Search

Eelamaravar

Eelamaravar

Month

April 2010

1 ம் ஆண்டு வீரவணக்கம்- தேசிய தலைவரின் மகன்-சாள்ஸ் அன்ரனி

தேசிய தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனியின் 25வது பிறந்த தினம்

தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன் சாள்ஸ் அன்ரனியின் 25 வது பிறந்ததினம் இன்றாகும் அவர் ஏப்பிரல் மாதம் 18ம் திகதி 1985ம் ஆண்டு பிறந்தார்.

கடந்தவருடம் மே மாதத்தில் ஏற்பட்ட கடுமையான போரில், காட்டிக்கொடுப்பால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார் சாள்ஸ் அன்ரனி. அவர் புலிகளின் வான் படையிலும், கணணி பொறியியல் அமைப்புகளிலும் பல நுட்பமான அறிவைப் பெற்றிருந்ததுடன், இறுதிப் போரில் பல தாக்குதலை பொறுப்பேற்று நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் பெயர் தமிழீழப் போராட்டப் பாதையில் ஒரு மயில் கல்லாக எப்போதும் நினைவுகூரப்படும் என்பதில் ஜயமில்லை.

http://puliveeram.files.wordpress.com/2009/10/1137497_f496.jpg

தலைவரின் குடும்ப படங்கள்

தாயுமான எமது தலைவன்

சோதனைக்காலங்களில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகிறது என மார்டின் லூத்தர் சொல்வார். நமக்கான போராட்ட வடிவம் கூட, இப்போது நாம் எடுக்கும் முடிவுகளில் தீர்மானிக்கப்பட இருக்கிறது. அசைக்க முடியாத மனநிலையோடு, நாம் நமக்கான நாட்டை கட்டி அமைப்போம் என உறுதி எடுக்கும் காலத்தில், அந்த கட்டாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கான அரசு, நமக்கான ஆட்சி, நம்மை நாமே ஆள்வது என்கின்ற அடிப்படை மாந்த உரிமை தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இயன்றவரை முயற்சிப்போம் என்று சொல்லாமல், அது நடக்கும்வரை செயல்படுவோம் என்று நம்மை நாம் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்காகத்தான் நமது மேதகு தமிழ் தேசியத் தலைவர் தமது வாழ்நாளை அர்ப்பணித்தார். அவர் வாழ்க்கையில் யாரையும் இப்படி வாழுங்கள் என்று வலியுறுத்தியது கிடையாது. எப்படி அவர்கள் வாழ வேண்டும் என்பதை இவர் வாழ்ந்து காட்டினார்.

கிறித்துவ மறைநூலான விவிலியத்தில் இயேசு கிறிஸ்து தமது சீடர்களை அமர வைத்து, அவர்களின் பாதங்களை கழுவி துடைக்கிறார். அதற்கு முன்னர் அவர் தமது மேலங்கியை கழற்றி வைத்துவிட்டு, இடுப்பிலே ஒரு துண்டை கட்டிக் கொண்டு இந்தப் பணியை செய்கிறார். இது அக்கால யூத நடைமுறைக்கு மிகவும் ஏற்கத்தக்க செயலாகும். யூத இனம் தம்மை கடவுள் படைத்த இனமாக கொண்டாடிக் கொண்டதோடு, யூதர்களே இந்த உலகில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிந்த காலக்கட்டம். அப்படிப்பட்ட நிலையில் தான் யூதராகிய இயேசு கிறிஸ்து தமது இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு, சீடர்களின் பாதங்களை கழுவி துடைக்கிறார். தாம் எப்படி எளிமையோடு வாழ வேண்டும் என்பதை அவர் தமது செயலின் மூலமே கற்பித்தார்.

கட்டளையிடுவதற்குப் பதிலாக வாழ்ந்து காட்டுவது என்பதுதான் தலைமைத்துவத்தின் அடிப்படையாகும். இந்த நேர்மை, உண்மை, ஏற்றுக் கொள்ளுதல், அணைத்துக் கொள்ளுதல், தாங்கிக் கொள்ளுதல், தம்மையே அர்ப்பணித்தல் என்கின்ற அளப்பறியா பண்பு ஒரு தலைவனின் உடன் பிறந்த குணமாக இருக்கும். எமது தேசிய தலைவரின் வாழ்வியலும் இதைத்தான் நமக்கு போதிக்கின்றன. கிறித்துவ மதம் மிகக் குறைந்த காலக்கட்டத்தில் உலகெங்கும் இன்று அசைக்க முடியாத நிலைக்கு உயர்ந்தோங்கி இருக்க காரணம் என்ன? என்று இன்றுவரை மறைநூல் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆய்வுகளின் முடிவில் அவர்கள் கண்டறிந்த ஒரு உண்மை என்னதென்றால், கிறித்துவ மதத்தில் இழையோடிப் போயிருக்கும் அதன் எளிமை என்பதுதான்.

இன்று உலகெங்கும் கிறித்துவ மதம் பரந்து விரிந்திருக்கக் காரணம், அந்த மதத்தில் உள்ள எளிமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பும் இப்படி எளிமையோடு கட்டி அமைக்கப்பட்டதால், இன்று உலகெங்கும் அதன் அமைப்பின் அடிப்படைகள், கொள்கைகள், லட்சிய நிலைகள் மிக உயர்ந்தோங்கி நிற்கிறது. அமைப்பில் மட்டுமல்ல, அந்த அமைப்பை கட்டிய எமது தேசியத் தலைவர் எளிமையாக இருந்தார். அவர் எவ்வாறு எளிமையாக இருந்தாரோ அதேப் போன்றே அவர் இயக்கத்தையும் எளிமையாக வழிநடத்தினார். தாய்மைக்குரிய பண்பு அவருக்குள் அழுத்தமாக அமர்ந்திருந்தது. அவர் தமது போராளிகளை இழந்த போது, கண்ணீர் விட்டு அழுதார்.

அவர் என்ன உண்கிறாரோ அதுதான் தமது போராளிகளுக்கும் உண்ண வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தார். ஒரு தலைவன் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, ஒரு தாய் போன்று தமது போராளிகளை தோள்மேல் சுமந்தார். ஒரு தாயின் இடுப்பிலிருக்கும் குழந்தை எப்போதும் சிரித்த முகத்தோடு, எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் இருக்குமே, அதற்குக் காரணம், அந்த தாய் எந்த நிலையிலும் தன்னை கைவிட மாட்டாள். அந்த தாய் கீழே கற்கள், முற்கள் இருந்தாலும்கூட, தமது பாதத்திலே தாங்கிக் கொண்டு தம்மை சுமந்து கொண்டு செல்வாள் என்கின்ற மனப்போக்குத்தான்.

