Search

Eelamaravar

Eelamaravar

Month

August 2008

எல்லாளன் நடவடிக்கை” யின் முக்கியத்துவம் என்ன?

‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.”

கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.

09.10.2007

என் அன்பான மக்களுக்கு,

சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.

தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான் மிகவும் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும். உங்கட பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும்.

அதனால் தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப் போறம். அவைக்கு தமிழன் படுகிற அவலத்தை புரிய வைக்கப் போறம். நிச்சயம் அவைக்கு உணர்த்தியே தீருவம். தமிழர் படையில முப்படையும் வளர்ந்து நிற்குது. இனி நீங்கள்தான் சிங்களவனுக்கு எதிராக எழுந்து நிற்க வேணும்.

எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில அழிக்கத் தெரியும் என அடிச்சுக் காட்டியிருக்கிறம். இதே மாதிரி தொடர்ந்து அடிப்பம் அடிச்சுக் கொண்டே இருப்பம் என அடிச்சுச் செல்லுங்கோ சிங்கள வெறியர்களுக்கு.

வழிகாட்டத் தலைவர் இருக்கிறார். நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

தலைவர் கவனம்.
தலைவர் எங்கட வழிகாட்டி.
தலைவர்தான் எங்கட அப்பா.
தலைவர்தான் எங்கட அம்மா.
அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.

இ.இளங்கோ.

விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான ‘எல்லாளன் நடவடிக்கை” அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரசோ அல்லது சிங்களப் படைத்தரப்போ மீளமுடியாமல் இருக்கின்றது.

தேசியத் தலைவரினால் மிகவும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு துல்லியமான முறையிலே குறுகிய நேரத்தினுள் சிறப்பு கரும்புலி அணியினரால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்களையும் அவர்களது போரிடும் ஆற்றலையும் வல்லமையையும் மீண்டும் ஒரு தடவை சிங்கள அரசிற்கும் உலகத்திற்கும் நிரூபித்துள்ளதாக பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களும் அனைத்துலகச் செய்தி நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.

கரும்புலிகள் வசப்படுத்திய அந்த நிமிடங்கள்…


அனுராதபுரம் வான்; படைத்தளத்திற்குள் திங்கள் அதிகாலை மூன்று மணியளவில் 21 பேர்களைக் கொண்ட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் சிறப்புப் படையணியினர் ஊடுருவினர்.

ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளையும் இயந்திர துப்பாக்கிகளையும் பயன்படுத்தி காவலரண்களிலும் வான்; தளத்தினுள்ளும் பாதுகாப்புக் கடமையில் இருந்த சிறிலங்கா படையினரின் மீது தாக்குதல்களை நடத்தி வான் படைத்தளத்தினை தமது கட்டுப்பாட்டின்கீழ் வந்தனர். அதன்பின்னர் புலிகளின் அணியினர், இளங்கோவுடன் ஒரு பகுதியாகவும் வீமனுடன் ஒரு பகுதியாகவும் இரு குழுக்களாகப் பிரிந்து வான் படைத்தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த வானூர்திகளை அழிப்பதிலும் ரேடார் நிலையங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலைகளை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

ஒரு மணித்தியால நேர இடைவெளிக்குள் மூன்று கிலோ மீற்றர் நீளத்தையும் இரண்டரைக் கிலோ மீற்றர் அகலத்தையும் கொண்ட அனுராதபுரம் பாரிய விமானப்படைத்தளத்தினை கரும்புலிகள் அணியினர் வெற்றிகரமாக தாக்கி தமது முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அப்போது விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு வானூர்திகள், அனுராதபுரம் வான்படைத்தளத்தினுள் உள்நுழைந்து இரண்டு குண்டுகளை வீசி அப்படைத்தளத்திற்கு மேலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தின.

அந்த வான்தளத்தினை திங்கள் முற்பகல் 11.00 மணிவரை தமது கட்டுப்பாட்டிற்குள் கரும்புலிகள் அணியினர் வைத்திருந்ததுடன் அனுராதபுரம் வான்படை தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வானூர்திகளையும் தாக்கியழித்தனர்.

அந்த வான்படை தளத்துக்கு உதவி புரிவதற்காக வவுனியாவில் இருந்த அனுப்பப்பட்ட பெல்-212 உலங்குவானூர்தியானது மகிந்தலைப் பகுதியில் வானூர்தி எதிர்ப்பு ஆயுதத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் பயணம் செய்த நான்கு வான்படையினர் உலங்குவானூர்தியுடன் வீழ்ந்து உடல் சிதறிப் பலியாயினர்.

இந்த தாக்குதல்களின் போது சிறிலங்கா வான்படையின் எட்டு வானூர்திகள் அழிக்கப்பட்டதாக முதலில் செய்திகள் வெளிவந்தாலும் தற்போது கிடைக்கும் நம்பகமான தகவல்களின் படி 18 வரையிலான வானூர்திகள் அப்படைத்தளத்தின் மீதான தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடந்த 24 ஆம் நாள் புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது 660 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 18 வானூர்திகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதாவது

எம்.ஐ-24 உலங்குவானூர்திகள்- 02

எம்.ஐ-17 உலங்கு வானூர்தி – 01

பெல்-212 – 01

பீச் கிராப்ட்- 01,

மு-8 பயிற்சி வானூர்தி – 01

Pவு-6 பயிற்சி வானூர்தி – 03

ஆளில்லா வேவு வானூர்தி – 03

செஸ்னா வானூர்தி – 06

ஆகியன இத்தாக்குதலின் போது புலிகளினால் அழிக்கப்பட்டதாக தெரிவித்த செனிவிரட்ன இது தவிர மேலும் மூன்று வானூர்தி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் வெளியிடப்படும் என்றும் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்தார்.

