட்டத்துக்காகவே வாழ்ந்து உயிர்நீத்த உணர்வாளர்கள் வரிசையில் நல்லதம்பி ஐயாவும் இணைந்துகொள்கிறார்.

தான் நேசித்த தமிழீழ மண்ணின் விடுதலைக்காக தனது மனைவியோடு விடுதலைப் புலிகளுடனேயே பயணித்து முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்தார்.

தமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை பயணித்த நல்லதம்பி ஐயாவை நாட்டுப்பற்றாளர் எனக் கெளரவப்படுத்துவதில் எமது அமைப்பு பெருமை கொள்கிறது.

அமைதியாகக் கண் மூடியுள்ள நல்லதம்பி ஐயா அவர்களை நினைவு கூரும் இவ்வேளையில் அவர் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது ஆறுதலைத் தெரிவிக்கின்றோம்.

-ஊடக அறிக்கை

 

தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா) 1930 -2012

2ம் லெப் பூபாலினி வீரவணக்கம்

ஓயாத அலைகள் 02 இல் 29.08.1998 இல் கிளிநொச்சி வெற்றிச் செய்தியோடு வீரமரணம்
2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக,சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம்.

அவளுக்காய் கொடுத்த பணி நிறைவு பெறும்வரை அவளைப் பசியோ, தூக்கமோ அண்டாது. அவளுக்கான பணியாய் அலுவலகப் பணி வழங்கப்பட்டிருந்த காலமதில், குறித்த அலுவலக நேரத்தில் முழுமையாக தொழிற்பட்டுக் கொள்வதோடு அந்நேரத்திற்கும், வேலைக்கும் அப்பாலும் சென்று கண்விழித்துக் கடமையில் ஈடுபட்டிருப்பாள்.

ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைநேரத்திற்கு அப்பால் என்றால், ஓய்வு நேரங்களையும் நித்திராதேவியிடம் சரணடையும் நேரங்களையும் தான் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். போராட்ட பணியே ஆழமான அர்ப்பணிப்பினை வேண்டிநிற்கும் பணி. அதனுள்ளும் அவள் ஆழமாய் சென்று அர்பணத்துள் அர்ப்பணம் செய்வாள்.

எதனையாவது செய்து முடித்து விடவேண்டுமென்று தீர்மானித்துக் கொள்வாளானால் அதனைச் செய்து முடித்து விட்டுத்தான் மறுவேலை நடக்கும்.

அவளின் ஒழுங்கிற்கு ஒரு உதாரணம்: நடைபெற்ற ஓட்டப் போட்டி ஒன்றில் பூபாலினியும் கலந்துகொண்டாள். ஆள் கட்டை அதிகம் ஓடமாட்டாள். அகலக்கால் வைத்தால் முடியாதுதானே! ஆனாலும் கலந்துகொண்டாள் தானும் கலந்து கொள்வதாய். அவளுக்குத் தெரியும் முதல் 3 இடங்களிற்குள்ளும் இடம் கிடைக்காது என்று. ஆனாலும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்றே கலந்துகொண்டாள்.

‘எதுவென்றிலும் கலந்து கொள்ளாதிருப்பதனை விடவும் கலந்து கடை நிலையை அடைந்தாக்கூட அதுகாரியம்’ என்ற அவள் நினைத்திருக்க வேண்டும்.

முதல் மூன்று நிலைகளுக்குள்ளும் வரமுடியாதென்று கணக்கிட்டுக் கொண்டோர் போட்டி நிறைவு பெறுவதற்கு முன்னராகவே நின்று விட இவள் மட்டும் போட்டிக்குரிய அத்தனை ‘ரவுண்டு’ களையும் ஓடி முடித்த பின்பே ஓய்வெடுத்தாள்.

“ஏன்ரியப்பா நின்றிருக்கலாமே! ஏன் உந்த வீண் அலைச்சல்” என்றபோது அவள் கூறினாள்:

“எதுவொன்றிலும் கலந்துகொண்டாலும் அது அது முடியும் வரையில் அது எத்தனையாவதாக வருவதானாலும் சரி ஓடிமுடிக்க வேண்டும்” என்று. அதுதான் ஒழுங்குமுறை அது தான் அவள்.

பூபாலினி, அவள் தனக்கென தனித்துவமான சில குணவியல்புகளைக் கொண்டிருந்தாள். அவளது அக் குணவியல்புகளே அவளை ‘பரோபகாரி’, ‘அம்மா’ ‘களஞ்சியம்’ ‘அழுத்தம்’ தாங்கி ‘விசுவாசம்’, ‘உபதேசி’ என அவளைப் பட்டப்பெயர்களால் அலங்கரித்துக் கொண்டன.

பரோபகாரி, யாரிடமிருந்தும் உதவிகளை எதிர்பார்க்காவள். ஓய்வாய் இருப்பது அவளுக்க ஒத்தவராது. எதையாவது செய்துகொண்டிருக்க வேண்டும்.

உணவுப் பண்டங்கள் வாய்ப்பாய்க் கிடைக்கிற போது பதுக்கிப் பத்திரப்படுத்தி, வேண்டும்போது பகிர்ந்தளிப்பாள். அதிகமாக இருப்பின் மீளவும் அவை பதுக்கப்படும். வேண்டும் போது வெளிப்படும். இதற்காய் அவளுக்குக் கிடைத்த மகுடங்கள் தான், ‘பரோபகாரி’, ‘களஞ்சியம்’, ‘அம்மா’,

சகதோழிகள் நோய்வாய்ப்படுகின்ற போதும் அவர்கள் ஏதேனும் பற்றாக்குறைகளுக்கு உட்படுகின்ற போதும் அவளிடம் உள்ளவை அவர்களுடையதாகும். சலிப்பின்றி, சங்கடமின்றி பராமரிப்புத் தொடரும். அழுத்தங்கள் தாங்கிக் கொள்ளும் மனோபவத்தினை அவள் இயல்பாய்க் கொண்டிருந்தாள். அவை அத்தனையாலும் தான் அவள் ‘விசுவாசி’ என்றும் அழைக்கப்பட்டாள்.

அத்தனை விசுவாசம் கொண்ட விசுவாசி ஒருமுறை தவறியும் போனாள் தான்.

“ஒருவன் விழாமல் நடந்தான் என்பது பெருமையல்ல விழுந்தபோதும் எழுந்து நடந்தான் என்பதே பெருமை” என்ற ஆண்றோர் வரியோ.

“விழுமின் எழுமின் கருதி கருமம் கைகூடும் வரை உழையின்” என்ற விவேகானந்தர் வரிகளை மனங்கொண்டாலோ என்னமோ அவள் தன் தவறை உணர்ந்துகொண்டாள்.

எந்தவொரு அமைப்பிலும் ‘இரகசியக் கசிவு’ என்பது தெரிந்தோ தெரியாமலோ இடம்பெறுமாயின் அது பெரும் விளைவகளை உண்டுபண்ண வல்லது. அவள் உண்மையை உணர்ந்து கொண்டாள்.

போர்க்காளப் பணித்தேர்வு தனக்கு வேண்டியதே என்பதனை உள்ளிருத்திக் கொண்டாள்.

10.06.1995 இல் போராட்டவாழ்வில் இணைந்து பயிற்சி முடித்து சூரியக்கதிர் – 02 இல் காவும் குழுவாய் போர்கள அனுபவமும் பெற்றிருந்த அவளிடம் இயல்பாயிருந்த பொறுப்புணர்வும், செயல்திறத் தேர்ச்சியும் அவள் கற்றுக் கொண்டிந்த தட்டெழுத்து நெறியும்தான் அவளை அலுவலகப் பணிக்காய் உள்ளீர்த்துக் கொண்டிருந்தது உண்மை. செயல்திறனால் உழைமின் உழைமின் என்று உழைத்தும் உண்மை.

விழுமின் எழுமின் கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின் என்ற வரிக்காய் விழுந்தவள் அல்ல என்றாலும் விழுந்தாள் என்பது அதுபோன்றே என்பதனைவிட அதனிலும் வேகமாய் எழுந்தாள் என்பதும் அதேபோன்றதான உண்மையே.

விழுதலில் சினந்து ஓர்மம் உட்புகுந்து அவள் வேகம் விருட்சமாகிக் கொண்டது.

ஜெயசிக்குறுவில் தானும் ஜெயிப்பதாய் கங்கணம் கட்டிக்கொண்டாள் போலும் அவளின் பொறுமையும் நிதானமும் வேவுப் பணிக்காய்த் தேர்வாக்கிகொண்டது. குறுகிய காலத்திலேயே அவள் அவ் அணியின் 2ம் அணித்தலைவியானாள்.

பண்டாரிகுளத்திலிருந்த புளியங்குளம், புதூர், விஞ்ஞானகுளம், கனகராயன்குளம்,கிளிநொச்சி, மாங்குளம், ஓலுமடு அம்பகாமம், ஓயாத அலைகள் 02 என அவள் பணி பரந்து விரிந்து கொண்டது. அது பனிச்சங்குளப் பகுதியில் வைத்து ‘எல்.எம்.ஜி’ கனரகப் பயிற்சி வழங்கி மாங்குளப் பகுதியில் ‘எல்.எம். ஜி’ கனரக ‘லோட்’ராக்கிக் கொண்டது.

ஓயாத அலைகள் 02 ற்கு அவள் ‘எல்.எம்.ஜி’ கொண்டே களமிறங்கினாள்.