இதே மனப்போக்குத்தான் நமது போராளிகளுக்கு இருந்தது. அந்த மாவீரர்கள் எமது தேசியத் தலைவரை, தலைவராக அல்ல, தாயாக ரசித்தார்கள், தாயாக உணர்ந்தார்கள், தாயாக போற்றினார்கள். அவரை தாயாக ஏற்றுக் கொண்டார்கள். எமது தலைவர் தலைவராக இல்லை. தாயாக இருந்தார். ஆகவே தான் அவர் அந்த மண்ணை, அந்த மண்ணின் மக்களை உளமாற நேசித்தார். தமது மண்ணுக்கும் தமது மக்களுக்கும் எந்த இடையுறும், எந்த அச்சுறுத்தலும் நிகழக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார். வானத்திலிருந்து கழுகு வட்டமிட்டு வந்து குஞ்சுகளை வேட்டையாட நினைக்கும்போது, பறந்து சென்று தாக்கும் கோழியைப் போன்று அவர் தமது மக்களை பழிவாங்க வரும் பகைவர்களை எதிர்த்து போராடினார்.

தாம் மட்டும் போராடினால் போதாது என, தமது குஞ்சுகளுக்கு அவர் போராட்டத்தை கற்றுக் கொடுத்தார். போராட்ட வடிவத்தை தாம் உள்வாங்கிக் கொண்டபோது, அதை வெளியரங்கமாய் தமது பிள்ளைகளுக்கும் சேர்த்து வளர்த்தெடுக்க பயிற்றுவித்தார். இந்த பயிற்சியிலே தேறிய பிள்ளைகள், மாவீரர்களாய், சொந்த மண்ணுக்காக குருதி சிந்த அல்ல, உயிர் கொடுக்கவும் உறுதியாக இருந்தார்கள். ஆகவேதான் கடந்த 30 ஆண்டு காலமாக எந்தவித ஆசைக்கும், எந்தவித அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் அசராமல் தாம் கொண்ட லட்சியத்திலே, உறுதியாக தமது செயல்பாட்டை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தார். தாம் இயங்கினார். தம்மோடு சேர்த்து தமது பிள்ளைகளையும் இயக்கச் செய்தார்.

உலக வரலாற்றில் எமது தேசியத் தலைவரைப் போல தாய்மை கொண்ட தலைவரை நம்மால் பார்ப்பது கடினம்தான். கடுமையான போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எமது மண்ணை காக்க வேண்டும். எமது தலைமுறை பெற்றுத்தரும் விடுதலையை அடுத்த தலைமுறை உரிமையோடு கொண்டாடட்டும் என்ற உணர்வோடு கடும் சமரை எதிர்க்கொள்ள, அவர் தமது மக்களிடம் ஒவ்வொருவரும் ஒரு பிள்ளையை போர்க்களத்திற்கு அனுப்புங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். முகம் மாறாமல், அகம் குளிர்ந்து தமிழ் தாய்கள், தமது பிள்ளைகளை வேறொரு தாயோடு போராட அனுப்பி வைத்தார்கள். அவர்கள் தம்மைவிட, தமது தாய்மையைவிட, மேலான தாய்மை தமது தேசிய தலைவருக்கு உண்டென்று நம்பினார்கள். ஊருக்கு உபதேசம் செய்து தாம் மட்டும் காத்துக் கொள்ளும் கேடு நிலைக் கொண்ட தலைவனல்ல எமது தேசியத் தலைவன்.

தமது மக்களினம் எல்லாம் வீட்டிற்கு ஒரு பிள்ளையை அனுப்புங்கள் என்று கூறிவிட்டு, தமது வீட்டு பிள்ளையை எங்கோ வெளிநாட்டில் பதுக்கி வைத்து, பாரிய சமர் புரிய ஊரார் வீட்டுப் பிள்ளைகளை அனுப்பி வைக்கவில்லை. மாறாக, அந்த சமர் களத்திலே தமது பிள்ளையையும் உயிர் கொடையாக வார்த்துக் கொடுத்தார்.தமது மக்கள் விடுதலை ஒன்றே எமது தேசியத் தலைவனின் லட்சியமாக இருந்தது. தமது மக்களின் உரிமை வாழ்வு ஒன்றே எமது தேசிய தலைவனுக்கான கனவாக இருந்தது. அந்த கனவை மீட்டெடுக்கும் போராட்டத்திற்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்ததோடு, தமது மக்களை அந்த அர்ப்பணிப்பிற்கு உந்தித் தள்ளினார். தமது நாட்டு விடுதலைக்காக, தமது மண்ணின் மீட்புக்காக, உயிர் கொடை தரும் உன்னத வாழ்வு அவரிடம் குடி கொண்டிருந்ததால், அந்த குறியீடாய் மாவீரர்கள் மாறிப்போனார்கள்.

அவர்களின் வாழ்வு தலைவனின் கட்டளை என்பதைவிட, ஒரு தாயின் கட்டளையாக அவர்களுக்கு தெரிந்தது. கருத்தரித்தது தாயாக இருந்தாலும், காத்து வழிநடத்தியது எமது தலைவன் தான். மாபெரும் அன்பு சுரங்கமாக ஊற்றெடுக்கும் தாய்மையின் குணத்தை கொண்டவனாய், களத்திலே எமது தலைவன் இருந்த காரணத்தினால்தான், அணி அணியாய் தம்மை அர்ப்பணிக்க தொடர்ந்து மாவீரர்கள் அணிவகுத்தார்கள். அவர்களின் வாழ்வு, தமது தாயின் கட்டளைக்காய் காத்திருந்தது. ஒவ்வொரு முறையும் மாவீரர்களின் சடலங்களை, அந்த வீரமறவர்களின் வித்துடல்களை கண்டபோது, கதறினார். ஒரு தாய்க்கே உரிய பாங்கை நம்மால் அங்கே காண முடிந்தது.

அழுது துடித்தாலும், அடுத்து வரும் தலைமுறைக்கான விடுதலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதிலே அவர் உறுதியாக இருந்தார். இந்த உறுதியின் காரணத்தினால்தான், நாற்பத்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரமறவர்கள் தமது மண்ணின் விடுதலைக்காய் தமது உடலை வித்துக்களாக்கினார்கள். கடந்த 30 ஆண்டுகால சமரில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், தமது இன்னுயிரை ஈந்தார்கள். உலகெங்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் ஏதிலிகளாய் புலம் பெயர்ந்து வாழும் அவலத்திற்கு தள்ளப்பட்டார்கள். ஆக, நாம் இந்த காரணங்களை சரியாக புரிந்து கொண்டு, நமது விடுதலைக்கான வேட்கை தணியாமல் காக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். தாயுமான எமது தலைவன், தமது தலைமையில் தமிழீழ அரசை அமைக்காமல் ஓய்வு பெறமாட்டான் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமக்கான அரசு என்பதிலே மாறுபட்ட எண்ணமோ, அவநம்பிக்கையோ ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது.