இத்தாக்குதல்களின் போது சிறிலங்காப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் சிறிலங்கா அரச தரப்பினர் செய்திகளை வெளியிட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் விங் கொமாண்டர் அமிலா மொகொட்டி, ஸ்குவார்டன் லீடர் ருவான் விஜயரட்ன மற்றும் இரண்டு பிளையிங் ஒபிசர்கள், நான்கு கோப்பரல்கள், இரண்டு லான்ஸ் கோப்பரல்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

விடியும் வரை விழித்திருந்த அனுராதபுரம் மக்கள்

அனுராதபுர நகரமானது அதிகாலை 03:20 மணியில் இருந்தே குண்டு சப்தங்களாலும் துப்பாக்கி வேட்டொலிகளினாலும் அதிர்ந்துகொண்டிருந்தது. அந்நகர மக்கள் இச்சத்தங்களினால் நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்ததுடன் பயப்பீதி காரணமாக பின்னிரவு முழுவதும் விழித்திருந்தனர்.

விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் மிகவும் இரைச்சலுடன் தாழப்பறந்து குண்டுவீசியதை தாம் கண்டதாக பல மக்கள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தனர். மேலும் முகாம் பகுதியில் பாரிய நெருப்புக்கோளங்களையும் தீச்சுவாலைகளையும் கண்டதாக முகாமிற்கு அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.

அனுராதபுர வான்படைத்தள தாக்குதலின் முக்கியத்துவம்

சிறிலங்கா அரசும் சிங்கள படைத்துறையும் விடுதலைப் புலிகளை போரில் வென்று வருவதாகவும் விரைவில் புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் வன்னி பிராந்தியத்தினையும் சிங்களப்படைகள் கைப்பற்றும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிக்கைகளை வெளியிட்டு தென்னிலங்கையிலே வாழுகின்ற சிங்கள மக்களையும் மற்றும் அனைத்துலக சமூகத்தினையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில்தான் இத்தாக்குதல் நடவடிக்கை புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இத்தாக்குதலின் மூலம் பல செய்திகளை விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் உணர்த்த முயன்றிருக்கின்றார்கள்.

– இலங்கைத்தீவின் அரசியல் மற்றும் படைத்துறை தொடர்பான விடயங்களை தீர்மானிப்பதில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு செலுத்துகின்ற பாரிய சக்தியாக தொடர்ந்தும் விளங்குகின்றார்கள் என்பது முதலாவது.

– சிறிலங்கா அரசின் பாதுகாப்பு கட்டமைப்புக்களுக்கெல்லாம்; தண்ணி காட்டியபடி தென்னிலங்கையின் எப்பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி தம்மால் வெற்றிகரமாக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது இரண்டாவது.

– சிங்களப் படைத்துறையின் வடபோரரங்கு தாக்குதல் நடவடிக்கைக்கான பிரதான பின்தள மையமாக அனுராதபுரம் படைத்தளம் விளங்குவதால் அங்கு மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதல் மூலம் சிங்களப் படைத்தரப்பின் எதிர்கால மூலோபாய நடவடிக்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியமை மூன்றாவது.

– சிங்களப் படையினர் தமிழீழத்திலே அகலக்கால் வைப்பதனால் தமிழீழத்தில் மட்டுமல்லாது தென்னிலங்கையில் காணப்படுகின்ற சிங்கள படை முகாம்கள் எல்லாமே புலிகளினால் இலகுவாக தாக்கியழிக்கப்படும் என்ற செய்தியை தெரிவித்துள்ளமை நான்காவது.

– விடுதலைப் புலிகளின் தரைப்படையுடன் வான்படையும் இணைந்து நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற மரபுவழி போரியல் ஆற்றலை வெளிப்படுத்தியமை ஐந்தாவது.

– இந்த வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையின் மூலம் தாயகம், மற்றும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களின் மனங்களிலே வெற்றிக்களிப்பினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியமை ஆறாவது.

இளங்கோவனின் இறுதிக் குரல்….


விடுதலைப் புலிகளினால் முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த அனுராதபுரம் வான்படைத் தளத்தை மீளக் கைப்பற்றுவதற்காக பலமுறை சிறிலங்கா அரச படைகளானது முயற்சித்தபோதும் கரும்புலிகளின் மூர்க்கத்தனமான எதிர்த்தாக்குதல் காரணமாக அது சாத்தியமாகவில்லை.

வான்படைத் தளத்தின் கள நிலைமைகளைத் தெளிவாக வன்னியின் கட்டளைப்பீடத்திற்கு தொடர்ச்சியாக தெரிவித்துக்கொண்டிருந்த கரும்புலிகள் அணியின் தலைவர் லெப். கேணல் இளங்கோ, மூன்றாவது முறையாகவும் காயமடைகின்றார். அந்நிலையில் தனக்கு கீழ் செயற்பட்ட கரும்புலி வீரர்களுக்குரிய கட்டளைகளைச் சரிவர வழங்கி, தலைவன் நினைவைச் செயலில் முடித்த அந்த வீரன் கட்டளைப் பீடத்திற்கு தனது இறுதி வரிகளை கூறுகின்றான்.

‘தலைவர் நினைச்சதை நாங்கள் செய்து முடிச்சிட்டம். நீங்களும் தலைவரின் திட்டத்தை சரியாகச் செய்யுங்கோ. தலைவர்தான் கவனம். அவர கவனமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கோ. நான் மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன். நான் தொடர்பைத் துண்டிக்கிறன்…..” என்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகின்றது.

இந்த கரும்புலிகளின் உயரிய அர்ப்பணிப்பு, தற்கொடை, தமிழ் மக்களின் மீதும் தேசியத் தலைவரின் மீதும் அவர்கள் வைத்திருந்த பாசம், அன்பு எல்லாமே போற்றுதற்குரியது.