ஓயாத அலைகள் 02 களமிறக்கம் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவள் வளர்ந்த வாழ்ந்த இடமது.

அவள் பருவமறிந்ததிலிருந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்திருந்தாள். பிறந்தது வேலணையில் என்றாலும் அவள் வாழ்வு அவ்வப்போது நடந்துகொண்டிருந்த இடப்பெயர்வுகளுக்குரிய விதமாய் கணேசபுரம், பரவிப்பாஞ்சான்,வட்டக்கச்சி, கிருஸ்ணபுரம், ஆனந்தபுரம்….என்று நகர்ந்து கொண்டபோதுதான் அவள் நாலும் உணர்ந்தாள். நமக்கொருநாடு நாடாயிருக்க வேண்டுமென்று கணேசபுரத்தில் ஆரம்பித்த அவள் கல்வி வாழ்வு, கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலை, கிளிநொச்சி கனிஸ்ர வித்தியாலயம் (தற்போது கிளிநொச்சி மாகா வித்தியாலயம்) வேலணை நடரலசர் வித்தியாலயம், மீளவும் கிளி-கனிஸ்ர வித்தியாலயம், வேலணை வைத்திலிங்கம் துரைசாமி வித்தியாலயம் என்று மாறி மாறி அலைப்புக்குள்ளானது. அந்நேரத்திலும் கூட ஒருவாறு கா.பொ.த சாதாரண தரத்தை நிறைவாக்கிக் கொண்டு தொழிற்பயிற்சியாய் தையலும், சுருக்கெழுத்தும், தட்டெழுத்தும் பயின்று கொண்டாள்.

எழுதுவினைஞையாய் சிலகாலங்கள் தனியார் நிறுவனங்களில் பணியும் செய்தாள்.

பணியைப் பணியாய்ச் செய்யும் தேசமதில் தான் இல்லை என்பதனை அவள் புரிந்து கொண்டபோது தேசம் இருப்பை நிலைநிறுத்தும் போராட்ட வாழ்வில் அவள் தன்னை இணைந்துக் கொண்டாள். ஓயாத அலைகள் 02 இல் 29.08.1998 இல் கிளிநொச்சி வெற்றிச் செய்தியோடு வீரமரணமடைந்தாள்.

திரு.திருமதி கோபாலபிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் நான்காவது புதல்பியான ஆனந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட 2ஆம் லெப்ரினட் பூபாலினி ஆலங்குளம் துயிலறையில் துயின்று கொண்டிருக்கிறாள். அவள் இலட்சியம் ஈடேறும் சமாதானம் சகவாழ்வு அல்லாதபோதும் அவர்கள் இலட்சிய நெருப்பு சகவாழ்வு கொடுக்கும். அவள், அவள் போன்றவர்கள் இலட்சியச் சாவால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இலட்சிய நெருப்பு இமயம் தொடும் ஈழத்தைப் பிறப்பாக்கும்.

– அகநிலா

மெளனிக்கப்பட்ட கல்வித் தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் நினைவிற் கொள்வோமாக

வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார். இன்று உலகின் எங்கோ ஒரு மூலையிலாவது இவரைப்பற்றி பேசிக்கொண்டோ சிந்தித்துக்கொண்டோ இருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். மிகப் பெரியளவில் பேசப்பட்டுக் கவனயீர்ப்பைப் பெற்றிருக்க வேண்டிய அடிகளாரின் விடயம் பத்தோடு பதினொன்றாக சிறிதளவே பேசப்பட்டு வந்துள்ளது.

ஆனால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரைத் தெரியாமல் வன்னியில் யாரும் இருந்ததில்லை. அவ்வளவு தூரத்துக்கு வன்னியின் சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்திருந்தார் அடிகளார்.

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றபின்னர் முழுநேரமாக தமிழ்ச்சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக உழைக்கத் தொடங்கினார். இந்நிலையில் தமிழர் பகுதியில் தமது நிழல் அரசாட்சியை நடத்திக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களுள் ஒன்றான ‘தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை’ யின் தலைவராகப் பொறுப்பேற்று இறுதிவரை அவ்வமைப்பு மூலம் அரும்பணிகள் ஆற்றிவந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து போராட்டத் தலைமை வன்னிக்குப் பெயர்ந்த பின்னர் அடிகளாரின் பணி முழுமையாக வன்னியில் மிளிரத் தொடங்கியது. அவரது ஒவ்வொரு வினாடியும் எவ்வாறு தமிழ்ச்சமூகத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது என்பதிலேயே கழிந்தது. எந்நேரமும் அதுகுறித்தே சிந்தித்துக் கொண்டும் செயலாற்றிக் கொண்டுமிருந்தார். குறிப்பாக ஆங்கில மொழியறிவை மேம்படுத்துவதில் அயராது உழைத்தார்.

இயல்பிலேயே ஆங்கில மொழிவல்லமை கொண்டிருந்தமையும்இ நீண்டகால ஆசிரியத் தொழில் அனுபவமும்இ யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய கல்லூரிகளுள் ஒன்றான புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய பெரு அனுபவமும் கொண்டிருந்தமையால் அவரால் தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் மிகத்திறம்படச் செய்ய முடிந்தது.

கேணல் ராயுவின் இறுதி வணக்கத்தில் அடிகளாரின் உரை

Rev. Fr. Francis Joseph at Conenl Raju funeral speech

Alert icon

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியபின்னர் தனது நீண்டநாட் கனவான ஆங்கிலக் கல்லூரியை நிறுவும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்.

2004 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் திறக்கப்பட்ட ஆங்கிலக் கல்லூரியில் இவரே பொறுப்பாகவிருந்து அக்கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருந்தார். தமிழ் இளையோரிடையே ஆங்கில மொழியறிவை விருத்தி செய்யவென்ற கனவோடு இயங்கிய இவரது உழைப்பு மிகப்பெரிய மாற்றத்தை வன்னியின் இளஞ்சமுதாயத்தில் தோற்றுவித்தது. இறுதிவரை அக்கல்லூரியையும் கல்வி மேம்பாட்டுப் பேரவையையும் பொறுப்பாக நடத்தி வந்தார். தனது உறவினரான செல்வி நாளாயினியையும் இணைத்துக் கொண்டு இவர் ஆங்கிலக் கல்லூரியைத் திறம்பட இயக்க வந்தார்.

அடிகளாரின் உழைப்பு அபரிதமானது. ஆங்கிலக் கல்லூரியில் தானே முழுநேரமாக ஆசிரியராகப் பணியாற்றியதோடு நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அதேநேரம் கல்வி மேம்பாட்டுப் பேரவைக்கான பணியையும் செய்துவந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள்இ பொறுப்பாளர்களுக்கான ஆங்கிலக் கல்வி புகட்டலையும் தனக்குக் கிடைக்கும் மிகச்சிறு ஓய்வுநேரத்தில் செய்து வந்தார். அடிகளாரை அறிந்த எவருக்குமே அவரின் கல்விபுகட்டல் மீதான அதீத ஈடுபாடும் அதற்கான அவரின் உழைப்பும் வியப்பை ஏற்படுத்தும்.

இவ்வளவு வேலைப்பழுவிற்குள்ளும் கத்தோலிக்க மதகுருவாக தனது பணிகளையும் செய்துவந்தார். கிளிநொச்சி அம்பாள்குளம் பங்கில் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் உட்பட மதகுருவாக தனது பங்கையும் ஆற்றிவந்தார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின்பால் இவருக்கிருந்த அக்கறை அதீதமானது. எமது மக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்றி அடிகளாரின் உடல்நிலை அவ்வளவுதூரம் சுமுகமானதாக இருக்கவில்லை. அவசரமாக சில சத்திரசிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையில் அவரது உடல்நிலை இருந்தபோதுஇ அவரை சற்று ஓய்வெடுத்து மருத்துவத்தைக் கவனிக்கும்படி பலர் வற்புறுத்தினார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவரே அவரிடம் யாழ்ப்பாணம் போய் மருத்துவத்தைக் கவனித்துவிட்டு பின்னர் வன்னிக்கு வந்து பணியாற்றும்படி வேண்டுகோள் விடுத்தும்கூட அடிகளார் தனக்கான ஓய்வை எடுத்துக்கொள்ளவில்லை. தான் யாழ்ப்பாணம் போனால் திரும்பிவர முடியாநிலை ஏற்படலாம்இ அதனால் எல்லாப்பணிகளும் பாதிப்படையும் என்பதோடு தன்னால் தேவையேற்படும் இடத்தில் பணிபுரிய முடியாமற் போகுமென்ற காரணத்தைச் சொல்லி இறுதிவரை அவர் வன்னியை விட்டு வெளியேறாமலேயே இருந்தார்.

கத்தோலிக்கத் தலைமைப்பீடம் அவரை அழைத்தபோதுகூடஇ தான் வெளியேறினால் திரும்பவும் வன்னிக்கு வரமுடியாத நிலையேற்படலாம் என்பதால் இறுதிவரை வன்னிக்குள்ளேயே பிடிவாதமாக இருந்து மக்களுக்காகப் பணியாற்றிய ஓர் உத்தமர்தான் வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்.

வன்னியில் போர் தீவிரமடைந்தபோது மக்களோடு மக்களாகவே அடிகளாரும் தனது கல்லூரியினதும்இ கல்வி மேம்பாட்டுப் பேரவையினதும் ஆவணங்களோடு ஒவ்வோரிடமாக இடம்பெயர்ந்துகொண்டிருந்தார். அவரோடு கூடவே செல்வி நளாயினும் விக்னேஸ்வரியும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.