நமது விடுதலை ஒன்றே லட்சியமாகக் கொண்டு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற நமது தேசியத் தலைவரின் வழிக்காட்டுதல் இன்னும் சில காலங்களில் நமக்கு கிடைக்கத் தொடங்கிவிடும். நாம், நமது விடுதலைக்கான போராட்டத்தை இன்னும் இன்னுமாய் அழுத்தமாக நடத்திச் செல்வதற்கான மன உறுதியையும், செயல்பாட்டையும் வகுத்துக் கொள்ளும் காலத்திலே இருந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, மனம் தளராமல் யார் என்ன தவறான பரப்புரைகளை மேற்கொண்டாலும், கலங்காமல், தயங்காமல், தாயுமான எமது தலைவன் எம்மோடு இருக்கிறான், எந்த நிலையிலும் நான் கலங்க மாட்டேன், எமக்கான இலட்சியத்தை அடையும்வரை எமது வழித்தடங்களிலிருந்து மாற்றுப் பாதையை தேட மாட்டேன் என்கின்ற உறுதியை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் உள்வாங்கிக் கொண்டு எமது களப்பணிக்காய் எமது வாழ்க்கையை அர்ப்பணிக்க எந்த நேரத்திலும் தயாராக இருப்பேன்.

தாயுமான எமது தலைவனுக்கு இதை உறுதியாகச் சொல்கிறேன் என்ற மனப்போக்கோடு வாழ உறுதியெடுப்போம். தமிழீழம் மலரும். இதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

-கண்மணி-

சார்ல்ஸ் அன்டனி தளபதி அமிதாப் 1ம் ஆண்டு வீரவணக்கம்

வீரவணக்கங்கள்

ஓயாத அலைகள் மூன்று-பகுதி-5

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4

29/10/1999 இரவு.

karumpuli
நடந்து முடிந்த ஆட்லறிச் சூட்டுத் திருத்தப் பயிற்சி தொடர்பாகவும் அதன் பெறுபேறு தொடர்பாகவும் கேட்டு அறிந்துகொண்ட தலைவர், தனது திருப்தியைத் தெரிவித்தார். அதேபோல் தாக்குதலிலும் துல்லியமான திருத்தங்களைச் சொல்லி பெரிய விளைவை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இலக்குக்கு ஆகக் கிட்டவாக நிலையெடுக்க வேண்டாமென்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். திருத்தங்கள் சொல்லும் ஓ.பி காரர்கள் தமது முகாமுக்குள் நிற்கிறார்கள் என்பதை ஒருகட்டத்தில் உணரும் எதிரி உங்களைத் தேடியழிக்க முனைவான், அதிலிருந்து தப்பும், நழுவும் வழிகளை முற்கூட்டியே ஆயத்தப்படுத்தி வைத்துக்கொண்டுதான் தாக்குதலைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இயன்றவரை மோதலைத் தவிர்க்கச் சொன்னார். இறுதியில், “எதிரியின் ஆட்லறி நிலைகள்தான் இப்போது எமது இலக்கு; ஒவ்வோர் அணிக்கும் தரப்படும் இலக்குகளை எமது ஆட்லறிகளைக் கொண்டு தாக்கியழிக்கும் நடவடிக்கையில் திருத்தங்கள் சொல்பவர்களாக உங்களை அனுப்புகிறேன்” என்று கூறி சந்திப்பை முடித்துக் கொண்டார் தலைவர்.

Kallangll-5ஒவ்வோர் அணியும் தலைவருடன் நின்று படமெடுத்துக் கொண்டார்கள். சுவையான இரவுணவோடு அன்றைய சந்திப்பு முடிந்து கரும்புலிகளும் ஏனைய போராளிகளும் தளம் திரும்பினார்கள்.

இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.

மறுபுறத்தில் வேலைகள் மும்முரமாக நகர்ந்துகொண்டிருந்தன. வரைபடங்கள் ஒழுங்குபடுத்துவது, உலர் உணவுப்பொதிகள் ஆயத்தப்படுத்துவது, தொலைத் தொடர்புக் கருவிகள், மின்கலங்கள், கரும்புலிகளுக்கான வெடிபொருட்கள், ஏனைய துணைப்பொருட்கள் என்பனவற்றைத் தயார்படுத்துவது என்று அன்றைய மாலையும் இரவும் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. தளத்தில் நின்ற நிர்வாகப் போராளிகளும் பயிற்சியாசிரியர்களும் பொறுப்பாளர்களும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.

இரவு பத்து மணியிருக்கும். பெரும்பாலான வேலைகள் முழுமை பெற்றிருந்தன. தலைவருடனான சந்திப்பு முடிந்து வந்திருந்த கரும்புலிகளை நல்ல ஓய்வெடுக்கும்படியும் நாளைக்கு மதியமே நகரவேண்டி வருமென்றும் சொல்லியிருந்ததால் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். நானும் என்னோடு வேலை செய்துகொண்டிருந்த மற்றவர்களும் தேனீர் குடித்துக் கொண்டிருந்தோம். அன்றிரவு அருளனும் எங்களோடு நின்று வேலை செய்துகொண்டிருந்தார். பராக்கிரமபுர முகாம் மீதான தாக்குதலுக்காகப் பயிற்சியிலீடுபட்டிருந்த கரும்புலிகளில் அருளனைத் தவிர மற்ற எவருமே இந்த வேலைத்திட்டத்திலோ மற்றத் தொகுதி கரும்புலிகளுடனோ தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

இன்னமும் எனக்குத் தாக்குதல் திட்டம் பற்றி முழுமையான விபரங்கள் தெரியாது. அவை பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை; சொல்லப்படவும் மாட்டாது. நடைபெற்ற பயிற்சிகள், நகர்வுகளைக் கொண்டு, எதிரியின் ஆட்லறித் தளங்கள் மீதும் முக்கிய தளங்கள் மீதும் எமது இயக்கம் ஆட்லறித் தாக்குதல் நடத்தப்போகின்றது; அதுவும் பல இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப் போகின்றது என்று ஊகித்திருந்தேன். சில ஆட்லறிகளின் வரவால் எமது இயக்கத்தின் ஆட்லறிப்பலம் அதிகரித்திருக்கிறது என்பதையும் அதற்கு முன் நடந்த சில நிகழ்வுகளைக் கொண்டு அனுமானித்திருந்தேன். இப்போது ஒழுங்குபடுத்திய வரைபடங்களைக் கொண்டு பார்க்கும்போது ஜெயசிக்குறு மூலம் எதிரி கைப்பற்றிய வன்னிப் பகுதிகளிலுள்ள தளங்களே தாக்குதலுக்கு இலக்காகப் போகின்றன என்பதை அறிய முடிந்திருந்தது.