அந்த வீரர்களின் உயரிய விருப்பமான தமிழீழம் என்ற இலட்சியத்தினை அடைவதற்கு நாம் எல்லோரும் தலைவரின் பின்னால் அணிதிரண்டு சிங்கள படைகளுக்கு எதிராகப் போராடி சுதந்திர தமிழீழத்தினை விரைவில் அமைக்கவேண்டும். இதுவே இந்த மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஈந்த அந்த கரும்புலி மாவீரர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் நாம் செய்யும் மரியாதையாக அமையும்.

-புரட்சி (தாயகம்)-

‘எல்லாளன் நடவடிக்கை’ – 21 வேங்கைகள்

















மாமனிதர் ஜெயக்குமார்

மாமனிதர் ஜெயக்குமார் – வீழ்ந்துபோன பெருவிருட்சம்
இவரைப்பற்றி அதிகம்பேர் அறிந்திருக்க மாட்டீர்கள். சாவுச் செய்தியையும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளையும் தவிர்த்து இவர் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

29.03.2007 அன்று வியாழக்கிழமை அதிகாலை திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் மெல்பேணில் அவரது வீட்டில் தனது 56 ஆவது வயதில் அகால மரணமடைந்தார். இறப்பின்பின் தமிழீழத் தேசியத்தலைவரால் தமிழீழத்தின் அதியுயர் விருதான ‘மாமனிதர்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

தனது இருபதுகளில் இங்கிலாந்து சென்று பொறியியற்றுறை உட்பட்ட பட்டப்படிப்புக்களை நிறைவுசெய்து தாயகம் திரும்பினார். பின் 1982 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார். அதன்பின் நிரந்தரமாக அவுஸ்திரேலியாவில் தங்கிவிட்டார். 1984 இல் திருமணம் முடித்தார். மகனொருவர் இருக்கிறார்.

அவுஸ்திரேலியாவிலிருந்த ஈழத்தமிழர்களை ஒருங்கிணைப்பதிலும், ஈழப்போராட்டத்தோடு மக்களை ஒன்றிக்க வைப்பதிலும் அயராது உழைத்து உறுதியான கட்டமைப்பொன்றை அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தினார். எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி, ஏற்கனவே இருந்த அமைப்புக்களை ஒருகுடையின்கீழ் ஒருங்கமைத்து, சாகும்வரை அயராது உழைத்தவர் இவர். அவுஸ்திரேலியா மட்டுமன்றி நியூசிலாந்து உட்பட்ட தென்துருவ நாடுகள் அனைத்திலும் தமிழர் அமைப்புக்களின் உருவாக்கத்துக்கும் அவற்றின் ஈழப்போராட்டச் செயற்பாட்டுக்கும் அடித்தளமிட்டவர் இவரே. இன்று தென்துருவப் பகுதியில் ஈழத்தவரின் அரசியல் அமைப்புக்கள் வலுவாகவும் செயற்றிறன் மிக்கனவாகவும் இருக்கிறதென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களின் அயராத உழைப்பிலும் வழிகாட்டலிலும் வந்த வளர்ச்சியே.

மற்றநாடுகளின் புலம்பெயர்ந்தவர்களோடு ஒப்பிடும்போது தென்துருவ ஈழத்தவர்களின் புலப்பெயர்வு வித்தியாசமானது. தொடக்கத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் இருக்கவில்லை. படித்த, மேல்தட்டு வர்க்க யாழ்ப்பாணத்தவர்களே பெரும்பாலானவர்கள். அதுவும் இனப்பிரச்சினை கூர்மையடைய முன்பே புலம்பெயர்ந்தவர்கள் பலர். பின்னர்தான் படிப்படியாக – அதுவும் மற்றநாடுகளோடு ஒப்பீட்டளவில் மிகக்குறைவாக ஈழஅகதிகள் தென்துருவத்துக்குப் புலம்பெயர்ந்தனர். எண்பதுகளின் தொடக்கத்தில் இப்பகுதியில் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டுவதில் இருந்திருக்கக்கூடிய சிக்கலை, கடினத்தன்மையை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம். அந்தநேரத்திலும் சரி இப்போதும் சரி அவுஸ்திரேலியாவில் சிங்களவர்களே பெரும்பான்மையாக உள்ளநிலையில், அதுவும் ஜே.வி.பியின் தீவிர ஆதரவுத்தளமாக இருக்கும் நிலையில், அரசியல் மட்டத்தில் மிகநெருக்கமான தொடர்புகளையும் பரப்புரைகளையும் சிங்களவர் பேணிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவை மிகப்பெரிய சிக்கலுக்குரிய விடயம்தான். ஆனாலும் திரு. ஜெயக்குமார் அவர்கள் திறமையாக அதைச்செய்தார். கல்விச் சமூகத்தை ஈழப்போராட்டத்துக்கு உறுதுணையாக்கினார்.

பல்கலைக்கழகமொன்றில் முழுநேர விரிவுரையாளராகத் தொழில்புரிந்தார். அதைவிட ஈழப்போராட்டத்துக்கான தனக்குரிய பணியை மேலதிகமாகச் செயதார். அவுஸ்திரேலியா என்று எடுத்துக்கொண்டாலே ஒவ்வொரு மாநிலத்துக்குமான பயணத்தூரம் மிகமிக அதிகம். அதைவிட நியூசிலாந்து, பீஜி, மொறீசியஸ, மலேசியா என்று தனது பணிக்குரிய இடங்கள் அனைத்துக்கும் இடைவிடாது பயணம்செய்து தன்பணியைச் சிறப்புற ஆற்றினார். பயண அலைச்சல்களிலேயே அவர் பலநாட்களைக் கழித்தார்.

2004 ஆம் ஆண்டு ஆசியாவைத் தாக்கிய ஆழிப்பேரலையில் தமிழீழமும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டது. உலகத்தின் கண்களிலிருந்து மறைக்கப்பட்ட பகுதியாக அது இருந்தது. சரியான முறையில் உலக உதவிகள் சென்று சேரவில்லை. தமிழீழம், ஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து மீண்டது அதன் தளத்திலும் புலத்திலிருமிருந்த தமிழர்களால்தான். அந்த அனர்த்த நிவாரணப்பணியில் முக்கிய பாத்திரம் திரு. ஜெயக்குமார் அவர்களுக்குமுண்டு.

ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்தபோது திரு ஜெயக்குமார் அவர்கள் தாயகத்தில்தான் நின்றார். உடனடியாகவே களத்திலிருந்து துரிதமாகச் செயற்பட்டார். துருவப் பகுதியிலிருந்து மருத்துவ உதவி, தொண்டர் சேவை, பொருளுதவி என்பவற்றைத் திரட்டி தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்தார். அனைவரையும் ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தி உதவிகளை உரியமுறையில் விரைவாகக் கிடைக்கும்டி நடவடிக்கையெடுத்தார். அவரின் வழிகாட்டலிலும் ஒருங்கிணைப்பிலும் ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிகளின் ஒருபகுதி சிறப்பாக நடைபெற்றது.

யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் பலர் தாயகப்பகுதியில் தமது புலமையைப் பகிர்ந்திருந்தனர். நுட்பியல் கற்கை நெறிகளில் பல்வேறு நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்த புலமையாளர்கள் கலந்துகொண்டு கற்பித்தார்கள். அவ்வகையில் தென்துருவ நாடுகளில் இருந்தும் கணிசமான பங்களிப்பு வழங்கப்பட்டது. திரு. ஜெயக்குமார் அவர்கள் இவற்றை ஒருங்கிணைத்துச் சரிவரச் செய்திருந்தார். பலநவீன நுட்பங்களைத் தாயகத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததில் பெரும்பங்காற்றினார். (காகம் இருக்கப் பனங்காய் விழுந்த கதையாக, இவர்தான் புலிகளுக்கு விமானத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தார் என்று ஏசியா ரிபியூன் உட்பட்ட புலியெதிர்த்தரப்பு இப்போது புலம்பிக்கொண்டிருப்பது வேறுகதை)

தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இவர்மேல் எவ்வளவு பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தார் எனபதை இவரின் இறப்பின் பின்னான கதைகளில் இருந்து அறிந்துகொள்ள முடியும். இவரது இறுதி வணக்க நிகழ்வில் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் வன்னியிலிருந்து வழங்கிய இரங்கலுரையை ஒளிபரப்பினார்கள். அவற்றில் திரு ஜெயக்குமார் அவர்களின் இழப்பு அவர்களிடத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளை உணரமுடிந்தது.
_____________________________________
திரு. ஜெயக்குமார் அவர்கள் ஓர் இசைக்கலைஞனும்கூட. எண்பதுகளின் தொடக்கத்தில் “மெல்பேண் மெல்லிசைக்குழு” என்ற பேரில் ஈழத்து இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய இசைக்குழுவில் திரு. ஜெயக்குமார் அவர்கள் கிட்டார் வாத்தியக்கலைஞராகப் பங்காற்றினார். (ஆட்கள் மாறிவந்தாலும் இக்குழு இப்போதும் செயற்றிறனுடனுள்ளது).

திரு. ஜெயக்குமார் அவர்களின் வாழ்வில் சகமனிதர்களுக்கு இணையாக நீங்கா இடம்பெற்றவை மீன்கள்.

மீன்வளர்ப்புப் பைத்தியம் என்றே சொல்வார்கள். தனது நாலாவது வயதில் ஹோர்லிக்ஸ் போத்தலொன்றில் மீன் வளர்த்தது தொடக்கம் இறக்கும்வரை மீன்கள்! மீன்கள்! மீன்கள்! என்றே வாழ்ந்தார்.

இவருக்கு நெருங்கியவர்களின் கூற்றுப்படி யாழ்ப்பாணத்தில் தனது பாடசாலைக் காலத்தில் ஐந்து மீன்தொட்டிகள் வைத்திருந்தவர், இங்கிலாந்தில் பொறியியற்றுறையில் பட்டப்படிப்பு முடித்துத் தாயகம் திரும்பும்போது முப்பது மீன்தொட்டிகளில் பல அபூர்வ வகை மீன்களை வளர்த்துவந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். மெல்பேணில் அவரது இறுதிக்காலம்வரை மீன்கள் வளர்த்து வந்தார்.

சிறந்த நிர்வாகி. அதிர்ந்து பேசாதவர். எந்நேரமும் ஒரு புன்சிரிப்போடுதான் அவரைப்பார்க்கலாம். பிரச்சினைகளை, கவலைகளை, அழுத்தங்களை வேறுயாருக்கும் காட்டிக்கொண்டதில்லை. ஈழப்போராட்ட அரசியலில் இயல்பாகவே எதிர்த்தரப்பினரிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்கள், கேலிகள், ஆத்திரமூட்டும் செயற்பாடுகள், விமர்சனங்கள் என்பவற்றைப் பொறுமையாகவே எதிர்கொண்டார். எச்சந்தர்ப்பத்திலும் ஆத்திரப்பட்டோ நிதானமிழந்தோ செயற்பட்டதில்லை.

மிகநேர்மையான நல்லமனிதனை, சிறந்த நிர்வாகியை, கடுமையான உழைப்பாளியை, தென்துருவத்தில் ஈழப்போராட்ட அரசியற் செயற்பாட்டுக்கு அத்திவாரமிட்டவரை, அதைத் திறமையாகக் கட்டியெழுப்பியவரை இன்று ஈழத்தமிழினம் இழந்துநிற்கிறது. ஈழப்போராட்டத்தின் புலம்பெயர்தமிழர் செயற்பாட்டுக்கான அத்தியாயத்தில் மாமனிதர் திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு என்றுமே நீங்கா இடமுண்டு.

வரலாறு தொடர்கின்றது….

ஓகஸ்ட் 11. ஈழத்தவர்களால் – குறிப்பாக வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்பவர்களால் மறக்க முடியாத நாள். கடந்த வருடம் இதேநாளில் முகமாலை முன்னரங்கில் மூண்ட சண்டையைத் தொடர்ந்து ஏற்பட்ட அவலம் யாவரும் அறிந்ததே. இன்னும்கூட வன்னியோ யாழ்ப்பாணமோ அதிலிருந்து மீளவேயில்லை.