போரின் உச்சக்கட்டத்தில் நிலைமை படுமோசமாகப் போய்க்கொண்டிருக்கும்போது அடிகளாரை படகு வழியாக பாதுகாப்பாக அனுப்புவதென தலைமை முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அடிகளாரைப் புறப்படச் சொன்னபோது மிகக்கடுமையாக அதை எதிர்த்துஇ எனது மக்களோடேயே தான் நான் இருப்பேன் என்று பிடிவாதமாக நின்றுகொண்டவர். எழுபத்தைந்து வயதிலும் வலுவாகவும் இயல்பாகவும் அந்தக் கடைசிநேரக் கோரத்தை தான் நேசித்த மக்களோடேயே இருந்து எதிர்கொண்டவர்.

இறுதிக்கணம் வரை மக்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருந்தார் அடிகளார். வலைஞர்மடத்தில் தங்கியிருந்து பின்னர் முள்ளிவாய்க்காலில் இறுதியாக இருந்ததுவரை தனது ஆவணங்களையும் காவியபடியே மக்களோடு மக்களாக அவர் இருந்து பணியாற்றினார். முள்ளிவாய்க்காலில் உடல் அங்கவீனமான நவம் அறிவுக்கூடப் போராளிகள் சிலரைத் தங்கவைத்திருந்த ஒரு பதுங்குழியிலேயே அடிகளாரும் அவர்களோடு இணைந்து தங்கியிருந்து தனது பணிகளைச் செய்துகொண்டிருந்தார்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதிநாட்களில் எல்லோரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது அடிகளாரும் மக்களோடுதான் வந்திருந்தார். மே மாதம் 17 ஆம் நாள் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து வெட்டையிலே மக்களோடுதான் அடிகளார் இருந்தார். அவரோடு விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர்.

மே மாதம் 18 ஆம் நாள் காலையில்இ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தம்மை அடையாளப்படுத்தி இராணுவத்தினரிடம் சரணடையச் செல்வதென்ற முடிவெடுத்தபோது தனது ஆங்கிலமொழி வல்லமை அவ்விடத்தில் தேவைப்படுமென்பதால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் அந்தச் சரணடைவை சுமுகமாக நிகழ்த்தும் விதத்தில் அவரே முன்னின்று செயற்பட்டார். ஆனால் மற்றவர்களோடு அடிகளாரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். ஏராளமான மக்கள் பார்த்திருக்கத் தக்கதாக அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தங்கன்இ கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் (பேபி) பிரியன் குடும்பம் உட்பட பலர் அடிகளாரோடு இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

அவர்களில் ஒருவர்கூட இதுவரை திரும்பிவரவில்லை. ஒருவர்பற்றிய குறிப்புக்கூட யாருக்குமே தெரியவில்லை. அடிகளாரோடு இறுதிவரை பயணித்த செல்வி நளாயினியும் விக்னேஸ்வரியும் கூட திரும்பி வரவில்லை. அந்தச் சரணடைவில் குடும்பமாக அழைத்துச் செல்லப்பட்டபோது கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் பற்றிய சிறு தகவல் கூட யாருக்குமே இல்லை. அடிகளாரோடு அழைத்துச் செல்லப்பட்ட அத்தனைபேருமே அனாமதேயமாகிப் போனார்கள்.

தனது ஒவ்வொரு வினாடியையும் தமிழ்ச்சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காவே செலவழித்து உழைத்து ஓடாய்த் தேய்ந்த அடிகளார் – குறிப்பாக ஆங்கிலக் கல்வி மேம்பாட்டிற்காக வெறித்தனமாய் உழைத்த அடிகளார் – இறுதிச் சரணடைவிலும் தனது ஆங்கில வல்லமையின் உதவி தேவைப்படுவதை உணர்ந்து அந்தத் தள்ளாத வயதிலும் தானே முன்வந்து செயலில் இறங்கிய எமது அடிகளார் இன்று காணாமற்போனோர் பட்டியலிலே எம்மால் இணைக்கப்பட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்திருக்கப் போனவர்களின் கதை இன்று உலகின் முன் மாயமாகிவிட்டது.

அடிகளாரோடு காணாமற்போன அனைவரையும் இந்நாளில் நினைவிற் கொள்வோமாக

**********
போரின்போது சிறிலங்கா அரசிற்கு சார்பாக கத்தோலிக்க திருச்சபை?-ஜோசப் அடிகளார்

வன்னி மீதான இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் ‘பாதுகாப்பு வலயம்’ எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் தங்கியிருந்த கத்தோலிக்க மதகுரு ஒருவர், பொதுமக்கள் யுத்தத்திற்குள் அகப்பட்டுக் கொண்டது தொடர்பாக சிறிலங்காவில் உள்ள திருச்சபையானது எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடாது அமைதி காத்ததைக் கண்டித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கப் படைகளின் யுத்த மூலோபாயம் தொடர்பாக சில மேற்குலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் தமது அதிருப்தியை வெளியிட்ட போதிலும் கூட சிறிலங்காவிலிருந்த திருச்சபையைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்கள் சிறிலங்கா அரசாங்கப் படைகளின் செயற்பாடுகளைக் கண்டித்து எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை என அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரால் அவ்வேளையில் போப்பாண்டவருக்கு அனுப்பப்பட்ட திறந்த மடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கடந்த இரவில் 3318 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4000 வரையானவர்கள் காயமடைந்துள்ளனர்” என மே10,2009 அன்று ஜோசப் பிரான்சிஸ் அடிகளாரால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பி.பி.சி சிங்கள சேவையான சந்தேசியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிறிலங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயங்கள் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் மீது ஆட்டிலறி, மோட்டார், பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், கொத்துக் குண்டுகள், கனரக ஆயுதங்கள் எனப் பல்வேறுபட்ட தாக்குதல்களை நடாத்திவருகின்றது” என போப்பாண்டவருக்கு ஜோசப் அடிகளாரால் எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

365,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்து வருவதாகவும், யாழ்.புனித சம்பத்தரிசியார் கல்லூரியின் [St.Patricks College] முன்னாள் அதிபராகக் கடமையாற்றிய ஜோசப் அடிகளார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தம் தொடர்பாக சிறிலங்கா திருச்சபையானது தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விவேகம் மற்றும் துணிச்சல் என்பன இல்லாதுள்ளமை கவலையளிப்பதாகும். இக்கடிதத்தை நான் அனுப்புவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது என்னைக் கொல்லலாம் அல்லது திருச்சபையானது எனக்கு தண்டனை வழங்கலாம்” எனவும் ஜோசப் அடிகளார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரச படைகளால் ஜோசப் அடிகளார் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் காணாமற்போயுள்ளதாகவும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஆயரான கிங்சிலி சுவாம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் பின்னர் தெரிவித்துள்ளார்.

மே 2009 ல் போர் வலயத்திலிருந்து வெளியேறியவர்களில் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரும் உள்ளடங்கியிருந்ததாகவும், ஓமந்தை சோதனைச் சாவடியின் ஊடாக இவர் கடந்த போது இவரைப் படையினர் விசாரணைக்காகக் கொண்டு சென்றதாக இவருடன் பயணித்த பொதுமக்கள் சிலர் தெரிவித்ததாக ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை. அதன்பின்னர் யாருமே அவரைக் காணவில்லை” எனவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என அமெரிக்காவை பேராயர் மல்கம் ரஞ்சித் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் பற்றீசியா புற்றேனிஸ் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக அண்மையில் வெளிவந்த விக்கிலீக்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கையானது சிறிலங்கா அரசாங்கம் கடினப் போக்கான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு வழிகோலும் என பேராயர் அமெரிக்கத் தூதரிடம் வலியுறுதிக் கூறியதாகவும் இக்கருத்தை அமெரிக்கத் தூதர் ஏற்றுக்கொண்டதாகவும் விக்கிலீக்சில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கொழும்பிலுள்ள பேராயரின் செயலகமானது விக்கிலீக்சால் வெளியிடப்பட்ட இத்தகவல் போலியனவை என்றும் ஆதராமற்றவை என்றும் கூறி அதனை நிராகரித்துள்ளது.

பேராயரின் பெயரானது தவறாகப் பயன்படுத்தப்படுவது இது முதற்தடவையல்ல எனவும், விக்கிலீக்சில் குறிப்பிடப்பட்டுள்ள பேராயர் தொடர்பான செய்தியைத் தாம் ஏற்க மறுப்பதாகவும் பேராயரின் செயலகப் பேச்சாளரான வணக்கத்திற்குரிய பெனடிக்ற் ஜோசப், சண்டேலீடரிடம் தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும், ஜோசப் அடிகளாரால் 2009ம் ஆண்டில் போப்பாண்டவருக்கு அனுப்பப்பட்ட கடிதமானது, சிறிலங்கா திருச்சபை மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகியவற்றின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

“தமது சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற தமிழ் மக்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உங்களது புனிதமான சேவையை எதிர்பார்த்திருக்கிறார்கள்” என ஜோசப் அடிகளார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா அரசாங்கமானது தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்து அதன் மூலம் இராணுவ வெற்றியை பிரகடனப்படுத்தி ஒரு வாரத்தின் பின்னர் போப்பாண்டவர் பதினாறாவது பெனடிக்ற் அவர்கள் யுத்த வலயத்திலிருந்து வெளியேறிய பொதுமக்களுக்கான வளங்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

யுத்த வலயத்திலிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாக சிறிலங்கா அரசாங்மானது அறிவிப்புச் செய்ததை அடுத்து வத்திக்கானில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டமொன்றில் உரையாற்றிய போப்பாண்டவர், “ஒரு சில நாட்களுக்கு முன்னர் யுத்த வலயத்தில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக உத்தரவாதம் வழங்கியிருந்த” ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையுடன் தான் இணைந்து கொள்வதாக தெரிவித்திருந்தார்.