காவற்கடமைக்கான ஒழுங்குகளைக் கவனித்துவிட்டுப் படுக்க ஆயத்தமாகும்போது கடாபி அண்ணனின் வாகனம் வந்து சேர்ந்தது. அவரோடு எழிலும் வந்து சேர்ந்தான். நாளைக்கு கரும்புலிகளின் நகர்வுக்கான ஆயத்த வேலைகளுக்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதன்பின்னர் நடந்தவை வேறுமாதிரியாக இருந்தன.

நிர்வாகப் போராளிகள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். கரும்புலி அணியின் நிர்வாகத்தின் கீழிருந்த வேறு முகாம்களில் கடமையிலிருந்த நிர்வாகப் போராளிகளும் அவசர அவசரமாக அழைக்கப்பட்டனர். இரவிரவாக பெற்றோமக்ஸ் வெளிச்சத்தில் வேலைகள் மும்முரமாக நடந்தன.

இது நடப்பதற்குச் சில நாட்களின் முன்னர்தான் இயக்கத்தில் படையணிக் கட்டமைப்பில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. இயக்கத்தில் தொடக்கத்திலே மாவட்டப் படையணிகளே இருந்தன. பின்னர் ஒவ்வொரு பெயர்களில் படையணிகள் ஒருவாக்கப்பட்ட போதும் சில மாவட்டப்படையணிகளும் தொடர்ந்தும் இயங்கிவந்தன. அவற்றுள் ஒன்று மணலாறு மாவட்டப் படையணி. ‘ஈ’ என்ற எழுத்தில் தகட்டிலக்கத்தைத் தொடங்கி இப்படையணி இயங்கி வந்தது.

நீர்சிந்து – 1 நடவடிக்கை நடந்து சிலநாட்களின் பின்னர் என்று நினைக்கிறேன், சில தேவைகள் கருதி இந்த மணலாறு மாவட்டப்படையணி கலைக்கப்பட்டு அக்கட்டமைப்பிலிருந்த போராளிகள் ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் பிரித்து விடப்பட்டனர். அப்போது நவம் அண்ணை தலைமையில் லெப்.கேணல் சித்திராங்கள் உட்பட குறிப்பிட்ட போராளிகள் சிலர் கரும்புலி அணிக்குரிய வேவுப் போராளிகளாக உள்வாங்கப்பட்டனர். ஏற்கனவே மணலாற்றுப் படையணியிலிருந்து கரும்புலிகளுக்கான வேவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த லெப்.கேணல் இளம்புலி அண்ணையும் இந்த மாற்றத்தின் மூலம் கரும்புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

BTஇப்போது இரவிரவாக அவசரமாகத் தொடங்கப்பட்ட பணிகள் நாளைக்கு நகரப் போகும் கரும்புலி அணிகளுக்குரியவையாகத் தென்படவில்லை. ஒருபுறத்திலே சசிக்குமார் மாஸ்டரின் மேற்பார்வையில் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. நவம் அண்ணை தலைமையில் ஓரணியை உருவாக்கும் பணியும் அவர்களுக்கான ஆயுதங்கள் வெடிபொருட்களுட்பட இன்னபிற அவசியமானவற்றை ஒழுங்கு செய்யும் பணி அது. அந்தப்பக்கம் போகமுடியாதவாறு எனக்கொரு பணி தரப்பட்டது. அப்போதுதான் வந்திருந்த கன்ரர் வாகனத்திலிருந்து பொருட்களைச் சரிபார்த்து இறக்குவதும் அறிவுறுத்தப்பட்டபடி அவற்றைப் பிரித்துப் பொதிசெய்வதும் எனது பணி. வந்திருந்தவை அரிசி, பருப்பு, சோயாமீற், வெங்காயம், கருவாடு, மீன்ரின்கள் போன்ற முதன்மை உணவுப் பொருட்களும் சீனி, தேயிலை, பால்மாப் பக்கெட் போன்றவையும்.

சொன்னபடி அரசி, பருப்பு உட்பட உணவுப் பொருட்களை சொல்லப்பட்ட அளவுகளில் பிரித்து பொலித்தீன் பைகளில் பொதிசெய்து வேலை முடித்தபோது சமையற் பாத்திரங்கள் இன்னொரு வாகனத்தில் வந்து சேர்ந்தன. அவற்றையும் பொறுப்பெடுத்து இறக்கி வைத்தாயிற்று. வந்திருந்த சமையற் பாத்திரங்கள் என்பன சாதாரணமாக நாம் நடுத்தர முகாம்களில் பயன்படுத்தும் பெரிய கிடாரம், தாச்சி, அகப்பைகள் போன்றன. அதாவது ஏறத்தாள முப்பது நாப்பது பேருக்கு ஒன்றாகச் சமைக்கக் கூடியளவான பாத்திரங்கள். ஏன், எதற்கு என்ற குழப்பங்களோடு தரப்பட்ட வேலைகளை முடித்து சற்றுத்தள்ளி அணிகளை ஒழுங்கமைக்கும் இடத்துக்குச் சென்றேன். அங்கே கடாபி அண்ணை போராளிகளோடு பேசிக்கொண்டிருந்தார்.

“நீங்கள் நீண்டதூரம் நடக்க வேண்டிவரும், நிறையப் பாரம் சுமக்க வேண்டிவரும், மழைக்காலமாகையால் அருவிகள் பெரிய தொல்லையாக இருக்கும். இவற்றைத் தாண்டி விரைவாகவும் சரியாகவும் நீங்கள் செய்யும் பணிதான் எமது மற்ற அணிகளின் வெற்றிக்குப் பக்கபலமாக அமையும்” என்பதாக அவரது பேச்சு இருந்தது.