அந்தச்சமர் புலிகள் தரப்புக்கு எதிர்பாராத கடுமையான இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. அச்சமரில் விடுதலைப்புலிகளின் மகளிர் அணியினருக்கு நடந்த சில சம்பவங்களை மாவீரர்கள் சிலர் பற்றிய குறிப்புக்கள் ஊடாக ஆவணப்படுத்துகிறது இப்பகுதி.

இது ‘விடுதலைப்புலிகள்’ ஏட்டிலிருந்து பெறப்பட்டது.

தனது 50 கலிபர் சுடுகலன் அணியில் தான் உட்பட எல்லோருமே காயமடைந்து, சிலர் வீரச்சாவடைந்துவிட, அந்தக் கணத்தில் – 50 கலிபர் சுடுகலனைப் பாதுகாக்க வழியற்றுத் தவித்துப்போனார் கப்டன் இசைநிலா. நகரவே முடியாத காயம். எனினும் குற்ற உணர்வு உறுத்திக்கொண்டிருந்தது. அந்தச் சுடுகலனை நகர்த்துமாறு இசைநிலா கத்திக்கொண்டிருந்தார். 2006.08.11 அன்று யாழ் மாவட்டத்தின் முகமாலை, கிளாலிப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியை முறியடித்து விடுதலைப்புலிகளின் அணிகள் முன்னேறிவிட்டிருந்தன.

கிளாலிக் கரையோரப் பகுதியால் உள்நுழைந்த லெப்.கேணல் கலைவிழியோடு கப்டன் இசைநிலாவின் 50 கலிபர் சுடுகலன் அணியும் புகுந்துவிட்டிருந்தது. பல அணிகள் பல வழிகளால் நுழைந்திருந்தாலும், சமகாலத்தில் எல்லோராலும் சம தூரத்துக்கு நகரமுடியாததால், உட்புகுந்த புலி அணிகள் ஒன்றை ஒன்று சந்திக்க முடியாமல் தனித்தனியாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அணியிலுமிருந்த ஒவ்வொரு போராளியும் சிறிலங்காப் படையினரின் பலபக்கத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கரையோரமாகப் போன லெப்.கேணல் கலைவிழியின் அணி மிகவேகமாக, சிறிலங்காப் படையினரின் இரண்டாம் நிரைக் காப்பரண்களை அண்மித்துவிட்டிருந்தது. எனினும் கடுமையான அந்தச்சண்டையில் பலர் காயமடைய நேரிட்டது. காயமடைந்தவர்கள் தாமாக நகர்ந்து வெளியேறுவதற்கிடையில் மறுபடி மறுபடி எதிர்த் தாக்குதல்களைச் சந்தித்தனர். இயலாத காயத்துடன் தனது சுடுகலனையே நினைத்தபடி “எடுத்துக்கொண்டு வா, எடுத்துக்கொண்டு வா” என்று போர்க்களத்தைவிட்டு வெளியேறிய பின்பும் இசைநிலா கத்திக்கொண்டிருந்தார். எடுத்துவரக்கூடிய நிலையில் களத்தில் எவருமில்லை.

இதே முன்னரங்கில் இதற்கு முன்னரும் சிறிலங்காப் படையினரின் கடுமையான முன்னகர்வை இசைநிலா திறமையுடன் எதிர்கொண்டிருந்தார். அப்போது அவர் பிகே.எல்.எம்.ஜி சுடுகலனின் சுடுநராக இருந்தார். தீச்சுவாலை – 01 என்று பெயரிட்டு சிங்களப் படையினர் செய்த மூன்று நாள் முற்றுகைச் சமரில் முன்னரங்கக் காப்ரண்கள் இரு தரப்பிடமும் மாறி மாறி கைமாறிக்கொண்டிருந்தன. எஞ்சி நின்று போராடிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு பின்னரங்கிலிருந்து உதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

முகமாலைப் பகுதியில் துண்டாடப்பட்ட நிலையில் களமாடிக்கொண்டிந்த இரு அணிகளில் ஒன்றில் இசைநிலா நின்றார். பிகே.எல்.எம்.ஜியின் பொறுப்பாளரும் உதவியாளருமில்லாமல் தனித்து நின்ற இசைநிலாவிடம் மூன்று நாட்களும் ரவைகளுக்குப் பஞ்சமிருக்கவில்லை. வீழ்ந்து கிடந்த சிங்களப் படையினரிடமிருந்து தேவையான ரவைகளை எடுத்துக்கொண்டிருந்தார்.

மேலதிகமான சுடுகுழல் ஒன்றைக்கூட சிங்களப் படையினரின் சுடுகலனிலிருந்து கழற்றிவைத்திருந்தார். மூன்று நாட்கள் தொடர்ந்த தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் மேலதிக ரவைக்கூட்டு அணியையும் கழற்றாமல் களைப்பை வென்று களமாடிய இசைநிலாவுக்கு இப்போது அதனிலும் பெரிய சுடுகலன் ஒன்றைவிட்டு வந்தது. நெஞ்சைச் சுட்டுக்கொண்டிருந்தது. காயத்தோடும் மனதோடும் போராடிய இசைநிலா 2006.08.16 அன்று மருத்துவமனையில் விழிமூடிப்போனார்.

******************************

லெப்.கேணல் கலைவிழி போன கரையோரப் பாதைவழியே லெப்.தமிழ்ச்சுடர் தனது உந்துகணை செலுத்தியுடன் போயிருந்தார். தேவையான இடங்களில் எதிரிக் காப்பரண்களைத் தாக்கி விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது இடையில் அதைக் கண்டார். அது கப்டன் இசைநிலா அணியினரின் 50 கலிபர் சுடுகலன். அந்த அணியினர் இழப்பைச் சந்தித்துவிட்டனர் என்பதை தமிழ்சுடர் புரிந்துகொண்டார். தன்னால் தனித்து அதைத் தூக்கிச் செல்லவும் முடியாது
என்பதால் தகர்த்துவிட்டார். எமக்கு இல்லாதது எதிரிக்கும் இல்லாது போகட்டும்.