***********

ஓமந்தை இராணுவ சாவடியில் சரண்டைந்த அருட்திரு பிரான்சிஸ் ஜோசஃப் அவர்கள் எங்கே? ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை.

நாங்கள் செத்துக்கொண்டிருக்கின்றோம் எங்களைக்காப்பாற்றுங்கள்” இவ்வாறு முள்ளிவாய்க்காலில் இருந்து மே மாதம் 10 நாள் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப் பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் சிறிலங்காவில் உள்ள தேவாலைய சபைகள் தமிழ் மக்களை காப்பாற்ற நாதியற்றவர்களாக உள்ளனர். ஆகவே தமிழ் மக்கள் உங்களைத்தான் நம்பி இருக்கின்றோம் எனவும் சுதந்திரத்திற்காக உயிர்ப்பலிகளை கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் என தனது இறுதிக்கடிதத்தில் பாப்பரசரை இறைஞ்சி எழுதிய கடிதமே அவரது இறுதிக்கடிதமாக இருக்கும் என பிபிசி கூறியுள்ளது.

அவரது கடிதத்தில் ; இந்த வாரம் வரை 3318 பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் 4000 பேர்வரையில் காயம் அடைந்து உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். விமானத்தாக்குதல்கள் எறிகளைத்தாக்குதல்கள் தொடர்ந்து சிறிலங்கா அரச படைகளால் நடத்தபப்டுகின்றன. மக்கள் செய்வதறியாது உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் சிறிலங்காவில் உள்ள தேவாலைய சபைகள் மட்டுமல்ல பாப்பரசரும் இந்த கடிதத்தினை குப்பைத்தொட்டியில் போட்டுள்ளார். எல்லாமே நடந்து முடிந்த பின்னர்தான் பாப்பரசர் முகாமிற்கு வந்து சேர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொ|ண்டுள்ளார்.

சுதந்திரத்திற்காகவும், ஏழை எழிய மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்த ஆண்டவர் ஜேசுவின் திருச்சபையினை வழி நடத்தும் பாப்பரசர் 40,000 மக்கள் பலி எடுக்கப்படும்வரை பார்த்துக்கொண்டுதான் இருந்துள்ளார்.

அடுத்ததாக இந்த பாப்பரசருக்கு கடிதம் எழுதிய அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் எங்கே?

2009 மே மாதம் 18 ஆம் நாள் அருட்திரு பிரான்சிஸ் ஜோசஃப் அவர்கள் சில பொதுமக்கள் மற்றும் போராளிகளுடன் ஓமந்தை இராணுவ சாவடியில் சரண்டைந்துள்ளார். அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இவ்வாறு மஹிந்த இராஜபக்‌ஷவின் நல்லிணக்க ஆனைக்குழு முன்னால் சாட்சியம் அளித்துள்ளார் மட்டு மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

அருட்திரு பிரான்சிஸ் ஜோசஃப் அவர்கள் முன்நாள் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபர் ஆனால் துரதிஸ்டவசமாக மத அமைப்புக்களோ அன்று வெளி நாடுகளில் உள்ள சென் பற்றிக்ஸ் பழைய மாணவர்களோ அருட்திரு பிரான்சிஸ் ஜோசஃப் அடிகளாரின் பிரச்சினை தொடர்பில் கேள்வி எழுப்பவில்லை. மனித உரிமை அமைப்புக்களை நாடவிலை ஏன்?

அவரிடம் கல்விகற்ற ஆயிரக்கனக்கான மாணவர்கள் புலம்பெயர் நாடுகளில் பெரும் பதவிகளில் உள்ளார்களே. அவர்களாவது குரல் கொடுப்பார்களா?

வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன் முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த ‘வீரத்தமிழிச்சி’ செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரத்தமிழிச்சி செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.

தன்இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத்தமிழிச்சியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன் ,கப்டன் மணியரசன் வீரவணக்கம்

பருத்தித்துறைக் கடலில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன் – கப்டன் மணியரசன் ஆகியோரின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

29.08.1993 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமாக சுப்பர் டோறா அதிவேபீரங்கிப் படகினை தகர்த்து மூழ்டித்து,

1. கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்)

(சுப்பிரமணியம் நாதகீதன் – அரியாலை – யாழ்ப்பாணம்)

2. கடற்கரும்புலி கப்டன் மணியரன்

(வேதநாயம் ராஜரூபன் – குடத்தனை, மணற்காடு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

தலைவர் பிரபாகரனும் சந்நிதி முருகனும்

1975ம் ஆண்டு செப்டம்பர்மாதம் 16ந்திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி இருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதிப்புகையிரத நிலையமாகவும் வடமாகணத்தின் மிகப்பெரும் தொழிற்சாலையான சீமெந்து தொழிற்சாலையையும் உள்ளடக்கிக்கி இருந்த துறைமுகநகரமான இப்பிரதேசம் பட்டினசபை என அழைக்கப்பட்ட போதும் மிகப்பெரிய நகரத்திற்குரிய சுறுசுறுப்போடு எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும்.

முருகா!… முருகா! சந்நிதி!……முருகா!……
‘விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை ‘முருகா’ வெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’!…….
{கந்தரலங்காரம்}

1975ம் ஆண்டு செப்டம்பர்மாதம் 16ந்திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி இருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதிப்புகையிரத நிலையமாகவும் வடமாகணத்தின் மிகப்பெரும் தொழிற்சாலையான சீமெந்து தொழிற்சாலையையும் உள்ளடக்கிக்கி இருந்த துறைமுகநகரமான இப்பிரதேசம் பட்டினசபை என அழைக்கப்பட்ட போதும் மிகப்பெரிய நகரத்திற்குரிய சுறுசுறுப்போடு எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும்.

துறைமுகப் பணியாளர்கள் சீமேந்துதொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அயல்க்கிராமங்களில் இருந்துவரும் பலநூற்றுககணக்கான மக்கள் என எப்பொழுதும் சனசந்தடிமிக்கதாகவே இருக்கும் இந்நகரத்தின் பஸ்நிலையம் கிழக்கு மேற்க்கான பருத்தித்துறை கீரிமலை வீதியில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிவரும் யாழ்–காங்கேசன்துறை வீதியும் இணையும் முச்சந்தியின் வடக்குப்புறமாக அமைந்திருந்தது. பஸ்நிலையத்தின் இடதுபுறமாக வீதிக்கு அணித்தாக அமைந்திருந்த ‘லக்கி’ சிற்றுண்டிச்சாலையும் எப்பொழுதும் ஓர்இரு வாடிக்கையாளர்களுடன்  ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும்.

யாழப்பாணவீதியில் நாலுமுழவெள்ளை நிறவேட்டியும் வெள்ளை முழுக்கைச் சட்டையை முழங்கைக்கு  மேலாகமடித்துவிட்டு நேர்த்தியாக வாரிவிடப்பட்ட தலையுடன் பஸ்நிலையத்தை நோக்கி அமைதியாக ஓரு இளைஞர் நடந்து கொண்டிருந்தார். பஸ்நிலையைத்தை நோக்கி வீதியின் வலதுபுறமாக அவர் நடந்து சென்றாலும் அவருடையகண்கள் அங்குமிங்கும் சுற்றிச்சுழன்று கொண்டே இருந்தன. பாலகனாகி சிறுவயதுகடந்து பாடசாலை மாணவனாகி இளைஞனாகிவிட்ட போதும் ‘அந்த ஒளிமிகுந்த கண்கள்’ தான் அவனை மற்றவர்களிடம் இருந்து எப்பொழுதும் வேறாக்கிக் காட்டும். அடையாளச்சின்னம்.

பேரொளிமிகுந்த அழகான அந்தப் பெரியவிழிகள். ஒரு அற்புதம்தான் ஆண்டவன் படைத்த உலக அதிசயங்களில் நிச்சயமாக அதுவும் ஒன்றுதான்!….. சந்தேகமேயில்லை. அமைதியாக நடந்துவந்த இளைஞரும் வீதிக்கு குறுக்காக நடந்து சந்தியின் வடகிழக்கு மூலையில் அமைந்திருந்த பஸ்நிலையத்தை அடைந்தார். மூன்று திசைகளில் இருந்துவரும் பஸ்களை எதிர்பார்த்து காத்திருந்த ஒருசில மக்களுடன் தானும் ஒருவனாகக் 763ஆம் இலக்க பஸ்ஸின் வரவை எதிர்பார்த்து மேற்குத்திசையினை நோக்கியவாறு ஓரமாகக் காத்திருந்தார்.

763ஆம் இலக்க பஸ் பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டு வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பலாலி மயிலிட்டி காங்கேசன்துறை என கடற்கரையோரமாக கீரிமலைக்குச் சென்று மீண்டும் அதே  வழியாகத் திரும்பிவரும் இதனை எதிர்பார்த்தே இவரும் காத்திருந்தார்.