இதற்கிடையில் பராக்கிரமபுர மீதான தாக்குதலுக்கு ஆயத்தப்படுத்தியிருந்த கரும்புலியணியையும் எழுப்பித்தான் வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. கிடாரங்களையும் ஏனைய பொருட்களையும் காவுவதற்கு நல்ல வலிமையான காவுதடிகள் வெட்டப்பட்டன. எல்லாப் பொருட்களையும் சிறுசிறு பொதியாக்கி ஒவ்வொருவரும் தனித்தனியாக் காவுவதைவிட பெரிய பொதியாகவே காவுவதுதான் சிறந்தது என்ற கருத்து நவம் அண்ணையால் முன்வைக்கப்பட்டு அதுவே பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி அரிசி, பருப்பு, சீனி, சோயாமீற் என்பவற்றை 25 லீற்றர் லொக்ரியூப்களில் காவுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதைவிட கிடாரங்கள், தாச்சிகள் உட்பட சமையற் பாத்திரங்களும் இரண்டு கூடாரங்கள், ஒரு லீனியர் குறோஸ் (நீண்டதூரத் தொலைத் தொடர்புக்காகப் பயன்படுத்தப்படுவது. அனேகமாக கட்டளைத் தளங்களில் பயன்படுத்தப்படும்) என்று பெருவாரியான பொருட்கள் ஆயத்தமாகியிருந்தன. கிட்டத்தட்ட ஒரு முகாம் அமைக்கும் பாங்கில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

நேரம் அதிகாலையாகிக் கொண்டிருந்தது. வேலைகள் ஓரளவு முடியும் தறுவாயில் எனக்கு இப்படித்தான் விளங்கியிருந்தது. அதாவது நவம் அண்ணை தலைமையில் நிர்வாகப் போராளிகளையும் வேவுப்பணிக்காக வந்திருந்த போராளிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட அணியானது இந்தப் பொருட்களைக் கொண்டு ஒரு தற்காலிக கட்டளை மையமொன்றை அமைக்கப்போகிறது. அங்கிருந்தபடி கரும்புலிகளின் நடவடிக்கைகள் வழிநடத்தப்படப் போகின்றன.

உண்மையில் உள்நடவடிக்கைகளை வழிநடத்துவதென்றால் களமுனையில் கட்டளைமையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியொரு கட்டளை மையத்தை எமது முன்னணிக் காப்பரண் வரிசையை அண்டி அமைக்கும் நடவடிக்கையில்தான் இவ்வணி ஈடுபடுகின்றது என்பதை ஊகித்துக் கொண்டேன். வழங்கல் சாப்பாட்டை விட்டுவிட்டு சொந்தமாகவே சமைத்துச் சாப்பிடும் திட்டத்தோடு இருக்கிறார்கள் என்பதாகவும் கருதிக்கொண்டேன். ஆனாலும் இவற்றை நீண்டதூரம் காவவேண்டி வருமென்ற கதைதான் விளங்கவில்லை. அப்போதிருந்த நிலையில் முன்னணிக் காப்பரண் வரிசைக்கு அண்மைவரை வாகனங்களில் போகும் நிலைமை இருந்தது.

ஏற்கனவே நன்றாகக் களைப்படைந்திருந்ததாலும், வேலைகள் அதிகமிருந்ததாலும் அதிகம் யோசிக்கும் நிலையிருக்கவில்லை. அப்போது நவம் அண்ணையின் அணியிலிருந்த வழிகாட்டிப் போராளிக்குரிய சாதனங்கள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. நவம் அண்ணையின் அணி முகாமிட வேண்டிய இடத்தின் ஆள்கூறு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்செயலாக அந்த ஆள்கூற்று எண்களை வரைபடத்தில் பொருத்திப் பார்த்தபோது திகைத்துப் போனேன். எழிலை அழைத்து நவம் அண்ணைக்கு வழங்கப்பட்ட ஆள்கூறு சரியானதுதானா அல்லது ஏதாவது இலக்கங்கள் மாறுபட்டுள்ளதா எனக் கேட்டேன். எழிலுக்கு எனது நிலை புரிந்தது.

“அது சரிதான். அங்கதான் நவம் அண்ணையின்ர ரீம் காம்ப் அடிச்சுத் தங்கியிருக்க வேணும்.”

எனது ஆச்சரியத்துக்குக் காரணமிருந்தது.

கிடாரங்கள், தாச்சிகள் என்று பாத்திரங்களையும் அரிசி, சீனி உட்பட உணவு மூட்டைகளையும், இரண்டு கூடாரங்களையும், உயரிய மரத்தின் உச்சியில் கட்டி நீண்டதூரத் தொலைத் தொடர்பைப் பேணும் தொலைத்தொடர்புக் கருவியையும், குறைந்தது பத்துநாட்கள் தாக்குப்பிடிக்கக்கூடியளவுக்கு மின்கலங்களையும் சுமந்துசென்று முகாம் அமைத்து, சமைத்துச் சாப்பிட்டுத் தங்கப்போகும் அந்த இடம் எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கவில்லை; எதிரியின் காப்பரண் வரிசையையும் தாண்டி பலமைல்கள் உள்ளேயிருக்கும் எதிரியின் இதயப்பகுதிக்குள் ஓரிடம்.

தொடரும்…

சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்

அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார்.


அறத்தோடுத்தான் மறவர்களை உருவாக்கினார். எந்த நிலையிலும் ஒழுக்க நிலைக்கு எதிராக எமது வீரர்கள் நின்றது கிடையாது. எப்போதும் தமது வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கத்தை அவர்கள் தகர்த்தெறிந்ததில்லை. எண்ணம், செயல் அனைத்தும் முழுக்க முழுக்க தமது மக்களின் மீட்புக்காக மட்டும் செயல்பட்டது. தமது மண்ணின் விடுதலையே அவர்களின் உயிர் மூச்சாய் இருந்தது. காயங்களை துச்சமென மதித்து, களத்திலே காற்றாய் சுழன்று வீசினார்கள்.

புரவிகளின் கால்களைவிட, எமது புலிகளின் கால்கள் அதிவேகத்தில் பறந்தது.
உலக அரங்கிலே எமது தமிழ் தேசிய ராணுவத்தைப் போன்று வீரத்திலும், விவேகத்திலும் ஒன்று சேர நின்றவர்கள் ஒருவரும் கிடையாது. எந்த ஒரு ராணுவமானாலும், எந்த நாட்டின் மீது போர் தொடுத்தாலும் அந்த நாட்டில் பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது இயல்பான நிகழ்வாக கருதப்பட்டது. அணு அளவு, அணுவின் துகள் அளவுகூட எமது வீரர்கள், எமது தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு எதிராக நடந்தது கிடையாது. சிங்கள மக்களே அவர்களின் மன சிம்மாசனங்களில் எமது வீரர்களை அமர வைத்து அழகு பார்க்கும் அளவிற்கு அவர்களின் அறவாழ்வு செழித்தோங்கி நின்றது.