******************************

கடற்கரைப் பாதைவழியே முன்னிலை நோக்குனராககப்டன் இசைநிலா போனார். அவர் திரும்பிய திசையெல்லாம் சிறிலங்காப் படையினரே தென்பட்டனர். காப்பரண்கள், குறுக்கு அகழிகள், அங்கே, இங்கே என்று சிறிலங்காப் படையினரைத் தான் கண்ட இடங்களின் ஆள்கூறுகளைக் கணிப்பிட்டு, எறிகணைசெலுத்தும் அணிக்கு அறிவித்துக்கொண்டிருந்தார். சிங்களப் படையினரின் தலைகளில் இடியாக எறிகணைகள் விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன. எனினும் மழைக்குச் சற்றுமுன்னர் புற்றிலிருந்து புறுப்பட்டுவரும் ஈசல்கள் போல படையினர் வந்துகொண்டிருந்தனர். அங்கே, இங்கே என்று எறிகணைகளை விழுத்திக்கொண்டிருந்தவரைச் சூழ இப்போது படையினர்தான் நின்றனர். தான் நிற்குமிடத்தைக் குறிப்பிட்ட இசைநிலா நிலைமையை விளக்கி, தன்னைப் பார்க்காமல் தான் நிற்குமிடத்துக்கு எறிகணைகளை வீசுமாறு கேட்டார்.

ஓயாத அலைகள் – 02 நடவடிக்கையின் போது கிளிநொச்சிக் களமுனையிலே லெப்.கேணல் செல்வி எடுத்த அதே முடிவு. இப்போது எவரும் சொல்லாமலே இசைநிலா எடு;த்தார். பரம்பரை தொடர்கின்றது.

******************************
சண்டை மிகக் கடுமையாக நடந்துகொண்டிருந்தது. கரையோரமாகச் சிறிலங்காப் படையினரின் இரண்டாம் நிரைக் காப்பரண்கள் அருகே கலைவிழி நின்றார். காயமடைந்த போராளிகளை உடனுக்குடனேயே பின்னரங்கிற்குப் போகுமாறு அனுப்பிக்கொண்டிருந்தார். நெருக்கடியான அந்தக் களத்தில் காவும் குழுவினர் வந்து காயக்காரரை அகற்ற வாய்பில்லை. இயலுமான காயக்காரர்கள், வீழ்ந்திருந்த தோழியரின் வித்துடல்களைச் சுமந்துபோனார்கள். கலைவிழியோடு கூடவே நகர்ந்த கப்டன் எழில்நிதிக்கு காயம் ஏற்பட்டது. மறுபடி மறுபடி காயம் ஏற்பட்டதால் அவரால் நடக்கமுடியவில்லை. நடந்துவரக்கூடிய எல்லோரையுமே கலைவிழி அனுப்பிவிட்டிருந்தார்.

களத்தைவிட்டுக் கலைவிழியையும் வெளியே வருமாறு கட்டளைமையம் பணித்தது. காயத்துடன் கிடந்த எழில்நிதியைத் தூக்கிக்கொண்டு தான் வருவதாகக் கூறிய கலைவிழி தன்னோடு நின்றவர்களையும் அனுப்பிவிட்டிருந்தார். சிங்களப் படையினரின் கடும் தாக்குதல் மத்தியில் எழில்நிதியை மீட்டுவர முயன்ற கலைவிழி வரவேயில்லை.

ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையில் பரந்தன் களமுனையில் சூனியப் பகுதிக்குள் வீழ்ந்துகிடந்த மேஜர் மாதுரியின் வித்துடலை எடுக்காமல் வரமாட்டேன் என்று போய், வித்துடலாக வந்த லெப்.கேணல் மைதிலியைப் போலவே லெப்.கேணல் கலைவிழியும்.

கடற்கரும்புலி கப்டன் பாலன்.

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.

1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் போராளிகள் சிலர் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். திருகோணமலையை நெருங்கியபோது எப்படியோ எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.

இரவிரவாக நீண்டதூரம் நீந்தி “இறக்க கண்டி” எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.

இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான்.

மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது. தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து இறந்துபோனான்.

ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.)

கரும்புலிகள் நாளான இன்று நூற்றுக்கணக்கான சரித்தரங்களில் ஒன்றான கரும்புலி கப்டன் பாலனையும் அவனது இந்நெஞ்சையுருக்கும் சம்பவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். அதேநேரம் இதுவரை வீரச்சாவடைந்த 332 கரும்புலிகளுக்கும், வெளிவராமல் உறங்கும் ஏனையவர்க்கும் இதய அஞ்சலிகள்.

மேஜர் சிட்டு

ஈழத்துப்பாடகன் மேஜர் சிட்டு


ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டு.

போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.

போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.

கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசைக்குழுவின் நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?’
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.


[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல ‘தெருக்கூத்து’ எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவது குறைவு. ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]

சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.

01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது.

அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.

“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.

லெப்.கேணல்.வீரமணி

சுப்பரமணியம் வடிவேல்
வவுனியா
தாயின் மடியில் – 12.7.1975
மண்ணின் மடியில் – 24.5.2006

சிங்கள இராணுவத்தின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல் முகமும், மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டு விட்டு மறுகணம் பார்த்தால் மறைந்து விடும். சுட்டால் சூடு பிடிக்காது. வருவது போல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி.

வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக் கூடிய வீரக்கதை இருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டு விடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான்.