இவர் பஸ் நிலையத்தை அடைந்த சிறிது நேரத்தில் 763 இலக்க பஸ்சும் பஸ்நிலையத்தில் வந்து நின்றது. சாவகாசமாக பஸ்சில் ஏறிய இளைஞரும் சாரதியைப்பார்த்து இலேசாகப் புன்னகைத்தவாறு எந்தப்பதற்ற மும் இன்றி பஸ்சாரதியின் ஆசனத்திற்குபின்னல் இருந்த இரண்டாவது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

இதன் மூலம் அந்த இளைஞரும்  சில நாட்களாகவேனும் அதேபஸ்சில் தொடர்ந்து பயணம் புரிகின்றார் என்பதை அறிந்துகொள்ளலாம்.  காங்கேசன்துறை பஸ்நிலையத்தில் இருந்து பஸ் புறப்படவும் ‘லக்கி’ சிற்றுண்டிச்சாலையின் முன்பாக நின்ற இருவர் ஓடிவந்து முன்கதவினூடாக ஒருவரும் பின்கதவினூடாக ஓருவருமாக ஏறிக்கொண்டனர்.. முன்கதவுவழியாக ஏறியவர் நமது இளைஞர் இருந்த ஆசனத்திற்கு இடதுபுறமாக நடைபாதைக்கு அருகிலிருந்த ஆசனத்தில் இளைஞரைப் பார்தபடி அமர்ந்து கொண்டார். பின்னால் ஏறியவரோ பின்கதவால் யாரும் இறங்கமுடியதவாறு வழியை மறித்தவாறு பின்கதவின் மிதிபலகையிலேயே நின்றுகொண்டார்.

இடையிடையே குறிப்பிடும் இளைஞரை  கவனித்தவாறே நின்றார். முன்கதவால் ஏறியவரே அல்லது பின்கதவால் ஏறியவரோ பற்றுச்சீட்டு எதனையுமும் நடத்துனர் இடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை.

நடக்கும் சம்பவங்களைப் பார்த்தவாறு இருந்த இளைஞருக்கோ சிறு சந்தேகம் பொறிதட்டியது. யார் இவர்கள்? அவர்கள் இருவரையுமோ அல்லது ஒருவரையோ அண்மையில் சிலநாட்களாக அடிக்கடி பார்ப்பதான ஞாபகம்? தன்னைத்தான் பின்தொடர்கிறார்களா? ……. ஊகூம். எனினும் தனது இடையைத் தட்டிப்பார்த்தவாறு இடையிடையே இருவரையும் கடைக்கண்னால் நோட்டமிடவாரம்பித்தார். ‘மடியில் கனம்இருந்தால் வழியில்பயம்; வரத்தானேவேண்டும.;’ தன்னைத்தான் கவனிக்கிறார்கள்!…….. புரிந்து கொண்டார். அடுத்து வருவதை எதிர்பார்த்து எதற்கும் தன்னைத்தாயார் படுத்தியவாறு அடுத்த நிகழ்வுக்காகக் காத்திருந்தார் பஸ் ஓடிக் கொண்டிருந்தது.

பலாலிச்சந்தியில் இருந்த புறப்பட்ட பஸ் மனித நடமாட்டங்கள் அற்ற அல்லது அரிதாகக் காணப்பட்ட இடைக்காட்டைத் தாண்டி ‘மான்பாய்ந்த வெளியில் ஓடத்தொடங்கியது. பஸ் இப்பொழுது அச்சுவேலி தொண்டைமானாறு வீதியில் அமைந்திருந்த வெளிக்களநிலையத்தை கடந்து திரும்பியது. அப்பொழுதுதான் ஏதேட்சையாகக் கவனித்தார்.

அதுவரை பஸ்சுக்குப்பின்னால் வந்துகொண்டிருந்த A40 ரக கார் திடீர் என்று பஸ்சுக்கு முன்னால் வந்து நின்றது…….. சாரதி தீடீர் என்று பஸ்ஸைநிறுத்தவும் அதுவரை முன்கதவால் ஏறி தனக்கு இடதுபுறமாக சீற்றில் இருந்த நபர் திடீர் என்று எழுந்து சாரதியின் ஆசனத்திற்கு பின்புறமாக முதலாவது ஆசனத்தில் அமர்ந்திருந்தவரை துப்பாக்கியைக்காட்டி எழுந்து நிற்கச் செய்யவும் அதுவரைபின்கதவில் நின்றவரும் உடனடியாகமுன்னிற்கு வந்து  இருவரும் முன்சீட்டில் இருந்த நபரை வலுக்கட்டாயமாக பஸ்ஸிலிருந்து இறக்கமுற்பட்டனர்.

அதேசமயம் பஸ்ஸிற்கு முன்னால் திடீரென நிறுத்தப்பட்ட காரில் இருந்து வேகமாக இறங்கிய இருவர் பஸ்ஸின் முன்கதவுவரை ஓடிவந்து விட்டனர். அப்பொழுதுதான் இளைஞர் நன்றாக கவனித்தார் பலாத்காரமாக பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டவர் தன்னைப்போலவே வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை…… எப்பொழுது இவர் பஸ்ஸில் ஏறினார்?……… தனக்கு முன்பாகவா?  பின்பாகவா?  எப்படி நடந்தது? யார் அவர்?…….. அடுத்த சீற்றில் அமர்ந்திருந்தவரையும்  பின்னுக்கு நின்றவரையும் தொடர்ந்து கவனித்ததால் முன்சீற்றில் இருந்தவரைக் கவனிக்காமல் விட்டுவிட்டேனே?…….. கணநேரத்தில் உணர்வுகள் உந்தித்தள்ளின!….. சிந்திக்கநேரமில்லை பஸ்ஸிலிருந்து  வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட நபரை காரில் தள்ளி ஏற்றியதும் கார் திரும்பி சென்றுவிட்டது.

ஒருசில கணங்களில் சுயநினைவிற்கு வந்த அவர் வலதுபுறம் திரும்பினார். ஆறுமுகவேலனின் சந்நிதியான் ஆலயம் தொண்டைமான் ஆறு கடந்து நேரெதிரே தெரிந்தது.    அதுவரை சஞ்சலப்பட்டு அலைபாய்ந்த இளைஞரது மனது தன்னையறி யாமலேயே கூறிக்கொண்டது ‘முருகா’….’முருகா’…. மனதுக்குள் மீண்டும் கேட்டது ‘முருகா முருகா’ எப்படிநடந்தது?   மூளையில் இருந்து மனதுக்கு சென்றதா?….. அல்லது மனதில் ஆழப்பதிந்திருந்த ‘முருகனே’ இளைஞரை மீறி வெளி வந்ததா?.

ஆத்திகமும் நாத்திகமும் அன்றிலிருந்து இன்றுவரை போராடிக் கொண்டே இருக்கின்றன!…… தொடர்கிறது போராட்டம் இன்னும் முடிவில்லை! ஆனால் நாத்திகவாதிகளில் பலர் இறுதியில் ஆன்மீகத்தை சார்ந்து விடுவதும் அல்லது நாத்திகம் பேசாமல் மௌனமாகி விடும் வரலாறும் இன்றுவரை தொடர்ந்து கொண்டேவருகின்றது.

ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே அனைத்தும் முடிந்து விடுகின்றது. பஸ்ஸில் ஒரே சலசலப்பு! யார் அந்த இளைஞன்? அவனைப்பிடித்துச் செல்பவர்கள் யார்? …… எதைப்பற்றியும் கவலைப்படாத மனிதர் போல சாரதி பஸ்சை மீண்டும் இயக்குகிறார். அடுத்த தரிப்பு தொண்டை மானாற்றுச்சந்தி!….. ஆம் சந்நிதி கோவிலின் இறங்குமிடம். வேகமாக எழுந்த இளைஞர் பஸ்ஸை விட்டு இறங்கி விடுகின்றார். ஆம் அவருக்கு புரிந்து விட்டது. யாரோ ஒரு அப்பாவி தனக்குப்பதிலாக கொண்டுசெல்லப்படுகிறார். ஆனால் யாரவர்?  சிந்திக்கநேரமில்லை. வேகமாக நடந்த இளைஞர்  நாதன் என்னும் தனது உதவியாளரின் வீட்டுக்சென்று அவரின் முலம்  தனது நன்பர்களுக்கு தகவல் அனுப்புகிறார்!…….

வேவில்பிள்ளையார் கோவிலடியில் அவசரமாக நண்பர்கள் கூடிக் கதைக்கின்றனர். நிச்சயமாக தன்னைத் தொடர்ந்து வந்தவர்கள் காவல் துறையினர்தான். உடனே சம்பந்தப்பட்டவர்கள்; இடம்மாற வேண்டும்! சில பொருட்களை இடம்மாற்ற வேண்டும்!……நண்பர்கள் வேகமாக செயல்படு கின்றார்கள்! ஆனால் காலையில்  குறியை தப்பவிட்டவர்கள் அன்று பிற்ப்கலில் அதேவிதமாக பஸ்சில் வரும் போது ஒருநண்பனை மடக்க்கிவிடுகின்றார்கள். அடுத்தநாள் அதிகாலையில் அடுத்த நண்பனும் மடக்கப்படுகிறார்.