யாரோடும் சமரசம் இல்லாத ஒழுக்கத்திற்கு சொந்தக்காரர்கள் எமது தமிழ்தேசிய ராணுவ வீரர்கள். இதை எமது தேசிய தலைவர், தமது வாழ்க்கையின் மூலம், தமது நடவடிக்கையின் மூலம், தமது சொல்லின் மூலம், தமது செயலின் மூலம் நிகழ்த்திக் காட்டினார். அவரின் குனிதலும், நிமிர்தலும்கூட ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே இருந்த காரணத்தினால் விடுதலைப்புலிகள் என்கின்ற எமது தமிழ்தேசிய ராணுவம், ஒழுக்கத்திற்கு மாறாக எப்போதுமே நடந்தது கிடையாது என்பதற்கு சான்றுகள் தமிழீழ மண்ணிலே மட்டுமல்ல, சிங்கள தீவிலும் இரைந்து கிடக்கிறது.

இவர்களைப்போல் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் கொண்ட வீரர்களை யாம் கண்டதில்லை என சிங்கள இளைஞர்கள் சிரித்த முகத்தோடு எமது தமிழ் தேசிய ராணுவத்தை வர்ணனை செய்கிறார்கள். போர் குணம் மிக்கவர்களாய் இருந்தாலும்கூட, போராளிகளாய் இருந்தாலும்கூட, அச்சமற்று களமாடும் ஆற்றல் கொண்டவர்களாய் இருந்தாலும்கூட, அநீதிக்கு துணைப்போக எமது தமிழ் தேசிய ராணுவம் எப்போதும் முயன்றது கிடையாது. அது வீரத்திற்கு வித்திட்ட, உலகத்திற்கு தமிழ் தேசியத்திற்கு அடையாளம் தந்த எமது தேசிய தலைவரின் கொடை. இப்படி களமாடிய மாவீரர்களின் வரிசையிலே பால்ராஜ், தீபன் போன்ற வீரப்புலிகளின் உன்னதங்களை போற்றிப்புகழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் போர்குணம் நிறைந்த மண்ணிலே பூத்தவன்தான் மாவீரன் தீபன்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அறிவியல் மாணவனாக சிறந்துயர்ந்த தீபன், தமது இனமக்களின் விடுதலை என்பது இதைவிடச் சிறந்ததென கருதி, வரலாற்றின் பக்கங்களில் வாசித்தறியப்படும் பெயராக தமது பெயரை பதிவு செய்வதின் அவசியத்தை உணர்ந்ததால், இயக்கத்தில் இணைந்தார்.

தீபனை இயக்கத்திற்கு அறிமுகப்படுத்திய மாவீரன் மேஜர் கேடில்ஸ் 14.2.1987 அன்று கைத்தடியிலே இடம்பெற்ற வெடிவிபத்தில் கள பலியானார். அவர் கண்டெடுத்த அருமை முத்துதான் தீபன் எனும் இயக்கப் போராளி. பகிரத குமார் 1984ல் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டதின் மூலம் தீபன் என பெயர்மாறிப் போனார்.

1987ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 29ஆம் நாள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை மீறல்களால் ஏற்பட்ட பல்வேறு போர், பெரும் எழுச்சி வடிவமாகி, இந்திய ராணுவத்திற்கெதிரான போராக உருமாறியபோது, இந்திய அமைதிப்படை என்ற தமிழின அழிப்பு படைக்கு எதிரான சமரில் தீபன் கிளிநொச்சியில் ராணுவ பொருப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் ராணுவ பொருப்பாளராகவும் எமது தேசிய தலைவரால் நியமிக்கப்பட்டார்கள்.

இந்திய அமைதிப்படை அமைதிக்குப் பதிலாக ஆக்கிரமிப்புப்போரை அதிகரித்த போது, தமிழீழத்தில் முல்லைத்தீவும், கிளிநொச்சியும்தான் பெரும் எதிர்ப்பை சந்தித்தன.

1988ஆம் ஆண்டில் வன்னிப்பகுதியின் ராணுவ பொருப்பாளராக ஆற்றல் வாய்ந்த, அசைக்க முடியாத, மண்ணின் மீது மதிப்பும், அன்பும் கொண்ட மாபெரும் போராளி பால்ராஜூக்கு துணையாக தீபன் நியமிக்கப்பட்டபோது, இவர்கள் வழி நடத்திய சமர்களின் ஆற்றல், வரலாற்றுப் பதிவுகளாய் மாறும் என இவர்களே நம்பி இருக்க மாட்டார்கள். பல்வேறு சிறப்பு வாய்ந்த வெற்றிகளை இந்த இணையர்கள் இயக்கத்தின் முடிகளில் சூட்டி மகிழ்ந்தார்கள். அதற்கான இழப்புகளை குறித்து அவர்கள் எந்த நிலையிலும் தம்மை குறைத்துக் கொண்டது கிடையாது.

அவர்களின் எண்ணங்களெல்லாம் எமது தேசம் ஒன்றுதான். எமது தேசிய தலைவரின் கட்டளையே அவர்களின் இதயங்களில் ஒலிக்கும் இனிய வார்த்தை. எமது தேசிய தலைவரின் சொற்களே அவர்களை வழி நடத்தும் ஒளி விளக்கு.
இந்திய அமைதிப்படை 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழத்தை விட்டு தோற்று வெளியேறியபோது, ஜூன் மாதத்தில் மீண்டுமாய் சிங்கள-பௌத்த பேரினவாதிகளுக்கும், தமிழ் தேசியத்திற்கும் இடையேயான சமர் தொடங்கியது.

மாங்குளம், கொக்காவில் முகாம் தகர்ப்பு ஆகியவை, பிரிகேடியர் பால்ராஜ் சமர்களத்தில் கண்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளாகும்.

1991ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆணையிரவு முகாம் மீதான எதிர்தாக்குதல் சமர், உலகில் உள்ள எந்த ராணுவமும் நிகழ்த்தாத மாபெரும் சிறப்புமிக்க, பெருமைமிக்க வீரத்தை, விவேகத்தை, ஆற்றலை, கண்ணியத்தை, துல்லியமான பகுப்பாய்வு திட்டத்தை வகுத்தளித்த தேசிய தலைவரின் எண்ணங்கள், ஆணையிரவு வெற்றியாக தமிழீழ வரலாற்றில் இடம்பிடித்தது.

1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்ல்ஸ் அந்தோணி சிறப்புப்படையின் தளபதியாக மாவீரன் பால்ராஜ் நியமிக்கப்படுகிறார். அதே காலக்கட்டத்தில் தீபன், வன்னிப்பகுதிக்கு தளபதியாகிறார்.