மூத்த தளபதி கேணல் பால்ராஜ் சொல்கிறார், “புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி இராணுவத்தளத்தை வெளிச்சமாக்கி விட்டவன் வீரமணிதான்” என்று. அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டவற்றில் மறக்க முடியாத கதையொன்று. சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் இராணுவத்தின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல் வேலியைக் கண்டு பிடிப்பதே கடினமாயிருந்தது. இராணுவ அவதானிப்பு நிலையங்கள், தொடர் ரோந்துகள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக் கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் இராணுவச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் ஆரம்பத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டு பிடிப்பதே சிரமமான பணியாயிருந்தது. நெருங்க விடாது வெளியே செயற்பட்டுக் கொண்டிருந்த இராணுவம் தாக்கிக் கொண்டிருந்தான். இந்த நிலமையில் இராணுவத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள் நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப் பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்வி கண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப் பட்டான்.

வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி (அதை இங்கே குறிப்பிடுவது வேவு இரகசியத்தை அம்பலமாக்கிடும் என்பதால் தவிர்க்கப்படுகிறது) உள்ளே அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளே போக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான். உள்ளே வெற்றிகரமாகச் சென்று விட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றி வளைக்கப் பட்டு அடி வாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது.

கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை.செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவு வீரர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் அடி வாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டு சென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி.

எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு இராணுவத்தைப் பிடித்து விட்டதாகவும் அவர்கள் மயங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்த போது அந்த இராணுவத்தினர் என்பது எங்கள் வீரமணியும் சகவேவுவீரனும் என்பது தெரியவந்தது.

வெளியே வேவுக்கு அனுப்பிய வீரமணி கிளிநொச்சியில் உள் நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் பெறுமதி வாய்ந்த தகவல்களோடும் சகிக்க முடியாத வாழ்வு அனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வெளி வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக் கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று.

செத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான். அவனைப் பெற்றவள் அறியக் கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இரு நாளும் தளத்தைச் சுற்றிப் பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்ற போது முடியாமல் போனதாம். ஒவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித் துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும், தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டு வந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான்.

ஐம்பதாவது இலங்கையின் சுதந்திர தினத்திற்கு கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பஸ் விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான்.

ஓயாத அலை – 02 இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத யுத்தகளமும் இல்லை, இவன் வேவுபார்க்காத இராணுவத் தளமும் இல்லை.

ஒரு போராளி சொன்னான். “என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லி விட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப் போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு “அத்தஉசப்பாங்” என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்க வைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கு இடையில என்னையும் இழுத்துக் கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான். இது நடந்தது 1997இல்.

கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்த போது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் இராணுவம் அவனைச் சல்லடை போட்டுத் தேடியது. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒருபற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்க மாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று “குஷிக்” குணத்தோடு தளத்தைச் சல்லடை போட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான்.

” மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சு போய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்து கொண்டிருந்தம். ஆமி றோட்டால ஷரக்ரரில போனவங்கள், நிப்பாட்டிப் போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சு கொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப் பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் “அறுவார் நித்திரை கொள்ளவும் விடாங்கள் போல கிடக்கு.” எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந்தடியள இழுத்துக் கொண்டு போய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்.

“வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப் போட்டுத்தான் சாவான். சொல்லிப் போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் “ச்சா வீணா இழந்திட்டம்.

வீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக் கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் யுத்தகளத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும்.

வேறொரு போராளி சொன்னான், “மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க் கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்று விட்டோம். இராணுவத்தின் தடைக்குள் போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத் தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போக வேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டு விட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டு விட்டு சுற்றி வளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டு விட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணிசுற்றி வளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒருமார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண ஓடுங்கடா தடைக்குள்ள” என்று விட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம் போய் புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்ல வேண்டியதாய் காலம் சபித்து விட்டது.

“கேடு கெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் பலி கொள்ள முடியாமல் வெட்கம் கெட்ட தனமாய் கடற்கரையில் பலி கொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவு வரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடு போடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்து நிற்க. பிள்ளையார் தன்கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியது போன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன்குறிப்புப் புத்தகத்தில் வேவுத் தகவல் வரைந்து கொண்டு வருவான். எதையென்று சொல்வது. “

2ம் லெப்.தமிழழகி

17.04.1999

மிக இளைய பராயத்திலேயே அறிவியல் புத்தகங்களிலிருந்து ஆராய்ச்சிப் புத்தகங்கள் வரையிலும் சிற்றிதழ்களிலிருந்து சிறுகதைகள், நாவல்கள் ஈறாக ஊடாடிய உயரம் அவள்.

அவளது வாசிப்பாற்றலே, அவளது பல்துறை ஆற்றலினதும் அளவுகோல். புத்தகம் என்றால் சந்தடிஎல்லாமே சமாதியாகிவிடுவாள். ஊன் உறக்கம் எல்லாம் அடுத்த பட்சம், கடமை மட்டும் நீங்கலல்ல.

கடமை நீங்கல் ஆகையில், காணிக்கை அதிகம் வேண்டியிருக்கும். ஓய்வொழிச்சல் நேரங்கள் இரையாகும். நித்திரா தேவிக்கு நிந்திப்பு நடக்கும். நள்ளிரவு தாண்டியும் வாசிப்பு நீளும். அதிகாலையும் கண்டு, அடுத்தநாள் கடமையும் அரவணைத்த நாட்கள் அவள் பதிவில் இருக்கிறது.

தன் பணிசார்ந்த வேலையோ எதுவோ எடுத்த காவடி ஆடி முடித்துத்தான் இறக்கப்படும். இரவுபகல். மாற்றங்கள் அவளை வரையறுத்துக் கொண்டதில்லை. கற்பதில் ஆர்வம் எப்பவும் சாதிக்க வேண்டும் என்ற ஓர்மம் எவ்வேலையானாலும், வேளையானாலும் கற்றுத் தனித்தியங்கும் துடிப்பு.