சந்தேகமேயில்லை குறிவைக்கப்பட்டவர் வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை அழகிய கண்கள் கொண்ட இளைஞன் தான். 27.7.1975ல் நடந்த யாழ்மேயர் துரையப்பா கொலையை வெற்றிகரமாக துப்புத்துலக்கிய புத்திசாலிகளான தமிழ் இரகசியப்பொலிசார் இறுதியில் எப்படிப் பஸ்ஸினில் தமது நண்பனைக் கோட்டைவிடடனர்? நண்பனின் அங்க அடையாளங்களை மட்டுமல்லாது அவரைப்பற்றிய பல விடயங்களையும் விசாரணையில் தவறின்றிக் கூறிய காவல்த்துறையினர் எப்படி பஸ்ஸில் தமது நண்பனை விட்டுவிட்டு. ஆள்மாறி யாரோ ஒரு அப்பாவியைப்பிடித்தார்கள்;?

இன்றுவரை அந்த மூன்று நண்பர்கள் மட்டுமல்ல. இச்சம்பவத்தை அறிந்த எல்லோருக்கும் ஒரே கேள்விதான்.! பஸ்ஸில் வந்து காவல் துறையால்  அழைத்து செல்லப்பட்ட்வர் யார்? ஆனால் தப்பிக் கொண்டதும்   முருகனை அழைத்த இளைஞருக்கு அன்றே ஞானம் பிறந்தது. தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியும் எனப்புறப்பட்டவருக்கு அன்று தன்னைக்காப்பற்றியது தனது அதீதமான தன்னம்பிக்கையல்ல தன்னைமீறி தனக்குள்ளே ஒழிந்திருந்த ‘தெய்வநம்பிக்கை’ என்பதைப்புரிந்து கொண்டார்.

ஆம் அன்றுமுதல் அவர் ‘சன்னதி முருகனின் ‘ பக்தனானார்.  பசிக்கு உணவில்லை என காட்டுக்கு வேட்டைக்கு செல்பவர்களிற்கும் அவர் கூறுவது ‘மயிலைச்சுடாதே’….. காரணம் புரிந்தவர்களிற்கே தெரியும் மயில் முருகனின் வாகனமென்பது. தான்செய்யும் எக்காரியத்தையும் ‘சந்நிதி முருகனை’ நினைத்தே தொடங்கும். பழக்கமும் வழக்கமும் அவரிடம் ஏற்ப்பட்டது. கடல்கடந்த போதும் சந்நதி முருகனை எண்ணித் ‘திருப்போரூர்’ முருகன் கோவிலில் தனது திருமணத்தை 1984 இல் நடத்தினார்.

1984 ஒக்டோபர் 1ம் திகதி திருப்போரூர் முருகன் ஆலயத்தில் தலைவர் பிரபாகரனின் திருமணம்

பாய்க்கப்பல் மூலம் திரைகடலோடி திரவியம் தேடிய வம்சத்தில் வந்த அவர் தனது முதலாவது இயந்திரக்கப்பலின் கன்னிமுயற்சி வெற்றியடைந்ததும் 1985ல் ‘பழனி’ முருகனின் முன்னால் சந்நிதி முருகனைநினைத்து மொட்டை போட்டு தனது நேர்த்திக்கடனை தீர்த்துக்கொண்டார். பிறந்த குழந்தைக்கு தாய்பால் தவிர்த்து முன்முதல் வேறு உணவு கோவில்களில் ஊட்டப்படும் நாள் ‘அன்னப்பால் பருக்கல்’ எனப்படும்;. முன்சொன்ன இளைஞருக்கும் சன்னதிகோவிலிலேயே அன்னப்பால் ஊட்டப்பட்டது. அதனால்ப்போலும் சன்னதியில் அன்னப்பால் கொண்ட அக்குழந்தை பெரும் சகாப்தமாகி சரித்திரம் படைத்தது.

இப்போது உங்களிற்கும் புரிந்திருக்கும் 1975 செப்டம்பர் 16இல் சிங்கள அரசின் காவல்துறையினரிடமிருந்து ‘சந்நிதிமுருகனால்;’ காப்பாற்றப்பட்டவர் அல்ல முருகனால் ஆட்கொள்ளப்பட்டவர் வேறுயாருமல்ல சாட்சாத் மேதகு திரு. வேலுப்பிள்ளை ‘பிரபாகரன்’ ;தான். அன்று தம்பியாக இருந்தவர் அதன்பின் நம்பிக்கையுடன் 34வருடங்கள் ஈழத்தமிழினத்தின் அரசியல் பாதையை  நிர்ணயிப்பவராகவும் ஈற்றில் அனைத்து தமிழர்களின் தலைவிதியையும் தன்தலையில் சுமந்தவராகவும் வாழ்ந்து காட்டியவர் தேசியத்தலைவர் பிரபாகரன்.

இன்றையநிலையில் இவர் ஆட்சிக்காலம் மிகஅதிகம். தமிழர்களின் வரலாற்றில் இவர் இராஜ இராஜ சோழனைவிடவும் இரா  ஐந்திரசோழனைவிடவும் தமிழனையும் அவனது புலிக்கொடியையும் உலகம் எல்லாம் அடையாளம் காட்டினார். ஆம் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக்காலம் வெறும் 28 வருடமே!……… அதையும் விட அதிககாலம் ஆண்டுகாட்டியவர் ‘தலைவர்’ பிரபாகரனே! ஏனெனில் கார்த்திகைப் பெண்களின் மடியில் தவழ்ந்தவர்’ பாலமுருகன்’ கார்த்திகைமாதம்  மண்ணில் பிறந்தவர்; ‘பிரபாகரன்’  இதுவிந்தைதான்!…… இன்னும் வியக்கும் இவ்வுலகம் !………

வருணகுலத்தான்

போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 5

துரையப்பாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த இவ்விடைக்காலத்தில் யாழ்பஸ்நிலையத்தில் கிருபாகரன் வேண்டிவந்த மேலாடைஅட்டையில் தன்னிடம் இருந்த குமிழ்முனைப் பேனாவினால் T.N.T என எழுதிவிட்டு அதனைமேலும் அழகுபடுத்தும் முயற்சியில் கலாபதி ஈடுபட்டிருந்தார்.  T.N.T என்பது ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்ற தமிழ்ப்பதத்தினை நேரிடையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்பதால் உருவாகும் TAMIL NEW TIGERS என்பதன் முதலெழுத்துக்கள் இணைந்த குறியீடாகும்.

1974 இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த தம்பி பிரபாகரன் சந்தித்துக் கொண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ. இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டுவிலை சொந்த இடமாக கொண்ட இவர் 04.05.1926 இல் பிறந்திருந்தார். அரச ஊழியரான போதும் ஈழத்தமிழருக்கு தனி அரசு வேண்டும் என்பதற்காகவே இவர் எப்பொழுதும்; போராடிவந்தவர் என்பதனை இவரது அரசியல் வரலாற்றைப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். தந்தை செல்வநாயகத்தின் தலைமையில் தீவிர அகிம்சைப் போராளியாக முன்முகம் காட்டிய இவர் 1959இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர்சங்கத்தை ஸ்தாபிப்பதில் திரு.கோடீஸ்வரன் திரு.சிவானந்தசுந்தரம் திரு.ஆடியபாதம்  என்பவர்களுடன் இணைந்து செயலாற்றியவர்.  அத்துடன் 1965இல் அதன் இணைப்பொதுச் செயலாளராக கடமையாற்றினார்.

தமிழரசுக்கட்சியின் தீவிரம் போதாது என கொள்கைரீதியாக முரண்பட்டு 1969இல் திரு எ. நவரத்தினத்தால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர்சுயாட்சிக்கழகத்தில் இணைந்து அதன் தீவிர விசுவாசியாகவும் விளங்கினார்;. 1970இன் இறுதியில் தோன்றி தமிழ்இன உணர்வுடன் இளைஞர்களை ஆயுதப்போரிற்கு அணிதிரட்டிய தமிழ்மாணவர் பேரவையினருக்கு தன்னால் இயன்ற அளவிற்கு உதவிகளைப்புரிந்து வந்தார்.  1972இன் இறுதியில் தமிழ் நாட்டுத்தலைவர்களை சந்திப்பதற்காக இந்தியா சென்றிருந்த தமிழர்கூட்டணியின் அன்றையதலைவரான செல்வநாயகம்  தளபதி அமிர்தலிங்கம் என்பவர்களுக்கு முன்பாகவே அங்குசென்று அவர்களின் பயண ஏற்பாட்டை புரிந்த செயல் வீரர் இவராவர்.

1973 தை 15இல் நடந்த மண்கும்பான் குண்டுவெடிப்பு முயற்சியைதொடர்ந்து மாணவர் பேரவையின் தலைவர்; சத்தியசீலன் உட்பட அதன் பெரும்பாலான அங்கத்தவர்களும் அவர்களிற்கு ஆதரவளித்த பலரும் கைதுசெய்யப்பட்டனர். இவ்வகையில் பொட்டாசியம் என்னும் இராசயனப்பொருளை மாணவர் பேரவையினருக்கு கொழும்பில் இருந்து அனுப்பினார் என்ற குற்றச்சாட்டில் இவரையும் கைதுசெய்ய பொலிசார் தேடியலைந்தனர். இதனால் மீண்டும் தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்ற இராசரத்தினம் அங்கேயே தங்கநேர்ந்தது. தான்சார்ந்த கட்சியினரால் கைவிடப்பட்டு ஆஸ்துமாநோயினால் வருந்திய நிலையில் மிகுந்த பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் சென்னையில் வாழ்ந்த இவர் திரு இரா. ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி போன்றவர்களின் தயவில் தனது காலத்தைக் கழித்துவந்தார்.

ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தில் நாட்டம்கொண்ட குழுவினர்கள் பலரும் 1972ஆம் ஆண்டின் பல்வேறு நிலைகளைக் கடந்து 1973 — 1974 இன் இறுதிக் காலப்பகுதிகளில்  சென்னையிலேயே கழிக்கநேர்ந்தது. 1974ஆகஸ்டில் பெரியசோதி தங்கத்துரை நடேசுதாஸன் என்பவர்களுடன் வேதாரணியத்திலிருந்து சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் கோடம்பாக்கத்திலேயே தங்கியிருந்தார். ஒரே நோக்கத்தை கொண்ட இளைஞர்கள் பல்வேறுகுழுக்களாக பிரிந்து செயல்பட்டதை கண்ட வயதிலும் அனுபவத்திலும்  மூத்த இராசரெத்தினம் மிகுந்த வேதனைப்பட்டார்.

தமிழகம் சென்ற தமிழரசுக்கட்சியினருடன் இடது கோடியில் இராசரெத்தினம்

இதனால் ஈழவிடுதலைக்காக போராடமுன்வந்த எல்லோரையும் இணைத்து தனியான ஒரு விடுதலைப்படையை உருவாக்க வேண்டுமென்ற நன் நோக்கில் சென்னையில் தங்கியிருந்த இளைஞர்களிடம் தனது பரப்புரையை மேற்கொண்டுவந்தார்.  தமிழரின்படைக்கு தனியான  நிறம் உடை கொண்டதான இராணுவக் கட்டமைப்பை பற்றியும் தனது நோக்கில் ஐம்பதினாயிரம் தமிழ் இளைஞர்களை சேர்க்கவேண்டுமென்ற தனது உள்ளக்கிடக்கைகளையும் மேற்படி இளைஞர்களிடம் விதைக்கமுயன்றார். இதனைவிட இனவிடுதலை சம்பந்தமான பலநூல்களை படித்தும் சேகரித்தும் அவைபற்றி மேற்படி இளைஞர்களிடம் கூறிவந்தார்.

The History of Thamiraparni  எனும் ஈழத்தமிழர்களின் வரலாறு கூறும் நூலொன்றையும் இக்காலத்தில் இவர் எழுதிவந்தார். (இவரது மறைவின்பின் இப்புத்தகம் இரா.ஜனார்தனத்தினால் வெளியிடப்பட்டது)   இதன்மூலம் இலங்கையின் அல்லது ஈழத்தின் புரதானபெயரான ‘தாமிரபரணி’ என்ற பெயரை இவர் உள்வாங்கிக்கொண்டுள்ளார் எனலாம். ஏனேனில் 1974யூன் 1ந்திகதி தான் வாசித்ததாக தனதுடயரியில் இவர் குறிப்பிட்டிருக்கும்  Notices of  South India From Magesthens To Mahun என்னும் நூலில் ஈழத்தின் மூத்தகுடியினர் தமிழர்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் இருந்ததாகவும் அதைக்கண்டு தான் மகிழ்வடைவதாகவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இங்கு Magesthens (மொகஸ்தனிஸ்)  என குறிப்பிடப்பட்டுள்ளவர் கிறிஸ்துவிற்குமுன்  மூன்றாம்நூற்றாண்டைச் சேர்ந்த சந்திரகுப்தமௌரியரின் அரசசபையில் கிரேக்கதூதராக இருந்தவர்.  கிரேக்க மொழியில் இவர் எழுதிய அக்காலகுறிப்புகளில் இலங்கையை ‘தப்ரபேன்’ எனக் குறித்துள்ளார்.

இதனையே பாளிமொழியில் எழுதப்பட்ட  மகாவம்சம் ‘தம்பபண்ணி’ என குறிப்பிடுகின்றமையும் இங்கே நோக்கத்தக்கது. ஈழம் என முழுமையான பெயரைக் குறிப்பிடும் தமிழ்இலக்கிய சான்று கிபி இரண்டாம்நூற்றாண்டில் கரிகாலன் காலத்தில் எழுதப்பட்ட ‘பட்டினப்பாலை’ எனும் நுலாகும். மேற்படியுள்ள பலகாரணிகளால் ஈழம் என்பதன் முந்தைய பெயரான தாமிரபரணி என்னும் பெயரை ஈழத் தமிழர்களின் தனிநாட்டிற்கான பெயராக திரு.ஆ. இராசரத்தினம் எடுத்துக் கொண்டார். ‘புலி’ என்பது தமிழர்களின் அரசவம்சத்தில் முதன்மையானவர்களாக கருதப்படும் சோழர்களின் இலச்சினையாகும். இத்தகைய தாமிரபரணி மற்றும் புலி எனும் கருத்துப் பொதிந்த சொற்களை இணைத்து ‘தாமிரபரணி புதிய புலிகள்’ என்னும் பெயரை இராசரத்தினம் உருவாக்கினார்.

மாமனிதர்    இராசரத்தினத்தின்   நாட்குறிப்பு

இவர் தனது 1974செப்டெம்பர் 04ந் திகதிக்கான நாட்குறிப்பில் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்னும்பெயரை உருவாக்கிக் கொடுத்தேன். அதன் உள்ளார்த்தத்தை விளக்கித் தங்கத்திடம் கூறினேன்.  எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தங்கம் எனக்குறிப்பிடப்படுபவர் யாரிடமும் மனம் கோளாமல் நடப்பவரும் தங்கண்ணா என தலைவர் பிரபாகரனினால்; அழைக்கப்பட்ட போராட்ட முன்னோடியான ‘தங்கத்துரையாகும். தாமிரபரணி அல்லது தாமிரபர்ணி புதிய புலிகள் என்பதன் ஆங்கில வார்த்தையின் சுருக்ககுறியீடு; T.N.T என்பதேயாகும். 1974ஆகஸ்டில் சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் இராசரத்தினமும் மனம்திறந்த நட்புடன் ஆளையால் புரிந்துகொண்டு பழகிவந்தனர். தந்தைமகன் போன்ற வயதுடன் காணப்பட்ட இவர்கள் தமது பசிபட்டினியை மறந்து கன்னிமாரா நூல்நிலையத்தில் பலமணிநேரங்களை செலவிட்டனர்.

ஈழத்தமிழர்களிற்கான விடிவு தனிநாடு தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உலகவரலாறு  இந்தியவரலாறு  இலங்கை வரலாறு எனப் பலவரலாற்று நூல்களில் மூழ்கிய இவர்கள் அங்கிருந்தே தமக்கான மாற்று (இயக்க)ப் பெயர்களையும் இக்காலத்தில் தேடிக்கொண்டனர். தலைவர் தனது பெயராக சோழமன்னன ‘கரிகாலன்’ என்பதையும் இராசரத்தினம் ஈழமன்னன் எல்லாளன் (ஈழாளன்) என்பதனையும் தமது மாற்றுப்பெயர்களாக வகுத்துக் கொண்டனர்.

இத்தகைய இவரின் தனிநாடு பற்றிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்ட தலைவரின் மனத்திலும் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்றபெயர் விருப்பத்திற்குரியதாகியது. ஏனெனின் எப்பொழுதும் தீவிரவாத செயற்பாடுகளில் முன்னின்ற தலைவரால் நேசிக்கப்பட்ட வெடிமருந்தின் பெயரும் T.N.T என்பதாகும். மேற்படி இரண்டுபெயர்களும் எவ்விதமாறு பாடுமின்றி T.N.T எனவருவதனால் தலைவரால் இப்பெயர் பெரிதும் விரும்பப் பட்டது. இதன்வழியில் தமிழின உணர்வில் உந்தப்பட்டு வழிநடந்த தலைவர்; பிரபாகரன் விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுத இயக்கத்தை உருவாக்கியபோது தாமிரபரணி என்னும் பிரதேசத்தின் பெயரால் தியாகி  இராசரத்தினத்தால் உருவாக்கப்பட்ட பெயரினை அவரின் மனம் கோணாமல் அப்படியே ஆங்கிலத்தில் T.N.T என்பதன் உருவமும் சிதைவுறாமல் ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என இனத்தின் பெயரால் தான் உருவாக்கிய இயக்கத்திற்கு பெயராக்கிக்கொண்டார். இதனையே துரையப்பாவை எதிர்பார்த்து தவைர் பிரபாகரனுடன் காத்திருந்த முதன்நிலைப் போராளியான கலாபதி T.N.T என எழுதிவைத்தார்.

சென்னை வைத்தியசாலையில் அநாதையாக மரணித்த ஈழத்தின் முதலாவது மாமனிதர் ஆ.இராசரெத்தினம்.