இந்த இருவரின் இணைப்பு, இதயபூமி என்றழைக்கப்பட்ட மண்கின்டி மலைமீதான சமர், வரலாற்றில் இதுவரை எவராலும் அழிக்கமுடியாத பெரும் வெற்றியை தேடித் தந்தது. அதோடு தீபனின் வீரத்தை விளக்கிச்சொல்ல யாழ்தேவி மற்றும் தவளைப்பாய்ச்சல் சமர்கள் எதிராளிக்கூட வியந்து பாராட்டும் விளைச்சலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெற்றுத் தந்தது.

93 செப்டம்பரில் நடைபெற்ற இச்சமரில் பால்ராஜூக்கு ஏற்பட்ட காயத்தால், படை களத்திலிருந்து வெளியேறிய பால்ராஜின் வெற்றிடத்தை தீபன் நிரப்பி, சிங்கள பேரினவாத ராணுவத்தை விரட்டியடித்து, மாபெரும் முறியடிப்பு சமரை நிகழ்த்திக் காட்டினார்.

ராணுவ வரலாற்றில் மண் குவியலுக்கு இடையே நின்று சமர் புரியும் புதிய யுக்தியை நிகழ்த்தி, சிங்கள ராணுவத்தை விரட்டி அடித்து, அவர்களின் உளவியலை உடைத்துப் போட்டதோடு, ராணுவ கட்டுப்கோப்பை சிதறடித்தப் பெருமை தீபனுக்கே உண்டு. இதன் மூலம் இயக்கத்திற்கு புதிய புதிய ராணுவ கருவிகளை சிங்கள ராணுவம் வாரி வழங்கிவிட்டு ஓடி ஒளிந்துவிட்டது.

பூநகரி முகாமை தீபனும், தீபன் தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும், பானு தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும் இணைந்து நடத்திய பெரும் சமர், அவர்களை விரட்டி அடித்ததோடு, அப்போதும் அவர்கள் வாரி வழங்கிய கருவிகளும், குறிப்பாக விசைப்படகுகளும் இயக்கத்திற்கு கடற்புலிகள் உருவாக காரணமாக அமைந்தது.

1993ல் நடைபெற்ற இச்சமர், இதுவரை சமன் செய்யப்படாத அளவிற்கு பெரும் பெருமைக்குரியதாக இன்றுவரை கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

1994ஆம் ஆண்டு இலங்கையின் அன்றைய அதிபர் சதிலீலாவதி சந்திரிகா பொறுப்பில் இருந்தபோது, நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிந்து போனதால், 95ல் மீண்டுமாய் ஒருசமர் நடைபெற்ற போது, தமது ஆற்றல் வாய்ந்த பங்களிப்பை அழுத்தமாய் பதிவு செய்த, அளப்பரியா ஆற்றல் வாய்ந்தவன் தீபன் எனும் போராளி.

யாழ்ப்பானம் இயக்கத்தின் கரங்களிலிருந்து நழுவியப்போது, வன்னியை தமது தளமாக அமைக்க, தலைமை முடிவெடுத்தது. அந்த காலக்கட்டத்தில் தலைமைக்கு பெரும் இடையூறாக இருந்தது, முல்லைத்தீவு ராணுவ முகாம். அதை அகற்றுவதின் மூலமே வன்னிப்பகுதியில் தலைமையகம் சிறப்பாக செயல்படும் என்பதை அறிந்த எமது தலைமை, தீபனை அழைத்து, முல்லைத்தீவு ராணுவ முகாமை அகற்றுவதற்கான திட்டத்தை அளிக்கச் சொன்னபோது, மிகச் சிறப்பான ஒரு திட்டத்தை தீபன் வகுத்தளித்து, எமது தேசிய தலைவரின் பெரும் பாராட்டுதலை பெற்றார். அந்த திட்டத்தின்படி தாக்குதல் நடக்கவும் தேசிய தலைவர் கட்டளையிட்டபோது, தீபனின் திறமை மிக சிறப்பாக வெளிப்பட்டது.


ஜூலை 18, 1996 தமிழீழ விடுதலை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்த ஒரு பெரும் தாக்குதல் அது.

முல்லைத்தீவு முகாம் தகர்க்கப்பட்டு, சிங்கள ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, பெரும் கருவிக் குவியலை எமது இயக்கத்தின் கரங்களிலே ஒப்புவித்து, ஓடி ஒளிந்தது சிங்கள ராணுவம். இந்த படையெடுப்புதான் எமது தேசிய ராணுவத்தை கரந்தடி தாக்குதலிலிருந்து தடம்மாற்றி, மரபுவழி சமருக்கு இட்டுச் சென்றது என்று குறிப்பிடலாம்.

அதேபோன்றே 1997ல் சிங்கள ராணுவம் ஜெயசிக்குரூ என்கின்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, புளியங்குளத்தை காக்கும் பொறுப்பு புலிப்படையின் நம்பிக்கை நாயகன் தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும், நெடுங்கேனியையும் எளிதாக கைப்பற்றிய சிங்கள ராணுவம், புளியங்குளத்தை கைப்பற்றமுடியாமல் திணறியது. சிங்கள ராணுவத்தை திணறடித்த ஆற்றல் வாய்ந்த களவீரராக களமாடினார் தீபன்.

இன்றைய தினம் துரோகத்தின் வடிவமாய் திகழும் கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன், பலநேரங்களில் ஜெயசிக்குரூ ராணுவ நடவடிக்கை காலங்களில், தாம் வன்னிப்பகுதியின் கட்டளை தளபதியாக நின்று களமாடியதாக கதைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் கருணாவின் களப்பணிக்கு கரம் இணைத்த ஆற்றல் வாய்ந்த அறவீரன் தீபன் என்பதை கருணா, திட்டமிட்டு மறைத்து வருகிறார். அதேபோன்றே 1998ல் சத்ஜெய எனும் ராணுவ நடவடிக்கையை சதிராடிய புலிப்படைக்கு தலைமை தாங்கியவர் தீபன் என்பதை நாம், மறுமுறை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் கைப்பற்றியபோது, தீபனின் பங்களிப்பு அதில் மிகுந்து காணப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

18 மாதங்கள் போராடி மீட்ட ஆணையிரவை வெறும் மூன்று வாரங்களில் கைப்பற்றி, தமிழ் வீரத்தை, விடுதலைப்புலிகளின் போர் நுணுக்கத்தை, உலகறிய செய்ய காரணமான தீபனை நாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம்.