சமையலிலும் சமர்த்து. தொடர்சமையல்தான் பணியென்றாலும் சலியாத சிருஸ்டி பலமைல்கள் பொதி சுமந்து பொசுங்காத பூரிப்பு. கோபம் கோலமிடுக் கண்டதில்லை. வயதுக்கு மீறிய வளர்த்தி மட்டுமல்ல வனப்பும் ஆர்வ வளமும் அவளிடம்.

துன்பப்படுபவர்கள், பெரியவர்களோ, சிறியவர்களோ, பொறுப்பாளரோ பணியாளரோ மந்திராலோசனை நடக்கும் ஒவ்வொன்றையும் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்றே எதிர்வு கூறல்கள் விளக்கங்கள், வியாக்கியானங்கள் முன்மொழியப்படும். சிறியவளளிற்க்குள் இருக்கும் சீமாட்டி வெளிப்பட்டு கட்டிடபோடும் துணுக்குற்றவரை.
ஆச்சி அளந்து கொண்டே போவாள்.

அவள் அடிப்படைப் பயிற்சி முடித்து வெளிவந்தபோது அவள் வயதை ஒத்தவர்கள் அடிப்படைக் கல்வி பெற தேர்வாக்கப்பட,அவள் கணிணிக்கற்கை நெறிக்காய்த் தேர்வானாள். அவள் கணிணியைக் கற்றுக்கொண்டே கடமையைத் தொடர்ந்தாள். அவள் வேலைகளின் ஐக்கியம் ஆழ அகலப் பரிமாணங்கள் பொருத்தங்கள் முரண்களாய் வெளிபடுத்தப்படும்.

போராட்ட வாழ்வில் அலுவலகப்பணியென்பது அதிமுக்கிய பணியாகிற போதும் பற்றிப் பிடிக்கச் செய்யும் பணியன்று. போர்களப் பணிக்காய் தாக்கல் செய்ய வைக்கும் மகிமை அதற்குண்டு.

தமிழழகிக்கு மட்டும் விதிவிலக்கு. ஞாபகத்திரையில் அத்தனையும் டாலடிக்கும். பணிச்சிரத்தையின் பரிசு என்று பாராட்டுதள் வேறு கிடைக்கும்.அசிரத்தை அவளிடம், தன்னைக் கவனத்தில் கொள்வதை மட்டுமே. டக்(Duck) டக்கி என்று செல்லமாயும் காரணமாயும். (வாத்துப்போல் நடப்பதனால்) அழைக்கப்படும் அவள் டக்கேதான்.

ஓயாத அலைக்கரம் அகன்று கொண்டபோது சண்டை அனுபவத்திற்கான வாய்ப்பு அவளுக்கு வாய்த்தது. நிர்வாகப் பணியிலேயே நிலைத்து விட்டவளுக்கு சுட்டதீவுக் களம் சுக்கான் கொடுத்தது.

“அக்கா அப்படியே கிடக்கட்டும் நான் வந்து கவனிக்கிறேன். திரும்பத்திரும்பச் சொல்லிப்போன அவள் வார்த்தைகள் எதிரெலிக்க அவள் வருகைக்காய் யாவும் அப்படியேதான இருந்தது.

இந்தச் சண்டையில் நான் செத்திட வேணும் என்ற வெளிப்பாடுகளுக்கு நடுவில் அவள் உறுதியாய்ச் சொன்னாள் “நான் சாக விரும்பேல்ல” சாதிக்க வேணும் வாழ வேணும் வருவன் வருவன்; என்று.

18.03.1999 களமிறங்கினாள் 17.04.1999 வரலாறாகிப் போனதாய் கிளிநொச்சி பரந்தன் சுட்டதீவுப் பகுதியில் எதிர்பாராத நேரடி மோதல் சொன்னது.

காலத்தின் கட்டளையில் கடமையுனர்ந்தவள். கட்டுமாணப் பணிக்காய் 3 வருடங்கள் கணிப்பொறியில் கணிப்புச் செய்தவள். கால நீட்ச்சியில் கடமை நீட்ட காலன் கணக்கு வைக்க வில்லை. அவள் தண்டனை பெற்று தட்டி நிமிர்த்தப்பட்டது. மிகக் குறைவு. சுய திட்டமிடலில் பணி பகிர்ந்து பணி இலகுவாக்கும் பக்குவத்தால் எப்பணியும் அவளுக்கு பஞ்சு.

முடியாது என்பது அவள் அகராதியில் கிடையாது. அவளும் ஜெனரேட்டரும் என்று கதையே எழுதலாம்.அவள் ஜெனரேட்டர் ஸ்ரட் செய்ய எடுத்துக்கொணட் முயற்சியை நினைக்க.

ஆண் போராளிகளே வழமையாக அந்த ஜெனரேட்டரை ஸ்டார்ட் செய்வது வழக்கம். அன்று இவள்தான் ஸ்ராட் செய்வாதாக சொன்னாள். சாதாரண பொறிகளைவிட இயல்பான இயக்கத்தில் இயக்கம் பெறும் இயல்பை அது இழந்தே இருந்தது. அவள் விடுவதாய் இல்லை. அன்று முழு நாள் அதே முயற்சியிலேயே அவள்.

முயற்சி வெற்றியாய் முடிந்ததிலிருந்து அதன் இயக்குநர் அவளேதான். காலம் மட்டும் ஆயுட்காப்புறுதி செய்திருக்குமானால் கனதியாய் அவள் சேவையை தாயகம் பெற்று பெருமைப்பட்டிருக்கும்.

நன்றி – எரிமலை Jan-2005

லெப்டினன்ட் சீலன்

லெப்.சீலன்
(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)
வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983

ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.

சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது.

தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார்.

1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை.

அவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.

1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.

1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார். இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை. சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது.

1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர்.

1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது.

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.

இதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது. இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார்.

திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். அதேபோல இம் மோதலில் ஆனந் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.

லெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்றும் வீறுநடை போட்டுச் செல்கின்றது

Up ↑