T.N.T என்ற பெயரினை அப்பழுக்கின்றி முன்மொழிந்த இராசரெத்தினம் அப்பெயர்கொண்ட அமைப்பினால் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். என்பதை அறிந்து மகிழ்வடைந்த நிலையில் 19.08.1975 இல் ஆஸ்துமா நோயின் தாக்கத்தால் சென்னையில் இயற்கையெய்தினார்.  சென்னையில் பரிதாபத்திற்கு உரியவராக வாழ்ந்த அவரை தமிழ்நாடு சென்ற வேளைகளிலெல்லாம் சந்திக்க மறுத்த தமிழரசுக்கட்சித் தலைவர்கள்   தியாகவாழ்வு வாழந்த அவர் மறைந்தபின் ‘ஈழத்து நேதாஜி’  எனப்பட்டமளித்து தமக்குரிமை கொண்டாடினர்.  மானசீகமாக தனக்கேற்ற அறிவுரைகள் வழஙகிய இராசரத்தினத்தை 1990இல் அவருடைய  சொந்த இடமான சாவகச்சேரியில் நடந்த முத்தமிழ் விழாவில் தமிழ்ஈழத்தின் முதலாவது ‘மாமனிதர்’என பட்டமளித்து தலைவர்பிரபாகரன் பெருமைப்படுத்தினார்.

இராசரெத்தினத்தின் மகளே 1991 மே21 இல் நடைபெற்ற இராஜீவ்காந்தி கொலைவழக்கில் தற்கொலை குண்டுதாரியாக குற்றம் சாட்டப்பெற்ற தனு என நம்பப் படுகின்றது.

‘வருணகுலத்தான் பார்வையில்’ தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன்,  2002ல்  தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டவையாகும்.

  1. போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 4
  2. போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 3
  3. போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 2
  4. போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 1

லெப்.கேணல் ராஜன் உட்பட்ட 9 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்


மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில்

மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர்

லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்)

(சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்)

கப்டன் கணேசன் (கணேஸ்)

(புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை)

கப்டன் வன்னியன்

(கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்)

(சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் – யோகபுரம், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் அருளையன் (பிரதீப்)

(சாமித்தம்பி மகிந்தன் – புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் இளங்கோ (யோகராஜா)

(பாஸ்கரன் பிரபாகரன் – தையிட்டி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கலைச்செல்வன் (குகன்)

(இரமயநாதன் புனிதராசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மதியழகன்

(நடராசா பூவிலிங்கம் – புலோப்பளை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அறிவழகன்

(நாகலிங்கம் சிவகுமார் – கும்பிழான், யாழ்ப்பாணம்.)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

லெப்.கேணல் ராஜன் பற்றிய குறிப்பு:

அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான்.

முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம்இ எதிரியின் படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்களும்.

எதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன.

திட்டம் மிகவும், சிறியதாகவும், சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம்பற்றி அதில் நின்றவர்களைத் தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது. திட்டத்தின் வெற்றி பற்றிய “வோக்கி”ச் செய்தியை எதிர்பார்த்தபடி காந்திருந்தான் ராஜன்.

கிளைமோர் சத்தம் கேட்டவுடன் கோபி… கோபி… என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது. தலையில் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான்.

என்ன நடந்ததோ? இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ? இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ? வேவு பார்த்தோர் தவறோ? வேறு பிழைகளோ?

கோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி விட்டு… அவன் வரவில்லை.கணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை.

ராஜன் இல்லை என்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம். அவன் மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது.

ராஜன்-றோமியோ நவம்பர்.

எங்கள் போராளிகள் மனத்தில் நிறைந்துவிட்ட இனியபுயல், இறுகிய பாறை.

அடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டுஇ இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம்.அவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது.

1987ன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்டபொழுது. யாழ். காவல்துறைய நிலைய தங்ககமும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணைாய் நிமிர்ந்து நின்றன.

அதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள். அதில் ஒருவானாய் ராஜன். தன் கை ஆயுதத்தைத் தான் பார்க்க முடியதாக காரிருள்.

பின்னால் நிற்பவரின் மூச்சுச் சுடும்.வியர்வைாற் குளிக்கும் தேகம். தாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய், தாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம்இ உறுதி,

இது எம் தாயகம், எங்கள் பூமி. இங்கு அந்நியனுக்கு என்ன வேலை? இன்று வெல்வோம். அந்நியன் பாடம் படிப்பான்.

அக்காலத்தில் அவன் காரைநகர் கடற்படைக் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கென கிட்டண்ணையால் அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன்.

உள்நுழைந்தோருக்கு குறுகியதாயும், வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்தபோது…

தனது படைவீரர்களை “யாழ்ப்பாணக் காடுகளில்” தேடிக்கொண்டிருந்தது சிறிலங்கா அரசு. யாழ்ப்பணத்திற் காடுகளைத் தேடிக்கொண்டிருந்தது உலகு.

தன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்த பின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது பட்டறிவையும் மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.

இந்திய படைக் காலம், அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள். இந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்தவை. அவன் நின்று பிடித்த வெறும் குருட்டாம்போக்கு மட்டுமல்ல. வீரம், விவேகம், உச்ச வழிப்பு, அன்புக்கினிய எம்மக்களின் அரவணைப்பு இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியான முற்றுகைக்குள் – தொடர்ந்த தூக்கமற்ற இரவுகள்.

முற்றுகை ஒன்றிலிருந்து பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒருவாரக் கசகசப்புத்தீர குளித்துவிட்டு நொண்டிக்கொண்டு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறிய காலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப்போனான் பாவம்.

எத்தகு நெருக்கடிகளிற்கு நடுவிலும்இ உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுபவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சகபோராளிகளை இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன்.

இந்தியச் சண்டையின் தொடக்க நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளியூடாக எதிரியின் பாதச்சுவடுவகள். பட்டறிவு குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக்கண்ட ராஜன் “டேய் தம்பி ஆமி இன்னும் பனையிலை ஏறேல்லை. கொண்டா ஜிபிஎம்ஜி யை”. ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத் தழும்பினைப் பதித்து வைக்கிறது.

பொன்னாலையில் கால் கிழிந்து, இந்தியாவில் விழுப்புண் ஒழுங்காக மாறமுதல் நாட்டுக்கு என்று துடிதுடித்து புறப்பட்டு, மீன்பிடிப்படகில் தீவுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள் தடங்கள்.

“எங்கட ஆட்கள் எங்கே” என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான்.

யாழ்ப்பாணத்தில் எங்கும் படை முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியப் படையினர் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி அவர்களை திணறவைத்தது.

அரைத்தூக்கம் கலையாத அதிகாலைப்பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும்.

“டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா”

“ரங்கன்”

“அண்ணை நான் முழிப்புத்தான்”

“வெளிக்கிடுங்கோ…”

சிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது? ஜீன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்திற் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சூருட்டி இடுப்பில் கட்டினால் சரி.

“சரி வெளிக்கிட்டாச்சு.”

நாய்கள் குரைக்கும் சத்தம் நகர நகர, அது படையினரின் நகர்வை நிழலாய்க்காட்டும்.

முன்படலை பிசகென்று பின்வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்தநாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப்போனது நினைவுக்கு வரும்.

விரைவாய் சத்தமின்ற – சத்தமின்றி விரைவாய் அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே.

ராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை. எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம்.

“கட்டாயம் உடைக்கலாம். ஒருத்தரும் பயப்படாதேங்கோ” ,“டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத”

“ரங்கனும், வெற்றியும் அங்காலைபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை”

“தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்”

“அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால்தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போங்கோ, இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.”

கொஞ்சநேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத்தங்கள் ஓயும்போத, தேநீர் கொடுத்த அம்மா “ஆர் பெத்த பிளையளோ முருகா காப்பாத்து” என வேண்டிக் கொண்டிருக்கும்போது,

இரண்டு றோட்டுக்கடந்து நின்று வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும்.

கிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் “ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன். இனிப்பயப்பட மாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில் ஆமி செத்திருப்பானே?” என்று கேட்டுக்கொண்டிருப்பான்.

அவர்களின் அநேக நாட்கள் இப்படித்தான் விடியும்.

லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 10 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்


அம்பாறையில் காவியமான அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 8 மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய இரு மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய

அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் மாருதியன் (ரஞ்சன்) (செல்லத்துரை பிரபாகரன் – தம்புலுவில், அம்பாறை)

கப்டன் கமால் (கந்தையா செல்வராசா – அம்பாறை)

கப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி) (செல்லத்துரை நாகேந்திரன் – கோமாரி, அம்பாறை)

லெப்டினன்ட் நவரங்கன் (நிசாந்தன்) (கிருஸ்ணபிள்ளை ராஜமோகன் – தம்புலுவில், அம்பாறை)

2ம் லெப்டினன்ட் அறிவொளி (பீதாம்பாரம் ரவிச்சந்திரன் – கன்னங்குடா, மட்டக்களப்பு)

வீரவேங்கை இந்திரன் (செல்லையா ராஜீ – பொத்துவில், அம்பாறை)

வீரவேங்கை லிங்கேஸ்வரன் (தில்லையன் சிவராஜா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

ஆகிய மாவீரர்களினதும்,

அம்பாறை மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக சாவினை அணைத்துக் கொண்ட

2ம் லெப்டினன்ட் சுரேந்திரன் (காதர்) (நாகப்பன் விஸ்வநாதன் – குருக்கள்மடம், மட்டக்களப்பு)

என்ற மாவீரரினதும்

யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய

லெப்டினன்ட் அக்காச்சி (அப்துல்லா) (செல்வரத்தினம் குமரசீலன் – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் தில்லைநாதன் (நல்லதம்பி நகுலேஸ்வரன் – கொடிகாமம், யாழ்ப்பாணம்)

ஆகிய மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Up ↑