இப்படி உலகே வியக்கும் வண்ணம் களப்பணியாற்றிய தீபன், பிரிகேடியர் பால்ராஜோடு இணைந்து ஆற்றிய அளவிட முடியாத தாக்குதலும், ஆணையிரவு களத்தில் தாம் காற்றைவிட மிக வேகமாக களமாடிய வீரமும் இன்றுவரை வியப்புக்குரியதாக நம்மை உற்றுப்பார்க்க வைக்கிறது.

24 ஏப்ரல் 2000 ஆணையிரவை மீண்டும் கைப்பற்றி விடலாம் என்ற கனவோடு சிங்கள பேரினவாத அரசு அக்கினிக்கீலா என்ற நடவடிக்கையை மேற்கொண்டபோது, அந்த நடவடிக்கையை சிதறடித்து, இலங்கை ராணுவத்தின் 55 மற்றும் 53 படை அணியை விரட்டி அடித்த பெரும் சமரின் கட்டளை தளபதியாக தீபன் களத்தில் இருந்தார் என்பதே நம்மை மேலும் உறுதியானர்வர்களாக மாற்ற வைக்கிறது.

இப்படி பல்வேறு களங்களை நாம் கண்டு கொண்டே இருக்கலாம். தீபன் அளவிட முடியாத வீரத்தின் விளைநிலம். தாயக மண்ணை நெஞ்சார நேசித்த மாவீரன். சமர் களங்களின் நாயகன் பால்ராஜூக்கு தோளோடு தோள் நின்ற உறவு. பால்ராஜ் என்னும் ஆற்றல் வாய்ந்த பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட தீபன்அம்மான், நம்முடைய மனங்களிலிருந்து நீங்காத பேராற்றல் பெற்றவன்.

இன்று ஆற்றல் வாய்ந்த இந்த வீரமறவர்கள் நம்மிடையே இல்லை. காற்றாகி தமிழீழத்திலே அவர்கள் தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயக மண் அடிமை விலங்கை உடைத்து, புதிய பரிமாணம் அடைந்து புத்தொளி வீசுவதை காண, அந்த வீரப்புலிகள் விழிகளைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதற்காக களமாடினார்களோ, அவர்களின் வாழ்வு எந்த திசையை நோக்கி பயணித்ததோ, அந்த திசையை நோக்கி நாம் வணங்குகிறோம். அவர்களுக்கு வீர வணக்கம் செய்கிறோம்.

அவர்களின் எண்ணங்களை ஈடேறச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அவர்களின் வீரத்தை குறித்து புகழ் பேசிக் கொண்டிருப்பது மட்டுமே நமது கடமை அல்ல. அவர்கள் எதை செய்ய முனைந்தார்களோ அதை அடைய நாம் ஆற்ற வேண்டிய பெரும்பணி தான் நம் முன்னே குவிந்து கிடக்கிறது. இதுதான் நமது காலத்தின் கடமை. இந்த வரலாற்றுப் பணியை நாம் உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குள் புதைந்திருக்கிறது.

நாம் புத்தெழுச்சி மிக்க தமிழீழத்தைப் படைத்து, அதை அவர்களின் வீர வாழ்வுக்கு அர்ப்பணிக்கும்போதுதான், அந்த வீர மறவர்களின் எண்ணங்களும், ஏக்கங்களும் நிறைவு காணும்.

அதை செய்ய வேண்டிய நாளுக்காக நாம் காத்திருக்க வேண்டாம். இன்றே, இப்போதே செய்வோம்.

ஈகப் போராளிகள் பால்ராஜ், தீபன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வீரவணக்கம். தமிழீழம் நமது வீரர்களின் கனவு.

-கண்மணி

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு


முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.

அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.

அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.

தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.

விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.

அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.

தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.

இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.

வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.

புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.

அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.

சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.

அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.

ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌


பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.

தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.

தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.

நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.

வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌


விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.

“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.

இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.

மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.

ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌


தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.


ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.

ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌

ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

ஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.

வேங்கைச்செல்வன்

பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்


கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும்.
இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.

தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.”

தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.

-சாணக்கியன்-









1ம் ஆண்டு வீரவணக்கம் ஆனந்தபுரம் பெரும் சமர்


வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன.

அதன் நினைவுகளை மீட்டிப்பார்க வேண்டிய தேவை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒர் கடமை. அந்தவகையில்தான் கிளிநொச்சியினை விட்டு பின்னகர்ந்த மக்களும் விடுதலைப்புலிகளும் இறுதியான தாக்குதல்களை எதிரிமேல் தொடுத்தவண்ணம் எதிரிக்கு பாரிய இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் இறுதிக்கட்டமாக ஆனந்தபுரம் பகுதி அமைகின்றது. புதுக்குடியிருப்பின் வடகிழக்கில் உள்ள பகுதியாக ஆனந்தபுரம் காணப்படுகின்றது. இந்த இடத்தில்தான் விடுதலைப்புலிகளின் நெருப்பாற்று தாக்குதல்கள் தீச்சுவாலைகளுக்கும் மத்தியில் இடம்பெற்றன.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் ஆனந்தபுரத்தினை விட்டு பின்னகரமாட்டேன் என்பதற்கு இணங்க சில நேரடி கட்டளைகளை வழங்கிகொண்டு இருந்தார். தலைவர் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் விடுதலைப்புலிகளின் மகளிர் படைஅணிகளும் அதன் பிரிகேடியர்களும் கேணல், மற்றும் லெப்ரினன் கேணல் நிலை அதிகாரிகளும் களமுனையில் நேரடியாக நின்றார்கள்.

இதேபோன்றுதான் ஆண் போராளிகளின் கட்டளைத் தளபதிகளும் பிரிகேடியர்களும் கேணல்களும், லெப்ரினன் கேணல் நிலையுடைய போராளிளும் சகபோராளிகளுடன் நின்று களமாடினார்கள். இவர்களின் வீரவரலாறுகள் ஆனந்தபுரம் மண்ணில் பதிந்து ஆண்டு ஒன்றாகின்றது. இந்த விடுதலை வீரர்களின் தியாக உணர்வுகளுக்கு மதிப்பளித்து,


அன்று ஆனந்தபுரம் மண்ணில் எமது தேசியத்தலைமையினை பாதுகாத்து மாவீரர்களான போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், பிரிகேடியர்களை நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.

இந்நிலையில் அன்று சிறீலங்காப்படையினரின் கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு, இரசாயன குண்டு மழைக்குள் நின்று களமாடி மாவீரர்களான வீரர்களையும் அன்றைய காலகட்டபகுதியில் உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவிற்கொண்டு இம்மாவீரர்களின் ஈகைக்களுக்கு மதிப்பளித்து தொடர்ந்தும் ஈழவிடுதலை பணியினை மேற்கொள்வோம்.





Up ↑